Alai Arasi Ch19 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 19 பிள்ளைப் பருவம்
Alai Arasi Ch19 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அரையன் இளவழுதி அதுவரை சொப்பனத்தில் கூட னெனைக்காத பல அனுபவங்களை அன்று காலையில் பெற்றதாம். அவன் நினைப்பு முழுவதும் அன்றைய நிகழ்ச்சிகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததால் அஹமதின் கதையை முழு சிந்தனையுடன் கிரகிக்க அவனால் இயலவில்லை . தூதுப் புறாக்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தாலும் ஒரு புறா, அஹமதைப் போன்ற ஒரு வீரனுடன் போர் புரியுமென்றோ , காயப்படுத்த முடியுமென்றோ அவன் நினைக்க முடியாததால் அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏற்பட்டிருப்பதைப் பற்றி நினைத்து, மேலுக்கு சாத்விகமாக இருக்கும் மனிதர்களைப் போலவே பட்சிகளையும் நம்ப முடியாது’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அதுமட்டுமன்றி அஹமத் விழுந்து கிடந்த மரத்தின் இலையை அரைத்து அவன் காயங்களுக்குப் போடும்படி மன்னன் சொன்னதையும், அதன்படி அரைத்துப் போட்டவுடன் அஹமதின் காயங்களில் குருதி நின்று அஹமதும் எழுந்து விட்டதையும் கண்ட இளவழுதி ‘இந்த மரத்தின் இலைகளுக்கு இத்தனை மகிமை உண்டு என்பதை மன்னர் எப்படி அறிந்தார்? மன்னனுக்கு பச்சிலை மர்மங்கள் எப்படித் தெரிந்தன? மருத்துவம் எப்பொழுது பயின்றார் மன்னவர்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்ட தன்றி ‘மன்னர் மந்திரம் கற்றிருக்கும்போது மருத்துவம் ஏன் கற்றிருக்க முடியாது?’ என்று தானே சமாதானமும் செய்து கொண்டான். இத்தகைய கேள்விகளால் குழம்பியிருந்த இளவழுதியை அஹமதின் கோபக்குரல் இவ்வுலகத்துக்கு இழுத்து வந்தது. “இளவழுதி எந்த உலகத்திலிருக்கிறாய்? நான் சொல்வது உன் காதில் விழுகிறதா இல்லையா?’ என்று சினத்துடன் கேட்டதும், ”அஹமத்! என் மூளையே குழம்பியிருக்கிறது. மன்னித்துவிடு” என்று இளவழுதி மன்னிப்புக் கேட்டதும்.
அஹமதின் முகத்தில் சீற்றம் தணிந்து சாந்தமும் முறுவலும் கலந்த சாயை படர்ந்தது. “எதற்கும் மசியாத மகாவீரனென்று பெயர் பெற்ற இளவழுதியே குழம்புவதென்றால் நிகழ்ந்த சம்பவங்களில் பெரு வலிமை இருக்க வேண்டும்” என்று கூறிய அஹமத் “இளவழுதி! நன்றாக உற்றுக்கேள் நான் சொல்வதை நீ அரபு நாட்டுக்கு வரும்போது உனக்கு என் அனுபவங்கள் மிகுந்த பயனை அளிக்கும்” என்று சொல்லி மேலும் பேச்சைத் தொடர்ந்தான். சொந்த நாட்டைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அவனது கண்களில் கனவு படர்ந்தது. அவன் குரல் குழைந்து மிக மெதுவாகவும் குழைந்த குரலுடனும் பேச முற்பட்ட அஹமத் சொன்னான்,
”இளவழுதி அரேபியா, ஆண்டவன் சிருஷ்டியில் மிக அற்புதம் வாய்ந்த நாடு, அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள் மிகுந்த நாடு. அங்குள்ள சிறுவன்கூட பிறர் ஏசப் பொறுக்க மாட்டான். குத்தும் கொலையும் அங்கு சர்வ சாதாரணம் அத்துடன் ரம்மியமான வாழ்க்கையும் மிகுந்த நாடு. அந்த நாட்டில் மேலைக்கரையில் பாதிமா என்றொரு துறைமுகம் இருக்கிறது. கிழக்கு தேசத்திலிருந்து வரும் எந்த மரக்கலமும் அங்கு தங்கித்தான் செல்லும், பெரிய நகரமில்லாவிட்டாலும் நடுத்தர வசதிகளை உடையதாகையால் மரக்கலங்கள் தங்குவதற்கு வசதியிருப்பதாலும் எந்த மரக்கலமும் அங்கு தங்கித்தான் போக முடியும். அந்தத் துறைமுக குடிசைகள் ஒன்றில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு அப்பொழுது உலகத்தின் சூதுவாதுகள் தெரியாது. நிர்மலமான சூழ்நிலையில் சிறுவயதைக் கழித்தேன். காலையில் எழுந்ததும் கடலில் நீராடச் செல்வேன். அலைகளில் நீந்துவேன். புதிதாக வந்து நங்கூரம் பாய்ச்சி இருக்கும் மரக்கலங்களில் தொத்தி ஏறுவேன். அந்த மரக்கல மாலுமிகளுக்கு கர்ணம் போட்டு வித்தைகள் செய்து காட்டுவேன். அவர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு வந்து என் தாயிடம்
கொடுப்பேன். அவள் எனக்கு ஆசையுடன் உணவு அளிப்பாள் அவளே கடைக்குச் சென்று இறைச்சி வாங்கி வந்து ருசியாக சமைத்து என் வாயில் ஊட்டுவாள். பத்து வயதிலேயே நெடிது வளர்ந்துவிட்ட என்னை வாள் பயிற்சி சொல்லிக் கொடுக்கும் ஒரு ஆசிரியனிடம் கொண்டுவிட்டு, ‘இவனுக்குப் போர்த் தந்திரங்களைப் போதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள்.
அவர் வியப்புடன் கேட்டார், ‘இவன் என்ன படையில் சேரப் போகிரானா? இவனுக்கு வாணிபம் சொல்லிக் கொடுக்கலாமே. என்று.
இல்லை. இவன் வீரனாக வேண்டியவன்’ என்று என் அன்னை சொன்னாள்.
ஆசிரியர் எத்தனை கேட்டுப் பார்த்தும் அன்னை மேற்கொண்டு ஏதும் பேச மறுத்தாள். கடைசியில் ஆசிரியர் வாட்பார் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டார். மறுநாள் முதல் எனது போர்ப் படிப்பு துவங்கியது. பல மர்மங்களை எனக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அவர் எதைச் சொன்னாலும் நான் அப்படியே திருப்பிச் செய்து விடுவதைக் கண்டு ஆசிரியர் உற்சாகம் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் எங்கள் குடிசை வாயிலில் ஒரு வெண்புரவி நின்றது. அத்துடன் ஒரு காசாரியும் வந்திருந்தான். அவன் குதிரையேற்றத்தில் எனக்குப் பயிற்சியளித்தான். சில மாதங்களில் குதிரைச் சவாரியில் எனக்கு இணை யாருமில்லை என்பதை உணர்ந்து என் தாயார் மகிழ்ச்சியடைந்தார். அடுத்து என்னை ஒரு படகோட்டியிடம் கொண்டுவிட்டு என்னைக் கடலோடவும் பயிற்சிபெறச் செய்தாள். நான் நல்ல சூறாவளியிலும் படகைச் செலுத்தும் பயிற்சி பெற்றேன். என் சாமர்த்தியத்தைக் கண்ட ஒரு மரக்கலத் தலைவன் என்னைத் தனது உதவியாளனாக அமர்த்திக் கொண்டான். என் அன்னை அதற்கும் சம்மதம் தெரிவித்தாள். நான் கடலோடி பெரிய பெரிய மீன்களைப் பிடித்து வந்தேன். ஒருமுறை கொள்ளை
மரக்கலமொன்றையும் பிடித்ததால் பணமும் கிடைத்தது. அதற்குப் பிறகு குடிசையிலிருந்து பெரிய வீட்டுக்குப் போகலாமென்று முடிவு செய்தேன்.
என் தாய் ஒப்புக் கொள்ளவில்லை. “இந்தக் குடிசையை விட்டு நான் உயிருடனிருக்கும் வரையில் வெளியில் போகாதே’, என்று திட்டமாகக் கூறிவிட்டாள்.
‘நம்மிடம்தான் இப்பொழுது பணம் இருக்கிறதே. வேறு வீட்டுக்குப் போனால் என்ன?’ என்று கேட்டேன்.
அன்னை பதில் சொல்லவில்லை. அவளை நான் வற்புறுதத் தொடங்கினேன். அப்படி நான் பிடிவாதம் பிடித்த ஒருநாள் நாலைந்து புரவி வீரர்கள் எங்கள் குடிசைக்கு எதிரில் வந்து இறங்கினார்கள். வாயிலிலேயே நின்று, ‘யாரங்கே? வெளியே வா!’ என்று அதட்டினார்கள்.
என் அன்னை முக்காடிட்டு வெளியே சென்றாள். ‘அஹமத் எங்கே?’ என்று ஒருவன் அதிகாரத்தோரணையில் கேட்டான்.
‘என் மகனா?’ என்று அச்சத்துடன் கேட்டாள் என் அன்னை,
“உன் மகனா?’ என்று கேட்ட அவன் பெரிதும் நகைத்தான்,
‘என் மகன்தான்’ என்றாள் அன்னை,
‘அவனை வெளியே அழை’ என்றான் அந்த மனிதன்.
அவன் குரலிலிருந்த அதிகாரத்தையும் என் அன்னையை அவன் அலட்சியமாக நடத்துவதையும் பார்த்து வெகுண்ட நான் என் வாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்து அந்த வீரன் அடுத்த சொல்லை உதிர்க்கு முன்பாக அவனைப் புரவியிலிருந்து தூக்கி தூரத்தில் எறிந்தேன். மற்ற வீரர்கள் புரவியிலிருந்தபடியே வாளை உருவிக் கொண்டு வந்தார்கள். ஒரு சுழல் சுழன்று அவர்கள் வாட்களை நான் தடுத்தேன். என்னால் கீழே
எறியப்பட்டவன் எழுந்து வாளுடன் வந்தான் ஓங்கவில்லை . மற்றவர்களை வாட்களை உறையில் போடுமாறு கட்டளையிட்டான். பிறகு என்னை நோக்கி, ‘நீ வீரனாக வளர்ந்திருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன்’ என்று சொன்னான்.
“சந்தேகமிருந்தால் வாளைச் சுழற்றிப்பார்’ என்றேன் நான்.
‘எங்கள் தலைவர் மகனுக்கு எதிரில் நாங்கள் வாளை எடுக்க முடியாது’ என்றான் அந்த வீரன். ‘நீ எங்களுடன் வர வேண்டும்’
என்று கூறினான்,
‘எதற்கு ?’
உன் பதவியை ஒப்புக் கொள்ள,’
“என்ன என் பதவி?’
அவளைக் கேட்டுப் பார்’ என்று என் தாயைச் சுட்டிக் ‘அவளைக் கேட்டு காட்டினான் அவன்.
என் தாயை அவமரியாதையாகப் பேசாதே’ என்று நான் சீறினேன்.
ஒரு வினாடி அவன் ஏதும் பேசவில்லை . பிறகு அவன் மெதுவாகச் சொன்னான். ‘அவள் உன் தாய் அல்ல’ என்று,
நான் என் தாயைத் திரும்பிப் பார்த்தேன். முக்காட்டுக்குள் அவள் அசையாமல் சிலை போல் நின்றாள். ‘நான் என் தாயுடன் பேசிவிட்டு நாளை வருகிறேன். நீங்கள் போகலாம்’ என்று உத்தரவிடும் தோரணையில் பேசினேன்.
செவிலி! நீ என்ன சொல்கிறாய்? நாளைக்கு அனுப்பி விடுகிறாயா?’ என்று அவன் வினவினான்.
எனது தாய் தலையை அசைத்தாள், அதற்குப் பிறகு அந்த வீரர்கள் எனக்குத் தலைவணங்கிச் சென்றுவிட்டார்கள். எல்லாமே புரியாத புதிராயிருந்தது. அன்று நடுநிசியில் எனது தாய் என்னை எழுப்பினாள். 'என்னம்மா?' என்று துடித்து எழுந்தோன்.
மகனே! நாம் இப்பொழுதே இங்கிருந்து போய்விட வேண்டும்’ என்றாள்.
‘ஏன்?’
‘இங்கிருப்பது அபாயம்.’
‘என்ன அபாயம்?’
‘உன் உயிருக்கு அபாயம். உன்னை அழைத்துப் போக வந்தவர்கள் உன் சிற்றப்பன் வீரர்கள்.’
‘யார் என் சிற்றப்பன்?’
‘அரபு நாட்டின் குடிமக்களின் ஒருபகுதியின் தலைவனான இப்பொழுது இருக்கிறான். நீ இருக்க வேண்டிய இடத்தில் அவன் இருக்கிறான். மிகவும் கொடியவன். நீ அங்கு போனால் இங்கு திரும்ப மாட்டாய்’ என்று சொன்னாள்,
எனக்கு அவள் சொல்வது ஓரளவு புரிந்தது. அவள் என் தாயில்லை என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை ‘அம்மா! நீ எதைச் சொன்னாலும் சரி. ஆனால் என் சிற்றப்பனிடமிருந்து தப்ப யாருடன் போகப் போகிறோம்?’ என்று வினவினேன்.
‘உன் சிற்றப்பன் எப்படியும் உன்னைக் கண்டுபிடித்து விடுவான் என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஒரு புகலிடம் ஒன்றை ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்கிறேன், புறப்படு’ என்றாள்.
குடிசையைப் பூட்டிக் கொண்டு ஒரு சிறு மூட்டையுடன் என் தாய் கிளம்பினாள். என் தாயைப் புரவி மீது உட்கார வைத்து நான்
பின்னால் உட்கார்ந்து புரவியைச் செலுத்தினேன். அன்னை சொன்ன வழியில் சென்றேன். மறுநாள் காலை அடர்ந்த ஒரு பாலைவனச் சோலைக்கு வந்தோம். மீண்டும் பயணம் செய்து பாலைவனச் சரிவுகளையும் மணற் குன்றுகளையும் தாண்டி மறுநாள் இரவில் இன்னொரு அடர்ந்த சோலையையும் அடைந்தோம். அதில் மனித அரவம் எதுவுமே கானோம். புரவியிலிருந்து எனது தாய் முதலில் இறங்கிச் சோலைக்குள் சென்றாள் நானும் புரவியிலிருந்து இறங்கி அவளைத் தொடர்ந்தேன். ஓரிடத்தில் அன்னை திடிரென்று நின்றாள். எட்ட இருந்த புதர்களிலிருந்து ஒருவர் வெளியே வந்தார். இடையில் ஒரு மான் தோலை அணிந்து உயரமும் பருமனும் உள்ள ஒரு மனிதர் தோன்றினார். அவர் தலை முழு வழுக்கையிருந்து மற்றபடி தாடி மீசையுடன் உடலெங்கும் ரோமத்துடன் மிருகம்போல் காட்சியளித்தார். அவர் புருவங்கள் பெரிதாக வளர்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தன. அவற்றை விலக்கி தனது கண்களால் என்னை நோக்கினார். அம்மாதிரி கண்களை நான் அதுவரை கண்டதில்லை. என் அன்னை மதகுருவை மண்டியிட்டு வணங்கு’ என்று அச்சமும் மரியாதையும் மிகுந்த குரலில் கூறினாள்.
நான் மண்டியிட்டேன். மதகுரு என் தலையில் கையை வைத்தார். எனது உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் போன்ற விசை ஊடுருவிச் சென்றது.”