Alai Arasi Ch9 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 9 அவன் சபதம்
Alai Arasi Ch9 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
குடிசைக் கோடியிலிருந்த விளக்கின் சுடரில் அலை அரசியின் அழகுப் பிம்பம் தெரிந்ததையும், தன்னை நோக்கி அது நகைத்ததையும் கண்ட இளவழுதி அந்த விளக்கை அணுகி சுடரின் முன்பு உட்கார்ந்து அந்தச் சுடரில் இணைந்த மோகினியுடன் உரையாடத் தொடங்கியதைக் கண்ட முகுந்தன் பெருவழுதி தனக்கும் புரியாத ஏதோ பெரும் வசியத்தில் பேரன் சிக்கிவிட்டதை உணர்ந்து கொண்டதால், இருந்த இடத்திலேயே கல்லெனச் சமைந்து உட்கார்ந்து விட்டான்,
பாட்டனின் மனநிலையைப் பற்றி அறவே கவலைப்படாத இளவழுதி விளக்குச் சுடரைக் கூர்ந்து நோக்கி, ‘அரசி! நாம் எதற்காக இப்படிச் சந்திக்க வேண்டும்? நேரில் சந்தித்தால் என்ன? விளக்குச் சுடரில் தோன்றுகிறாயே! சுடர் உனக்குச் சுடவில்லையா?’ என்று அன்பு ததும்பும் குரலில் கேட்டான்,
விளக்கு மோகினி மிக மதுரமாகத் தனது முத்துப் பற்களைக் காட்டி நகைத்தாள். ‘அன்பரே! நாம் நேரில் சந்திக்கக் காலமிருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள். என் நிலைக்கு நான் உங்களைக் கொண்டுவரும் வரையில் நாம் சந்தித்துப் பயனில்லை. இந்த நெருப்புச்சுடர் என்னைச் சுடுமென்று அஞ்சாதீர்கள். நெருப்பு எப்படி நெருப்பைச் சுடாதோ அப்படி இதுவும் என்னைச் சுடாது. நானே நெருப்பு! நான் இந்தச் சுடரில் இருக்கும் வரை இந்தச் சுடர் உங்களையும் சுடாது. வேண்டுமானால் சுடரை நிமிண்டிப் பாருங்கள்’ என்று சொன்னாள் அலைஅரசி.
அவள் சொன்னதையொட்டி சுடரைத் தனது கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து நெருடிப் பார்த்த இளவழுதி அதில் சூடு ஏதுமில்லாததைக் கவனித்து, ‘சுடர் சிறிதும்
சுடவில்லையே அரசி, சூட்டைக் குளிர்ச்சியாக்க என்ன மந்திரத்தை வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டான்.
அவள் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. ‘இதில் மந்திரம் ஏதுமில்லை. உஷ்ணம் உஷ்ணத்தோடு சேரும் போது நிலை ஏற்படுகிறது. உங்கள் நாட்டு ஆயுர்வேத முரையே ‘உஷ்ணம் உஷ்ணேன சாம்யதி’ என்று கூறுகிறது. இது ஒருவித இயற்கை நிலை. மருத்துவத்தையும் மனோதத்துவசத்தையும் இணைத்து இந்த நிலையை யாரும் எய்தலாம்’ என்றாள் அரசி புன்முறுவலின் ஊடே.
இளவழுதி சிறிது சிந்தித்துவிட்டு கேட்டான் ‘நாம் நேரில் சந்திக்க மூன்று ஆண்டுகள் ஆகுமென்று உன் அராபிய சொன்னானே, அது நிஜமா?’ என்று.
‘அவனாக எதுவும் சொல்லவில்லை. நான் சொன்னதை அவன் சொன்னான். அவனாக எதுவும் சொல்ல அவனுக்கு அதிகாரம் கிடையாது’ என்றாள் அரசி.
‘நீ இப்பொழுது எங்கிருக்கிறாய்? அதே அரபு குடியிருப்பில்தானே?’ என்று ஆவலுடன் கேட்டான் இளவழுதி.
‘இல்லை ‘ என்றாள் அவள்.
‘வேறு எங்கிருக்கிறாய்?’
‘நடுக்கடலிலிருந்து பேசுகிறேன்’
‘கடலிலிருந்தா! என்னால் நம்ப முடியவில்லை’ என்றால் இளவழுதி அவநம்பிக்கை பூரணமாக உதித்த குரலில்.
‘உங்கள் குரலில் அவநம்பிக்கை அதிகமாக ஒலிக்கிறது இப்பொழுது பாருங்கள்’ என்று கூறிவிட்டுச் சற்றே திரும்பினாள் அவள். விளக்குச் சுடருக்குள் பெருங்கடலும் அதில் பெரிய மரக்கலமும் தெரிந்தது. மரக்கலத்தின் இரு பகுதிகளிலும் அலைகலள் ஓங்கி எழுந்து கொண்டிருந்தன. அவற்றின் நடுவே அரசி நடந்து கொண்டிருந்தாள். அப்படி நடந்தபோது அவள் பின்னெழில்கள் அசைந்து அசைந்து அவன் உள்ளத்தை உலுக்கின. அலைகள் மேலும் பெரிதாகி மரக்கலத்தை மோதி மோதி திவலைகளை உள்ளே தெளித்தன. அவற்றுக்கிடையில் சென்றதும் அவள் திரும்பினாள். அவள் முகத்திலும் ஆடையிலும் அலைத் திவலைகள் வாரி அடித்து முத்துக்களை அவள் முகத்திலும் உடலிலும் நிரப்பின. ‘போய் வருகிறேன்’ என்பதற்கு அறிகுறியாக அவள் இரு கைகளையும் இணைத்து வணங்கினாள். அடுத்த விநாடி கடலலைகள் மரக்கலத்தையும் அவளையும் விழுங்கிவிட்டன.
பிரமை பிடித்த வண்ணம் சுடரின் அருகிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் இளவழுதி. சுடர் சர்வ சாதாரணமாக எரிந்து கொண்டிருந்தது. அது மீண்டும் சுடுகிறதா, பழையபடி குளிர்ந்துதான் இருக்கிறதா? என்பதைப் பார்க்க விரல்களால் அதை நெருட முற்பட்டதும் சுடர் கையில் சுரீலெனச் சுட்டதால், ‘உஸ்!’ என்று கையை எடுத்துக் கொண்ட இளவழுதி மெள்ள விளக்கிடமிருந்து எழுந்தான்,
அதுவரை அவனைப் பார்த்தபடி தூரத்தே தனது பாயில் உட்கார்ந்திருந்த பெருவழுதி, ‘விளக்குடன் விளையாடினால் சுடாமலிருக்குமா குழந்தை?’ என்றான்.
இளவழுதி பாட்டனை நோக்கி திரும்பி, ‘முன்பு தொட்டேன், சுடவில்லை தாத்தா’ என்றான்.
‘தொட்டதாக பிரமை’ என்றான் பெருவழுதி, விளக்கை இளவழுதி முன்பு நெருடியதைப் பார்க்காததால்.
‘இல்லை தாத்தா, நிச்சயமாய்ச் சுடவில்லை’ என்றான் இளவழுதி.
‘விளக்குடன் பேசிக் கொண்டிருந்தாயே உனக்குப் பைத்தியமில்லையே?’ என்று கேட்டான் பெருவழுதி,
‘பைத்தியந்தான் தாத்தா. சுடரில் வந்த மோகினி என் பைத்தியமாகத்தான் அடித்து விட்டாள்’ என்றான் இளவழுதி துன்பத்துடன்.
‘மோகினியல்லடா அவள். மோகினிப் பிசாசு மந்திரவாதியிடம் சொல்லி அதை விரட்டி விடுகிறேன்’ என்றான் பெருவழுதி,
இளவழுதி துன்பம் தோய்ந்த குரலில் நகைத்தான். ‘நீங்கள் விரட்ட அவசியமில்லை. அவளே போய்விட்டாள். சொன்னான்.
”எங்கு போய்விட்டாள்?’ என்று வியப்பும் சற்றே கலை நீங்கிய குரலிலும் கேட்டான் பெருவழுதி,
‘எங்கென்று தெரியாது. மரக்கலத்தில் சென்று விட்டான் என்னிடம் விடையும் பெற்றுக் கொண்டாள்’ என்றான் இளவழுதி அவன் குரல் தழுதழுத்துக் கிடந்தது.
முதியவனான முகுந்தன், பேரன் சொன்னதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தான். கேரள பெரிய மந்திரவாதியிடம் பையனைக் காட்டினால் இந்த மனப்பிரமையை அவர் அகற்றிவிடுவார் என்று தீர்மானித்துக் கொண்டான். அதற்கு சில நாட்கள் காத்திருக்கவும் முடிவு செய்தான். பேரனுக்கு ஏற்பட்டிருக்கும் மனப்பிரமையில் தாம் என்ன சொன்னாலும் ஏறாது என்று தீர்மானித்துக் கொண்ட பெருவழுதி எதற்கும் பேரன் மீது எப்பொழுதும் ஒரு கண்ணை வைத்திருக்கத் தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்துடன் இளவழுதியைப் படுக்கச் சொல்லி தானும் படுத்துக் கொண்ட முதியவன் கண்களை மூடினாலும் உறக்கம் வரவில்லை. ஏதேதோ நினைத்துக் கொண்டும் அடுத்து பேரனைக்காப்பாற்றத் திட்டங்கள் வகுத்துக் கொண்டும் படுத்த முதியவன் கடைசியில் கண்விழித்தபோது கதிரவன் உதித்து நான்கு நாழிகைகள் ஆகிவிட்டதை உணர்ந்து குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். திடீரென்று கதிரவன் கதிர்களைச் சந்திக்க முடியாததால் கண்களைக் கசக்கிக் கொண்டான். அவன் விழித்தபோது குடிசையில் இளவழுதி இல்லாததால் கடற்கரையை நோக்கி கண்களைச் செலுத்தினான். கடற்கரை அருகே இளவழுதி நடந்து கொண்டிருந்தான்.
அதனால் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்ட பெருவழுதி கானும் கடலில் நீராடச் சென்றான். நீராட்டத்தை முடித்துக் கொண்ட பெருவழுதி அலைகளில் நீந்திப் போய்க் கொண்டிருந்த இளவழுதியை நோக்கி விட்டுத் தனது பக்கத்திலிருந்த பரதவரை நோக்கி, ‘இளவழுதி நீராடியதும் குடிசைக்கு வரட்டும். இன்று மீன் பிடிக்கப் போக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு குடிசைக்குத் திரும்பினான்.
அன்று முதல் இளவழுதி சில தினங்களில் படிப்படியாக சாதாரண நிலைக்கு வந்ததால் பெருவழுதி மனச் சாந்தியடைந்தாலும் அரபுக் குடியிருப்பைப் பார்வையிட தவறவில்லை . இளவழுதி கடலோடிய ஒரு நாள் அவனுக்குத் தெரியாமல் அரபுக் குடியிருப்புக்குள் சென்று விசாரித்தான். அங்கிருந்தவர்கள், ஒரு அராபியனும் ஒரு பெண்ணும் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தார்களென்றும் பிறகு சொல்லாமல் போய்விட்டார்களென்றும் சொன்னார்களே தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை.
பத்து நாட்கள் கழித்து பெருவழுதி தனது பேரனைத் தொண்டி நகரிலிருந்த கேரள பெரிய மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றான். மந்திரவாதியும் இளவழுதியை உற்றுப் பார்த்தார். பிறகு பகவதி விக்ரகத்துக்கு எதிரில் விளக்கேற்றி அதில் பன்றிக் கவனித்தார். அவரும் விளக்கில் யாருடனோ பேசினார்.
முடிவாகச் சொன்னார் ‘உங்கள் பேரனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. இது விஷயத்தில் நாம் தலையிடாதிருப்பது நல்லது’ என்று.
விளக்கில் யாருடனோ பேசினீர்களே, யாருடன்?’ கவலை மிகுந்திருந்தது பெருவழுதியின் குரலில்.
“இவனைப் பிடித்திருந்த மோகினியிடம்’ என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் பெரிய மந்திரவாதி.
“அரசியுடனா?’ என்று வியப்புடன் கூவினான் இளவழுகி.
‘ஆம்’
‘முடியாது, முடியாது’
‘ஏன் முடியாது? பகவதியின் அருளிருந்தால், முடியாதது என்ன இருக்கிறது?’
“நிரூபிக்க முடியுமா? உங்களால்?’ ‘அவள் நெற்றியில் ஒரு வைரம் நக்ஷத்திரம்போல் மின்னுகிறது என்ற பெரிய மந்திரவாதி இளவழுதியை நோக்கிப் புன்னகை செய்தார்.
பிறகு சிறிது விபூதியைக் கட்டிக் கொடுத்து, ‘இதை தினம் குளித்ததும் நெற்றியில் இட்டுக் கொள். அவள் திரும்பி வரும் வரையில் மன நிம்மதியுடன் கடமையைச் செய்துவா’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த விசித்திரங்களை யெல்லாம் எண்ணிப்பார்த்த வண்ணம் அன்று மரக்கல அறைக் கட்டிலில் மல்லாந்து படுத்து விண்மீன்களை நோக்கிய வண்ணம் சிந்தித்த இளவழுதியின் மனத்தில் ஒரு சந்தேகமும் ஏற்பட்டது மூன்று ஆண்டுகள் கழித்து வருவேனென்று சொன்னவள் ஓராண்டுக்கு முன்பு வந்ததாக இப்பொழுது அஹமதிடம் பேசினாளே, எப்பொழுது வந்தாள்? எங்கு தங்கியிருந்தாள்?
என்னை ஏன் பார்க்கவில்லை? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். தவிர, ‘என்னைக் கொல்லாததற்குக் காரணம் ஏதோ அப்பதாக அஹமதிடம் சொன்னாளே, அது என்ன காரணமாக இருக்கும்?’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்,
அதற்கு அதே சமயத்தில் விளக்கம் தந்து கொண்டிருந்தாள் அலை அரசி, அறைக்கு வெளியே. அவள் சொற்கள் அவன் பதில் காதில் மிகத் தெளிவாக விழுந்தன. அதைக் கேட்டதும் மெல்ல உள்ளூர நகைத்துக் கொண்ட இளவழுதி, ‘நாளைக்கு நான் யாரென்பதை உங்கள் இருவருக்கும் காட்டுகிறேன் என்று சபதமும் செய்து கொண்டான்.