Alai Arasi Ch22 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 22 மன்னன் ஏவிய மந்திரக் கணை
Alai Arasi Ch22 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
கடம்பர் தாக்குதல் எந்த நேரத்திலும் ஏற்படலாமென்றும் அந்தத் தாக்குதலைச் சமாளிக்கவே படைத் தலைவனொருவனைத் தாம் வரச் சொல்லியிருப்பதாகவும் மன்னன் அறிவித்தர்க்கும் இளவழுதி குடிசைக்குள் நுழைவதற்கும் நேரம் சரியாயிருக்கவே அங்கிருந்தவர் அனைவரும் இளவழுதியை ஏறெடுத்து நோக்கவே செய்தார்கள். மன்னனைத் தவிர அங்கு ஏழுபேர் இருந்ததையும், அவர்கள் ஒவ்வொருவர் கழுத்திலும் பொற் பதக்கமொன்று இருந்ததையும் கவனித்த இளவழுதி, அந்த எழுவரும் அரசனுக்கு அடுத்தபடி சேரநாட்டின் பிரமுகர்களென்பதை உணர்ந்து கொண்டதால் அவர்கள் அனைவருக்கும் தலைதாழ்த்தினான். மன்னன் அருகிலும் சென்று அவன் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, “மன்னவா! தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்” என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டான்.
நெடுஞ்சேரலாதன் பதில் சொல்லவில்லை. முகத்தில் பெருமை கலந்த , சாயையையும் உதட்டில் பெருமிதப் புன்முறுவலொன்றையும் படரவிட்டுக் கொண்டான். மற்ற ஏழு கேரளப் பெருந்தலைவர்களும் இளவழுதியை நோக்கி திருப்திக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார்கள்.
மன்னன் அந்தப் பெருமக்களை நோக்கி, “உங்களுக்கு சம்மதந்தானே?” என்று கேட்டான்.
“சம்மதம். முற்றும் சம்மதம்” என்று அந்த எழுவரில் ஒருவர் கூற மற்றவர்கள் தலையசைத்து ஒப்புதல் தெரிவித்தனர்.
“படைத் தலைவன் திறமையைச் சோதித்துப் பார்த்தாலும் பார்க்கலாம்” என்றான் மன்னவன் மற்ற எழுவரையும் நோக்கி,
‘’அவசியமில்லை’’ என்று ஒருவர் கூற மற்றவர் தலையாட்டினார்கள்.
அவர்களில் பெரியவராகக் காணப்பட்டவர் மட்டும் “மன்னர் இதுவரையில் எதற்கும் தகுதியற்றவரைத் தேர்ந்தெடுத்ததில்லை” என்று கூறினார்
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு மன்னன் இளவழுதியை நோக்கி “இளவழுதி! உன்னை ஒரு முக்கிய பணிக்கு அமர்த்தத்தான் இங்கு வரவழைத்தேன். எதற்கும் இவர்கள் அனுமதியின்றி நான் எந்த முடிவையும் எடுப்பதில்லை. இனி இன்று முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு வடகரையிலிருக்கும் நமது படைகளை நீ நடத்த வேண்டும். கடம்பர் எந்த சமயத்திலும் வடகரையைத் தாக்கலாம், நிலத்திலும் தாக்கலாம், நீரிலும் தாக்கலாம். இரண்டையும் சமாளிக்க நீ ஏற்பாடுகளைச் செய்துகொள்” என்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எந்தவித பதட்டமுமின்றி இளவழுதி ஏற்றுக் கொண்டான். சேரவேந்தனில் பிரபல படைத்தலைவர்கள் பலர் இருக்கத் தன்னை எதற்கு மன்னன் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியாததால் கேள்வி தொக்கிய பார்வையொன்றை மன்னன் மீது செலுத்தினான்.
மிகவும் சூக்ஷ்ம புத்தியுடைய மன்னன் “இளவழுதி இந்த போருக்கு வேறு படைத்தலைவர்களை நியமிப்பதற்கில்லை. கடம்பர் தங்கள் படையெடுப்பை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். நாமும் ஏதுமறியாதது போல் ரகசியமாகவே தாக்குதலைச் சமாளிக்க சித்தமாக வேண்டும். நாடறிந்த எனது படைத்தலைவர்களில் ஒருவரை நியமித்தாலும் நமது ரகசியம் அம்பலமாகிவிடும். அதனால்தான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறினான்.
மன்னவா கடல் போரென்றால் நான் சமாளித்து விடுவேன் கடலோடிப் பழக்கமுண்டு. நிலப்படையை இயக்க பழக்கமில்லையே” என்றான் இளவழுதி.
“இளவழுதி! கவலைப்படாதே நிலப்படையை நீ வெற்றியுடன் இயக்குவாய். தவிர இந்தச் சண்டை பாதி நிலத்திலும், பாதி கடலிலும் நடக்கும். கடம்பர்கள் தங்கள் கடற்படையை சேர்த்து நான்கு மரக்கலங்களை வடகரை வர உத்தரவிட்டிருக்கிறார்கள் ஆகையால் இரண்டுக்கும் நாம் சித்தமாக வேண்டும் தேவையானால் கடற்போரை சமாளிக்க அஹமதை பயன்படுத்திக் கொள்” என்றான் மன்னன்.
“யாரது? அஹமத்?” என்று எழுவரில் பெரியவர் கேட்டார்.
“அரபு நாட்டவன். அவன் மரக்கலந்தான் நமது துறைமுகத்தில் நிற்கிறது. அதுவும் சாதாரண மரக்கலமல்ல. பல யந்திர வசதிகளைக் கொண்டது. அந்த ஒரு மரக்கலம் போதும் கடம்பரின் பத்து மரக்கலங்களைச் சமாளிக்க” என்று கூறினான் மன்னன்.
அதற்குப் பிறகு விவாதம் ஏதும் நடக்கவில்லை. மன்னன் முதலில் எழுந்து தனது இடையிலிருந்த பெரிய வாளொன்றை இளவழுதியின் இடையில் அணிவித்தான். அந்தப் பணி முடிந்ததும் அரசன் தனது கையிலிருந்த ஒரு பெரிய தங்கக் கங்கணத்தையும் எடுத்து இளவழுதியின் கையில் அணிவித்து “இந்தக் கங்கணம் இன்று முதல் உன்னை சேரநாட்டுப்படைகளுக்கெல்லாம் தலைவனாக்குகிறது. நீ இங்கும் படைத்தலைவன், அரபு நாடு சென்றாலும் அங்கும் எனது படைத்தலைவன் என்ற முறையில் பணி செய்வாயாக” என்று கூறி தனக்கு முன் மண்டியிட்ட இளவழுதியின் சிரசில் கையை வைத்தான்.
மற்ற எழுவரும் எழுந்து வந்து இளவழுதியின் சிரசின் மீது கையை வைத்தார்கள். இப்படிப் பதவி ஏற்று முடிந்ததும் மன்னன் சொன்னான் ” இளவழுதி இன்று பிற்பகல் நீ உனது படைகளைப் பார்வையிடலாம். கடற் போரை நீயே நடத்தினாலும் சரி, அல்லது அஹமதையோ அலை அரசியையோ நியமித்து நடத்தினாலும் சரி, உசிதப்படி செய். ஆனால் நீ இங்கிருந்து புறப்படுவதற்குள் கடம்பரின் பலத்தை சிறிதளவாவது ஒடுக்கிவிடு” என்று.
அத்துடன் இளவழுதி போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையால் சைகையும் செய்தான்.
இளவழுதி பற்பல சிந்தனைகள் சிந்தையில் உலாவ வெளியே நடந்தான். ‘கடம்பர் நீண்ட நாட்களாகச் சேரர்களின் எதிரிகளாயிருந்தும் மன்னன் அவர்களை ஏன் முறியடிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்? மந்திர பலமும் புஜபலமும், படை பலமும் கொண்ட சேர மன்னன் நினைத்தால் இத்தனை நாள் கடம்பரைத் தீர்த்துக்கட்டியிருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை மன்னன்? என்ன காரணத்திற்காக தரைப்போர் பயிற்சி அதிகமில்லாத என்னைப் படைத்தலைவனாக்கினான்? பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகசியமாக வைத்திருப்பதற்காகத் தனது புகழ்வாய்ந்த படைத்தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று மன்னன் கூறியதில் நியாயமிருப்பது போல் தோன்ரினாலும், அதில் தனக்கும் புரியாத மர்மம் ஏதோ இருப்பதையும் உணர்ந்து கொண்டான். இருந்தும் பொறுத்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்ற காரணத்தால் அருவிக்கரை ஓரமே நடந்து சென்றான். கதிரவன் உச்சிக்கு வந்த்துவிட்ட நேரத்தில் மன்னன் மாளிகையை அடைந்த இளவழுதி, பூஜை அறையில் மன்னனைத் தவிர மற்ற எல்லோரும் இருந்ததையும், பூஜையைக் கேரள பெரிய மந்திரவாதியே நடத்தியதையும் பார்த்து பூஜை அறையின் கதவருகில் ஒருபுறமாக நின்றான்.
கேரள பெரிய மந்திரவாதி மகாசக்திக்கு பூஜையை வெகு சம்பிரதாயமாக நடத்தினார். அவர் சிவந்த புஷ்பங்களையும்
வில்வ இலைகளையும் கொண்டு அர்ச்சனை செய்தபோதும். அதற்கப்புறமும்கூட கண்ணைத் திறக்கவில்லை. கண்னை திறந்து கற்பூரம் காட்டியபோது மட்டும் சற்றுத் திரும்பி இளவழுதியை நோக்கி அவன் இடையில் மன்னன் அணிவித்த வாளைச் சுட்டிக்காட்டி அதை அவிழ்த்து அம்பாளின் பாதத்தில் வைக்கும்படி ஜாடை காட்டினார். இளவழுதியும் மந்திரவாதி சொற்படி வாளை வைத்ததும் அதில் அம்பாளின் குங்குமத்தை வைத்து மந்திரவாதி பெரிய குரலில் பேசினார். “இளவழுதி இன்று சேர நாட்டின் பிரதான சேனாதிபதியாகி விட்டான். இந்த வாள் அவனிடம் இருக்கும்வரை அவனை வெற்றி கொள்ள யாராலும் முடியாது” என்று. பிறகு இளவழுதியை அருகில் வரச்சொல்லி அந்த வாளை இவன் இடுப்பில் கட்டிவிட்டார். “இந்த வாள் இந்த நாட்டில் மட்டுமல்ல, அயல் நாட்டிலும் பிரசித்தி பெறும்” என்று கூறினார்.
இளவழுதி ஏதும் பேசவில்லை . பூஜா கிரகத்தில் இரண்டு பதுமைகள் போல் நின்றிருந்த அலை அரசியும் கடலரசியும் இமைகளைக்கூட அசைக்காமல் இளவழுதியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இளவழுதி அவர்கள் இருவர் கண்களையும் சந்தித்தான். கடைசியில் உத்தரவிட்டான் “அரசிகளே! நீங்கள் இருவரும் அஹமதை அழைத்துக்கொண்டு மரக்கலத்திற்குச் செல்லுங்கள். நான் என் பாட்டனாருடன் நாளை மரக்கலம் வருகிறேன். இடையில் நமது மரக்கலம் தாக்கப்பட்டால் எதிர்த்துப் போராடுங்கள்” என்று சொல்லிவிட்டு பெரிய மந்திரவாதியிடமிருந்து பிரசாதங்களை வாங்கிக்கொண்டு வெளியே சென்றான். பிறகு மன்னரின் பேட்டி அறைக்கு. சென்றான். மன்னர் தமது வில்லையும் அம்பறாத்தூணியையும் துறந்து வாள்கூட கச்சையில் இல்லாமல் மஞ்சத்தில் சாய்ந்த கொண்டிருந்தார். மன்னனை வணங்கி எழுந்த போது அவன் கண்களில் தெரிந்தது அந்த வெண்புறா. மன்னர் அதை மடியில்
வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இளவழுதி எழுந்ததும், இளவழுதி! புறா இன்று அரபு நாடு போகிறது. நீ ஏதாவது செய்தி அனுப்புவதானால் அனுப்பலாம்” என்றார்.
‘’யாருக்கு நான் செய்தியனுப்ப முடியும்? அங்கு யாரையும் தெரியாதே” என்று கூறினான் இளவழுதி.
‘’அங்கிருக்கும் மதகுருவுக்கு உன்னைத் தெரியும். நீ அவரை விரைவில் சன்ந்திப்பாய் என்று நான் எழுதியிருக்கிறேன், நீ ஏதாவது வேண்டுமானால் சொல், அதையும் சேர்த்து எழுதிவிடுகிறேன்” என்று மன்னன் சுட்டிக்காட்டினான்,
‘’சொல்ல ஏதுமில்லை ” என்று வெறுப்புடன் இளவழுதி கூற வென்புறாவைக் கையில் பிடித்த வண்ணம் சாளரத்துக்குச் சென்ற சேரமன்னன் சாளரத்தருகில் சென்றதும் திகைத்து நின்றான் ஒரு விநாடி. கடலில் அரசியின் மரக்கலம் பாய் விரித்து ஓடிக்கொண்டிருந்தது. “புறா! அந்த மரக்கலத்தை நிறுத்து” என்று சினத்துடன் கூறிய மன்னன் கையிலிருந்த புறாவை மரக்கலத்தை நோக்கி வீசினான். புறாவும் அம்புபோல் பறந்து சென்றது மரக்கலத்தை நோக்கி. அது வருவதை அறவே உணராமல் புடைத்த பாய்களைப் பார்த்து மகிழ்ந்தவண்ணம் தளத்தின் மீது நின்றிருந்த்தான் அஹமத். அவனைக் கிழித்துவிடும் மந்திரக்கணை போல் புறா அவனை நோக்கி வேகமாகச் சென்றது. புறா வருவதை அருகில் வந்த பிறகு உணர்ந்த அஹமத் அதை அழித்துவிடும் நோக்கத்துடன் தனது வாளை உருவிக் கொண்டான்.