Alai Arasi Ch5 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 5 வான்மதியும் கடல்மதியும்
Alai Arasi Ch5 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
இரவு நன்றாக முற்றி மரக்கலத்தில் மாலுமிகள் நடமாட்டம் நின்று அனைவரும் துயின்ற சமயம் பார்த்து பேரன் இளவழுதி தன்னருகே வந்து படுத்து தன்னை எச்சரிக்கையும் செய்துவிட்டு போனது பெருவழுதிக்கு ஓரளவு திருப்தியை அளித்தாலும் போல் நிலைமை மிகச் சீர்கேடாக இருப்பதைப் புரிந்து கொண்டதால் துன்பமும் அச்சமுமே கொண்டான், அலை அரசி என்ற குள்யக்காரி இளவழுதிக்கு ஏதோ வசிய மருந்து கொடுத்து அவன் புத்தியைக் குழப்பிவிட்டாலும் அந்தக் குழப்பம் அவ்வப்போது விலகிவிடுகிறதென்பதையும், அந்த சமயத்தில் தனது பேரன் இயற்கையாகச் செயல்படுகிறானென்பதையும் அறிந்து கொண்ட முதியவன் அந்த மருந்து பூர்ணமாக பேரனை வசியப்படுத்துவதற்குள் அவனை மீட்காவிட்டால் அந்த அரசிக்கு அவன் மீது முழு ஆதிக்கம் ஏற்பட்டுவிடுமேயென்றும் கலங்கினான். அந்தக் கலக்கத்தோடு அந்த மரக்கலத்தின் விசித்திரங்களையும் சிந்தித்துப் பார்த்த பெருவழுதி, உண்மையில் அதில் விந்தை ஏதுமில்லையென்பதையும், இரவில், அடித்தளத்தை பக்கவாட்டிலிருந்த யந்திரமொன்று பெரும் பலகையை இயக்கி மூடுவிடுவதால் துடுப்புத் தள்ளும் மாலுமிகள் கண்ணுக்குத் தெரிவதில்லையென்பதையும், அதனால்தான் துடுப்புகள் தாமாகத் துழாவுவது போன்ற பிரமையைத் தனக்கு ஏற்படுத்தியது என்பதையும் தெரிந்து கொண்டான்.
முதல் நாள் ஒரு பகுதியில் தான் பார்த்த மேல் பலகையில்லாத அறையும் அன்று காணாததால் மேல் பலகையை நீக்கும்படியாக அமைத்திருக்கிறார்களென்று தீர்மானித்து அமானுஷ்யமான சக்தியொன்றும் அரசிக்கு இல்லை என்று முடிவு கட்டிய முதியவன் ‘இதில் பாதி தந்திரமும் பாதி மருந்தும் வேலை செய்கிறதேயொழிய மனிதன் பிரமிக்கும்படியானது ஏதுமில்லை’
என்று தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டான் இத்தனையிலும் ஒன்றுக்கு மட்டும் அவனால் விடை காண முடியவில்லை . ‘தளத்தில் சாதாரணமாக தான் நடந்தபோது திடீரென ஜலமட்டத்துக்கு இறங்கியது எப்படி? கடலின் வேகம் தன்னை இழுத்தது எப்படி? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் மரக்கலத்தின் அமைப்பைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்,
ஆகையால் எழுந்து மீண்டும் தளத்தில் நடமாட முயன்று மெதுவாக அப்படியும் இப்படியும் நடந்தவன் மரக்கலத்தின் தலைப்பில் இருவர் நின்று கொண்டு வடகரையைக் கவனிப்பதைப் பார்த்தான். அப்பொழுது எழுந்த பின்னிரவு நிலவு அவர்கள் யாரென்பதை திட்டமாக எடுத்துக் காட்டியதால் மெதுவாக அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவர்களை மிகவும் நெருங்காமல் சற்று எட்டவே நின்று மரக்கலப் பலகையில் சாய்ந்து கொண்டு அவர்களைக் கவனிக்கலானான்.
அரசி இளவழுதியின் தோள் மீது தலைசாய்த்து அவன் கழுத்தில் தனது முகத்தைப் புதைத்த வண்ணம் நின்றிருந்தாள். இளவழுதியின் இடது கை அவளை நன்றாக இழுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தது. அப்படிக் கழுத்தில் புதைத்த உதடுகளை அவன் காதுக்கருகில் கொண்டுபோய் ‘இதற்குள் கசந்துவிட்டதா?” என்று சாதாரண குரலிலேயே கேட்டதால் அவள் கேள்விகளும் இளவழுதியின் பதில்களும் தெளிவாக விழுந்தன, பாட்டன் பெருவழுதியின் காதுகளில்,
“கசந்துவிட்டதா? எது அரசி?” என்று வினவினான் இளவழுதி.
”எதுவா? நான் என்ன ஜடப் பொருளா அது இது என்று என்னைக் குறிப்பிட?” என்றாள் அரசி,
”உன்னைப் பற்றிக் கேட்டாயா?” என்று வினவிய இளவழுதியின் குரலில் அன்பு பெருக்கெடுத்துக் கிடந்தது.
“வேறு யாரைப் பற்றிக் கேட்பேன்? இங்கு இருப்பது ஒருத்திதானே?” அரசியின் குரல் குழைந்தது இனிமையுடன்.
“உன்னை எப்படிக் கசக்கும் அரசி? கரும்பும் கற்கண் கசந்தால் உன்னையும் கசக்கும்” வேகத்துடன் பேசி, இளவழுதி.
“கரும்பும் கற்கண்டும்தானா உங்கள் சிந்தனைக்கு வந்தன?’’
“அவற்றை விடச் சிறந்த அமுதம் இருக்கிறது.”
“அப்படியானால் நான்?”
“அமுதம்”
“நான் உங்களுக்கு பொற்கிண்ணத்தில் அளிக்கும் அமுதத்வை விடவா?”
“ஆம் அரசி. பொற்கிண்ணம் எதற்கு? உன் அதரங்கடே அமுதம். நீயே பொற்கிண்ணம்.”
இதை இளவழுதி சொன்னதும் அரசி அவனை நோக்கம் மெள்ளத் திரும்பி தனது உடலை அவன் உடலுடன் இழைக்காள் தனது முகத்தையும் அவனது முகத்தை நோக்கித் தூக்கினார் அவள் .நெற்றியில் இருந்த வைரம் சந்திர கிரணத்தில் பளபளத்ததையும் அதன் ஒளி இளவழுதியின் முகத்தில் விழவே இளவழுதி அவள் இடையைத் தனது இரு கைகளாலும் பிடித்து அவளது உடலைத் தனது உடலுடன் இணைத்துக் கொண்டான் பிறகு தனது இதழ்களை அரசியின் இதழ்களுடன் இணைத்து அழுத்தினான். அந்த நிலையில் அரசியின் உடல் வளைந்து வளைந்து இளவழுதியின் உடலுடன் பலபடி இழைந்து மோகனாஸ்திரங்களை அவன் மீது அள்ளித் தெளித்தது.
இளவழுதி பிறகு மும்முரமாக இயங்கலானான். அரசியின் அழகிய உடலை முரட்டுத்தனமாகப் பல இடங்களில் பிடித்தான்,
பிறகு அவளைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான். அவள் தனது கைகளால் அவன் கழுத்தைச் சுற்றினாள். கன்னத்தால் அவன் கன்னத்தை இழைத்து உம் உம் என்று வேட்கை ஒலிகளைக் கிளப்பினாள். இளவழுதி சுயநிலை இழந்தான். ”அரசி! அரசி” என்று முனகினான்.
“என்ன?” – இன்பமாக ஒலித்தது அவள் குரல்,
“நான் உன் அடிமை” என்றான் இளவழுதி.
“அப்படியானால் நான் ஒன்று கேட்பேன்” என்றாள் அவள்.
”கேள்”
“இது உண்மையா? நடிப்பா?”
“எது?”
“இப்பொழுது நீங்கள் காட்டும் அன்பு”
“சந்தேகமா உனக்கு?”
“ஆம்”
“எதனால்?”
“என் பக்கத்தில் படுத்திருந்தவர் ஏன் எழுந்து போனீர்கள்?” இந்தக் கேள்வியை மிகச் செல்லமாகக் கேட்டாள் அரசி.
“முக்கியமான ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.”
“என்ன அத்தனை முக்கியம்?”
“இந்த மரக்கலத்தில் வந்திருக்கிறதே ஒரு கிழம்….” என்று சற்று இரைந்தே துவங்கினான் இளவழுதி.
இது காதில் விழவே காதைத் தீட்டிக் கொண்ட பெருவழுதி மெள்ள அவர்கள் இருந்த திசையை நோக்கி இரண்டடி நடந்து. பக்கப்பலகைக்கு அருகில் மறைந்து உட்கார்ந்து அடுத்து எழுதிய உரையாடலை அறிந்து கொள்ளக் காதைத் தீட்டிக் கொண்டான் அவன் காதில் விழுந்த சொற்கள் அவனைத் திகைக்க வைத்தன.
“கிழமா? யாரைச் சொல்கிறீர்கள்?” என்று அரசியும் இரைந்தோ வினவினாள்.
“என் பாட்டன் என்று உறவு கொண்டாடிக் கொண்டு, வரவில்லை தொண்டி துறைமுகத்தில்?” என்று இளவழுதியும் கேட்டான்.
அந்த முதியவரா! பாவம் பேரனைப் பார்க்க ஆசையுடன் வந்திருப்பார்” என்றாள் அரசி.
“பேரனாவது மண்ணாங்கட்டியாவது… அவர் பாட்டனுமல்ல நான் அவர் பேரனுமல்ல” என்று உணர்ச்சியுடன் பேசினான் இளவழுதி.
”அப்படியானால் என்னைவிட்டு எழுந்து போனீர்களே எதற்கு?” என்று கேட்டாள் அரசி.
“அந்தக் கிழத்தை எச்சரிக்க, நான் பேரனாகவே நடித்து எச்சரிக்கையாயிருக்கும்படி கூறினேன். கிழமும் நம்பிற்று கவலைப்படாதே அரசி. எப்படியும் நாளை அந்தப் பைத்தியத்தை வடகரையில் இறக்கி விடுகிறேன்.”
“அவர் போக இஷ்டப்படாவிட்டால்?”
“இஷ்டப்பட வைக்கிறேன்”
“எப்படி?”
இளவழுதி மிகுந்த கடுமையான திட்டமொன்றை விளக்கினான். அதைக் கேட்ட பெருவழுதி பெரும் பீதிக்கும் சினத்துக்கும் இலக்கானான்.
பெருவழுதியைப் பற்றி பிறகு நினைக்காத இளவழுதி அரசியை மெதுவாகத் தளத்தின் பலகையில் கிடத்தி தான் பக்கத்தில் அமர்ந்தான். அவள் மல்லாந்து வான்மதியை நோக்கினாள்.
“இந்தக் கடல்மதி எதற்காக வான்மதியை நோக்க வேண்டும்? அடி அரசி! உன் அமுத அதரங்களைக் கொடு” என்று கேட்ட சி வண்ணம் அவள் உடல் மீது வளைந்து வளைந்து இதழ்களைப்பருகினான். அந்த இதழ்களின் அமுதத்துக்கு என்னதான் வசீகரச் சக்தியோ! மெள்ள மெள்ள சுயநிலையை இழக்கத் தொடங்கினான் இளவழுதி. சில வினாடிகளில் அடியோடு நினைவிழந்தான். அந்த சமயத்தில் அஹமத் எங்கிருந்தோ தோன்றி கையிலிருந்த ஒரு கிண்ணத்தை நீட்டினான் அரசியிடம். தனது இதழ்களை அவன் இதழ்களிலிருந்து மீட்டுக் கொண்ட இளவரசி அந்தக் கிண்ணத்தை இளவழுதியின் இதழ்களில் வைத்து “அன்பரே அருந்துங்கள்” என்று கொஞ்சினாள்.