Raja Muthirai Part 2 Ch66 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 66 படையெனும் புயல்
Raja Muthirai Part 2 Ch66 | Raja Muthirai | TamilNovel.in
வீரரவி ஊகித்தபடியே வீரபாண்டியன் பரலிமா நகரின் தென்புற வாயிலைத் தாக்கிய செய்தி பேரதிர்ச்சியைத் தந்தது பணிமகள் குறிஞ்சிக்கு. மறுநாள் துவங்கவிருந்த போரை நேரடியாகப் பார்க்கச் சேரனிடம் அனுமதி கேட்டுப் போர் முரசுகள் முழங்கியதும் சிறையினின்று வெளிப்பட்டு அரண்மனையின் மேல் உப்பரிகையில் நின்ற பரதப்பட்டனுக்கு அது அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே அளித்தது. அவ்விருவருக்கும் மட்டுமல்ல அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. முதல் நாள் தனது போர்த்திட்டத்தை வீரபாண்டியன் பாண்டிய மன்னன் பாசறையில் மற்ற உபதளபதிகளுக்கு முன்பு விவரித்த போது அவர்களுக்கும் அத்தகைய அதிர்ச்சியே ஏற்பட்டது.
பாசறையின் நடுவே தரையில் செருகப்பட்டிருந்த ஈட்டியின் முனையில் பெருஞ்சுடர் விட்டிருந்த பந்தத்தின் வெளிச்சத்தில் தரையில் குத்திட்டு உட்கார்ந்து கொண்டிருந்த வீரபாண்டியன், தன்னைப்போலவே தனது பக்கத் தில் உட்கார்ந்திருந்த சுந்தரபாண்டியனுக்கும், இருவருக்கும் எதிரே அரைச்சக்கர வளையமாக ஒற்றைக்கால், மண்டியிட்டு உட்கார்ந்திருந்த உபதலைவர்களுக்கும் தனது போர்த்திட்டத்தை விவரிக்கத் தரையில் தனது ஆள்காட்டி விரல் நுனியால் பல கோடுகளை இழுத்தான். பல இடங்களில் விரல் நுனியை அழுத்திச் சுற்றி லேசாகக் குழிகளையும் மணலில் சிருஷ்டித்தான். அது மலைப்பகுதியானதால் அவர்கள் இருந்த ஒரு பாறையின் ஒரு பகுதி கால வெள்ளத்தில் மணலாகித் தரை தட்டியிருந்தாலும் மணலெல்லாம் முறுக்கு மணலாயிருந்தபடியால் பாண்டியன் கோடு இழுத்த போதும், குழிகளைச் சிருஷ்டித்தபோதும் விரலை நன்றாக அறுக்கவே செய்தது. அதைப்பற்றிச் சிறிதும் சிந்தியாமலே வீரபாண்டியன் விளக்கினான் போர்த்திட்டத்தை. “அண்ணா! நாளை சரியாக நடுப்பகலில் நான் நமது படையின் தென்புறப் பிரிவின் உபதளபதியுடன் ஆயிரம் வீரர்களுடன் தெற்கு வாயிலில் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்ததும் நீங்கள் அதே பகுதியில் அந்த வாயிலையும் தள்ளி தெற்குத்திக்கு நோக்கி நமது புதுகணைகளில் ஒன்றை அனுப்புங்கள், கால் ஜாமம் இடைவெளி கொடுத்து இன்னோர் உபதளபதியை இன்னோர் ஆயிரம் வீரர்களுடன் அதே வாயில் வழியாக உள் நுழையச் சொல்லுங்கள்.” என்று கூறி அண்ணனைப் பார்த்தான்.
ஜடாவர்மன் சிங்கவிழிகள் தம்பியை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை. அவன் விழிகளைச் சந்திக்கவுமில்லை. தரையில் தம்பி இழுத்த கோடுகளையும் புள்ளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தன. ஓர் உபதலைவன் மட்டும் சந்தேகம் கேட்டான். “நாம் தென்புற வாயிலில் இறங்கும் போது கோட்டை மீதுள்ள விற்பொறிகளும் வேற்பொறி களும் வாளாவிருக்குமா? தவிர கோட்டைச் சுவரை அடுத்துள்ள காரடும் அழிக்கப்பட்டிருப்பதால் மலையில் இறங்கும் நம்மை விற்பொறிகளும் வேற்பொறிகளுமே அழித்துவிடுமே,” என்று.
வீரபாண்டியன் உபதலைவனை நோக்கிச் சொன்னான். “சேரனுடைய குருநாதர் ஏற்பாடு அதுதான். இது இன்னும் அப்படியே இருந்தால் நாம் எந்த வாயிலையும் நேரிடையாக அணுக முடியாது. நல்ல வேளையாக வீரரவி அவற்றில் பாதிக்கு மேல் கீழே இறக்கிவிட்டான். நம்மை எதிர்கொள்ளச் சில விற்பொறிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றையும் ஏமாற்றி நாம் தெற்கு வாசலை அடையலாம்,” என்று.
“என்ன! விற்பொறிகளைப் பாதிக்குமேல் கோட்டைச் சுவரிலிருந்து சேரன் இறக்கிவிட்டானா?” என்று வினவினான் இன்னோர் உபதளபதி.
“ஆம். கோட்டை நிலையை அறியத்தான் காட்டின் ஓரமே இன்று பகல் என் புரவியில் சென்றேன். மலைக் காட்டுக்கும் கோட்டைச் சுவருக்கும் இடையேயுள்ள இடை வெளியைத் திறந்த வெளியாக்கவே காடு வெட்டப்பட்டது. நமது சாதாரண விற்பொறிகள் காட்டு முகப்பிலிருந்து இயங்கினால் கோட்டைக்குள் வாளிகள் விழாதிருக்கவே அந்தத் தந்திரத்தைக் குருநாதர் சிருஷ்டித்தார். நமது வாளி கோட்டைக்குள் போகாதென்றால் கோட்டையிலுள்ள வாளிகளும் காட்டை அணுக முடியாதல்லவா?” என்று வினவினான் வீரபாண்டியன் பதிலுக்கு.
“ஆம், ஆம்,” என்று பல உபதலைவர்கள் ஆமோதித்தார்கள்.
“அப்பொழுது பொறியின் வாளிகள் காட்டை அணுக முடியாதென்றால் மலைச்சரிவில் வேகமாக வரும் படையைத் தாக்கப் பொறிகள் கோட்டை மதிளின் முகப்புக்குக் கொண்டு வரவேண்டும். அவற்றின் மூக்குகள் இடையிலுள்ள திறந்த வெளியை நோக்கித் துருத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படித் துருத்திக் கொண்டு மிருக்கின்றன. தென்புற வாயிலின் மீதும் அதை அடுத்தும் அத்தகைய மூக்குகள் மூன்றைத்தான் பார்த்தேன். ஆகவே மீதி கீழே இருக்க வேண்டும்…” என்றான் வீரபாண்டியன்.
“கீழேயா? எதற்கு?” என்றான் உபதலைவர்களில் ஒருவன்.
“கோட்டைக் கதவை உடைத்து நுழையும் நம்மை எதிர்க்க. கதவு திறந்ததும் பொறிகள் நம்மை நோக்கித் தயாராகியிருக்கும் நம்மை நமனுலகு அனுப்ப” என்ற வீரபாண்டியன் புன்முறுவலுடன் உபதலைவர்ளை நாக்கினான்.
உபதலைவர்கள் பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தனர். வீரபாண்டியன் வேண்டுமென்றே மரண வாயிலில் நுழை பதாகத் தோன்றியது அவர்களுக்கு. ஆகவே பதிலேதும் கேட்கவில்லை அவர்கள். வீரபாண்டியனே மேலும் சொன்னான்; “உபதலைவர்களே! எதிரியின் தற்காப்பு
பலமாகத்தானிருக்கிறது. அதுவும் வீரரவி பெரும் வீரன். போரைக் கண்டு அஞ்சாதவன். தந்திரத்தில் அவனுக்கிணை யாரும் கிடையாது. ஆனால் ஒரு பலவீனம் அவனிடம் இருக்கிறது. அவன் வஞ்சகன். யோசனையெல்லாம் குறுக்கு யோசனை. ஆகையால் தான் நம்மை உள்ளே இழுத்து அழிக்கப் பார்க்கிறான். கோட்டைப் பொறிகளைக் கீழே இறக்கிவிட்டால் நாம் துணிவுடன் இறங்கித் தாக்குவோமென்றும், அப்பொழுது நம்மை உள்ளே விட்டுக் கீழேயிருக்கும் பொறிகளால் அழித்து விடலாமென்றும் திட்டமிட்டிருக்கிறான். அப்படியே ஒரு வாயிலில் பொறிகளை மீறி உள்ளே நுழைந்தாலும் அடுத்த வாயில் படைகளை நம்மீது திருப்பி நம்மையும் வெளியிலுள்ள படையையும் அவன் துண்டித்து விடலாம். பிறகு உள்ளிருக்கும் நமது படையை அழித்து வெளியிலுள்ள மீதிப் படையின் மீதும் தனது பெரும் படையை ஏவலாம். இதனால் அவன் ஒரே சமயத்தில் சமாளிக்கக்கூடிய படை சிறு படையாகிறது. தவிர நமது படையும் இரண்டு படுகிறது…” என்று சொல்லிக் கொண்டே போன வீர பாண்டியனை அதுவரை பேசாமலிருந்த சுந்தர பாண்டியன் இடைமறித்து வினவினான். “தம்பி! எதிரி நமது படைகளை இரண்டாக்கத் திட்டமிட்டிருக்கிறான். நீ இந்தக் கோடுகளின்படி ஐந்தாகப் பிளந்திருக்கிறாயே!’ என்று .
வீரபாண்டியன் அண்ணனை ஏறெடுத்து நோக்கி, “ஆம் அண்ணா படைகள் ஐந்து பிரிவு, ஆனால் தாக்கப் போவது ஒரே படையாக,” என்று தரையிலிருந்து இன்னுமிரு கோடுகளைச் சுட்டிக் காட்டினான்.
சுந்தரபாண்டியன் கண்கள் பளிச்சிட்டன. ‘ஆம், ஆம்” என்ற ஆமோதிப்புச் சொற்களும் அவனிடமிருந்து வெளிவந்தன. அந்தச் சொற்களில் உற்சாகமும் இருந்தது.
சுந்தரபாண்டியன் சுட்டிக்காட்டிய கோடுகளையும், வீரபாண்டியன் அளித்த விளக்கத்தையும் உபதலைவர் களும் ஓரளவு புரிந்து கொண்டாலும் வீரபாண்டியன் திட்டத்தில் ஆபத்து மிக அதிகமென்றும் நினைத்தார்கள். அது வெற்றியடைவதிலுள்ள பல கஷ்டங்கள் அவர்கள் கண்முன்பு தோன்றின. அவர்கள் சந்தேகத்தை முகங்களி லிருந்தே அறிந்து வீரபாண்டியன் சொன்னான், “வீரர்களே! ஆபத்தில்லாமல் போரில்லை. ஆனால் நமக்கு இப்பொழுது ஆபத்துக் குறைவு. குருநாதன் சிருஷ்டித்திருந்த ஆபத்தைச் சேரன் குறைத்துவிட்டான். என்னை அவன் நாளைக்குக் கிழக்கு வாயிலில் எதிர்பார்க்கவில்லை. தெற்கு வாயிலில் எதிர்பார்க்கிறான். நான் கிழக்கு வாயிலென்று சொன்னால் அது தெற்கு வாயிலாகத்தான் இருக்க முடியுமென்றும், அங்கு யானைப் படை இருப்பதால் அதைக் குழப்பி அதனால் ஏற்படும் சந்தர்ப்பத்தைத் தான் உபயோகப்படுத்திக் கொள்வேனென்றும் நினைக்கிறான்” என்று.
“என்ன, அங்கு யானைப்படை இருக்கிறதா?” என்று வினவினான் ஓர் உபதலைவன்.
“ஆம். அப்படித்தான் கூத்தன் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றான் வீரபாண்டியன்.
“அப்படியானால் வீரரவி எதிர்ப்பார்ப்பது போலவே தாங்கள் நடந்து கொள்ளப் போகிறீர்களா?” என்று வினவினான் உபதலைவர்களில் ஒருவன்.
“ஆம்.” வீரபாண்டியன் குரல் திட்டமாயிருந்தது.
“ஏன்?’ எதிரி திட்டப்படி நடப்பது நமக்கு எப்படி அனுகூலம்?” என்று வினவினான் மற்றோர் உபதளபதி.
“வீரரவியின் திட்டம் கோட்டாற்றுக் கரையை யொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. வடக்குப் புறத்தைத் தாக்கும்படி சிங்கணனிடம் சொல்லிவிட்டு தெற்குப் புறத்தில் நாம் தயாராயிருக்கவில்லையா அங்கு?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“ஆம்,” என்றான் ஓர் உபதளபதி.
“வீரரவியின் பலவீனம் அதில் தானிருக்கிறது. அவன் திட்டம் முழுவதும் கோட்டாற்றுக்கரைப் போரை அடி யொற்றியதாக இருக்கும். ராமவர்மன் அங்கு நடந்ததை விளக்கியிருக்கிறான். அதை வைத்துத் திட்டம் தயாரிக் கிறான் சேரன். கோட்டாற்றுக்கரையில் நான் விற்பொறி களைக் கோட்டையின் கீழ்த்தளத்தில் இறக்கி உள்ளே நுழைந்த ராமவர்மன் படையை அழித்தேன். அதை யொட்டிப் பொறிகளைத் தரையிலேயே இறக்கிவிட்டான் சேரமன்னன், நாம் உள்ளே நுழைந்ததும் எதிர்கொள்ள ஆகவே நாம் இம்முறை நேர் எதிர் வழியொன்றைக் கையாளப் போகிறோம். நாளை இரவுக்குள் சேரன் புரிந்து கொள்வான். பாண்டியன் படை அவ்வப்பொழுது இடத் துக்கும், சமயத்துக்கும், பலத்துக்கும் தகுந்தவாறு மாறும் என்பதை” என்று கூறி வீரபாண்டியன் அத்துடன் விவாதத்தை முடித்து “நானும் தென்புறப் படைப்பிரிவின் உபதளபதியும் தெற்கு வாசல் மீது இறங்குவோம் ஆயிரம் வீரருடன். நாங்கள் வாயிலினுள் நுழைந்ததும் தெற்கு வாயிலுக்குச் சற்றுத் தள்ளி தெற்கு நோக்கி ஊருக்குள் ஒரு பயங்கரக் கணை அனுப்பப்படும். கால் ஜாமத்திற்கெல்லாம், இன்னுமோர் ஆயிரம் பேர் கொண்ட படை அதே தெற்கு வாசலை நோக்கி விரைந்து வந்து உள் நுழையும். அடுத்த கால் ஜாமம் கழித்து மன்னர் மீதி மூவாயிரம் வீரருடன் முரசு கொட்டி வடபுற வாயிலை நோக்கிக் காட்டின் ஊடே செல்லுவார். அவர் செல்வது நகர மக்களுக்கு நன்றாகத் தெரியும்படி போர்க் கோஷமும் முரசொலிகளும் இருக்கவேண்டும். வடபுறவாயிலுக்கு நேரில் சென்றதும் அங்கு இறங்காமல் திரும்பக் கிழக்கு வாயிலுக்கு வந்து அந்த வாயில் முன்பு சூறாவளி வேகத்துடன் இறங்குவார். உள்ளே நுழைந்ததும் நமது படைகள் ஆங்காங்கு சேரன் வைத்திருக்கும் முரசுகளை அழிக்கட்டும்” என்று கூறினான்.
உபதலைவனை அத்துடன் அனுப்பிவிட்ட வீர பாண்டியன் அண்ணனுடன் நீண்ட நேரம் போர் நுணுக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். பிறகு நிம்மதியாக சகோதரரிருவரும் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலையில் தென்புறத்திலிருந்த படைப் பிரிவை அடைந்த வீரபாண்டியன் உபதலைவனிடம்
கூறினான். “உபதளபதி! நாம் சரியாக நடுப்பகலில் தெற்கு வாயிலை நோக்கி இறங்குகிறோம். இறங்கும் போது வீரர்கள் வழக்கபடி வாட்களைச் சுழற்ற வேண்டாம். வேலெறிய வேண்டாம். புரவிகளின் முதுகுகளில் நன்றாகப் படுத்துக் கொண்டு வெகுவேகத்தில் இறங்க வேண்டும். புரவிமீது அம்பு விழுந்து புரவி ஓடி வரட்டும். எப்படியும் தெற்கு வாயிலை அடையட்டும். கதவுகளை இடிக்கும் பெரிய மரத்தூண் வண்டிகள் வேகமான புரவிகளில் அமைக்கப் பட்டு முன்னால் சரிவில் தள்ளிவிடப்படும். நாம் தெற்கு வாயிலை அடையும் போது அந்த மரத் தண்டுகள் அங்கிருக்க வேண்டும். புரிகிறதா!”
புரிகிறதென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் உபதளபதி. வீரபாண்டியன் சரியாக நடுப் பகலில் மலைச்சரிவில், தன் படையின் -முகப்பில் தனது சாமபல் நிறப் புரவி மீதமர்ந்து நின்றான். பகலவன் உச்சிக்கு வந்தான். பாண்டிய முரசு ஒன்று லேசாக ஒலித்தது. பாண்டிய இளவலின் சாம்பல் நிறப் புரவி வாயிலை நோக்கி ராட்சஸ வேகத்தில் இறங்கியது. அதை அடுத்துப் பெரும் புயல்போல் இறங்கியது உபதலைவன் பின்னாலிருந்த படை. ஆயிரம் புரவிகளின் குளம்பொலிகள் தடதடவென பரலிமீது இடி இறங்குவதுபோல் ஒலித்தன. சேரன் முரசுகள் ஒலித்தன. கோட்டைச் சுவர்மீதிருந்த மூன்று விற்பொறிகள் இயங்கி அம்பு மழையும் பொழிந்தன. ஆனால் அந்த புரவிப்படை வருவது நிற்கவில்லை. அடர்த்தியாக சுவர்போல் வெகு வேகத்துடன் இறங்கியது. வீரபாண்டியன் படை. அதன் எண்ணத்தை தெற்குவாசல் வீரர் உணருமுன்பு வாயிற்கதவுகள் படு தூளாயின. உள்ளே புகுந்தது புரவிச் சூறாவளி. இதை அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்த பரதப்பட்டன் பக்கத்திலிருந்த குறிஞ்சியின் பக்கம் திரும்பிப் பெருமூச்சு விட்டான்.