Raja Muthirai Part 2 Ch65 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 65 தென்புறத் தாக்குதல்
Raja Muthirai Part 2 Ch65 | Raja Muthirai | TamilNovel.in
முரசொலித்த காரணம் சேரமன்னன், பரதப்பட்டன் இருவருக்குமே தெரிந்திருந்தாலும் அதன் சகுனம் யாருக்கு நல்லது என்பதில் இருவருக்கும் கருத்து மாறுபாடு நேர் எதிராயிருந்தது. பாண்டிய மன்னன் தூது அனுப்பியிருக்கி னென்பதை முரசு அறிவித்தது. அது முழங்கிய சமயம் தனது வெற்றியையும் அறிவிப்பதாக வீரரவி நினைத்தான். ஆனால் பரதப்பட்டன் அது பரலியின் அழிவுக்கு முன்னறிவிப்பு என நினைத்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். கூட நின்றிருந்த குறிஞ்சியும் ஏதும் சொல்ல வகையில்லாமல் கற்சிலையென நின்றிருந்தாள். தனது படை பலத்தையும் போர் ஏற்பாடுகளையும் எண்ணியதால் எதிரியை வெகு அலட்சியமாக எண்ணிய வீரரவி மீண்டும் சொன்னான் குருநாதனை நோக்கி, “சகுனம் யாருக்கு நல்லது என்பதை நாளை மாலைக்குள் அறிவீர்கள் குருநாதரே!” என்று.
குருநாதனின் வேதனை நிரம்பிய கண்கள் மன்னனை ஏறிட்டு நோக்கின. “அந்தப் பாவம் இந்த வயோதிகனுக்கு இருக்கத்தான் செய்கிறது.” என்று கூறிய குருநாதன் மன்னனின் அறையைவிட்டு வெளியேறத் திரும்பினான். அவனைத் தனது கையை உயர்த்தித் தடை செய்த வீரரவி “சற்றுப் பொறும் குருநாதரே! பாண்டியன் தூதையும், என் பதிலையும் கேட்டுச் செல்லும்,” என்று கூறி அவனையும் ஓர் ஆசனத்தில் அமரச் செய்தான். பிறகு காவலனொரு வனை விளித்து பாண்டிய தூதனைத் தன்னிடம் தாமதமின்றி அழைத்து வரும்படிக்கு உத்தரவிட்டான். அவன் வருவதற்குள் சேனாதிபதியையும், ராமவர்மனையும் வரவழைக்கவும் காவலரை ஏவினான்.
இத்தனை படாடோபத்துடன், தனது சேனாதிபதி உபசேனாதிபதி குருநாதன் முன்னிலையில், சேரமன்னன் பாண்டிய தூதனை வரவேற்றாலும் தூது அத்தனை படாடோபமாகவோ பிரபலமாகவோ இல்லை. வந்த தூதனும் மிகுந்த அலட்சியத்துடன் சேரமன்னனை ஏறெடுத்து நோக்கித் தன்னை பாண்டிய உபசேனாதிபதிகளில் ஒருவனாக அறிமுகப் படுத்திக்கொண்டான். அவன் கண்கள் ஒரு விநாடி குறிஞ்சியை நோக்கின. பிறகு மன்னன் மீதே நிலைத்தன. சொற்கள் பட்டுக் கத்தரித்தாற் போல் பிசிறு ஏதுமின்றிச் சுடச்சுட வந்தன. “சேரமன்னரே! பரலீசரே! முதலாம் ஜடாவர்மனான சுந்தரபாண்டியத் தேவர், மீனாட்சி தேவியின் அருட்செல்வர் தாங்கள் துராக்ருதமாகத் தூக்கி வந்த அவர் மகளையும், அபகரித்த முத்துக் குவியல்களையும் உடனடியாக ஒப்படைக்கும்படி கேட்கிறார். இல்லையேல் உடனடியாகப் போர் துவக்கி இந்தப் பரலியையும், பரலியோடு உங்களையும் அழித்து விடுவதாகவும் தெரிவிக்கச் சொன்னார். நீங்கள் விரும்புவது அழிவா, அமைதியா என்றும் வினவச் சொன்னார்,” என்ற வாசகத்தை ஏதோ மந்திரத்தை உச்சரிப்பவன்போல் தெளிவாகவும், பயபக்தியுடனும் வெளியிட்டான் பாண்டிய உபதளபதி.
சேரன் இதழ்களில் குரூரப் புன்முறுவலொன்று படர்ந்தது. “மீனைக் கண்டு வில்லும் அம்பும் அஞ்சுவதில்லையெனப் பாண்டியனிடம் சொல்லுங்கள் உப சேனாதிபதி” என்றான் வீரரவி அந்தப் புன்முறுவலின் ஊடே.
அவன் எதைக் குறிக்கிறானென்பதைப் பாண்டிய உபசேனாதிபதி உணர்ந்து கொண்டான் சந்தேகத்துக்கு இடமின்றி. மீனென பாண்டியர் கொடியையும்வில் அம்பு என சேரர் இலச்சினையையும் மன்னன் குறிப்பிடுகிறா னென்பதைப் புரிந்து கொண்ட உபசேனாதிபதியும் லேசாக நகைத்தான். தன் முன் அவன் நகைத்த துணிவைக் கண்டு வியந்த சேரமன்னன் வியப்புத் திருமுன்பு, அப்படியானால் வில்லையும் அம்பையும் கண்டு மீனும் அஞ்சாது மன்னவா! காரணம் தெரியுமா?” என்று வினவினான்.
“என்ன காரணம்?” என்று வினவினான் வீரரவி தூதன் துணிவைக் கண்டு, முன்னிலும் அதிக வியப்புடன்.
“வில் அம்புகளால் மீனுக்கு எப்பொழுதும் அபாய மில்லை. அம்பெய்து மீனைப் பிடிப்பவர் இல்லை” என்று சுட்டிக் காட்டினான் தூதன்.
“உண்மை தூதவரே! ஆனால் மீனிருக்க வேண்டிய இடம் நீரில், தரையிலல்ல, தரையில் வந்தால் அது துள்ளித் துள்ளி மாண்டுவிடும்,” என்று கூறிய சேரன் தனது புக்தியை நினைத்துப் பெருமிதங் கொண்டான்.
“உண்மை மன்னவா! இதைப் பாண்டிய சகோதரர்களிடம் அவசியம் சொல்கிறேன்” என்ற தூதன் கேட்டான், “தங்கள் பதில் போரா, சமாதானமா?” என்று.ḥ
“போர். சந்தேகம் வேண்டாம். நாளைப் பகலில் எனது படைகள் போர் துவக்கும். நீங்களாகத் துவங்கா விட்டால்,” என்று இறுதியாகச் சொன்ன சேரன் தூதனை அழைத்துச் செல்லுமாறு காவலருக்கு உத்தரவிட்டான். காவலர் அணுகுமுன்பே தூதன் மன்னனுக்கு முதுகு காட்டித் திரும்பிச் சென்றான். தூதன் திமிரையும் திமிருடன் கூடிய நடையையும் கண்ட சேரன் பரத பட்டனை நோக்கினான். பரதபட்டன் கண்கள் சுரணையிழந்து கிடந்தன. பெருமூச்சு விட்டு பரதப்பட்டன் மன்னன் அறையைவிட்டுச் சிறையை நோக்கிச் சென்றான். குறிஞ்சி மட்டும் நின்றிருந்தாள் அறையில். சேனாதிபதியும் உபசேனாதிபதியும் சென்ற பின்பும் அவள் அறையை விட்டு அகலவில்லை .
வீரரவி அவளை ஏறிட்டு நோக்கினான். “ஏன் குறிஞ்சி! நீ மட்டும் ஏன் நிற்கிறாய்?” என்று வினவவும் செய்தான்.
“மன்னவா!” என்று மெல்ல அழைத்தாள் குறிஞ்சி
அவள் ஏதோ சொல்லப் பிரியப்படுகிறாளென்பதை அறிந்த வீரரவி கேட்டான், “சொல் குறிஞ்சி,” என்று.
“பெரும் விபரீதம் பரலிக்கு ஏற்படப் போகிறது மன்னவா!” என்றாள் குறிஞ்சி துக்கம் தொண்டையை அடைக்க.
“எதுவும் நேராது குறிஞ்சி” என்றான் சேரன் திட்ட வட்டமாக.
“எப்படித் திட்டமாகச் சொல்கிறீர்கள் மன்னவா?”
சேரன் சிறிது சிந்தித்தான், “குறிஞ்சி! வீரபாண்டி யனை உனக்குத் தெரியுமல்லவா…” என்று கேட்கவும் செய்தான்.
“நன்றாகத் தெரியும்.”
“அவன் போர் முறை எப்படி?”
“மிகத் தந்திரமானது.”
“சிங்கணனுடன் செய்த போர்?”
“முழுதும் தந்திரம்.”
“சொன்ன இடத்தில் தாக்கினானா கோட்டாற்றுக் கரையில்?”
“இல்லை.”
“சிங்கணன் எதிர்பாராத இடங்களில் தாக்கினான். எதிரியின் மலைப்பைத் தனது வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைத்துக் கொண்டான்.”
“ஆம்.”
“அதுதான் அவன் போர்முறை குறிஞ்சி! உன்னிடம் அவன் சொல்லியனுப்பியது போல் நேரிடையாகத் தாக்கமாட்டான். கிழக்கு வாசலுக்கெதிரே அவனும் வர மாட்டான். அவன் அண்ணனும் வரமாட்டான். எதிர் பாரத இடத்தில் தாக்குதல் ஏற்படும். ஆகவே அவனை எல்லா இடங்களிலும் நான் எதிர்பார்க்கிறேன். இந்தத் தலைநகரில் நான்கு வாயில்களிலும் பலமாக பாதுகாப்பு இருக்கிறது. பாண்டியன் எந்த இடத்தில் தோன்றினாலும் அவனை எதிர்க்க ஏற்பாடு இருக்கிறது. தவிர குருநாதர் சிருஷ்டித்த படை வளையங்களையும் நான் உடைக்க வில்லை. அவன் எங்கு உள் நுழைய எத்தனித்தாலும் விற்பொறிகள் அழிக்க முயலும். அவற்றால் முடியா விட்டால் அவன் உள்ளே நுழைந்தபின் பல வளையங்களாக நிற்கும் படைப்பகுதி ஒவ்வொன்றையும் அவன் உடைத்து நுழைய வேண்டியிருக்கும். பெரும் மந்திரவாதியா யிருந்தாலொழிய என் அணிவகுப்பிலிருந்து வீரபாண்டியன் மீளமுடியாது. ஆகையால் பயத்தை விடு,” என்று கூறினான் சேரமன்னன்.
குறிஞ்சி வாயைப் பிளந்து கொண்டு பிரமித்து நின்றாள். உண்மையில் சேரன் படைவகுப்புப் பிரமாதமாயிருந்தது. அவன் இணையற்ற படைத்தலைவன் என்பதை அது பறைசாற்றியது. இருப்பினும் குறிஞ்சியின் பயம் போகவில்லை. வீரபாண்டியனின் அசுரக் கணைகள் அவள் கண்முன்பு எழுந்தன. அவற்றிலிருந்து பரலி எப்படித் தப்பமுடியும்?” என்று உள்ளுக்குள் எண்ணினாள்.
அவள் எண்ணத்தைச் சேரனும் புரிந்து கொண்டிருக்க வேண்டும், ஆகவே சொன்னான் அவன்: “குறிஞ்சி! அந்தப் பயங்கர ஆயுதங்களைப்பற்றிக் கவலைப்படாதே. பாண்டிய சகோதரர்கள் எனக்குப் பகைவர்களானாலும் அவர்களைப் பற்றி ஒரு விஷயம் நான் திட்டமாகச் சொல்ல முடியும். பாமர மக்களை ஒருநாளும் அவர்கள் அழிக்கமாட்டார்கள். கணைகளை வைத்திருந்தாலும் அவசியமானாலொழிய அவற்றை ஏவமாட்டார்கள் பாமர மக்கள் மீது. போர் வீரர்மீது படைப் பிரிவுகள் மீது ஏவலாம். ஆனால் படைப் பிரிவுகள் இருக்குமிடம் தனிப்பட பரலியில் இல்லை ” என்று.
குறிஞ்சி அவனை வியப்பு நிரம்பிய விழிகளுடன் நோக்கினாள். “உங்களுக்குப் பாண்டிய சகோதர்களிடம் இத்தனை மதிப்பா?” என்று வினவவும் செய்தாள் வியப்பு குரலில் துள்ளி விளையாட.
“ஆம்.”.
“பின் ஏன் போர் செய்கிறீர்கள் மன்னவா?”
“என் அரசை நிலைநிறுத்திக்கொள்ள. நான் முத்தை அபகரித்ததாகச் சொல்லவில்லையா பாண்டியன்?”
“ஆம்.”
“ஏன் அதைச் செய்தேன்? சேரன் கள்வனா?”
“மன்னவா!”
“கொற்கையிலேயே முத்துப் பெட்டிகளைக் கைப்பற்றினேன் பாண்டிய வணிகனிடமிருந்து. முத்து வாணி பத்தின் பிறப்பிடமான கொற்கையையும் கைப்பற்ற முயன்றேன். முத்து ஆசையாலல்ல. நில ஆசையாலுமல்ல. பாண்டியன் படை திரட்டுவதாகக் கேள்விப்பட்டேன். நான் மட்டுமல்ல, போசளரும் கேள்விப்பட்டார்கள். பாண்டியர் தலையெடுத்தால் முதலில் சேரநாடு தாக்கப்படும் என்பது தெளிவு. வரலாறு அதைத் தெளிவாகச் சொல்லுகிறது. பாண்டியர் தலையெடுத்தபோதெல்லாம் சேரநாட்டைத் தான் தாக்கியிருக்கிறார்கள். இம்முறை அவர்களிடமிருந்து சேரநாட்டைக் காக்க உறுதி கொண்டேன். படையைத் திரட்டவிட்டு அவர்களை எதிர்ப்பதை விட படைத் திரட்டலையே தடுக்க முயன்றேன். இதற்கு சிங்கள மன்னரும், போசள மன்னரும் ஒப்புக்கொண்டார்கள். ஆகவே முதலில் முத்தைக் கைப்பற்றினேன். வேவு பார்த்து அதைத் தடுக்க வந்த வீரபாண்டியனையும், பாண்டியன் மகளையும் சிறை செய்ய முயன்றேன்; அது முடியாது போகவே, பாண்டியர் மகளைக் கைப்பற்றினேன். அப்பொழுதும் திருமணத்தால் சேரநாட்டைப் பாண்டியரிடமிருந்து காப்பாற்ற எண்ணினேன். அதற்குப் பாண்டியன் மகளும் இசையவில்லை. பத்தினித் தெய்வத்தின் நாடான இதில் எனக்குப் பலத்த எதிர்ப்புமிருந்தது. அவளை அவள் காதலனுடன் சிங்களம் கடத்தினேன். ஆகவே போர் வந்து விட்டது. இனி பழைய நிகழ்ச்சிகளை சிந்தித்துப் பயனில்லை. போரைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்,” என்றான் மன்னன்.
குறிஞ்சி மன்னன் சொன்னதைக் கேட்டுப் பிரமித்து நின்றாள். மன்னன் செய்த விஷயங்கள், கையாண்ட முறைகள் தவறாயிருந்தாலும் இவன் சேரநாட்டைக் காக்கவே இத்தனையும் செய்திருக்கிறானென்பதை அறிந்ததும் அவள் நெஞ்சு அவன்பால் பெரிதும் இளகியது. இறுதியாக, “மன்னா !” என்று அழைத்தாள் மெதுவாக.
“என்ன குறிஞ்சி?”
“நாளைப் போரில் தந்திரந்தான் பலிக்கும் என்று நம்புகிறீர்களா?”
ஆம்.”
“சொன்னபடி பாண்டிய சகோதரர் நேரில் கிழக்கு வாயிலைத் தாக்கமாட்டார்களென்று நினைக்கிறீர்களா?”
“ஆம்.”
“பிறகு எங்கு தாக்குவார்களென்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“தெற்கு வாயிலில் யானைப்படை இருக்குமிடத்தில்.”
“ஏன்?”
“யானைப்படைகளைத் தாக்கி வேலெறிந்தால் அவை பிளிறி அலறி ஓடும். இதனால் பெரும் குழப்பம் ஏற்படும். நமது அணிவகுப்புக் குலையும். அந்தக் குழப்பத்தில் பாண்டியன் உள்ளே நுழைவான்.”
குறிஞ்சியின் வியப்பு உச்ச நிலைக்குச் சென்றது. வீர பாண்டியனை எத்தனை நன்றாக சேரமன்னன் எடை போட்டிருக்கிறானென்று எண்ணிப் பார்த்தாள். அதனால் பெருமிதத்துடன் மன்னனை நோக்கினாள். “உங்கள் திட்டம் மிகச் சரி. வீரபாண்டியனைச் சரியாக எடை போட்டிருக்கிறீர்கள். இருப்பினும் எனக்குப் பெரும் சந்தேகமாயிருக்கிறது. தாங்கள் எண்ணியபடி அவர் சிக்குவரா?” என்று கூறவும் செய்தாள்.
ஆனால் வீரரவியின் ஊகந்தான் சரியாயிருந்தது. மறு நாள் போர் துவங்கிய போது பரலியின் தென்புறத்தையே தாக்கினான் வீரபாண்டியன். அதுவும் பகிரங்கமாகப் பட்டப்பகலில் எல்லோர் கண்முன்பாகவும் தாக்கினான். தாக்கி உள்ளே புகுந்தான்.