Alai Arasi Ch20 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 20 முடியாத கதை
Alai Arasi Ch20 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
சிறிது நேரம் ஏதும் பேசாமல் மௌனமாகிவிட்ட அஹமத் மேலும் தனது கதையைத் தொடர்ந்தான்.
“அன்று வரை அந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை ஏதோ, விவரிக்க இயலாத சக்தி என் உடலின் ஒவ்வொரு அணுவையும் ஊடுருவுவதாக எனக்குத் தோன்றியது.
மதகுருஎனது தலையிலிருந்து தமது கையை எடுத்த பின்பும் எனக்கு முழு சுரணையும் வரவில்லை. எழுந்திருக்கக்கூட சக்தியில்லாத நிலையில் சிறிது கஷ்டப்பட்டே எழுந்து மதகுருவை நோக்கினேன். அவர் வலிய உதடுகளை மூடியிருந்த தாடியையும் மீசையையும் ஒரு கையால் ஒதுக்கிவிட்டு பிறகே பேசினார் ‘மகனே! உன்னை உன் தாய் நல்ல பலசாலியாக வளர்த்திருக்கிறாள். ஆனால் உலகை ஆள உடல் பலம் மட்டும் போதாது. மனோபலமும் வேண்டும்’ என்று குரு அறிவுறுத்தினார்
‘எனக்கு மனோபலமும் உண்டு’ என்று சொன்னேன் நான்.
‘உலகத்தார் நினைக்கும் மனோபலம், அதனால் பயன் ஏதுமில்லை . வேறு மனோபலம் இருக்கிறது. போகப் போக நீ புரிந்து கொள்வாய்’ என்று கூறினார்.
‘அவர் சொன்னதும் ஏதும் எனக்குப் புரியாவிட்டாலும் புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தேன். பிறகு அவர் என்னையும் என் அன்னையையும் அழைத்துக் கொண்டு அந்த சோலையின் அடர்த்தியான ஒரு பகுதிக்குச் சென்றார். அங்கு பல மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்தன. சில தரையில் படுத்தும் கிடந்தன. அப்படிப் படுத்த மரக்கிளைகளை விலக்கிக் கொண்டு மதகுரு நடந்தார். அவற்றுக்குள்ளே மறைந்து கிடந்தது ஒரு பெரிய குடிசை. அங்கு என்னையும் என் தாயையும் தங்கும்படி உத்தரவு
பிற்ப்பித்துவிட்டு மதகுரு சென்றுவிட்டார். அந்த குடிசையில் உணவுப் பொருள்கள் அனைத்துமிருந்ததாலும் தீ மூட்டும் சாதங்களும் இருந்ததாலும், என் அன்னை சமைத்து எனக்கு உனவழித்து தானும் உண்டாள். அன்றும் மறுநாளும் மதகுரு தலையை காட்டவில்லை. மூன்றாவது நாள் காலையில் வந்த மதகுரு எனது அன்னையை நோக்கி ‘இவனை இவன் சிற்றப்பன் ஆட்கலள் தேடுகிறார்கள். அவர்கள் இங்கு வந்தாலும் வரலாம். நீ போய்விடு”. இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.
என் தாய் சம்மதிக்கவில்லை. ‘இவனைவிட்டு நான் போக முடியாது” என்று திட்டமாக அறிவித்தாள்.
இவன் என்ன நீ பெற்ற பிள்ளையா?’ என்று மதகுரு கேட்டார்.
பிள்ளையைவிட செல்லமாக வளர்த்தேன். என் உயிர் போனாலொழிய நான் இவனைப் பிரிய முடியாது’ என்றாள் அன்னை.
மதகுரு அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் முதற்கொண்டு எனக்கு வித்தியாப்பியாசம் தொடங்கினார். அடிக்கடி கடலுக்கு அழைத்துச் சென்று ஒரு சிறு மரக்கலத்தில் மரக்கலமோட்டும் பயிற்சியளித்தார். அந்தப் பயிற்சிக் காலங்களில் பெரும் பிரமை அடைந்தேன். திடீரென்று மதகுரு கையசைப்பார். காற்றில்லாத போதும் பாய்கள் புடைத்து மரக்கலம் ஓடும். அலைகள் கூட சில சமயங்களில் அதிகமாக எழுந்து மாக்கலத்தைத் தரையில் ஒதுக்கிவிடும். அந்த சமயங்களில் மதகுரு காரணமில்லாமல் சிரிப்பார். அவர் எனக்கு மரக்கலமோட்டும் பயிற்சியளித்த இடத்தில் வேறு மரக்கலங்களோ மாலுமிகளோ கிடையாது. நான்கு வருஷங்களில் நான் பெரிய மாலுமியானேன். அவர் ஏதேதோ மந்திரங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தாலும் அவை எனக்கு வரவில்லை . எனக்கு வயதும் இருபத்தி ஒன்றுக்கு மேலாகிவிட்டதால் எனது தாய் ‘இவன் எதிரியை எப்பொழுதும் கொல்லப் போகிறீர்கள்?’ என்று இம்சை செய்து கொண்டிருந்தான் ‘சமயம் எனக்குத் தெரியும். தற்சமயம் எதிரி பெரும் பலத்துடன் இருக்கிறான்’ என்று சாக்குச் சொல்லி வந்தார்.
என்னுடைய ராஜ்யம் எது? எந்த குடிமக்களுக்கு நான் தலைவன்? என்பது தெரியாததால் அன்னையை அடிக்கடி தொந்தரவு செய்தேன். அவள் ஒரு நாள் மணலில் கோடிழுத்து எனது குடிமக்கள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி எடுத்து சிற்றரசு உன்னுடையது. இது பாக்தாத் காலிப்புக்கு அடர் என்று சொன்னாள். அந்த இடத்தைப் பார்த்துவிட தீர்மானித்து அன்னைக்கும் தெரியாமல் ஒரு நாளிர் சிற்றப்பன் இருந்த இடத்துக்குச் சென்றேன். இரண்டு நாள்’ பயணத்துக்குப்பிறகு அந்த இடத்தை அடைந்ததும் அங்கிருந்த கடைவீதியில் அலைந்து அந்த ஊர் தலைவர் இருக்குமிடத்தை விசாரித்தேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த வணிகர்கள் தங்களது தலைவர் மாளிகையை காட்டுவதாக அழைத்து சென்றார்கள். அந்த மாளிகை வெளிப்பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் உள்ளே நெடுக ஓடியது. அடுத்தடுத்து ஆயுத அறைகள் பல இருந்தன. கடைசியில் கம்பிகள் இருந்த ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்று ‘உள்ளே போ’ என்று கூறினார்கள். அங்கு பலர் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து நான் பின் வாங்கினேன். எனது மண்டையில் ஒரு பலத்த அடி விழ நான் உணர்விழந்தேன். அப்படி எத்தனை நாழிகை இருந்தேனோ எனக்குத் தெரியாது? நான் கண்விழித்தபோது அந்த பழைய அறையில் இல்லை. பஞ்சணை விரித்த கட்டிலில் படுத்துக் கிடந்தேன். அப்பொழுது பொழுது விடிந்து பல நாழிகைகள் ஆகி இருக்க வேண்டும்.
சாளரத்தின் மூலமாக உள்ளே வெயில் புகுந்திருந்தது. சாளரத்துக்கு வெளியே நீண்ட பாலைவனத்தின் மணற்பரப்பு
தெரிந்தது. அதில் வெயில் ஜ்வாலை கிளம்பி பயங்கரமாகக் காட்சி அளித்தது சாளரத்தின் மூலம் தப்பிவிட்டால் என்ன என்று நினைத்து சாளரத்தை நோக்கி நடந்தேன், சாளரத்துக்கு வெளியே இரு ஒட்டகங்களின் வீரர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள். நான் எட்டிப் பார்த்ததும் அவர்களில் ஒருவன் ஒட்டகத்தை என் சாளரத்திடம் செலுத்த அது தன் நீண்ட கழுத்தை உல்ளே நீட்டியது. நான் அதைத் தடவிக் கொடுத்தேன். அது தனது முகத்தால் கன்னத்தில் உராய்ந்தது. அப்பொழுது அதன் மீதிருந்த காவலன் சொன்னான் ‘நீங்கள் தப்ப முயன்றால் கத்தி கொன்றுவிட உத்தரவு. ஆகவே முயற்சி ஏதும் செய்ய வேண்டாம் என்று கையிலிருந்த குறுவாளையும் காட்டினான். அந்த முயற்சியை நான் கைவிட்டேன். பத்துநாள் அங்கிருந்தேன். வேளா வேளைக்கு ஆகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் எப்ப்பொழுதும் யாரோ என்னைக் கண்காணிப்பதாக ஒரு உணர்ச்சி எனக்கு இருந்து கொண்டிருந்தது.
பல கேள்விகள் என் மனத்தே எழுந்து உலாவின. ‘என் சிற்றப்பன் என்னை ஏன் பார்க்க வரவில்லை? என்னை முன்னமே கொன்றுவிட முயன்றவன் என்னை ஏன் கொல்லவில்லை?
இப்படிப் பலபடி சிந்தித்தேன். திடீரென்று ஒரு நாள் என் சாளரத்துக்கு வெளியே ஒரு பெண் அலறும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தபோது எனது அன்னையை இரு காவலர்கள் பிடித்து இழுத்து வந்திருந்தார்கள். ஒருவன் அவள் தலைமயிரைப் பிடித்துக் கீழே தள்ளினான். இன்னொருவன் அவளை வெட்ட கத்தியை உருவினான். அடுத்து நடந்தது என்னையும் மீறிய செயல் என் சாளரத்துக்கு அருகே இருந்த ஒட்டகத்தின் மீது தாவி அதை
நடத்திய வீரனைக் கீழே தள்ளினேன். என் தாய் மீது வாளை ஓங்கிய காவலன் மீது ஒட்டகத்தைப் பாய விட்டேன். ஒட்டகத்தின் குளம்புகள் அவன் ஊட்டியை மிதித்திருக்க வேண்டும். அவன் அலறினான். நான் ஒட்டகத்திலிருந்து கீழே குதித்து என் தாயை
அணைத்துக்கொண்டேன். ஒட்டகத்திலிருந்த வீரனைத் தள்ளியபோது அவனிடமிருந்து கைப்பற்றிய வாளை எடித்துக் கொண்டேன். முதலில் வந்த இருவரை வெட்டிப் போட்டேன் மூன்றாவது வீரன் வந்தபோது அவனுடன் பத்துவீரர்கள் வந்தார்கள். அவர்களை அடுத்து மதகுருவும் வந்தார் அவர் பழையபடி நிராயுதபாணியாகத்தான் வந்தார். அவரைக் கண்டதும் அந்தச் சோலையிலிருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்’ தன்னுடன் வரும்படி கூறி என்னையும் என் அன்னை அழைத்துக் கொண்டு முன்னால் நடந்தார். எங்களை யாரும் பின் தொடரவில்லை. மதகுரு அந்த நகரை விட்டு அசையவில்லை அன்று முழுவதும் அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கினார் எங்களையும் அங்கு தங்க வைத்தார். மறுநாள் பொழுது வீட்டிற்கு முன்பே அங்கிருந்து ஒரு மூடு வண்டியில் எங்களை ஏற்றிக் கொண்டு சென்றார். எந்த இடைஞ்சலோ தடையோ இல்லாமல் எங்கள் பழைய இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த சில மாதங்களில் மதகுரு என்னை கடற்கரையோரமாக உள்ள ஒரு சிற்றூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு தமது மேற்பார்வையில் ஒரு மரக்கலத்தை நிர்மாணம் செய்தார். அடுத்த சில மாதங்களில் அந்த மரக்கலத்தில் எனக்கு பயிற்சி அளித்தார். கடைசியாக ஒரு நாள் அவரே சில மாலுமிகளையும் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கடைசியாக அதில் சில ஆண்டு காலம் பல இடங்களுக்கும் சென்று வந்தேன். எனது இருபத்தி நான்காவது வயதில் ஒருநாள் என்னை அழைத்து அலை அரசியை அறிமுகப்படுத்தினார். ‘இவள் சொற்படி நட. இவள் போகுமிடத்திற்கு நீயும் போ’ என்று உத்தரவிட்டார். அவளுடன் நான் இங்கே வந்தேன். உன்னைச் சந்தித்தோம். பிறகு நடந்ததும் உனக்கு தெரியும். நான் உன்னை சந்திப்பதற்கு முன்பு அவள் உன்னைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. பிறகு நான் அவள் கைப்பொம்மையானேன். அந்த இன்னொரு அரசியை நான் பார்த்ததில்லை. ஏதோ இனம் புரியாத பெரிய சிக்கலில் நான்
சிக்கியிருக்கிறேன். இடையில் என் சிற்றப்பனும் மதகுருவின் அடிமையானார். அவர் இஷ்டப்படி அந்த சிற்றரசு இப்பொழுது ஆளப்படுகிறது. அதை மதகுரு அபகரித்துக் கொள்வாரோ என்று அன்னை அஞ்சுகிறாள். அதை அபகரிக்கும் பணிக்கு உபயோகப்படுத்தத்தான் உன்னை அங்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார் ” என்ற அஹமத் தனது கதையை முடித்தான்.
‘’உனது கதை விசித்திரமாயிருக்கிறது!” என்றேன் நான்.
இன்னும் முடியவில்லை. எனக்கோ உனக்கோ விளங்காத மர்மங்கள் இருக்கின்றன. இன்னும் முடியாத கதை இது. எப்படி
முடியுமோ எனக்குத் தெரியாது?” என்ற அஹமத் பெருமூச்செறிந்தான். “நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று கேட்டான்.
“என்ன உதவி?” என்று கேட்டேன். ‘’எப்படியாவது இன்றிரவு அந்தப் புறாவைப் பிடித்துக்
கொன்று விடு” என்றான் அஹமத், அதைச் சொன்னபோது அவன் உடல் நடுங்கியது.