Alai Arasi Ch26 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 26 சீதனம்
Alai Arasi Ch26 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
கடல் மட்டத்தில் திடீரென சில வேளைகளில் எழும் சுறாவைப் போல சுனையின் நீரிலிருந்து புரவிகளோடு புரவிகளாக வாளைமீன் போல் எழுந்து நின்ற மஸ்தானாவும் ஒரு புரவியைப் போலவே தோன்றினாள். அவளைச் சுற்றி பல வெள்ளைப் புரவிக் குட்டிகளும், நாலைந்து பழுப்பு நிறப் புரவிகளும் ஒரு பெரிய கரிய புரவியும் இருந்தன. புரவிகள் ஒன்றையொன்று இடித்துக் கொண்டும், முட்டியடித்துக் கொண்டும் விளையாடியபோது அவள் வயிற்றிலும் ஒரு புரவி முட்டியது. அதே சமயத்தில் அவன் அழைப்புக்கிணங்கி அவளை நெருங்கிய இளவழுதியும் ‘’நானும் முட்டட்டுமா?” என்று கேட்டான்,
“நீங்கள் புரவியா?” என்று பதிலுக்கு கேட்ட மஸ்தானா. “நீங்கள் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. என் தந்தை உங்களைக் கவனித்து வருகிறார்” என்று சொன்னாள்,
அந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிய இளவழுதி இதை அலட்சியம் செய்து தனது வலதுகையை அவள் தோளில் வைத்து தள்ள முயன்றான். அப்போது புரவிகளுக்கிடையில் புகுந்து வந்த மதகுரு, “தமிழா இது அரபுநாடு. இங்கு பெண்களைத் தொடுவது மகாகுற்றம். ஏற்கனவே அத்துமீறிப் போய்விட்டாய். இன்னும் இந்த விளையாட்டைத் தொடராதே உனக்கு நல்லதல்ல” என்றார்.
இந்த மிரட்டலுக்கு இளவழுதி அஞ்சவில்லை . “மதகுரு! நான் உங்கள் மகளுடன் விளையாட வரவில்லை. என்னையும் மீறிய சந்தர்ப்பங்களால் இந்த நிலைக்கு இழுக்கப்பட்டேன்” என்று சமாதானம் சொன்னான்.
“தமிழா! நீ இங்கு வந்தது புரவி வாங்கத்தானே?” என்று மதகுரு வினவினார்.
‘’ஆம்” என்றான் இளவழுதி,
‘’எத்தனைப் புரவிகள் வேண்டும்?” என்று மதகுரு கேட்டார்.
“நானூறு புரவிகள் வேண்டும். அவ்வளவுதான் மன்னர் வாங்கி வரச் சொன்னார்.”
“மிகவும் நல்லது, எவ்வளவு பணம் கொண்டு வந்த்திருக்கிறாய்?” என்று விசாரித்தார்.
‘’பணமா?” என்று வாயைப் பிளந்தான் இளவழுதி.
மதகுரு அவனையும் நோக்கிப் புரவிகளையும் நோக்கினார்.
‘’ தழ்மிழா! இந்தப் புரவிகள் ஒவ்வொன்றையும் குட்டியாக வாங்கி இத்தனை நாள் வளர்த்து பழக்கியிருப்பது இனாமாகக் கொடுக்கவா?” என்று கேட்டார்.
“நானூறு குதிரைகள் என்ன விலை?” என்று இளவழுதி விசாரித்தான்,
“ஒரு லட்சம் பொற்கழஞ்சுகள்’ என்ற மதகுரு, “இது உன் மன்னருக்கே தெரியுமே! அவரே கொடுத்தனுப்பியிருப்பாரே!” என்றார்.
முன்பாக மன்னர் மரக்கலம் வடகரையிலிருந்து அரேபியாவுக்குப் புறப்படு முன்பாக மன்னர் கொடுத்ததாக ஒரு மாலுமி ஒரு மூட்டையைக் கொடுத்ததை நினைத்துப் பார்த்து, ”ஆமாம்; ஒரு மூட்டை கொடுத்தார் மன்னர்” என்றான் இளவழுதி, ”ஆனால் அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது?” என்றும் சொன்னான்.
அதுவாகத்தான் இருக்கும்… அது பணம்தான்” என்ற மதகுரு. ‘’வா உன் மரக்கலத்திற்குப் போய்ப் பார்ப்போம்” என்றார்.
இருவரும் ஒரு படகை எடுத்துக் கொண்டு மரக்கலத்தை அடைந்ததும் இளவழுதி தனது அறைக்கு மதகுருவை அழைத்துச் சென்றான். அறையில், அவன் மஞ்சத்தில் இருந்த மூட்டையைக் கண்டதும் மதகுரு. “அதோ பணம்” என்று உற்சாகத்துடன் கூறி, அந்த மூட்டையை எடுத்துக் கவிழ்த்து, தலைகீழாக மஞ்சத்தில் கொட்டினார். தமிழக பொற்கழஞ்சுகள் கலகலவென்று அவன் மஞ்சத்தில் விழுந்தன. அவற்றைக் குவியலாகக் குவித்து ‘’வா இளவழுதி எண்ணிப் பார்ப்போம்” என்றார் மதகுரு.
இருவருமாக எண்ணிப் பார்த்ததில் சரியாக ஒரு லட்சம் பொற்கழஞ்சுகள் இருந்ததைப் பார்த்த இளவழுதி பிரமிப்படைந்தான். சேர மன்னனின் முன் யோசனையை நினைத்து வியப்படைந்தான்.
“மன்னருக்கு விலை எப்படித் தெரியும்?” சற்று இரைந்து கேட்கவும் செய்தான்.
“பாண்டி நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் நான்தானே புரவிகளை அனுப்புகிறேன். பக்கத்து நாட்டுக்கு விலை தெரியாமல் இருக்குமா?” என்று சொல்லிவிட்டு, “வா போவோம் மஸ்தானா ஒத்துக் கொள்கிறாளா இந்த விலையை என்று பார்ப்போம்?” என்று கூறிவிட்டு மீண்டும் படகில் ஏறினார் கரைக்குப் போக
‘’ மஸ்தானாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று இளவழுதி கேட்டான்.
“புரவிகள் விற்பனையில் வரும் பணமெல்லாம் அவளைச் சேர்ந்தது. அதுதான் அவளுடைய சீதனம்” என்று விளக்கினார் மதகுரு
கரையை அடைந்ததும் இளவழுதி, “சீதனம் ஒரு லட்சம் பொற்கழஞ்சுகளா?” என்று வினவினான்.
”இதுவரை பத்து லட்சம் சேர்த்திருக்கிறேன்” என்று மதகுரு சொன்னார்.
இளவழுதி மதகுருவை நோக்கி, ”அவளே பெரும் பொக்கிஷமாயிற்றே. பணம் வேறு கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டான்,
“இந்த காலத்தில் வெறும் பெண்ணை எவன் வாங்கிக் கொள்கிறான். வருகிறவனெல்லாம் பணப் பிசாசுகள்” என்று மதகுரு சொன்னார்,
இளவழுதி, ”பொன்னை விரும்பாமல் பெண்ணை மட்டும் விரும்புபவர்கள் இருக்கலாம்” என்று சுட்டிக் காட்டினான்.
மதகுரு தன் சூட்சுமபுத்தியால் அவன் சொல்லியதின் பொருளைப் புரிந்து கொண்டு, “உன்னைச் சொல்கிறாயா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டார்.
இளவழுதி சிறிது சங்கடப்பட்டான். “ஏன், எனக்கென்ன?” என்றும் விசாரித்தான் சங்கடம் குரலிலும் ஒலிக்க,
மதகுரு அவனையும் பார்த்து மகளையும் பார்த்தார்.
‘’உனக்கொன்றுமில்லை. நீ ஏற்கனவே என் மகளின் மனத்தைத் திருடி விட்டாய்” என்றார்.
‘’மதகுரு, எனக்கு திருட்டுப் பட்டம் கட்டாதீர்கள். உங்கள் மகள்தான் என் மனத்தைத் திருடிவிட்டாள். நீங்கள் என்று அனுமதி கொடுக்கிறீர்களோ நான் அன்று பரவிகளுடனும் மஸ்தானாவுடனும் தமிழகம் புறப்படுகிறேன்” என்றான்.
இன்னும் சரியாக ஒரு வாரம்” என்ற மதகுரு. “அதற்குள் உங்கள் திருமணத்தை முடித்து விடுகிறேன்” என்றும் அறிவித்தார்.
அப்பொழுது, நனைந்த உடையுடன் ஓடிவந்த மஸ்தானா, “திருமணமா? யாருக்கு?… எப்பொழுது…?” என்று விசாரித்தாள்.
மதகுரு ஏளனமாக நகைத்தார். ”உனக்கும், நீ ஏற்கனவே அங்கீகரித்து விட்ட இந்தத் தமிழனுக்கும்தான்” என்றார். . “உனக்கு சம்மதம்தானே?” என்று அதே ஏளனத்துடன் கேட்கவும் செய்தார் .
மஸ்தானா பதில் சொல்லவில்லை. வேகமாக மீண்டும் சுனைக்கு ஓடினாள். அவள் ஓடியபோது, அவள் உடலின் ஒட்டியிருந்த ஈர உடை அவளது அழகுகளை செம்மையாகப் பிரித்துக் காட்டியது. அதைக் கவனித்த இளவழுதி நானும்” வருகிறேன்” என்று மதகுருவிடம் சொல்லிவிட்டு அவளைத் தொடர்ந்தான். ஓடிய வேகத்தில் அவள் மணலில் விழுந்தாள் இளவழுதி அவளை நெருங்கி இரு கைகளாலும் தூக்கி அவன் தொடையிலிருந்த மணலைத் தட்டிவிட்டான். இதை மதகுரு பார்த்தாலும் அவர் இருந்த இடத்தைவிட்டுப் போகவில்லை இருந்த இடத்திலிருந்தே தனது கழுகுப் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
மஸ்தானாவைத் தூக்கியதும் மணலில் உட்கார்ந்த இளவழுதியும் அவளைத் தனது மடியில் இருத்திக் கொண்டு அவள் மேனியில் மணலின் சின்னஞ்சிறு கற்கள் ஒட்டியிருந்த இடங்களைத் தட்டி, கற்களை அகற்றி அவள் மேனியையம் ஆராயலானான்.
ஏற்கனவே அவள் தொடையில் குத்திய கற்கள் ஆங்காங்கு மாணிக்கக் கற்களை இழைத்தது போலவே மற்ற இடங்களிலும் இழைத்து விடவே, “இந்த மாணிக்கப் பாவை எவ்வளவு கோடி பொற்காசுகள் வேண்டுமானாலும் பெறுவாளே. இவளே ஒரு பொக்கிஷம். வேறு பொன் எதற்கு?” என்று சற்று இரைந்தே கசந்து கொண்டான்.
மதகுருவும் அப்போது அங்கு வந்து, ”தமிழா! என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.
பதிலுக்கு அவள் மாணிக்க உடலைச் சுட்டிக்காட்டிய இளவழுதி, , “இதோ இயற்கை அளித்த ஆபரணங்கள்…. இதோ இவள் தொடையை பாருங்கள். எங்கள் நாட்டில் விசேஷ காலங்களில் பட்டத்து யானைக்கு முகத்தில் தொங்கவிடும் மறைப்பு ஆடையின் அழகு போன்று எப்படி மிளிர்கிறது?” என்று குதூகலத்துடன் சொன்னான்,
‘’ஆம்! ஆம்” என்று ஆமோதித்த மதகுரு, “இவளை யானையின் மத்தகத்தில் உட்கார வைத்து, கால்களைத் தொங்க விட்டால் யானை மாணிக்கத் திரையால் மூடப்படும்” என்றார். அவர் குரலில் பெருமிதம் தொனித்தது.
அவர் பெருமிதத்துக்குக் காரணம் இருந்ததால் இளவழுதி மவுனமே சாதித்தான்.
அப்பொழுது திடுக்கிடக்கூடிய இன்னொரு யோசனையையும் சொன்னதால் மதகுரு திகைத்து நின்றார். அவர் திகைப்பை மிகைப்படுத்த மற்றொரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது.