Avani Sundari Ch16 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
அவனி சுந்தரி – சாண்டில்யன்
அத்தியாயம் – 16 ஓலைக் கவிதை
Avani Sundari Ch16 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
ஆவூர்க் கோட்டைக்குள் இருந்து இரவில் எழுந்த பலமான அழுகுரல்களின் காரணத்தை அறிய மாட்டாததால், அதை அறிந்துவரத் தீர்மானித்த கோவூர் கிழாரின் எண்ணத்துக்கு உடனடியாக இணங்கினான் இல்லை, இளைய சோழனான மாவளத் தான். உள்ளே சென்றால், புலவரின் கதி யாதாகுமோ என்ற அச்சத்தால் “புலவர் பெருமானே! எதிரி கோட்டைக்குள் நீங்கள் செல்வது தற்சமயம் அவ்வளவு உசிதமல்ல” என்று தடுத்தாள்.
புலவர் மாவளத்தானை வியப்பு நிறைந்த கண்களால் நோக்கிய “ஏன் உசிதமல்ல?” என்று வினவினார்.
மாவளத்தான் சிறிதே சந்தித்தான். “நெடுங்கிள்ளியின் சுபாவம் உங்களுக்குத் தெரியாததல்ல” என்று பதில் கூறினான்.
“நன்றாகத் தெரியும்” என்றார் புலவர்.
“கொடியவன்” என்று குறிப்பிட்டான், மாவளத்தான்.
“என்ன கொடியவனாய் இருந்தாலும் புலவர்களை ஒன்றும் செய்யமாட்டான்” என்று திட்டமாகச் சொன்னார், கோவூர் கிழார்.
“அங்குதான் தவறு செய்கிறீர்கள்” என்று சொன்ன மாவளத்தான், “இரண்டு நாளைக்கு முன்பு இங்கு ஒரு புதுமை நிகழ்ந்தது’ என்றும் சொற்களைக் கூட்டினான்.
சிந்தனை ததும்பிய விழிகளை மாவளத்தான் மீது திருப்பிய கோவூர் கிழார், “என்ன புதுமை அது?” என்று வினவினார்.
மாவளத்தான் உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “புலவர் பிரான் தவறாக நினைக்கக் கூடாது.” என்று துவங்கினான்.
“சொல் விஷயத்தை’’
“இரண்டு நாளைக்கு முன்பு இங்கு இளந்தத்தனார் வந்திருந்தார்.”
“யார்? என் முதல் சீடனா?”
“எங்கே அவன் இப்பொழுது?”
“கோட்டைக்குள் இருக்க வேண்டும்’’
“இருக்க வேண்டுமா?”
“ஆம். உங்களைப் போல் தான் அவரும் கோட்டைக்குள் செல்ல விரும்பினார். நான் தடுத்தும் கேட்கவில்லை. ஆகையால் அனுப்பி வைத்தேன். அப்புறம் வெளியில் அவர் வரவில்லை.”
இதைக் கேட்ட புலவர் திகைத்தார். “சரி, சரி இரண்டு நறுக்கு ஓலைகள் கொண்டு வா” என்றார்.
நறுக்கு ஓலைகள் கொண்டு வரப்பட்டதும், அவற்றில் எழுத்தாணி கொண்டு விடுவிடுவென்று சில வரிகளை எழுதினார். பிறகு அவற்றில் ஒரு ஓலையைக் கொடுத்து, “மாவளத்தான்! நாளை மாலைக்குள் நான் கோட்டையில் இருந்து திரும்பி வராவிட்டால், நீ இதை நமது அவைக்களப் புலவர்களிடமும், என் சீடர்களிடமும், முக்கியமாக நலங்கிள்ளியிடமும் கொடு” என்று கூறிவிட்டு, “சரி நான் புறப்பட ஏற்பாடுகளைச் செய்” என்று கூறினார்.
மாவளத்தான் ஓலைகளில் இருந்த வரிகளைப் படித்தான். பிரமித்தான். “புலவர் பெருமானே! இந்த ஓலையில் கண்ட பாட்டு, நமது நாட்டில் பரப்பப்பட்டால், வெளிநாடுகளுக்கும் போகுமே” என்றான் வருத்தத்துடன்.
‘’ஆம், போகும்.”
“போனால், சோழ வம்சத்துக்கே அழியாப் பழியை உண் பாக்குமே?” என்றான்.
“உண்டாக்காது! சோழர் வம்சத்தில் இப்படியும் ஒருவன் இருந்தான் என்று நெடுங்கிள்ளியை மக்கள் தூற்றுவார்கள். வேறு எந்த விளைவும் ஏற்படாது” என்று கூறிவிட்டு, மாவளத் தான் பாசறையில் இருந்து புலவர் கிளம்பினார். புலவருடன் கொம்பு ஊதுபவன் ஒருவனையும், பந்தம் பிடிப்பவன் ஒருவனை யும், மாவளத்தான் இஷ்டவிரோதமாக அனுப்பி வைத்தான்.
புலவர் அவ்விருவரும் பின்தொடரக் கோட்டையின் பெரு வாயிற் கதவுக்கு அருகில் வந்து, கொம்பைப் பலமாக ஊதப் பணித்தார். கொம்பு ஊதப்பட்டதும், கோட்டைக் கதவுகளுக்கு மேலிருந்து மதிள் தளத்தின்மீது தோன்றிய ஒரு உபதளபதி, “வந்திருப்பது யார்?” என்று இரைந்து வினவினான்.
“கதவைத் திற” கோவூர் கிழாரின் கட்டளை அவரிடமிருந்தே பலமாக ஒலித்தது.
உபதளபதி சற்று எட்டிப் பார்த்தான். பந்தத்தின் வெளிச் சத்தில் புலவர் முகத்தைக் கண்டதும், சரேலென மறைந்தான். ஈமார் ஒரு நாழிகைக்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டு, புலவர் மட்டும் அனுமதிக்கப்பட்டார், உள்ளே.
கோட்டைக்குள் நுழைந்த கோவூர் கிழார், அங்கிருந்த நிலை கண்டு, பல விநாடிகள் அயர்ந்து நின்றுவிட்டார். இருட்டிவிட்ட அத்தனை நேரத்துக்குப் பிறகும், அந்த ஊரின் மாதர்கள், கைகளில் குழந்தைகளை எடுத்துக் கொண்டு தெருவில் வந்து. அவற்றின் அழுகைகளை நிறுத்தக் கைகளால் சீராட்டிக் கொண்டு இருந்தார்கள். நகர வணிகரும், விவசாயிகளும், மற்றும் பல ஊழியர்களும், அவரவர் வீட்டு வாயிற்படிகளில் சோகக்களையுடன் உட்கார்ந்திருந்தார்கள்.
புலவர் கால் ஓடமாட்டாமல் நிலைத்து நின்று, அந்தக் கோரக் காட்சியைப் பல விநாடிகள் பார்த்தார். மக்கள் சோறு இல்லாமலும், குழந்தைகள் பாலில்லாமலும் தவிக்கும் காட்சி யைக் கண்டதும், சோர்ந்த மனதுடன் அரண்மனை நோக்கி நடந்தார்.
ஆவூர் சிறு ஊராகையால், நாலைந்து தெருக்களைத் தாண்டியதும், அரண்மனை அவர் முன்பாக எழுந்தது. அரண்மனை வாயிலில் காவல் பலமாக இருந்தது. வாளை உருவி நின்ற காவலர் அங்குமிங்கும் புரவிகளில் உலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் எவ்விதச் சோர்வும் இல்லாததைக் கவனித்த கோவூர்கிழார், கோட்டையின் அழுகுரலுக்குக் காரணத்தை நொடிப் பொழுதில் ஊகித்துக் கொண்டார். இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல், அரண்மனை வாயிலில் நின்று “மன்னனை நான் பார்க்க விரும்புவதாகச் சொல்” என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த உபதளபதியை நோக்கிக் கூறினார்.
“அரசருக்கு முன்பாக அறிவித்துவிட்டோம்; வாருங்கள்’’ என்று உப தளபதி அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.
நீதி மண்டபத்தில் நெடுங்கிள்ளி புலவரைச் சந்தித்தான். அவர் வந்ததும், அரியணையில் இருந்து எழுந்திருந்து, “வரவேண்டும்” என்று முகமன் கூறி, அவர் உட்கார ஒரு ஆசனத்தையும் காட்டினான்.
புலவர், நெடுங்கிள்ளியைக் கூர்ந்து நோக்கினார். சில விநாடிகள். பிறகு ஆசனத்தில் சென்றமர்ந்து அரசனையும் அமரப்பணித்தார். நெடுங்கிள்ளியின் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகையிருந்தது. “புலவர் பெருமானின் வருகைக்கு ஆவூர் என்ன பாக்கியம் செய்ததோ?” என்று கேட்டான்
புலவரின் கண்கள் அச்சமின்றி அவனை நோக்கின. “ஆவூர் பாக்கியத்தைப் பார்த்தேன், எனது அபாக்கியத்தையும் அறிந்தேன்” என்றார் புலவர், வருத்தம் தோய்ந்த குரலில்.
“ஏன் ஆவூருக்கு என்ன குறைவு?” என்று வினவினான் நெடுங்கிள்ளி
“நீ மன்னனாயிருப்பதைவிட, அதற்கு வேறு என்ன குறைவு வேண்டும்?” என்று வினவினார் புலவர், பதிலுக்கு.
இதைக் கேட்ட நெடுங்கிள்ளி இரைந்து நகைத்தான். “புலவரே! உமக்குத் துணிவு அதிகம்” என்றும் கூறினான்.
“அதில் உனக்கு இத்தனை நாள் சந்தேகம் இருக்கிறதா?”
“இல்லை”
“ஏன்?”
“புலவர்களுக்கு அசட்டுத் துணிவு உண்டென்பது எனக்குத் தெரியும்.”
“அப்படியா?”
“ஆம். இரண்டு நாளைக்கு முன்பு உமது முதல் சீடர்… என்று ஏதோ சொல்ல முற்பட்ட நெடுங்கிள்ளி, வார்த்தைகளை முடிக்காமல், இளநகை பூத்தான்.
புலவர் முகத்தில் வருத்தம் மறைந்து, இகழ்ச்சிக்குறியும் மறைந்து, அச்சம் லேசாக உதயமாயிற்று. “இளந்தத்தனைப் பற்றிக் கூறுகிறாயா?” என்று வினவினார்.
“ஆம்” என்றான் நெடுங்கிள்ளி மெள்ள நகைக்க.
“அவனை என்ன செய்தாய்?”
“இன்னும் ஏதும் செய்யவில்லை. சிறையில் அடைத்து வைத்து இருக்கிறேன். நாளை உங்கள் கண்களுக்கு விருந்து கிடைக்கும்.”
“என்ன விருந்து?”
“தங்கள் சீடன் வெட்டுப்பாறைக்குப் போவதை பார்க்க நீங்கள் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா?”
புலவர் கண்களில் அதுவரை இருந்த அச்சம் மறைந்து சினம் பெரிதாக விரிந்தது. “மன்னனே! நீ நெருப்புடன் விளையாடுகிறாய். உடனடியாக இளந்தத்தனை விடுவித்துவிடு” என்று கூறினார், சினம் குரலிலும் ஒலிக்க.
“இளந்தத்தனையா! அந்த இரண்டுங்கெட்டான் புலவன், நான் கொடுத்த பொற்கிளியை அவன் ஊரில் விட்டெறிந்தான். என் கண் முன்பாக. அதைப் பொறுத்தேன், இங்கு வந்திருக்கிறான் வேவுபார்க்க. இதை எப்படிப் பொறுக்க முடியும்?” என்று சீறினான் மன்னவனும்.
கோவூர் கிழாரின் சொற்களில் சீற்றமிருந்தும், நிதானமும் இருந்தது.
“புலவர்கள் ஒருநாளும் வேவுபார்க்க மாட்டார்கள்” என்றார்.
“வேறு எதற்கு வந்தார் இங்கே?” போலி மரியாதை இருந் நது நெடுங்கிள்ளியின் கேள்வியில்,
“எதற்கு வந்ததாகச் சொன்னான்?” என்று வினவினார் புலவர்.
“நான் கொடுத்த பொற்கிழியை விட்டெறிந்ததற்கு மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகச் சொன்னார். தவிர, அதற்குப் பிராயச் சித்தமாக மேலும் பரிசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எப்படிக் கதை?” என்று கேட்டான் நெடுங்கிள்ளி.
“அது கதையல்ல மன்னவா; உண்மை. புலவர்கள் பொய் பேசமாட்டார்கள். இளந்தத்தன் தன் செய்கைக்கு வருத்தம் தெரி விக்கவே வந்திருக்கிறான். அவனை விடுதலை செய்துவிடு” என்றார் புலவர் திட்டமாக.
“அது மட்டுமல்ல மன்னவா! இளந்தத்தனை விடுதலை செய்து அனுப்பியதும், போருக்கும் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே செல். கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது வீரர்களுக்கு அழகல்ல” என்ற புலவர், “தவிர ஒரு விஷயம் புரிய வில்லை எனக்கு, கோட்டைக்குள் மக்களும் குழந்தைகளும் அழக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
நெடுங்கிள்ளியின் கண்களில் ஒரு விபரீதச்சாயை படர்ந்தது. “சோறு இல்லாவிட்டால் மக்கள் அழுகிறார்கள். பால் இல்லா விட்டால் குழந்தைகள் அழுகின்றன” என்று விளக்கினான் நெடுங்கிள்ளி.
புலவர் மன்னவனை விநோதமாகப் பார்த்தார். “அவர்கள் குதிர்களில் உள்ள நெல் என்னவாயிற்று? புழக்கடைப் பசுக்கள் என்ன ஆயின?” என்று வினவினார் புலவர்.
“நெல் இங்கு அரண்மனைக் களஞ்சியத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பசுக்களும் இங்கு கொட்டடியில் கட்டப்பட்டு இருக்கின்றன.”
“அப்படியா? மக்கள், நெல், பசுக்கள்.”
“படைப் பிரிவுகளுக்குத் தேவையாயிருக்கிறது. படைதானே கோட்டையைக் காக்க வேண்டும்.”
“மக்களின் சொத்தைப் பறித்துப் படைகளுக்குக் கொடுத்து விட்டாயா?”
“இதுதான் உன் அரசின் லட்சணமா? இது தர்மமா?”
“தர்மம் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. நான் தானியங்களைச் சேகரிக்கு முன்பு, மாவளத்தான் முற்றுகையிட்டு விட்டான். அதனால் நேர்ந்த தொல்லை இது.”
நெடுங்கிள்ளியின் விபரீதமான தர்ம நியாயத்தை நினைத்த கோவூர் கிழார், அவர் கோழைத்தனத்தையும், அதில் கலந்து விட்ட நெறிகெட்ட செய்கையையும் நினைத்து மனம் வெதும்பினார். அதனால் ஏற்பட்ட சினத்தை வெளிக்குக் காட்டாமல், எழுந்து நின்றார். அந்த நீதி மண்டபத்தில் அங்கிருந்த மந்திரிப் பிரதானிகளை ஒருமுறை கூர்ந்து போக்கினார். “யாராவது ஒருவர் சென்று இளந்தத்தளை அழைத்து வாருங்கள்” என்றார். அவர், கட்டளை மிகக் கம்பீரமாக இருந்தது.
அதைக் கவனித்த நெடுங்கிள்ளியும் சிறிது பயந்து, “சரி அந்தப் புலவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு வீரர்களுக்கிடையில் வந்த இளந்தத்தனிடம் தமது மடியில் இருந்த ஓலையைக் கொடுத்து இளந்தத்தா! இதை இரைந்துபடி” என்று கூறினார்.
இளந்தத்தன் அலட்சியமாக, இரைந்து ஓலைக் கவிதையைப் படித்தான். அதைக் கேட்ட சபை அயர்ந்து நின்றது.
இளந்தத்தன் பாடி முடித்ததும், “வா நாம் செல்வோம்” என்று இளந்தத்தனை நோக்கிக் கூறிய கோவூர்கிழார், மன்னனை நோக்கித் தமது கண்களைத் திருப்பி, “நாளைக் காலையில் கோட்டைக் கதவுகள் திறக்க வேண்டும். இல்லையேல் …” என்று எச்சரித்தார்.
அவர் துணிவு மட்டுமல்ல, எச்சரிக்கையும் சபையில் இருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. புலவர் அவர்களை மீண்டும் திரும்பிப் பாராமல் இளந்தத்தன் பின் தொடர, கம்பீர நடை நடந்தார் வாயிலை நோக்கி.
சபையில் இருந்தோர் அச்சமுற்றனர், இளந்தத்தன் படித்த பாட்டை எண்ணி. அடுத்துப் புலவர் என்ன செய்வார் என்பதும் புரிந்ததால், யாரும் அவர்களைத் தடை செய்யவில்லை. மேலும் புலவருக்குச் சினமூட்டுவது தனக்கு அனர்த்தத்தை விளைவிக்கும் என்ற எண்ணத்தால், நெடுங்கிள்ளியும் ஆசனத்தில் இருந்து எழுந்தானில்லை,