Alai Arasi Ch2 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 2 சூன்யக் காரி
Alai Arasi Ch2 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அளவுக்கு மிஞ்சி ஆபத்து விளைந்து, உயிரே போய் விடும்படியான பயங்கர நிலையிலும் முகத்தைச் சுளிக்காதவனும், புருவங்களைக் கூட அசைக்காதவனுமான தனது பேரன் இளவழுதி அந்த இரவில் அத்தனை பயங்கரமாகக் கூச்சலிட்டதால் நிலை கலங்கிப் போன முதியவன் பெருவழுதி, கூச்சல் வந்த திக்கை நோக்கி ஓடினாலும், இயற்கையாக அவனுக்கு உள்ளூர இரும் பழைய உறுதியின் காரணமாக கப்பல் குறுக்குச் சட்டங்களில் கடுக்காமல் ஓரளவு திடமாகவே விரைந்து சென்றான். அந்த பெருமரக்கலத்தில் மருந்துக்குக்கூட காவலரோ மாலுமிகவே இல்லாததால் யாரும் அவனைத் தடை செய்யாததாலும், மரக்கலத்தின் வடகோடியில் ஒரு சிறு அறை காணப்பட்டதாலும், அங்கிருந்துதான் தனது பேரன் அலறி இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான், முதியவனான பெருவழுதி வேகமாகச் சென்று அந்த அறையை அடைந்து அதன் சிறு கதவைத் திறக்க முயன்றான். அவன் அழுத்தலுக்கோ, தோளை முட்டுக் கொடுத்து அவன் கதவை உடைக்க முயன்றதற்கோ , அந்தக் கதவு இடங்கொடுக்காததால், தனது மடியிலிருந்த வலையறுக்கும் கத்தியை எடுத்து அதன் தாள் துவாரத்தில் வைத்துத் திறக்கவே கதவு கீறிச்சென்று சத்தமிட்டுத் திறந்தபோது இளவழுதியின் இரண்டாவது கிறீச்சென்ற கூச்சலும் எழுந்து கதவின் ஒலியை ஓரளவு அடக்கிவிட்ட சமயத்தில் உள்ளே நுழைந்துவிட்ட முதியவன் அங்கிருந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டான்.
அந்த அறையே அமைப்பில் விசித்திரமாயிருந்தது. அறையின் நாற்புறமும் கடினமான பலகைகள் அடிக்கப்பட்டிருந்தாலும் மேற்புறம் மட்டும் சிறிதளவு மூடப்படாமல் திறந்தே கிடந்ததால் வானை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளேயிருந்த ஒரு சிறு
அலங்காரக் கட்டிலில் இளவழுதி ஆகாயத்தை அன்னாந்து பார்த்த வண்ணம் படுத்துக்கிடந்தாள் அழகுக்கே இலக்கனம் போன்ற அழகியொருத்தி இளவழுதியின் பக்கத்தில் உடகார்ந்து கையில் இருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிருந்து இளவழுதியின் வாயில் ஏதோ புகட்ட முயன்று அவன் வாயைத் திறக்காததால் மூக்கைப் பிடித்து அவள் வாயைத் திறக்கும்படி செய்ய முயன்று கொண்டிருந்தாள் அவள் வாயைத் திறக்க மறுத்து இருபுறமும் தலையை ஆட்டியதால் அந்த வாயைக் கிழிக்க மெல்லிய கத்தியை எடுத்த சற்று எட்ட நின்றிருந்த ஒரு அராபியன் அரசி அஞ்சாதே, அவள் வாயைக் கத்தியால் காதுவரை கிழித்து விடுகிறேன் அப்பொழுது பக்கவாட்டில் நீ அந்த மருந்தைப் புகட்டிவிடலாம்’ என்று கூறிக் கொண்டு அலங்காரக் கட்டிலை நெருங்க ஒரு அடி எடுத்து வைத்தான்
“நில் அப்படியே அடுத்த அடி எடுத்து வைத்தால் பிணமாகி விடுவாய்” என்று வாயிற்படியில் நின்ற வன்னமே பெருவழுதி அதட்டியதும் அந்த அறையிலிருந்த அந்தப் பெண்ணும் அராபியனும் ஒரே சமயத்தில் முதியவனை நோக்கித் திரும்பினாலும் இருவரும் அச்சத்தைச் சிறிதும் காட்டினார்கள் இல்லை அந்த அறையிலிருந்த மூவரில் கட்டிலிலிருந்த அரசி என்று அழைக்கப்பட்டவள் எழுந்திருந்தாளேயொழிய இளவழுதி எழுந்திருக்காமல் கட்டிலில் உணர்ச்சி ஏதுமற்றுக் கிடந்ததைக் கண்ட முதியவன் “என் பேரனை என்ன செய்தீர்கள்?’ என்று வினவினான்.
கட்டிலின் பக்கத்தில் சலனமற்று நின்றிருந்த அந்தப் பெண் முதியவனை ஏதோ ஒரு மிருகத்தைப் பார்ப்பது போல் பார்த்தாள், ”நீ யார்? எதற்காக இங்கு வந்தாய்?’ என்று வினவினாள் அதிகாரம் பெரிதும் ஒலித்த குரலில்,
கிழவன் உடனடியாகப் பதில் சொல்லாமல் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அன்று வரை அவன் கண்டிராத பேரழகு அவன் முன்பு நின்று கொண்டிருந்தது. மிக மெல்லிய உடலில் மலரின் மென்மையும் இருந்தது. இரும்பின் கடினமும் தெரிந்தது. அத்தகைய உடலில் கண்ணுக்குத் திட்டமாகப் புலப்படாத அளவுக்கு அவள் இடை சிறுத்துக் கிடந்தது. அவள் வெளேரென்று அணிந்திருந்த மெல்லிய மஸ்லின் உடையின் மத்தியில் கட்டப்பட்டிருந்த நீண்ட வெண்மைக் கயிறு ஒன்றுதான் அவளுக்கு இடையும் உண்டு என்பதைப் புலப்படுத்தியது. அந்த மெல்லிய உடைக்குள் அவள் உடல் பூராவும் தெரிந்ததால் மாசு மருவற்ற அந்த வழவழப்பையும், அழகையும் கண்ட பெருவழுதி பிரமை பிடித்து நின்றான். அவள் கால்கள் சந்தன மரத்தால் கடைந்ததைப் போல் அழகாகவும் தேவையான வளைவுகளுடனும் அனாவசிய சதைப்பற்று இல்லாமலும் அளவோடு அமைந்திருந்ததால் அவள் நின்றது ஏதோ பதுமை நிற்பது போன்ற பிரமையைக் கொடுத்தது. அவள் மெல்லிய கழுத்தும் மார்பின் சிறு மொட்டுகளும் அவன் அழகை ஆயிரம் மடங்கு உயர்த்திக் காட்டின. இத்தனைக்கும் மேலாக அவள் கரிய குழலின் அடர்த்தியும், நெற்றிக்கு நேரே தலையில் எடுக்கப்பட்டிருந்த நடுவகிடும் அவளை ஒரு அற்புத சிற்பச் சிலையாக அடித்திருந்தது. அந்த நடுவகிடில் பதிந்த மெல்லிய சங்கிலியின் முகப்பில் இருந்த பெரிய வைரமொன்று அவள் வதனத்தில் படித்து நெற்றிக்கு ஒரு திலகமாக அமைந்திருந்தது. அந்த வைரம் அத்தனை இருட்டிலும் ஜொலித்தது. அவள் நெற்றியில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தது போல் காட்சியளித்தது. ஆனால் அந்த வைரத்தைவிட பளபளத்த இரு கண்களின் கருமணிகளும் நல்ல தீட்சண்யத்தையும், வீட்சன்யத்தையும் பெற்றிருந்தன. மொத்தத்தில் அந்த அழகு மானிட அழகாகத் தென்படவில்லை. ஏதோ தெய்வமொன்று எதிரில் நிற்பது போலப் புலப்பட்டதாலும் அவள் விழிகளிலிருந்து கிளம்பிய பார்வை தனது இதயத்தை ஊடுருவுவது போல் தெரிந்ததாலும் செயலற்று நின்றுவிட்டான் பெருவழுதி.
அந்தக் கிழவன் தன்னைத் துருவிப் பார்ப்பதைப் பற்றி எவ்வித கவலையோ, பெருமிதமோ, வியப்போ, கோபமோ கொள்ளாமல் நின்றபடியே நின்ற அந்த யுவதி ‘நான் ஏற்கனவே உன்னைக் கேள்வியொன்று கேட்டேன்” என்றாள்.
முதியவன் அவளையும் அராபியனையும் நோக்கி “பதில் அவனுக்குத் தெரியும். அவனையே கேள்” என்று அராபியனைக் காட்டினான்.
அந்த சமயத்தில் இடைமறிக்க முற்பட்ட அராபியன் “எனக்கு தமிழ் தெரியும், அரசிக்கும் தெரியும்” என்றான்.
“அதனாலென்ன?” என்று விசாரித்தான் முதியவன்.
”அரசியை மரியாதைக் குறைவாகப் பேசுவதற்கு எங்கள் நாட்டில் மரண தண்டனை உண்டு” என்றான் அராபியன்.
”நீ இப்பொழுது உனது நாட்டில் இல்லை. தமிழ் நாட்டில் இருக்கிறாய்.” என்று சுட்டிக் காட்டினான் கிழவன்.
“இங்கும் அந்தத் தண்டனையை விதிக்கவும் நிறைவேற்றவும் முடியும். மரண தண்டனையைவிடக் கடுமையானவை” என்றான் அராபியன்.
கிழவன் சினமும் இகழ்ச்சியும் கலந்த புன்முறுவலொன்றைப் படரவிட்டான். “நீங்கள் குரூரம் மிகுந்த இனமென்பது புரிகிறது. ஆனால் எங்கள் நாட்டு தண்டனை முறைகள் உனக்குத் தெரியாது. உன்னைக் கழுவேற்றுவோம். இல்லை, கோதண்டத்தில் கட்டி அடிப்போம். இந்தத் தண்டனைகளைவிட மரணம் பெரிதென்று மரணத்தை விரும்பியவர்கள் உண்டு” என்றான் முதியவன் புன்முறுவலின் ஊடே.
அதுவரை பேசாமல் நின்ற அந்த அரபுச்சிலை “ஊனைப் பற்றிய தண்டனைகளைக் குறிப்பிடுகிறாய் கிழவா. உயிரைப் பற்றிய, உணர்ச்சிகளைப் பற்றிய தண்டனைகள் தெரியாது. உனக்கு இப்படி வா. உன் பேரனைப் பார்” என்று கூறி அரபுச்சிலை கட்டிலின் பக்கத்திலிருந்து விலகி இளவழுதியின் தலைமாட்டில் நின்றாள். நின்றதும் சற்றுக் குனிந்து அவன் விழிகளைத் தனது விழிகளால் ஊன்றிக் கவனித்தாள். பிற அவனைப் பார்த்துப் புன்முறுவல் காட்டினாள். அந்த அரபு அழகியின் கட்டளைப்படி கட்டிலின் அருகே வந்த முதியவன் பெருவழுதி தனது பேரனை அழைத்தான் “அரையா!” என்று,
அரைவன் இளவழுதி தனது பாட்டனைப் பார்க்க முயலவும் இல்லை. விழித்த அவன் விழிகள் ஆகாயத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது கேட்டாள் அரபுச்சிலை “அன்பரே! வானம் எப்படியிருக்கிறது?” என்று.
“ஜகஜ்ஜோதியாயிருக்கிறது” மெதுவாகவே வந்தது இளவழுதியின் பதில்.
“மதியில்லையே எப்படி ஜகஜ்ஜோதியாயிருக்க முடியும்?” என்று அன்பு மிதமிஞ்சிய குரலில் வினவினாள் அரசி.
இளவழுதியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “மதி அங்கு எப்படி இருக்கும். அதுதான் உன் முகத்தில் இணைந்து விட்டதே?” என்றான் இனவழுதி. இதைச் சொன்ன அடுத்த கணம் அவன் இதழிலிருந்த முறுவல் மறைந்தது. உதடுகள் மீண்டும் திறந்து சொற்களை உதிர்த்தன. “அரசி! வானத்தில் மதியில்லாமல் இருந்தால் என்ன? வானம் பெரிய கறுப்புக் கம்பளி, அதில் நடித்திர வைரங்கள் இறைத்து விடப்பட்டிருக்கின்றன. அதோ இரண்டு நக்ஷத்திரங்கள் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து வருகின்றன. அவற்றுக்குத் தலைகள் மட்டும் இருக்கின்றன. உன் தலை ஒன்று என் தலை ஒன்று இரண்டும் இணைந்து விட்டன” என்று தொடர்ந்து பேசினான்.
அவன் தலைமாட்டில் நின்ற அந்த அழகியின் கண்களில் திடீரென ஒளியொன்று தெரிந்தது.
பேரன் பேச்சையும் அவன் நிலையையும் பார்த்துக் கொண்டே நின்ற கிழவன், அரையன் மந்திரத்தால் கட்டுண்டு கிடப்பவன் போல் அசையாமல் கிடப்பதைக் கண்டான். அவன் ஏதோ போதையில் இருப்பது போலவும் தெரிந்தது. அந்தச் சமயத்தில் திடீரென தனது கையை நீட்டிய அந்த அரபுச் சிலை அராபியன் கொடுத்த கிண்ணத்திலிருந்த மருந்து போன்ற மதுவை மீண்டும் இளவழுதிக்குப் புகட்ட முயன்றாள். தன் கன்னத்தை அவன் கன்னத்தோடு இழைத்த வண்ணம் உதடுகளில் தங்கக் கிண்ணத்தைப் பொருத்தினாள்.
அந்த விபரீதம் அப்பொழுதும் நடந்தது. கிறீச்சென்று இளவழுதி மீண்டும் அலறினான், அரபுச்சிலை மிகுந்த கோபத்துடன் எழுந்தாள் கையில் பொற்கிண்ணத்துடன். ஆனால் இம்முறை விளைந்த விபரீதம் வேறு. கிழவன் தனது நீண்ட கையால் அவள் கையிலிருந்த கிண்ணத்தைத் தட்டிவிட்டான். அடுத்து அராபியன் மீது பாய்ந்து அவன் கையைத் திருகி அவன் கையிலிருந்த மெல்லிய கத்தியையும் மரக்கலத்தட்டில் விழும்படி செய்தான். அடுத்து தனது குறுவாளை எடுத்துக் கொண்டு “அரசி! என் பேரனை மரியாதையாக விட்டுவிடு. உன் மரக்கலத்தை யாரும் தடை செய்யாதவாறு பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உன் மரக்கலத்தைச் செலுத்த துடுப்புத் துழாவும் பரதவர்களில் சிலரையும் அனுப்புகிறேன், நீயும் இந்த அராபியனும் தன்னந்தனியாகப் போக வேண்டாம்” என்றான்.
பதிலுக்கு நகைத்தாள் அரசி. முதியவன் முற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பட்டதால் திகைத்தான் பெருவழுதி. மரக்கலம் வெகுவிரைவாக முன்னேற ஆரம்பித்தது. பக்கங்களில் சுமார் நூறு துடுப்புகள் துழாவும் சத்தம் கேட்டது. பெரும் பிரமை பிடித்த பெருவழுதி வெளியே ஓடிப் பக்கப் பலகையில் தலை நீட்டி சமுத்திர நீர்மட்டத்தைக் கவனித்தான். துடுப்புகள் பல வேகமா துழாவின, கடல் நீரை. ஆனால் துழாவும் மாலுமிகள் யாரும் இல்லை. திரும்ப திகிலுடன் பெருவழுதி அறையை நோக்கி ஓடினான். அறையில் யாருமே இல்லை . மரக்கலம் மட்டும் துடுப்புகள் துழாவ பாய் புடைத்திருக்க வேகமாக , கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த அறைக்குள் அராபியன் வந்தான். “முதியவரே! நீரும் சற்று இளைப்பாறும்” என்று கட்டிலைக் காட்டினான்.
“உங்களுடன் வர எனக்கு இஷ்டமில்லை ” என்றான் முதியவன்.
“உமது இஷ்டம் எனது இஷ்டம் என்பது இந்த மரக்கலத்தில் எதுவும் கிடையாது” என்றான் அராபியன்.
‘வேறு யார் இஷ்டம்?”
“அரசியின் இஷ்டம்”
“எனக்கு அவள் அரசியல்ல.”
“இந்த மரக்கலத்தில் இருக்கும் எல்லோருக்கும் அவள்தான் அரசி,”
“நான் இஷ்டப்பட்டால் இங்கிருந்தே சைகை செய்து மற்ற மரக்கலங்களை அழைத்து இதைச் சூழ்ந்து கொள்ளச் செய்ய முடியும்” என்று உஷ்ணத்துடன் பேசினான் கிழவன்.
அராபியன் நகைத்தான். “முடிந்தால் முயன்று பாரும்” என்று கூறி மரக்கலத்தின் இன்னொரு மூலைக்கு நடந்து விட்டான்.
முதியவன் சில விநாடிகள் அறையில் தங்கிவிட்டு வெளியே வந்து வானத்தை நோக்கினான். நக்ஷத்திரங்களைக் கணக்கிட்டு மூன்றாவது ஜாமம் நெருங்கி விட்டதை உணர்ந்தான்.
அப்பொழுது மீண்டும் இளவழுதியின் ஒலி கேட்டது. அது பயங்கர ஒலியல்ல. மகிழ்ச்சி ஒலி. வெறிபிடித்தவன் சிரிப்பைப் போன்ற ஒலி மரக்கலத்தின் அமைதியை ஊடுருவியது. பிறகு யாரோ இருவர் தடதடவென்று ஓடும் ஓசை கேட்டது. சுற்று முற்றும் பார்த்தான் முதியவன். எங்கும் யாரும் தெரியவில்லை. தனக்கே பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஒரு விநாடி நினைத்தான், ”எப்படியும் இந்தக் கப்பலின் சூட்சுமத்தைக் கண்டுபிடித்து விடுகிறேன். அந்த சூன்யக்காரியின் மந்திரத்துக்கும் முடிவு கட்டுகிறேன்” என்று கூறிக் கொண்டு இரண்டடி தளத்தில் எடுத்து வைத்தான். மூன்றாவது அடி அவன் எடுத்து வைக்கவில்லை. திடீரென தான் கடல் பிரவாகத்தில் சிக்கிக் கொண்ட பிரமை ஏற்பட்டது. ”ஐயோ!” என்று பெரும் திகிலால் அலறினான் கிழவன்.