Alai Arasi Ch17 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 17 புறாவுக்கு அபசாரம்! அஹமதுக்கு கிரகசாரம்!
Alai Arasi Ch17 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
பொழுது புலர்ந்துவிட்ட சமயத்தில் கட்டிலில் எழுந்து சார்ந்த உட்கார்ந்த அரையன் இளவழுதி, கட்டிலின் மீது தனது இரு புறத்திலும் இரு உள்ளங்கைகள் பதிந்து கிடந்ததையும், இரு உள்ளங்கைகளிலும் பற்குறிகள் இருப்பது புலனாகியதையும் கண்டு எப்படிச் சாத்தியம்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கட்டிலிலிருந்தபடியே இருபுறமும் குனிந்து நோக்கினான். இடது புறத்திலிருந்தவள் இடதுகை சாதாரணமாகக் கட்டிலின்மீது கிடந்ததால் அதுதான் அலை அரசியின் கையாயிருக்க முடியும் என்று எண்ணமிட்டவன், வலதுபுறத்தில் படுத்திருந்தவளும் சற்று ஒருக்களித்து தனது இடது கையையும் கட்டிலின் மீது வைத்திருந்ததைக் கவனித்து அதுவும் இடக்கையாயிருந்ததையும் அதிலும் பற்குறி இருந்ததையும் பார்த்து ‘இது எப்பொழுது எப்படி ஏற்பட்டது?’ என்று மறுபடியும் வினாவொன்றை எழுப்பிக் கொண்டான்.
அந்த இரண்டு கைகளையும் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தபோது ஒரு கையில் இருந்த அதே இடத்தில் அதே பரிமாணத்தில் பல் அடையாளம் இன்னொரு கையிலும் இருந்ததைப் பார்த்து, ‘இந்த மர்மத்தை இவர்களைக் கேட்டுத்தான் உடைக்க வேண்டும்’ என்று தீர்மானித்து இருவரையும் தனது கைகளால் அசைத்து எழுப்பினான். அதனால் கண்விழித்த இரு பெண்களும் தங்கள் ஆடைகளை சீர்செய்து கொண்டு கட்டிலின் இருபறங்களிலும் எழுந்து நின்றார்கள் ஒரு விநாடி. பிறகு இடது புறத்திலிருந்தவள் கேட்டாள், “ஏன் எழுப்பினீர்கள்?” என்று.
“பொழுது புலர்ந்துவிட்டது” என்று சொன்னான் இளவழுதி எரிச்சலுடன்.
“புலர்ந்தாலென்ன?” வலது புறத்திலிருந்தவள் வினவினாள்.
“இந்த நாட்டின் பெண்கள் பொழுது புலருவதற்கு முன்பே எழுந்திருப்பது வழக்கம். பின் தூங்கி முன்னெழும் பேதைகள் தாம் இங்குண்டு” என்று பெண் இலக்கணத்தை விளக்கினான் இளவழுதி,
“யாருக்குப் பின் தூங்கி முன்லொழ வேண்டும்? – இடது புறத்திலிருந்தவள் கேட்டாள்.
”கணவனுக்கு” – இளவழுதியின் பதில் உறுதியுடனும் அவர்களை இடித்துக் காட்டும் முறையிலும் வந்தது.
“கணவனுக்குத்தானே?” – வலது புறத்திலிருந்த அரசி கேட்டாள்.
‘’ஆம்’’
“இங்கு எங்களுக்கு யார் கணவன்? இருவருக்கும் திருமணமாகவில்லையே?”
இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த இளவழுதி, “திருமணமாகாதவர்கள் என்னுடன் தனிமையில் எப்படிப் படுக்கலாம்?” என்று வெகுண்டு வினவினான்.
“பெரிய மந்திரவாதியின் கட்டளை” – என்றாள் இடதுபுறத்திலிருந்தவள்.
”உனக்கும் கட்டளையிட்டாரா?” என்று வலப்புறத்திலிருந் தவளைக் கேட்டான் இளவழுதி சினத்துடன்.
”அவரோ மதகுருவோ கட்டளையிடாமல் நாங்கள் எதுவும் செய்துவிட முடியாது” என்று வலப்புறத்திலிருந்தவள் சொன்னாள்.
சற்று சிந்தித்தபின் இளவழுதி இருவரையும் மாறி மாறி நோக்கினான். “உங்கள் இருவரில் யார் அலை அரசி, யார் கடலரசி?” என்று கேட்டான் முடிவாக.
அதை நீங்களாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் இடதுபுறத்திலிருந்தவள்,
அடுத்து இடது புறத்திலிருந்தவளை விட்டு வலது புறத்தில் மனப் பார்த்து, இவள் கையில் பற்களால் அடையாளம் செய்தவன் யார் என்பதைப் புரிந்து கொள்ள “உன் கையில் எப்படி இந்த அடையாளம் வந்தது?” என்று கேட்டான் இளவழுதி,
இதுவும் நீங்கள் செய்த அடையாளந்தான், இரண்டு கைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்” என்று தனது கையைக் காட்டினாள் வலது புறத்திலிருந்தவள். அடுத்து இருவரையும் இருபுறத்திலும் உட்காரச் சொல்லி இருகைகளையும் பரிசோதித்தான் இளவழுதி, பல் அடையாளத்தில் எந்தவித விதியாசமுமில்லை . அதே இடம், அதே பற்கள், அதே இடைவெளி! இரண்டு கைகளையும் பார்த்த இளவழுதி என்ன செய்வதென்றறியாமல் திகைத்தான்.
என்னால் உங்களில் யார் எவர் என்று நிர்ணயிக்க முடியவில்லை . இதனால் பல விபரீதங்கள் ஏற்படலாம். எற்பட்டாலும் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல” என்று கூறிய இளவழுதி கட்டிலின் கோடிக்கு நகர்ந்து இறங்கினான். பிறகு திரும்பி இரு பெண்களையும் நோக்கி, “என்ன தவறு நேர்ந்தாலும் உங்கள் மதகுரு தான் பொறுப்பாளி” என்று திட்டமாகக் கூறினான்.
இதைக் கேட்ட அரசிகள் இருவரும் நகைத்தனர். “அப்படி என்ன தவறு ஏற்பட்டுவிடும்?” என்று ஒரு அரசி கேட்டாள்.
‘’ஒரு ஆணுடன் தனிமையில் இரு பெண்கள் படுத்தால் ஏற்படும் தவறு" என்றான் இளவழுதி மூர்க்கமாக.
“அது தவறு என்று யார் சொன்னது?” என்று கேட்டாள் இன்னொரு அரசி.
அப்படியானால் உங்கள் இருவரையும்…” என்று சொல்ல முயன்ற இளவழுதி பேச்சை முடிக்காமல் வெகுவேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறி சமதரைக்கு வந்து மகாசக்திக்குத் தலைவணங்கி படிகளில் ஏறி குகையின் மேல்புறம் சென்றான்.
மேலே குகைவாயில் திறந்தே இருந்ததால் ஜில்லென்ற தென்றல் காற்று அவன் முகத்தில் தாக்கி அவலுக்குப் புதுச் சக்தியைக் கொடுத்தது. அதை அனுபவித்துக் கொண்டும் குகையிலிருந்து மீண்டதால் சற்றுத் தெளிவடைந்த சிந்தனையுடனும் வெளியே வந்த இளவழுதி மலைப்பகுதியின் காலை நேரச் சூழ்நிலையை – பெரிதும் ரசித்தான். மரங்களின் இலைகளில் தவழ்ந்து வந்த காற்றை நன்றாக இழுத்து முகர்ந்தான். மலையின் சரிவிலிருந்து பல புஷ்பச் செடிகள் தன்னை தலையசைத்து வரவேற்ற அழகையும் பார்த்து புன்முறுவல் செய்தான். அந்த சரிவை அடுத்து சலசலவென்று ஓடிக் கொண்டிருந்த சிறு அருவியிடம் சென்று பல் துலக்கி முகம் கழுவி ஏதோ பெரிய சாம்ராஜ்யத்தை அடைந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அடைந்தான். குகைக்குள்ளே மயக்க நிலையிலிருந்தவன், மெள்ள எழுந்த சூரியனும் சுத்தமான காற்றும் அருவியின் நீரும் தன்னை மீட்டுவிட்டதை உணர்ந்த்து. ‘இதுதான் விடுதலை போலிருக்கிறது’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அருவியைத் தாண்டி நடந்தான்.
சரிவில் சிறிது தூரம் சென்றதும் தூரத்தே தெரிந்த வடகரையின் துறைமுகமும், கடலில் ஆடி நின்ற இரண்டு மூன்று மரக்கலங்களும் அவனை மீண்டும் பூவுலகத்தின் வீரனாகச் செய்துவிடவே இளவழுதி வேக வேகமாக நடந்து அந்த மலைச்சரிவிலிருந்து வேறுபுறம் நடந்து சேரவாறு பிரவாகித்துக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
அதைத் தாண்டி சிறிது தூரம் மேற்கில் அதன் கரையோரமே நடந்தவன் கடைசியாக முதல் நாள் மன்னனை சந்தித்த இடத்துக்கு
வந்ததும் அங்கிருந்த துறையில் நீராடினான். சேரவாற்றின் குளிர் நீர் அவன் உடலைத் தழுவி அவன் களைப்பையெல்லாம் நீங்கியதால் அதிலேயே நீண்டநேரம் திளைந்து எழுந்து தனது அங்கியையும் சராயையும் பிழிந்து ஆற்றங்கரையிலிருந்த மரம்மொன்றில் உலரப் போட்டான். பிறகு இடையிலிருந்த சிறுதுண்டுடன் கரைமீதே அமர்ந்து, சென்ற இரவின் சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அவற்றை எடைபோட முற்பட்டான். இத்தனை நிகழ்ச்சிகளிலும் தனது பாட்டன் பெருவழுதியோ அஹமத் யாரும் சம்பந்தப்படாததை நினைத்துப் பார்த்து ‘அவர்கள் காலையில் என்னைக் காணாவிடில் என்ன நியைப்பார்கள்? அஹமத் என்ன நினைப்பான்?’ என்று வினாக்களை அடுக்கிக் கொண்டு ‘யார் எதை நினைத்தால் என்ன? நடப்பதெல்லாம் மனித செயலுக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது’ என்று சமாதானமும் சொல்லிக் கொண்டான். இப்படி சுமார் ஒரு ஜாமக் காலத்தை ஓட்டிய பிறகு தனது உடைகளை அணிந்து கச்சையில் கரைமீது வைத்திருந்த குறுவாளையும் சொருகிக் கொண்டு எழுந்து ‘மன்னர் என்னை சந்திபாரென்று மந்திரவாதி சொன்னாரே. எங்கு வருவார்? எப்பொழுது வருவார்?’ என்று
கேட்டுக் கொண்டு மரங்களின் ஊடே நடந்து சென்றான்.
மரங்களிலிருந்த பட்சி ஜாலங்கள் சில அவன் வருகையைக் கண்டு சிறகடித்துப் பறந்து மேல் கிளைகளுக்குத் தாவின. இன்னும் சில அவனை லட்சியம் செய்யாமல் அடிக்கிளைகளில் ஆடி ஆடி இன்பமாகக் கூவின. பக்கத்திலிருந்த புதரொன்றிலிருந்து முயல் குட்டியொன்று வேகமாக ஓடவே அதைப் பிடிக்க இளவழுதியும் ஓடினான். ஆனால், அது வேறொரு புதருக்குள் மறைந்து விடவே புதரிலிருந்து வெளியே நடந்துவந்த வெண்புறா ஒன்றைக் கையால் பிடிக்க முயன்றான். புறா சட்டென்று பறந்து இன்னொரு இடத்தில் உட்கார்ந்தது. மீண்டும் அதைப் பிடிக்க முயன்ற இளவழுதியை அது ஏமாற்றிவிட்டு விர்ரென்று பறந்தது.
எதிர்ப்புறமாக. அதைப் பிடிக்க மீண்டும் முயன்ற இளவழுதி மரத்தின் வேரொன்று தடுக்க திடீரென நெடுஞ்சான் கிடையாக தரையில் விழுந்தான்,
“எழுந்திரு இளவழுதி!” என்ற குரலைக் கேட்டுத் தலைநிமிர்ந்த இளவழுதி, மன்னன் தன்னெதிரே புன்முறுவலுடன் நின்றிருந்ததைக் கண்டான். அவன் தோள் மீது அந்த வெண்புற உட்கார்ந்திருந்தது. அதைக் கையில் பிடித்து இளவழுதியிடம் கொடுத்த மன்னன் “இளவழுதி! இதை விட்டுவிடாதே. இதை விட உனக்குத் துணை வேறு யாரும் இருக்க முடியாது’’ என்று கூறியதன்றி ”இதை மாத்திரம் துன்புறுத்த முயலாதே. அப்படி முயன்றவன் கதியைப் பார்” என்று சொல்லி தான் நின்ற இடத்துக்கு சற்று எட்ட இருந்த மரத்தடியைக் காட்டினான்.
அங்கிருந்த காட்சியைக் கண்ட இளவழுதி பிரமிப்பின் எல்லையை எய்தினான். அந்த மரத்தடியில் பலத்த காயங்களுடன் அஹமத் விழுந்து கிடந்தான். ”இதற்கு அபசாரம், அவனுக்கு கிரகசாரம்” என்றான் மன்னன் வெறுப்புக் கலந்த குரலில்.