Alai Arasi Ch1 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 1 பிசாசு மரக்கலம்
Alai Arasi Ch1 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அராபிய, எகிப்திய, சீன, யவன நாடுகளின் மரக்கலங்கள் தனித்தனிக் கூட்டங்களாக மற்ற நாடுகளை விட அதிகமாக நின்று, தொண்டி மாநகர்க் கடலில் மற்றுமொரு புதிய நகரை சிருஷ்டித்துவிட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தினாலும், அப்படி யாரும் தொண்டியின் கடற்புரத்தை ஆக்கிரமித்துவிட முடியாதென்பதை நிரூபிக்க அலைகள் அன்று பெரும் பேய்களாக எழுந்து கூச்சலிட்டு நங்கூரம் பாய்ச்சிய மரக்கலங்களையும் தூக்கியெறிய முற்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட முகுந்தன் பெருவழுதி, அதுபற்றி மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக துன்பப் பெருமூச்சு விட்டு தனது குடிசையில் உட்கார்ந்த வண்ணம் கடற்பகுதியை நோக்கிக் கொண்டே இருந்தான். சுமார் எண்பது பிராயங்களை அடைந்திருந்தாலும் அறுபதுக்கு மேல் மதிப்பிட முடியாதவனும், கண் பார்வை சிறிதும் மங்காதவனுமான முகுந்தன் பெருவழுதி தனது குடிசை முகப்பில் உட்கார்ந்து கொண்டு காலைக் கதிரவனின் இதந்தரும் கிரணங்களில் குளிர் காய்ந்து கொண்டே கண்களின் மீது கையை வைத்து கடலின் மீது தனது தூரதிருஷ்டியைச் செலுத்தினான். ஆனாலும் அந்தக் கண்களுக்கு தூர இருந்ததாக தனது பேரன் சொல்லிப் போன அந்த தனி மரக்கலம் புலனாகாததால் அதைத் தானே பார்த்து விடுவதென்ற தீர்மானத்துக்கு வந்தவனாய் எழுந்து குடிசைக்குள்ளே சென்று தனது பெரிய தடியை எடுத்துக் கொண்டி கம்பளிப் போர்வையும் போர்த்திக் கொண்டு கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
மேலைக் கடற்கரையின் இருபெரும் துறைமுகங்களில் ஒன்றும் மேலை நாட்டு வணிகத்துக்குப் பெயர் போனதுமான தொண்டி மாநகர், வணிகத்தின் காரணமாகவே சமுத்திரக்கரை வரையில் படர்ந்திருந்ததால், எங்கும் வியாபாரக் கூச்சலும், அந்த நகரைக் காவல் புரிந்தயவனர் நடமாட்டமும், எச்சரிக்கைக் கோஷமும், அவர்கள் பாதக் குறடுகளின் சத்தமும் சேர்ந்து பிரளயத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும், கடற்கரை முகப்புக்குச் செல்லும் வழிகளிலெல்லாம் மணலில் சிறு வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் அடிக்கடி ‘பெரியவரே பெரியவரே!” என்று அன்புக் குரல் கொடுத்தாலும், எதற்கும் செவிசாய்க்காமலும், கடல் பகுதியில் வைத்த கண்ணை வாங்காமலும் முகுந்தன் பெருவழுதி தனது பெருந்தடியை மணலில் ஊன்றிய வண்ணம் வேகமாக நடந்தான்.
தலையில் தாறுமாறாகத் தொங்கிக் கொண்டிருந்த மயிருடனும், பெரிய தாடி மீசையுடனும், தலை மயிர் அடிக்கடி விழுந்து கண்னை மறைத்ததால் அதை விலக்கிக் கொண்டும், மீசை தாடிகள் வாயிலடைக்காமல் அவற்றை விரல்களால் ஒதுக்கி விட்டுக் கொண்டும் நடையைக் கட்டிய பெருவழுதி கடற்கரையை அடைந்ததும் அங்கிருந்த பரதவர் பலர் அவனை நெருங்கி வந்து “படகை எடுக்கட்டுமா?” என்று போட்டி போட்டுக் கொண்டு கேட்டார்கள். முகுந்தன் பெருவழுதி அவர்களுக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் “என் பேரனை யாராவது பார்த்தீர்களா?” என்று வினவினான்.
பரதவரில் ஒருவன் முதியவனை நோக்கி “உங்கள் பேரனை இரண்டு நாட்களாகப் பார்க்கவில்லை” என்று பதில் சொன்னான்.
முதியவனான முகுந்தன் “நானும் பார்க்கவில்லை இரண்டு நாட்களாக. அதனால்தான் கவலையாயிருக்கிறது” என்று துயரம் நிரம்பிய குரலில் சொன்னான்.
“கடலோடும் பரதவர் மூன்று நான்கு நாட்களுக்கு மேல் கடலிலேயே இருப்பது சகஜந்தானே?” என்றான் இன்னொரு பரதவன்.
முகுந்தன் அப்பொழுதும் கவலையை விடாமலும் துன்பப் பெருமூச்சு விட்டும் பேச முற்பட்டு “என் பேரன் தொழிலை முன்னிட்டு இரண்டு நாட்களென்ன, ஒரு வாரம் கடலோடி திரும்பாவிட்டாலும் கவலைப்படமாட்டேன். இம்முறை அவன் சுறா இழுக்கும் கொக்கிகளையோ பெரிய வேல்களையோ எடுத்துச் செல்லவில்லை. வலையைக் கூடக் கொண்டு போகவில்லை. அதனால்தான் கவலையாயிருக்கிறது. அவனை வந்து அழைத்துப் போனவனும் யோக்கியனாகத் தெரியவில்லை” என்று விளக்கிவிட்டு “இந்த மரக்கலக் கூட்டத்தில் இல்லாமல் தனியாக ஏதாவது மரக்கலம் வந்திருக்கிறதா? தனித்து நிற்கிறதா?” என்று வினவவும் செய்தான்.
முதியவனான முகுந்தன் விளக்கமும் கேள்வியும் அங்கிருந்த பரதவர் அனைவருக்குமே வியப்பாயிருந்தாலும் ஒருவன் மட்டும் ”அப்படியொரு மரக்கலம் எதுவும் துறைமுகத்திலிருப்பதாகத் தெரியவில்லையே. எதற்கும் முந்தா நாள் இரவு வேல்வலியன் தனது படகுடன் தொலை தூரம் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். அவனை விசாரிப்போம்” என்று கூறினான். வேல் வலியனை அழைத்து வர எட்ட இருந்த அவன் குடிசைக்கு பரதவன் ஒருவனையும் அனுப்பினான். அவன் இல்லம் சென்று திரும்பியவள் இன்னொரு வாலிபனையும் அழைத்துவரவே அவனை விசாரித்தான் முகுந்தன் ”அப்பா! நீ என் பேரனைப் பார்த்தாயா?” என்று
வேல்வலியன் ஏதோ முயன்று வாயை மூடிக் கொண்டு “இல்லை, பார்க்கவில்லை” என்று குழப்பத்துடன் பதில் சொன்னான்.
அவன் பொய் சொல்வதை சந்தேகமற உணர்ந்து கொண்ட மற்ற பரதவர்கள் அவனைச் சுடச்சுட பார்த்ததன்றி அவர்களில் ஒருவன் “வேல்வலியா! கடலோடும் அபாயத் தொழிலில் பாடுபட்ட பரதவர் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை, பொய்யும் சொல்வதில்லை” என்று கடிந்து கொண்டான். மற்ற பரதவர்கள் வேல்வலியனைக் கொலைப் பார்வையாகப் பார்த்தார்கள். சுற்றும் சிறிய கண்களைப் பார்த்த வேல்வலியன் “சரி சொல்லிவிடுகிறேன் ஆனால் அப்புறம் என்னைக் கடிந்து பயனில்லை” என்று முகவுரை கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான்.
“பெரியவரே! உங்கள் பேரனும் அராபியன் ஒருவனும் முந்தா நாளுக்கு முன் நாளிரவு கடற்கரைக்கு வந்த போது நானும் இருந்தேன். அவர்கள் இருவரும் ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டதும் உங்கள் பேரன் அரையன் இளவழுதி தனது படகை கரையிலிருந்து இழுத்துவிட்டுப் படகின் பாயையும் விரித்தான். அதில் அராபியனும் இளவழுதியும் ஏறிக் கொண்ட பிறகு அந்த அராபியன் ஆகாயத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்து கைகளை இருபுறமும் ஆட்டவே எங்கிருந்தோ பெருங்காற்று வந்தது உங்கள் பேரன் படகு அதிவேகமாக அலைகளில் உந்திச் சென்றது. அந்த அராபியன் போக்கும், இளவழுதி அவன் சொன்னபடி ஆடியதும் எனக்குப் புதுமையாயிருக்கவே நானும் எனது படகைக் கடலில் இழுத்து பாயை அவிழ்த்து விட்டு அவர்கள் படகைத் தொடரலானேன். அன்று அலைகள் மிகப் பெரியதாக எழுந்தன. படகைச் செலுத்துவதே கஷ்டமாயிருந்தாலும் கஷ்டப்பட்டு துடுப்புகளைத் துழாவி அவர்களைத் தொடர்ந்தேன். திடீரென எழுந்த பெருங்காற்று எனது படகையும் வேகமாக இழுத்துச் செல்லவே எனது அலுவல் சுலபமாயிற்று துறைமுகத்திலிருந்த பல மரக்கலங்களையும் தாண்டிச் சென்ற அவர்கள் படகு நமது துறைமுக எல்லையையும் தாண்டி நடுக்கடலுக்குச் சென்றதும் அலைகள் திடீரென ஸ்தம்பித்து காற்றும் நின்று விடவே அமைதியும் பயங்கரமும் கலந்த காரிருளில் இளவழுதியின் படகு வெகுவேகமாகச் சென்றது. தொலை தூரம் சென்றதும் திடீரென ஒரு பெரிய மரக்கலம் தன்னந்தனியே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதிலிருந்த ஒரு சிறுவிளக்குக் கூட திடீரென அணைந்துவிட்டதால் அந்த மரக்கலத்தை முழுதும் பார்க்க என்னால் முடியவில்லை. ஆயினும் இளவழுதியின் படகு அந்த மரக்கலத்தை அணுகி விட்டதைப் பார்த்தேன். படகிலிருந்து அராபியனும் இளவழுதியும் மரக்கல நூலேணியொன்றில் ஏறி தளத்தில் இறங்கியதையும் ஓரளவு பார்க்க முடிந்தது.
அந்த மரக்கலம் கடலின் அந்த இருளிலும் அலைகள் மந்தமாகிவிட்டதால் ஏற்பட்ட அமைதியிலும் மாலுமிகளே இல்லாததாலோ என்னவோ எந்தவித அரவமும் இல்லாமல் பிசாசைப் போல் நின்று கொண்டிருந்தது. அத்தகைய அந்த மரக்கலம் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது? என்பதை அறிய எந்தவித அடையாளங்களையும் அதில் காணோம். இளவழுதியும் அராபியனும் அந்த மரக்கலத்தில் ஏறிய பிறகு திடீரென மேகங்கள் சூழ்ந்து பெரிய ஒரு மின்னல் அந்த மரக்கலத்தின் தளத்துக்கு வெளிச்சத்தை அளிக்கவே, அந்த மரக்கலத்தின் நடுப்பாய் மரத்தில் வெளேரென்று உடையணிந்த ஒரு பெண் பிணைக்கப்பட்டிருப்பதையும், அவள் தலை குழலிலிருந்து நெற்றியில் தொங்கிய சிறு சங்கிலியின் முகப்பாக இருந்த ஒரு வைரம் அவள் நெற்றியில் விளக்குக் கொளுத்தி வைத்தது போல் ஒளிவிடுவதையும் கண்டேன். மின்னல் மறைந்ததும் அந்தக் காட்சியும் மறைந்தது. அடுத்து என்ன நடக்கிறதென்று பார்க்க படகை அந்த மரக்கலத்தை நோக்கி, செலுத்தினேன். சிந்தனை எங்கெங்கோ சுழன்றிருந்ததால் மரக்கலத்தை அணுகியதும் நூலேணியில் அந்த அராபியல் நின்றிருந்ததை நான் கவனிக்க முடியவில்லையாகையால் அவள் திடீரென ஒரு பெரிய வாளின் நுனியை என் கழுத்தில் ஊன்றினான். ‘அருகே வராதே. நீ கண்டதை யாரிடமும் சொல்லாதே. சொன்னால் பிணமாகி விடுவாய். இந்த மரக்கலம் இங்கு வந்திருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்ற அதட்டி, ‘உன்னை உயிருடன் போக விடுவது தவறு. இருப்பினும் உன் தோழனை முன்னிட்டு உன்னைப் போக விடுகிறேன். உன் வாயிலிருந்து வார்த்தை எது வந்தாலும் நீ பிணமாகி விடுவாய் என்று எச்சரித்தான். நான் ஏதும் பேசாமல் படகைத் திருப்பிக் கொண்டு வந்தேன். சிறிது தூரம் வந்ததும் திரும்பிப் பார்த்தேன். பாய் மரத்தில் கட்டியிருந்த பெண்ணை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்ட இளவழுதி அடுத்தகணம் மறைந்து விட்டான். இதுதான் நான் அறிந்தது.”
இதைக் கேட்ட முதியவனான முகுந்தன் தனது படகை அவிழ்த்து எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டான். அவனைத் தடுத்த மற்றும் இருவர் “முதியவரே! தனியே போகாதீர்கள். நாங்கள் யாராவது துனை வருகிறோம்” என்று உதவிக்கு
விரைந்தும் முகுந்தன் கேட்கவில்லை. வயது தனது உரத்தையோ மனத்திடத்தையோ குறைக்கவில்லையென்பதைக் காட்ட மற்றவர்களை வர வேண்டாமென்று சைகை செய்துவிட்டு படகைச் செலுத்தினான் வேகமாக, அன்று பகல் முழுவதும் படகைச் செலுத்தியும் தனி மரக்கலம் ஏதும் தெரியவில்லை . இருப்பினும் உறுதியை விடாமல் படகை மேலும் செலுத்திய முகுந்தன் இரவின் ஆரம்பத்தில் அந்த மரக்கலத்தை அடைந்தான். நூலேணியில் ஏறி தளத்திலும் குதித்தான். மரக்கலத்தில் யாருமில்லை . எந்த அரவமும் கிடையாது. பிசாசு மரக்கலம் என்று வேல்வலியன் சொன்னது உண்மையென்று அவன் தீர்மானித்த சமயத்தில் திடீரென கிறீச்சென்ற பெரிய சத்தம் ஒன்று மரக்கலத்தின் ஒரு மூலையிலிருந்து கிளம்பி இரவின் அமைதியைக் கிழித்தது.
அது தன் பேரன் இளவழுதியின் குரல் என்பதை உணர்ந்த முகுந்தன் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.