Alai Arasi Ch43 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 43 மாலைத் தீவின் கொள்ளைக் கப்பல்
Alai Arasi Ch43 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
மதகுரு சிந்தித்தார். அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது அதை கவனிக்கவே செய்த இளவழுதி, “மதகுரு! நாட்டுப்பற்று சொந்த மண் என்னைப் பற்றி இழுக்கின்றன. நான் போய்த்தான் ஆகவேண்டும்” என்றான்.
“சரி சரி, போய் வா. உன்னை இங்கு நிறுத்த முடியாது. உன் எண்ணங்கள் எல்லாமே நிறைவேறும். போய் வா வீரனே. போய் வா, உன் மன்னனுக்கு என் ஆசிகளைச் சொல், .சேரன் அதிராஜனாவதில் எனக்கும் பங்குண்டு என்பதை நினைவுபடுத்தி ஒருமுறை இங்கு வந்து போகச் சொல்” என்று சிறிது அழுத்தியும் சொன்னார் அதிகாரத் தோரணையில்.
அடுத்து இளவழுதி, “அஹமத், எனக்கு ஒரு புரவி கொடு’’ என்று யாசிப்பதுபோல் இரு கைகளையும் நீட்டினான்.
“நீ ஒரு பெரிய புரவி வீரன்தான் என்றாலும் புரவி மரக்கலமாகாது. கடலில் புரவியில் அமர்ந்து எப்படிச் செல்ல உத்தேசம்?” என்று வினவினான் அஹமத்.
“அஹமத், புரவி மரக்கலமாகாது என்று எனக்குத் தெரியும், வேடிக்கை வேண்டாம். எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன். அதற்குள் நீ எனக்கொரு மரக்கலத்துக்கு ஏற்பாடு செய்; மாலை வருகிறேன்” என்று கூறிவிட்டு புரவி மீதேறி பஸ்ராவின் பாலைவனச் சோலைக்கு விரட்டினான்,
“இவன் எங்கு போகிறான்?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட அஹமத், “மதகுரு, அப்படித்தானே?” என்றும் வினவினான்.
மதகுரு நகைத்தார். அப்படியேதான். மாலையில் பார் தெரியும்” என்றார்.
மாலையில் இளவழுதி வரத்தான் செய்தான். ஆனால் தனியாக அல்ல அலை அரசியும் கடல் அரசியும் அவனுடன் வந்தார்கள். அவர்கள் இருவரையும் ஒரு படகில் ஏற்றிக்கொண்டு துடுப்புளைத் துழாவிச்சென்ற இளவழுதி ஒருமுறை திரும்பி அஹமத்தை நோக்கி கையை ஓங்கி ஏதோ செய்தான். அஹமதும் தனது இரு கைகளை உயர்த்தி செய்கை செய்தான். அந்த இரு கைகளிலிருந்தும் இரண்டு புறாக்கள் பறந்து வந்து இளவழுதியின் தோள்கள் மீது அமர்ந்தன. அப்புறாக்களை எடுத்தெறிய முயன்ற இளவழுதியை அலை அரசி தடுத்தாள்.
‘’அந்த இரண்டிலும் நாம் போக வேண்டிய வழி, தொட வேண்டிய துறைமுகங்கள். எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் எல்லாம் இருக்கின்றன” என்றாள் அலை அரசி
‘’வழி தெரியாதா? வழி காட்ட என்ன இருக்கிறது? நாம் எற்கனவே வந்த வழியில்தானே திரும்ப வேண்டும்?” என்றான் இளவழுதி,
அப்படியில்லை இளவழுதி. வந்தது நமது முயற்சியாலோ சாமர்த்தியத்தாலோ இல்லை. மதகுருதான் நம்மை அசுர வேகத்தில் வரவழைத்தார். நாம் இப்பொழுது இயற்கையின் விதிப்படி செல்லவேண்டியிருக்கும். அப்படிச் சென்றால் அடுத்த ரெண்டு வாரங்களுக்கு நாம் சேரநாட்டை அடைய முடியாது. ஆகவே துரிதமான பயணத்துக்கு வழி ஏதாவது இருந்தால் பறாவின் அடிச்சிறகில் குறிப்பு ஓலைகள் இருக்கும். மதகுரு காரணமில்லாமல் புறாவை அஹமதிடம் கொடுத்திருக்கமாட்டார்” என்றாள் கடல் அரசி. கூடவே அவனுக்கருகில் வந்து அந்த இரண்டு புறாக்களின் அடிச்சிறகிலிருந்து இரண்டு செய்திச் சுருள்களை எடுத்து இளவழுதியிடம் நீட்டினாள்.
அவற்றைப் பிரித்துப் பார்த்த இளவழுதி பெரும் பிரமிப்புக்கு உள்ளானான். அப்படியொரு செய்தி அதில் இருந்தது.
அன்றிரவு மரக்கலத்தின் படுக்கையறையில் அந்தக் செய்திச் சுருள்களை விரித்துப் படித்த இளவழுதி, ”இதென்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. புறாக்கள் மரக்கலங்களை எப்படி இழுத்துச் செல்லும்? புறாக்களின் கால்களில் மெல்லிய பட்டுக் கயிற்றைக் கட்டி அவற்றை பாய்மரத் தூண்களில் தூண்களில் அல்லவா பிணைத்து விடும்படியாக எழுதியிருக்கிறார்?” என்று சற்று இளக்காரமாகவே பேசினான்.
“மதகுருவையோ, அவருடைய நடவடிக்கைகளையே எடைபோட நாம் யார்?” என்று பரிந்து பேசினாள் அலை அரசி,
“உண்மை , உண்மை ” என்ற இளவழுதி தன் கையிலிருந்த பட்டுக் கயிற்றின் நுனியை மரக்கலத் தூண்களில் பிணைத்தான். அடுத்த விநாடி மரக்கலம் அலைகளை மீறி காற்றெனப் பாறந்தது.
அதைக் கண்ட மூவருமே பிரமித்தார்கள். அப்போது அலை அரசி ஒரு யோசனை சொன்னாள்: “இப்படி மரக்கலத்தை இழுப்பதைவிட நமது கைகால்களினால் அந்தக் கயிற்றை கட்டினால் நாமே வேகமாகப் போய்ச் சேர்ந்து விடலாமே” என்றாள்.
“உசிதமல்ல” என்றான் இளவழுதி,
“எது?” இது அலை அரசியின் கேள்வி.
“இந்த வேகத்தில் நமது கால்கள் தனித்தனியாகப் பிய்த்துக் கொள்ளுமே. மரக்கலத் தூணில் கட்டியதுதான் சரி ” என்றான் இளவழுதி. “கைகால்கள் இல்லாத மனைவியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?”
“எதுவும் செய்ய உங்களால் முடியும்” என்றாள் அலை அரசி.
அதை நிரூபிப்பவன் போல் அலை அரசியின் மீது புரண்டான் இளவழுதி.
அப்பொழுது அதே அறையில் மூலையில் படுத்திருந்த கடல் அரசி ‘’அதோ பாருங்கள், நம்மைக் கவ்வ ஒரு யமன் வருகிறது” என்று சாளரத்து வழியே கையை நீட்டினான்.
அதைப் பார்த்த அலை அரசியும்கூட, “அட எழவே இவனிடமா சிக்கிக் கொண்டோம். நாம் தொண்டி போய்ச் சேர்ந்த மாதிரிதான்” என்றாள்.
“ஏன்?” என்றான் இளவழுதி
‘’அது மாலத்தீவின் கொள்ளைக் கப்பல். அது எந்த ஒரு கப்பலையும் பாரதத்தை நோக்கிச் செல்ல விடுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் அலை அரசி
“அதெப்படி ஒரு மரக்கலம் எல்லோரையும் நிறுத்த முடியும்?” என்று கடல் அரசி வினவினாள்.
‘சென்ற ஓராண்டு காலமாக முடிந்துதான் வருகிறது” இந்தக் கப்பலை நாம் தாக்கியதும் அல்லது அது நம்மைத் தாக்கியதும் இன்னும் நூறு மரக்கலங்களாவது நம்மைச் சூழ்ந்து தீ வைத்துவிடும்” என்றாள் அலை அரசி. “இதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். உயிருக்கு அஞ்சுபவர்கள் உடனடியாக மதகுருவை சரணடைந்து பாதுகாப்புக்கு வழிதேடுங்கள்” என்று மேலும் சொன்னாள் அலை அரசி.
“நீ போக வேண்டாம் அரசி. உன்னை நான் காப்பாற்றுகிறேன்” என்று இளவழுதி அவள் இடையில் தன் கையைக் கொடுத்து தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொண்டான். ஆனால் மேலும் எங்கிருந்தோ தோன்றிய இரு கைகள் அவள் இடையை பிடித்து உயரத்தூக்கி கடலில் எறிந்து விட்டது.
என்ன ஆச்சரியம். கடலில் இரு கைகள் உயர எழுந்து அவளை அப்படியே பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்று விட்டது.
அடுத்த கணம் கடலுக்குள் பாய்ந்து விட்டான் இளவழுதி, அவனையும் இரண்டு இரும்புக் கைகள் எங்கோ இழுத்துச் சென்றன. அவன் ஒரு பெரிய விடுதியின் வாயிலில் நின்றான். அந்த வாயில் வழியே உள்ளேயும் சென்றான். உள்ளே போகப் போக பல அறைகள் இருந்தன. ஒன்று சொர்க்கம் போல் இருந்தது. அந்த சொர்க்கத்தின் பஞ்சணையில் தேவஸ்திரீபோல் படுத்துக் கிடந்தாள் அலை அரசி.
அப்பொழுது உள்ளே நுழைந்த இளவழுதியை நோக்கி, “நான் என்ன சொன்னேன்?” என்றும் கேட்டாள்
“ஆம்! உன் தந்தையின் பிரதாபத்தைச் சொன்னாய், நானும் ஒப்புக்கொண்டேன்’ என்ற இளவழுதி, அந்தப் பஞ்சணையில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“எழுந்திருங்கள், அப்பா வரப்போகிறார்” என்று எச்சரித்தாள்.
“ரொம்பவும் பயமுறுத்தாதே! இளவழுதிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பெயரும் உண்டு “
“மகிழ்ச்சி” என்றாள் அலை அரசி.
அடுத்து நிகழ்ந்தது யாரும் நம்பமுடியாத ஜகஜ்ஜால வித்தை!