Raja Perigai Part 3 Ch38 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 38 தளபதி லாவின் தூது
Raja Perigai Part 3 Ch38 | Raja Perigai | TamilNovel.in
சந்தாசாகிபை மண்குதிரையென்று பிரெஞ்சு தளபதி ஜேக்ஸ் லா குறிப்பிட்டதும் அசந்தர்ப்பமாக நகைத்ததும் வீரனான ஜெய்சிங்குக்கு அடியோடு பிடிக்காததால் அவருடைய நகைச் சுவையில் அவன் கலந்துகொள்ளவில்லை. ஆகையால் சுள்ளென்று கேட்டான். அவர் எப்படி மண் குதிரை?” என்று.
“நவாபை நம்பி நாங்கள் ஆற்றில் இறங்கினோம்” என்று துவங்கிய பிரெஞ்சு தளபதி, “இல்லை. இல்லை. இரண்டு ஆறுகளில் இறங்கினோம்; காவேரியொன்று கொள்ளிடம் ஒன்று” என்று தம்மைத் திருத்திக் கொண்டார்.
ஜெய்சிங்கும் தனது நகைச்சுவையைக் காட்டத் தொடங்கி, “ஏன் அந்த ஏட்டைத் திருப்பிப் படிக்கக் கூடாது” என்று கேட்டான்.
”எப்படிப் படிக்க வேண்டும்?” என்ற வினவினார் லா ஜெய்சிங்கை உற்று நோக்கி.
”உங்களை நம்பிச் சந்தாசாகிப் ஆற்றில் இறங்கினார் இல்லை இல்லை. இரண்டு ஆறுகளில் இறங்கினார் என்று வைத்துக் கொண்டால் என்ன?” என்ற வினவின ஜெய்சிங் கிட்டத்தட்ட லாவின் நகைச்சுவையை அவர் மேலேயே திருப்பினான்.
பதிலுக்கு லா கேட்டார், “இங்கு நவாப் ஏது?” என்று.
”ஏன் இல்லை. உங்கள் கவர்னர் டூப்ளேயே தெற்கத்திய நவாபென்று முடிசூட்டிக்கொண்டு, அதற்குண்டான விருது களையும் பெற்றுக்கொண்டாராமே அப்படியானால் அவரும் நவாப்தானே?” என்ற பழைய கதையைச் சிறிது கிளறினான் ஜெய்சிங்.
இதைக் கேட்ட லாவின் முகத்தில் இகழ்ச்சிக் குறி அதிக மாகப் படர்ந்தது. ”இப்பொழுது பிரெஞ்சுக்காரர் தோல்விக்கு உனக்குக் காரணம் புரிந்திருக்க வேண்டுமென்று நினைக் கிறேன்…” என்ற அவர் பதிலிலும் இகழ்ச்சி பெரிதும் மண்டிக் கிடந்தது.
”தோல்விக்குக் காரணம் கண்டு பிடிப்பதில் எனக்கு அதிகத் தேர்ச்சியில்லை. போரில் வெற்றி கொண்டோ மடிந்தோ தான் ராஜபுத்திரர்களுக்குப் பழக்கம்” என்றான் ஜெய்சிங்.
‘நவாபுகள் அப்படியில்லை… தோல்வி சகஜம் அவர்களுக்கு. தோல்வி கண்ணுக்குத் தோன்றினால் தப்பப் பார்ப்பார்கள். டூப்ளே கவர்னராயிருந்த வரையில் அவருக்குத் தோல்வியில்லை. நவாபாகிச் சுதேசி வேஷம் போட்டதும் தோல்வியைக் கண்களால் காண்கிறார்” என்ற லா, ‘இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தார்.
ஜெய்சிங் லாவைக் கூர்ந்து நோக்கினான். “தாங்கள் நவாப் அல்லாவாதலால் போரில் இறங்கிப் பிரிட்டிஷ் படைகளை விரட்டி விடுவீர்களென்று நினைக்கிறேன்?” என்று சொன்னான் இகழ்ச்சியுடன்.
”அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். நானும் நவாபைப் பின்பற்றிச் சரணடைவேன். எங்கள் டூப்ளேயும் இப்போது நவாப் என்பதை நீ மறக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, எந்த நவாப்புக்காகவும் எனது படைகளைப் பலி கொடுக்கமட்டேன்” என்றார் லா.
“அப்படியானால் நீங்களும் சரணடையப் போகிறீர்களா?”
“இப்போது இல்லை. எல்லாம் சந்தாசாகிபுவுக்குப் பிறகுதான். நிலைமையைப் பார்த்த பிறகுதான்” என்றார் லா.
“இப்போதுள்ள நிலைமைக்கு என்ன?” என்று ஜெய்சிங் கேட்டான்.
‘’அக்கரையில் கிளைவ் இருக்கிறான். அவனைத் தாண்டி எங்கள் தளபதி ஆதுநில் வர முடியவில்லை. வாலிகண்டபுரத்தில் அடைந்து கிடக்கிறார். திருப்பி வாலிகண்டபுரத்துக்கு ஓட்டி விட்டான். அங்கிருந்து கொண்டு அவர் என்னைப் போரிட உத்தரவு அனுப்பிக்கொண்டிருக்கிறார். இங்கு எதிரிலோ ஜெனரல் லாரன்ஸ் இந்த ஆடு எப்போது வெளியே வரும் என்று ஓநாய்ப் போல் காத்திருக்கிறார். இந்த நிலைமையைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்ட லா, ”இந்த நெருக்கடி நிபந்தனைகளின்படி சரணடைவேன். அதில் முதல் நிபந்தனை எனது வீரர்கள் எந்த விதத் தொந்தரவும் இல்லாமல் புதுச்சேரி செல்ல அனுமதி கொடுப்பதாகும்” என்றும் விளக்கினார்.
ஜெய்சிங் இம்முறை நகைத்தான் “தளபதியவர்களே தங்களுக்கும் நவாபுக்கும் இதிலும் ஒற்றமையிருக்கிறது” என்றும் சொன்னான் நகைப்பின் ஊடே.
”எதில்?” என்று கேட்டார் லா.
”நிபந்தனை சொல்வதில்.”
”சந்தாசாகிபும் நிபந்தனை விதிக்கிறாரா?”
“ஆம்.”
“என்ன நிபந்தனை?”
”அவரை விடுதலை செய்து தகுந்த பந்தோபஸ்துடன் காரைக்காலுக்கு அனுப்ப மானாஜி ஒப்ப வேண்டும்.”
இதைக் கேட்ட லா மீண்டும் பெரிதாகப் புன்னகை செய்தார். இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது” என்றார்.
”என்ன வித்தியாசம் தளபதி?” என்ற கேட்டான் ஜெய்சிங்.
‘’என் நிபந்தனை என் சோல்ஜர்களைப் பற்றியது. நவாபின் நிபந்தனை அவரைப் பற்றியது” என்ற லா, ”சரி சரி எப்படி யானால் என்ன? போர் முடிந்துவிட்டது. நான் மானாஜியைப் பார்த்து விட்டு வருகிறேன். முடியுமானால் லாரன்ஸையும் பார்த்து வருகிறேன். நீ இங்கேயே இரு” என்ற கூறிவிட்டு ”யார் அங்கே?” என்ற குரல் கொடுத்தார்.
வெளியிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு சோல்ஜரிடம், “புரவி யொன்றைத் தயார் செய். எனக்கு முன்னால் வெள்ளைக் கொடி பிடித்துச் செல்ல ஒரு வீரனும் வரட்டும்” என்று உத்தரவிட்டார்.
அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் பூர்ண ராணுவ உடையில் புறப்பட்ட ஜேக்ஸ் லா எதிரிப்படைப் பிரிவுகளை கடந்து மானாஜியின் கூடாரத்துக்கு அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார். அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவர் அங்கு ஜெனரல் லாரன்ஸும் இருப்பதைப் பார்த்ததும் இருவருக்கும் தலைவணங்கினார், ராணுவ பாணியில், அந்த இரு தளபதிகளும் எழுந்து பதிலுக்குத் தலைவணங்கியதும் லாவுக்கு ஒரு தனி ஆசனம் அளிக்கப்படவே மூவரும் உட்கார்ந்தனர்.
”நான் ஒரு முக்கிய செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்று லா துவங்கினார் சம்பாஷணையை.
”வெரிகுட்” என்றார் ஜெனரல் லாரன்ஸ்.
”வெரிகுட் பார் யூ, நாட் பார் அஸ் (உங்களுக்கு மிக நல்லது. எங்களுக்கல்ல)” என்றார் லா.
மானாஜி எதுவும் பேசவில்லை. செய்திக்கு எதிர்பார்த் திருந்தார்.
”சந்தாசாகிப், ஆற்காட் நவாப், சரணடையத் தீர்மானித்து விட்டார்” என்றார் தளபதி லா.
இந்தத் திடீச் செய்தியைக் கேட்டதும் ஜெனரல் லாரன்ஸோ மானாஜியோ அதிர்ச்சியடையவில்லை. ஜெனரல் லாரன்ஸே அதற்குப் பதில் சொன்னார், ”குட் பார் யூ அண்ட் குட் பார் ஹிம் (உங்களுக்கும் நல்லது அவருக்கும் நல்லது)” என்று.
”நாட் பார்மீ (எனக்கில்லை)” என்றார் லா.
”ஹொய்?” என்று கேட்டார் லாரன்ஸ்.
‘’ஐ தோன்த் ஸரண்டர் (நான் சரணடையப் போவதில்லை)”
”ஐ ஸீ.”
”எஸ். நவாப் ஸரண்டர்ஸ் (நவாப் சரணடைகிறார்).”
”இதைக் கேட்ட மானாஜி வினவினார், ”நீங்கள்?” என்று.
”மேலிடத்திலிருந்து வரும் உத்தரவைப் பொறுத்தது.”
“யாரிடமிருந்து உத்தரவு வரவேண்டும்?”
”கவர்னர் டூப்ளேயிடமிருந்து.”
இதற்கு மேல் மானாஜி பேசவில்லை. ஜெனரல் லாரன்ஸே தமிழில் பேசினார், தமக்கும் தமிழ் வரும் என்பதைக் காட்ட. “நவாப் வரட்டும். நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றார் லாரன்ஸ்.
“நவாப் தஞ்சைக்குச் சொந்தமானவர். எங்களிடந்தான் சரணடைய வேண்டும்” என்றார் மானாஜி.
அப்பொழுது உள்ளே நுழைந்த மைசூர் பிரதிநிதி நஞ்ச ராஜா, “இல்லை இல்லை. நவாப் எங்களுக்கு வேண்டும்” என்றார்.
ஜேக்ஸ் லாசிரித்தார். ‘நவாபுக்குக் கிராக்கி மிக அதிகமாக இருக்கிறது” என்றும் சொன்னார் நகைப்பின் ஊடே.
ஆனால் மானாஜி இடை புகுந்து திட்டமாகச் சொன்னார் “நவாப் என் படைகளைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆகையால் அவர் என்னிடம் சரணடையட்டும். பிறகு மற்ற வற்றை யோசிப்போம்” என்று.
”சரணடைய ஒரு நிபந்தனையும் இருக்கிறது” என்றார் லா.
”என்ன நிபந்தனை?” நஞ்சராஜா கேட்டார் சந்தேகத்துடன்.
”அவரை விடுதலை செய்து காரைக்காலுக்கு அனுப்ப வேண்டுமாம்” என்று லா நவாபின் நிபந்தனையைச் சொன்னார்.
இந்த நிபந்தனையை நஞ்சராஜா ஒப்புக் கொள்ளவில்லை. மேஜர் லாரன்ஸகூடச் சிறிது சிந்தித்தார். ஆனால் மானாஜி சொன்னார். ”எதிரியின் விருப்பத்தை நிறைவேற்றுவது நமது கடமை, அப்படியே செய்வோம்” என்று.
இத்துடன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்ட பிரெஞ்சு தளபதி தமது பாசறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே காத்திருந்த ஜெய்சிங்கிடம் சொன்னார். “நவாபின் இஷ்டம் நிறைவேறி விட்டது. அதுவும் மானாஜி அவருக்கு மிகவும் பரிந்து பேசினார். ” என்று.
“மானாஜியா?” என்று வியப்புடன் வினவினான் ஜெய்சிங்.
”ஆம். லாரன்ஸும் மைசூர் பிரதிநிதியும் நவாபை விடுதலை செய்ய ஒப்பவில்லை. மானாஜிதான் உடனடியாக ஒப்புக் கொண்டார்” என்றார் லா.
”விந்தையாக இருக்கிறது” என்றான் ஜெய்சிங்.
”ஏன், இதில் விந்தை என்ன?” என்று கேட்டார் லா.
”தஞ்சையைத்தான் சந்தாசாகிப் அடிக்கடி சூறையாடி யிருக்கிறார். அப்படியிருக்க மானாஜி அவர் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டது விசித்திரமாக இருக்கிறது” என்றான் ஜெய்சிங்.
”ஆம்.” என்ற லா, “இந்தப் போரில் இன்னும் என்ன விசித்திரங்களைக் காணப் போகிறோமோ?” என்று கூறினார். ”எப்படியும் நவாபின் எண்ணம் ஈடேறிவிட்டது. அவருக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்” என்றும் சொன்னார்.
”இதில் அதிர்ஷ்ட ம் என்ன இருக்கிறது?” ”உயிர் தப்புவது அதிர்ஷ்ட மல்லவா?” என்ற கேட்டார் லா