Avani Sundari Ch15 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
அவனி சுந்தரி – சாண்டில்யன்
அத்தியாயம் – 15 ஆவூர்க் கோட்டை
Avani Sundari Ch15 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
கைச்சிறையில் சிக்குண்டு கிடந்த கன்னரத்துக் கட்டழகியை நோக்கிக் கணக்கை மறந்துவிட்டேன்” என்று பளிங்குச்சுனைப் படிகளில் சொன்ன சோழன் நலங்கிள்ளி, உண்மையில் அன்றும் கணக்கை மறந்தான். அன்று நாள் கணக்கை மட்டுமல்ல, நாழிகைக் கணக்குகளையும் மறந்துவிட்டதால், அவளை அணைத்த வண்ணம் இராப்பொழுது ஓடுவது தெரியாமல், நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டான். பஞ்சணையைவிட மென்மையான அவள் உடலின் அமைப்பு அவன் நினைப்பை அடியோடு இழக்கச்செய்து விட்டதால், புகாரை விட்டு சொர்க்கத்துக்கு ஓடிவிட்ட மன்னன், பொழுதுவிடியச் சிறிது நேரம் இருக்கு முன்பே அவளை விட்டுப் பிரிந்தான்.
பிரிந்தும் பயனென்ன? அடுத்த நாட்களும் உடல் பிரிந்தா லும் அவளைப் பற்றிய நினைவு பிரியாததால், நாட்கள் வெகு துரி தத்தில் ஓடின. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவூரை முற்றுகையிட்ட மாவளத்தானிடம் இருந்து வந்த ஓலைகளை மட் டும் நலங்கிள்ளி ஏதோ சம்பிரதாயத்துக்குப் படித்துவிட்டுப் புலவரிடம் அனுப்பிவிட்டான். அவன் நீதி ஸ்தலத்தில் உட்கார்ந்த போதும், நீதி விசாரணை, தண்டனை முதலியவற்றை புலவரே நடத்தி நிர்ணயித்தார். மன்னன் அவற்றுக்கு எல்லாம் தலையை மட்டும் ஆட்டினான். அரசர் குழப்பத்தை, மயக்கத்தை, புலவர் மட்டுமல்ல, அமைச்சர்களும் விசாரிக்கப்பட்ட குற்றவாளிகளும் கண்டனர். அவனி சுந்தரியும் கவனிக்கவே செய்தாள். அதுமட்டும் அல்ல, அவளையும் மன்னனையும் இணைத்து அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொண்டதும், அரைகுறையாக அவள் காதில் விழுந்தது. ஆனால் மன்னனுக்குத் தன்னால் ஒரு அவப்பெயர் உண்டாகக் கூடாது என்ற நினைப்பால், அவனிடம் இருந்து விலகியே நிற்கலா னாள். அதன் பலன், அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருந்தது.
அவளை அடுத்த நாளும் அதற்கு மறுநாளும் பளிங்குச்சுனைப் படியில் காணாத மன்னன், மூன்றாவது நாள் இரவில் அவள் அறைக்கே சென்று கதவைத் தட்டினான். அவளே வந்து கதவைத் திறந்து, வாயிற்படியிலேயே நின்றாள்.. “நிரம்ப நேரமாகிவிட்டது அரசரே!” என்று கடுமையான குரலில் சொல்லவும் செய்தாள்.
“ஆம். அதனால் என்ன?” என்று சீறினான் நலங்கிள்ளி.
“உங்களையும் என்னையும் பற்றி அரண்மனை ஊழியர்கள் பேசுகிறார்கள்.”
“ஆம். அதனாலென்ன?”
“மன்னன் மதியிழந்து விட்டான் என்று உங்களைத் தூற்றுகிறார்கள்.”
“ஆம். அதனால் என்ன?”
மூன்று முறை கிடைத்த ஒரே பதிலால் நிலைகுலைந்துவிட்ட அவனி சுந்தரி, கோபத்துடன் கேட்டாள், “நீங்கள் என்ன கிளிப் பிள்ளையா?” என்று.
“இல்லை. கிளிப்பிள்ளை மற்றவர் சொன்னதைத்தான் திருப்பிச் சொல்லும். ஆனால் நான், சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்” என்று நலங்கிள்ளி, அவளைத் தன் கையால் தள்ளிவிட்டு. உள்ளே நுழையப் பார்த்தான்.
அவனி சுந்தரி மிகுந்த சினத்துக்கும் கலக்கத்துக்கும் உட்பட் டாள். “உங்களுக்கு என்ன புத்தியே இல்லையா?” என்று வினவினாள், அவனை உள்ளே விடாமல் தடுக்க முயன்று.
“இல்லை” மன்னன் பதில் திட்டமாக வந்தது
“இல்லையா?”
“இல்லை. அது பறிபோய் இரண்டு இரவுகள் ஓடிவிட்டன.”
“இன்றிரவு…”
“அதைத் திரும்பப் பெற வந்தேன்”
“என்னிடம் இருக்கிறதா அது?”
“ஆம். உன்னிடமேதான்” என்று சொன்ன நலங்கிள்ளி, அவளைத் தள்ளிவிட்டுப் பஞ்சணையில் போய் உட்கார்ந்துவிட்டான். அவனி சுந்தரியும் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாமல், கதவைத் திறந்து வைத்துவிட்டுப் பஞ்சணையை நோக்கி நடந்தாள். அங்கு சென்று அரசன் எதிரில் நின்றாள்.
நலங்கிள்ளி அவளை ஏறெடுத்து நோக்கினான். “அவனி சுந்தரி! கதவு திறந்திருக்கிறது” என்று மெதுவாகக் கூறவும் செய்தான்.
“அதனால் பாதகமில்லை” உஷ்ணத்துடன் கூறினாள் கன்ன ரத்து இளவரசி.
“பாதகமில்லையா?”
“ஏன்?”
“ஏற்கனவே ஊரறிந்த விஷயம். அதற்கு மறைவு எதற்கு?” இந்த சொற்களை வெறுப்புடன் சொன்னாள் அவனி சுந்தரி. மேலும் சொன்னாள் “மன்னவா! நீங்கள் என் இதய மன்னராகி விட்டீர்கள். நான் வேறு யாருக்கும் இனிச் சொந்தமில்லை. ஆனால் ஒரு சபதம் இருக்கிறது; அது முடிவாகும் வரை நான் உங்களை மணக்க முடியாது. இரண்டு இரவுகளுக்கு முன்பு, பளிங்குப்படிகளில், மதியிழந்த நிலையில் நடந்ததை மறந்துவிடுங்கள்” என்று.
இதைக் கேட்ட நலங்கிள்ளி, சற்றே யோசனையில் ஆழ்ந்தான். “என்ன சபதம் அது?” என்று வினவினான் சில விநாடிகள் கழித்து.
“கிள்ளிவளவரைக் கொன்றவன் தலையைக் கிள்ளி எறியாத வரையில், நான் மணப்பதில்லை என்று சபதம் செய்திருக்கிறேன் என்றாள் அவனி சுந்தரி,
“என்று?”
“நேற்று.”
“யாரிடம்?”
“புலவரிடம்?”
அயர்ந்துவிட்டான் அரசன் நலங்கிள்ளி. “புலவரிடம் இதைப் பற்றிப் பேசினாயா?” என்று வினவினான்.
நான் பேசவில்லை. அவர் பேசினார்….
“என்னிடம் சொல்லவில்லையே அவர்.”
“சொல்ல அவசியமில்லை. விஷயம் முக்கியமாக என்னைப் பற்றியது.”
“அப்படியா?” நலங்கிள்ளியின் இந்தக் கடைசிக் கேள்வியில் ஏளனம் இருந்தது.
அவனி சுந்தரி அவனை மிக நெருங்கி, அவன் தலையைத் தனது மார்பில் அணைத்துக்கொண்டு, மவுனமாக நின்றாள் சில விநாடிகள். பிறகு விலகி நின்று, துக்கம் நிரம்பிய குரலில் பேசினாள், “மன்னவா! புலவர் மாளிகைக்கு நேற்றுப் பகல் சென்றிருந்தேன், அங்கு புலவர் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார். “அவனி சுந்தரி! உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் மக்களுக்குப் புரியாது. போருக்கும் புரியாது” என்றார், துன்பம் கலந்த குரலில். அதைப் பற்றித்தான் நான் பேச வந்ததாகக் குறிப்பிட்டேன். மாண்ட மன்னனின் ஈமச்சடங்குகள் முடியாதிருக்கையில், எனது நடத்தை தவறானது என்பதை ஒப்புக் கொண்டேன். புலவர் என் வெளிப்படைப் பேச்சை ரசித்தார். ஆனால் சொன்னார்: “அவனி சுந்தரி! இதனால் மன்னன் பெயர் சீரழிந்து கிடக்கிறது. தம்பி போர்முனையில் இருக்கையில், தமையன் கன்னரத்தரசியின் காலடியை முற்றுகையிடுகிறான்” என்று மக்கள் நகைக்கிறார்கள். “இது சோழ நாட்டுக்குப் பெரும் தீது” என்று நானும் ஒப்புக் கொண்டேன். “இதற்கு என்ன பரிகாரம்?” என்று வினவினார், புலவர். “கிள்ளிவளவன் உயிரை மாய்த்த கிராதகன் தலையை யார் கிள்ளி என் முன்பு கொண்டு வருகிறார்களோ அவரைத்தான் நான் மணப்பேன்” என்று, அவர் முன்பு சபதம் செய்தேன்.”
இங்கு பேச்சை முடித்த அவனி சுந்தரி, நலங்கிள்ளியை உற்று நோக்கினாள். நலங்கிள்ளி பெரிதாக நகைத்தான். “மாவளத்தான் ஆவூர் போயிருக்கிறான். அங்கு அவன் நிச்சயம் நெடுங்கிள்ளியைக் கொன்றுவிடுவான். ஆகவே நீ அவனைத்தான் மணம் புரியும்படியாக இருக்கும்” என்றும் கூறினான், நகைப்புக்கிடையே..
“ஆவூரைப் பிடிக்க உங்கள் தம்பியால் முடியாது. நெடுங் கிள்ளியும் உங்கள் தம்பி கையில் சிக்கமாட்டான்” என்றாள். அவனி சுந்தரி திட்டமாக.
“மாவளத்தான் வீரத்தை நீ அறிய மாட்டாய்” என்றான் நலங்கிள்ளி.
“நெடுங்கிள்ளியின் தந்திரத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றாள் அவனி சுந்தரி பதிலுக்கு.
நலங்கிள்ளி நீண்ட நேரம் யோசித்துவிட்டு, உனக்கு எப்படி அத்தனை திட்டமாகத் தெரியும்? மாவளத்தான் நெடுங்கிள்ளியைக் கொல்ல மாட்டான் என்று?” என்று வினவினான்.
அவனி சுந்தரி மெள்ளச் சொன்னாள், “சொன்னால் நீங்கள் நகைப்பீர்கள்” என்று.
“சொல், நகைக்கவில்லை” என்றான் நலங்கிள்ளி.
“அன்றிரவு பளிங்குச்சுனையில்…” என்று தொடங்கினாள் அவனி சுந்தரி.
“என்னிடம் சிறையிருந்தாய்.”
“பிறகு இங்கு வந்து படுத்தேன். உறங்கிவிட்டேன்.”
“உம்”
“உறங்கியதும், கனவு ஒன்று கண்டேன்.”
“என்ன கனவு?”
“நீங்கள் நெடுங்கிள்ளியை வடக்கில் கொல்வதாக.”
“வடக்கிலா? அங்கு எதற்காக நான் போகப் போகிறேன்?”
“எதற்காகவோ தெரியாது. கனவு அப்படித்தான் இருந்தது; அது கண்டிப்பாய் நடக்கும்” என்று திட்டமாகக் கூறிய அவனி சுந்தரியின் கண்களில், ஒரு புத்தொளி பிறந்தது.
“கனவுகளெல்லாம் கண்டிப்பாய் நடக்குமா?”
“என் கனவுகள் இன்றுவரை அப்படித்தான்.”
இதை நலங்கிள்ளியால் நம்ப முடியவில்லை. “ஏதோ பிதற்றுகிறாள் இந்தப் பெண்” என்று நினைத்துக் கொண்டு, அவள் அறையைவிட்டு வெளியேறினான். ஆனால் அடுத்த நாள் கிடைத்த செய்தி, அவனுக்குப் பெருவியப்பைத் தந்தது. அவனி சுந்தரியின் கனவு ஒருவேளை நடந்துவிடுமோ என்று கூட அஞ்சினான்.
அன்று மாவளத்தானிடம் இருந்து தூதன் ஒருவன் வந்திருந்தான். மன்னன் அந்தரங்க அறையில் புலவருக்கு எதிரிலேயே தனது செய்தியை அறிவித்தான். “ஆவூர்க் கோட்டை முற்றுகை சீக்கிரத்தில் முடியாது என்று இளவரசர் கூறச் சொன்னார். கோட்டைக் கதவுகளை நெடுங்கிள்ளி திறக்கவும் இல்லை. போருக்கு வரவும் இல்லை. கையைக் கட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந் திருக்கிறான் எனவும் சொல்லச் சொன்னார்” என்று கூறினான் தூதன்.
“யானைகளை விட்டுக் கோட்டைக் கதவுகளை உடைத்து உட்புகுவதுதானே?” என்று கேட்டான் நலங்கிள்ளி.
“முயன்று பார்த்தோம், முடியவில்லை. கதவுகள் மிகப் பல மாக இருக்கின்றன.”
“நெடுங்கிள்ளி எத்தனை நாள் இப்படிக் காலந்தள்ளப் பார்க்கிறான்?” என்று வினவினான் நலங்கிள்ளி.
“புரியவில்லை இளவரசருக்கு.”
“நலங்கிள்ளி மட்டுமல்ல, புலவரும் யோசனையில் ஆழ்ந்தார். கடைசியில் புலவர் சொன்னார்: “காகா! நீ என்று இளைப்பாறு. நாளைக் காலையில் நானும் உன்னுடன் வருகிறேன்” என்று கூறித் தூதனை அனுப்பினார்.
அவர் கூற்று நலங்கிள்ளிக்குப் பெரும் வியப்பை அளித்தது. “நீங்கள் எதற்குப் போக வேண்டும்?” என்று வினவினான்.
“நீ போக முடியாது. பதினாறு நாட்கள் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கின்றன” என்றார் புலவர்.
“நீங்கள் போய் என்ன செய்ய முடியும்?”
“நிலவரத்தை அறிய முடியும்?”
“அறிந்து என்ன செய்வீர்கள்?”
‘’நெடுங்கிள்ளியை போருக்கு வரச் சொல்லுவேன்; அல்லது சரணடையச் சொல்லுவேன்.”
“அவன் மறுத்தால்?”
“மறுக்க முடியாது.”
“ஏன்?”
“இஷ்டப்பட்டால் அவனைக் கொன்றுவிட என்னால் முடியும்?
“கொல்ல என்ன வைத்திருக்கிறீர்கள்? “பாட்டு.”
“பாட்டு!”
“பாட்டு கொல்லுமா?”
“கொல்லவும் முடியும்.”
நலங்கிள்ளி பதில் ஏதும் சொல்லவில்லை. கடைசியாக “சரி உங்கள் இஷ்டம்” என்றான்.
மறுநாள், தூதனுடன் புறப்பட்ட கோவூர் கிழார், இரண்டு நாள் நிதான பயணத்துக்குப் பிறகு, ஆவூர்க் கோட்டை முன்பு தோன்றினார். அவரை மாவளத்தான் எதிர்கொண்டான். அப் பொழுது இரவு மூன்று நான்கு நாழிகைகள் இருக்கும். கோட் டைக்குள் இருந்து திடீரென பல அழுகுரல்கள் பலமாகக் கேட்டன. புலவர் திகைத்துப் போனார், “இது என்ன மாவளத்தான்?” என்று வினவினார்.
“தெரியவில்லை. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும் தினம் இப்படிப் பகலிலும் இரவிலும் அழும் ஒலி கேட்கிறது.”
“சரி, ஒரு தூதனைப் பந்தத்துடனும் கொம்புடனும் என்னுடன் அனுப்பு” என்றார் புலவர்.
“எதற்கு? என்று கேட்டான் மாவளத்தான்.
“கோட்டைக்குள் புக.” அமைதியுடன் வெளிவந்தது புலவரின் பதில்.