Alai Arasi Ch39 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 39 காதல் அரசியும், காமத்தலைவியும்
Alai Arasi Ch39 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
இளவழுதி கண்களை வாங்கிக் கொண்டு, தலை வணங்கினாலும் அவன் தன்னை நம்பவில்லையென்பதை அவனது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்ட மதகுரு “இளவழுதி! உனக்குத் தெரியாததெல்லாம் நடவாது என்று நினைக்காதே! அந்தக் கண்களை ஊதும் போதே மந்திரம் போட்டு அந்தக் கண்களை கண் இழந்தவருக்குப் பொருத்தினால் உண்மையை உணர்ந்து கொள்வாய். அப்போது என் மந்திரபலம் உனக்குப் புரியும்” என்று பெருமையுடன் கூறினார்.
‘’ஒருவேளை இன்றிரவு காட்டு மிராண்டிகளின் தலைவி உன் கண்களப் பிடுங்கிவிட்டாலும், இவற்றை நீயே பொருத்திக் கொள் உன் பார்வை முன்னைவிட நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
அதைக் கேட்ட இளவழுதி, ”இவள் ஏன் என் கண்களைப் பிடுங்க வேண்டும்?” என்று வினவினான்,
சிறிது சிந்தித்துவிட்டு, ”இவள் இதுவரை தோல்வியே எரியாதவள். இன்று நீ அவளுக்கும் அவள் கூட்டத்துக்கும் தோல்வி அளித்திருக்கிறாய். அதனால் அவள் அதற்குப் பழிவாங்க நிச்சயமாய் சித்தமாயிருப்பாள். இன்றிரவு எப்படியும் உன் கண்களைத் தோண்டி விடுவாள். ஆகையால் எச்சரிக்கையாக இரு” என்று எச்சரித்துவிட்டு வெளியே நடந்தார்.
“இருங்கள், நானும் வருகிறேன்” என்று கூறிக் கொண்டே வாயில்படி வரையில் சென்றான்.
அப்போது நாடோடிக் கூட்டத் தலைவி ஒரே பாய்ச்சலில் அவன் மீது பாய்ந்து இளவழுதியைப் பின்னுக்கு இழுத்தாள். இளவழுதி ஏதும் புரியாமல், “நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.
“மதகுருதான் என்னை இங்கு அழைத்து வந்தார் உன்னை என்னிடம் ஒப்புவிக்க. நான் எப்படியும் என் கண்களுக்கு பழிவாங்குவேன் என்று அவருக்குத் தெரியும், அவர் தான் தப்பித்துக்கொள்ள என்னை இங்கு அழைத்து உன்னை என்னிடம் ஒப்படைத்தார். இல்லாவிட்டால் அவர் கண்களை நான் பிடுங்கியிருப்பேன், ஆனால் நீ வைத்திருக்கும் இந்தக் கண்களை வைத்து அவருக்குப் பார்வை கொடுத்திருக்க மாட்டேன் அவர் உயிர் உள்ள வரை குருடாகத் திரிய வேண்டியிருக்கும் அவர் செய்திருக்கும் அட்டூழியங்களுக்கு அதுதான் சரியான தண்டனை என்று கூறி, அவன் கச்சையிலிருந்த இரு கண்களையும் எடுத்து தன் கண்கள் இருந்த இடத்தில் வைத்துக் கொண்டாள்.
“தமிழா! இப்போது நீ நன்றாகத் தெரிகிறாய். அழகாக இருக்கிறாய். நான் உன்னை அரசனாக்குகிறேன். நான் ராணியாக இருந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் வா” என்று கூறி, இரு கைகளாலும் அவனை இழுத்துக் கொண்டே தரையிலிருந்த பாயில் சரிந்தாள்.
அடுத்த சில வினாடிகளில் அவள் நன்றாகக் குறட்டை விட்டு உறங்கும் சத்தம் கேட்டது. இளவழுதி எழுந்து உட்கார்ந்து, அவளை நோக்கினான். அவள் ஏதோ பெரிய காட்டு மிருகம் போல் பிரும்மாண்டமாக மல்லாந்து கிடந்தாள். அவளுடைய பிரும்மாண்டமான கால்களைப் பார்த்த இளவமுகி அந்தக் கால்கள் ஒருமுறை தன்னை நெரித்தால் தன் எலும்புகள் முறிவது திண்ணம் என்று நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் நிறைவேறியது அவன் எண்ணம். அவள் சற்று அசைந்து “வா என் கண்ணாளா!” என்று அழைத்து ஒரு காலை எடுத்து அவன் மீது போட்டு, காலை சற்றே அழுத்தினாள். வெளியே அதே சமயம் ஏதோ ஒரு மரக்கிளை முறிந்தது. அது தனது எலும்பாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணிய இளவழுதி இடுப்பையும் முதுகையும் தடவிக் கொண்டான். அப்படி சேதம் ஏதுமில்லை என்று அறிந்ததும், “அப்பாடா பயந்தே விட்டேன்” அவளைப் பார்த்துச் சொன்னான்.
“தமிழா! தமிழகத்திலிருந்து வந்தும் உனக்கு காதலின் பலம் புரியவில்லை. எந்தப் பெண்ணும் தனது காதலனுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்க என்றாள், இது பெண்மையின் சுபாவம் என்றாள்,
“காதலா!” என்று வியப்புடன் கேட்டான் இளவழுதி,
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குயில் கூவியது. கடற்கரையிலிருந்து தென்றல் சுகமாக வீசியது. மெள்ள நகைத்துவிட்டுச் சொன்னாள்.
‘’சகுனங்கள் நன்றாயிருக்கின்றன’ என்று. அத்துடன் அவனை பக்கத்திலிருந்து ஒரு புரட்டு புரட்டி தன்னிரு கைகளாலும் குழந்தையைத் தூக்குவதுபோல் மேலே தூக்கிப் பிடித்துத் தன் மார்பில் படுக்க வைத்து அணைத்துக் கொண்டாள்
அவன் விலக முயன்றான்,
‘’பெண் இன்பம் விரும்பும்போது விட்டுச் செல்வது மகா பாவம், கொலை பாதகம் என்று உங்கள் நாட்டு சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீயாகத் தேடி அலைந்து அடைய வேண்டியதை எனாகத் தரும்போது ஏன் ஓடப் பார்க்கிறாய். நீ ஆண் பிள்ளைதானே” என்று சிணுங்கினாள்.
அப்பொழுது வாயிற்படியிலிருந்து, “அவர் ஆண்மகன் தான், நீ பெண்தானா என்று யோசித்துக் கொள்?” என்று அரசியின் குரல் கேட்கவே, வெகுண்ட அந்த தலைவி,
“தமிழா! அதோ வந்திருக்கிறாள் உன் காதலி, அவளிடம் என்ன அழகைக் கண்டுவிட்டாய் நீ. பருவச் செழிப்புகள்கூட போதுமான அளவுக்கு இல்லையே. என்னிடம் எல்லாம் சுமை சுமையாய் இருக்கின்றன. ஆண்டு அனுபவி” என்று இளவழுதியிடம் கூறிவிட்டு, “அரசி நீ போய்விடு. இவனைக் குருடாக்கி அனுப்புகிறேன். என்னைப் போன்ற அழகியை முடியாதவனுக்கு கண் எதற்கு?” என்று கூற, அரசியும் வாயிற்படியை நெருங்கி,
“அவரைத் தொட்டால் நீ இந்த இடத்திலிருந்து வெளியேற முடியாது” என்று சினத்துடன் கூறினாள். “என்னை யார் தடுக்க முடியும்?” என்று சீறினாள் தலைவி.
பதிலுக்கு மெள்ள நகைத்த அரசி, ”உன் கணவன் காண்டாமிருகத்தை அழைத்து வந்திருக்கிறேன்” என்று கூறி வாயால் உதடுகளைக் குவித்து பெரிதாக ஊதினாள் சில வினாடிகளில் மாடிப்படிகளில் தடதடவென்று யாரோ ஏறிவரும் சப்தம் கேட்டது.
அந்த சப்தம் கேட்டதும் உயரமும் பருமனுமான ஒரு ராட்சதன் போன்ற பயங்கர உருவம் அங்கு வந்து ” என்ன நடக்கிறது இங்கே ?” என்று பயங்கரமான குரலில் வினவியது.
“சரசம்” என்று அலை அரசி மெள்ள நகைத்தாள்.
“யாரவன்? இப்பொழுதே அவன் கால்களைக் கிழித்துப் போடுகிறேன்” என்று கூறி அறையில் தலைவியின் தழுவலில் திணறிக் கொண்டிருந்த இளவழுதியை கொலைப் பார்வையாகப் பார்த்தான், பிறகு இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்தான்.
அலை அரசி குறுக்கே வந்து, ”இதற்கு அவர் பொறுப்பாளியல்ல” என்று இளவழுதியைக் காப்பாற்ற தீனமான குரலில் கூறினாள்.
“எனக்குத் தெரியாதா இது” என்று சொன்ன அந்தப் பயங்கர உருவம், “அட காமக்களி அவனை அனுப்பி விடு. இல்லாவிட்டால் உன்னையும் அவனையும் சேர்த்தே பாலைவனத்தில் புதைத்து விடுவேன்’’என்று கூறி அறைக்குள் காலெடுத்து வைத்து இளவழுதியின் கையை பிடித்து இழுத்தான்.
விஷயம் தலைக்குமேல் போய்விட்டதால் இளவழுதி பேசவுமில்லை ; எதிர்ப்பைக் காட்டவுமில்லை. ஆனால் தலைவி அந்த உருவத்தின்மீது பாய்ந்து கீழே தள்ளி, “அவர் மீது கை வைத்ததற்கே உன்னை நான் கொன்று விடுவேன்” ஆர்ப்பரித்து என்று இளவழுதியின் குறுவாளை எடுத்து, அதை கணவன். மார்பில் புதைக்க கையை ஓங்கினாள்.
‘’அவனைக் கொல்லாதே. அவன் உன் கணவன்” என்று எச்சரித்தாள் அரசி.
அதனாலென்ன?” என்று தலைவி வினவினாள்.
“நீ விதவையாகி விடுவாய்” என்று சுட்டிக்காட்டினாள் அலை அரசி.
“விதவையாக இல்லாமலிருந்து இத்தனை நாள் என்ன கண்டுவிட்டேன். இவனிடம் அடியும் உதையும் பட்டதைத் தவிர” என்று இகழ்ச்சியுடன் கேட்ட தலைவி கையை மேலும் ஓங்கினாள்.
அப்பொழுது எங்கிருந்தோ எழுந்த இளவழுதியின் கை அவள் கையைப் பிடித்து ஒரு முறுக்கு முறுக்கவே குறுவாள் கீழே விழுந்தது. அதைத் தன் கையை நீட்டி எடுத்துக்கொண்ட அந்த பயங்கர மனிதன், “இப்பொழுது குறுவாள் என்னிடமிருக்கிறது. இன்றைக்கு எப்படியும் ஒரு பலி கொடுத்தாக வேண்டும். அது நீதான்” என்று குறுவாளை தலைவியின் கழுத்தை நோக்கித் திருப்பினான்.
அப்பொழுது என்ன காரணத்தினாலோ அந்தக் குறுவாள் அவன் கையைவிட்டுப் பறந்தது. தூரத்திலிருந்து இடி இடியென்று ஒரு நகைப்பொலி கேட்டது. சற்று எட்ட குறுவாளைக் கையிலேந்தி மதகுரு சிரிப்புடன் நின்றார்.