Home Chandramathi Chandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in

Chandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in

90
0
Chandramathi Ch6 Chandramathi Sandilyan, Chandramathi Online Free, Chandramathi PDF, Download Chandramathi novel, Chandramathi book, Chandramathi free
Chandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in

Chandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in

சந்திரமதி – சாண்டில்யன்

அத்தியாயம் 6: கள்வன்.

Chandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in

அந்தப் பட்டுக் கைகள் கழுத்தைச் சுற்றியதால், அவள் தேகம் பூராவும் தனது கைகளில் துவண்டு கிடந்ததால், உணர்ச்சிகளை அறவே பறக்கவிட்ட சத்ருஞ்சயன் தனது வலிய உதடுகளை அவள் கழுத்தில் ஆழப் புதைத்தான். அவள் தொடைகளுக்குக் கீழிருந்த கையால் அவளை மேலும் தூக்கி அவள் மார்பைத் தனது மார்புடன் இழைத்துக் கொண்டான். பிறகு தனது தலையை அவள் கழுத்திலிருந்து எடுத்து முகத்தைக் கவனித்தான். அவள் கண்கள் மூடிக் கிடந்தன. முகத்திலும் சிறிது அதிர்ச்சி தெரிந்தது. அவள் மூர்ச்சையை எப்படியாவது தெளிவிக்க எண்ணி அவளைப் புல் தரையில் கிடத்தினான். மெல்ல அவள் கன்னங்களை வருடினான். சிறிதே கலைந்திருந்த கரிய குழல்களைக் கோதி விட்டான். பிறகு தயங்கினான். அடுத்து ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவள் அணிந்திருந்த சட்டையின் பட்டுக் கயிறுகளை அவிழ்த்தான்.

லேசாக அவிழ்க்கப்பட்ட பட்டுக் கயிறுகள் நீங்கியதால், கச்சையின் முகப்பும் சற்றே இடைவெளி கொடுத்ததால் அவள் அழகிய மார்பின் மேல் விளிம்பும் அவன் கண்களுக்குத் தெரியவே அந்த வெண்மையைப் பிரமையுடன் பார்த்தான்.

‘இத்தகைய அழகுடையவளை, இந்தக் குழந்தை முகத்தாளை ராஜபுதனம் ஏன் ராட்சஸி என்று அழைக்கிறது?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

மார்பின் அந்த எழுச்சியின் முகப்பாலேயே அவளிடம் சித்தத்தைப் பறிகொடுத்த சத்ருஞ்சயன் அவள் வரிந்து கட்டியிருந்ததால் கால்களுக்கிடையே மறைந்த சீலை புலனாக்கிய இந்திர ஜாலத்தைப் பற்றி ஊகித்தான்.

“ஒரு மனிதனைப் பைத்தியமாக அடிக்க ஆடையின் இந்த நிலையே போதும்” என்று முணுமுணுத்தவன் அவள் வழவழப்பான தொடையின் சிறு பகுதியையும், அழகிய ஆடு சதையையும் பார்த்து “ராணாவுக்குப் புத்தியிருந்தால் சலவைக்கல்தான் வழவழப்பு என்று நினைத்து அதைக் கொண்டு மாளிகை கட்டுவாரா? ” என்று எண்ணிக் கொண்டே அவள் கால்கள் மீது கையை வைத்தான்.

கால்கள் சில்லென்றிருந்தன. “ஐயோ! என்ன இப்படி இருக்கின்றதே? ” என்று பதறி அவள் மார்பில் துடிப்பு இருக்கிறதா என்று பார்த்தான். அதன் துடிப்பு ஒரே சீராக இருந்ததாலும் கழுத்திலும் உஷ்ணமிருந்ததாலும் அதிக ஆபத்து ஏதுமில்லையென்று புரிந்து கொண்டு அவள் பக்கத்திலிருந்து எழுந்திருக்க முயன்றான்.

அந்தச் சமயத்தில் அவள் ‘உம்’ என்று பெரிதாக முனகினாள். சற்றுத் திரும்பி அவன்மீது தனது கை யொன்றையும் போட்டாள். பிறகு மெள்ளக் கண் விழித்து, “நான் எங்கே இருக்கிறேன்? ” என்று கேட் டாள்.

“இங்குதான் இருக்கிறாய் சந்திரமதி!” என்று கூறிய சத்ருஞ்சயன் நன்றாகத் தரையில் உட்கார்ந்து அவளை எடுத்து மடியில் கிடத்திக் கொண்டான். அவள் அதை எதிர்க்கவில்லை. அவன் மடியில் துவண்ட புஷ்பக் கொடிபோல் கிடந்தாள். அவள் குவளை விழிகள் அவளை நன்றாகவே பார்த்தன.

‘இது சரிதானா? முறையா? ” என்று கேட்பது போல் சத்ருஞ்சயனுக்குத் தோன்றவே, “சந்திரமதி! பேசாமல் சிறிது நேரம் படுத்திரு . மூர்ச்சை தெளிந்து விடும். ” என்றான்.

அவள் மென்மைப் புன்முறுவல் பூத்தாள். “நான் இப்படிப் படுத்திருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? ” என்று மெதுவாகக் கேட்டாள்.

“ஏதோ ஆபத்து என்று நினைப்பார்கள். வேறெதுவும் நினைக்க மாட்டார்கள், ” என்றான் சத்ருஞ்சயன்.

“இப்படி நான் வேறொருவர் மடியில் கிடந்தால் நீங்களும் அப்படித்தான் நினைப்பீர்களா? ” என்று சந்திரமதி கேட்டாள், நகைத்தாள் ஒருமுறை .

அதே ஜலதரங்க நகைப்பு! முந்தைய இரவில் கேட்ட அதே இனிய ஒலி! அதைக் கேட்டு சத்ருஞ்சயனுக்குக் கோபமே வந்தது. “என்ன சொன்னாய் சந்திரமதி? இன்னொருவன் மடியில் கிடப்பாயா? கிடந்தால் அவனையும் கொன்று உன்னையும் கொன்று போடுகிறேன்” என்று சீறிய சத்ருஞ்சயன் கோபத்தின் முதிர்ச்சியால் அவள் உடலைத் தூக்கி இறுக்கினான். சரேலெனக் குனிந்து தனது இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தினான். சினம் மிஞ்சியதால் பற்களால் கீழ் இதழைப் பற்றவும் செய்தான்.

சந்திரமதி மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். அவள் பற்களும் அவன் இதழ்களை மெல்லக் கவ்வின. அவன் தனது உடலை இறுக்கியது எத்தனை இன்ப உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்பதை உணர்ந்ததால் பெருமூச்சொன்றையும் வெளியிட்டாள்.

அவன் இடது கை மட்டும் அவளை ஏந்தி நிற்க அவன் வலது கை அவள் அழகிய உடலின் ஆராய்ச்சியில் இறங்கியது. அவள் வாய் திறந்து பேசினாள். தன் கன்னத்தை அவன் கன்னத்துடன் இழைத்து, அவன் காதுக்கருகில், “சத்ருஞ்சயா! உன் சாயம் வெளுத்துவிட்டது. உன் வேஷமும் கலைந்து விட்டது. உண்மையில் நீ கள்வன்” என்று காதில் சொன்னாள்.

அவளை ஆராய்ந்த கை திடீரென நின்றது. அவன் அவள் காதில் கேட்டான், “என்ன! நான் கள்வனா!” என்று .

“ஆம்” அவள் மெதுவாகப் பேசினாள்.

“யார் சொன்னது? ” என்று அவன் சீற முயன்றான்; முடியவில்லை. சொற்கள் இன்பமாகவே உதிர்ந்தன.

“தந்தை. ” அவள் கைகள் அவன் கழுத்தை இறுக்கின.

“உன் தந்தையா? ” அவன் கள்ள விழி விழித்தான்.

“ஆம், நீங்கள் என்னைத் தூக்கிச் செல்ல வந்தது அவருக்குத் தெரியும், ” என்ற சந்திரமதி அவன் கண்களுடன் தனது கண்களைக் கலந்தாள்.

விழிகள் கலந்தன. உணர்ச்சிகள் புரண்டன. உடல்கள் இழைந்தன. அந்த இழைப்பைப் பார்க்க நாலைந்து ஆட்டுக் குட்டிகள் ஓடி வந்தன. அவன் கையில் வளைந்தபடி சந்திரமதி சொன்னாள், “இந்த ஆடுகளில் ஓரிரண்டைச் சில சமயங்களில் ஓநாய் தூக்கிச் செல்வதுண்டு. ஒரு ராஜபுத்ரன் ஓநாயாகக் கூடாது. திருட்டுத்தனம் சிலவற்றில் இருக்கலாம். எல்லாவற்றிலும் இருக்கக் கூடாது” என்று.

மெள்ள மெள்ள உணர்ச்சிகளைத் திரும்பப் பெற்ற சத்ருஞ்சயன் அவளைக் கீழே விட்டு அவளெதிரில் தலை வணங்கி நின்றான். “சந்திரமதி!” என்று மூர்க்கத்தனமாக அழைத்தான்.

அந்த மூர்க்கத்தனம் காதலின் மேல்பூச்சு என்பதை சந்திரமதி புரிந்து கொண்டதால், “கட்டளையிடுங்கள் பிரபு!” என்றாள்.

அதிர்ச்சியடைந்த சத்ருஞ்சயன, ”என்ன, பிரபுவா! இந்த அடிமையா!” என்று வினவினான், அதிர்ச்சி குரலிலும் ஊடுருவ .

“ஆம்” என்றாள் அவள்.

“எப்பொழுது முதற் கொண்டு? ” என்று அவன் வினவினான்.

“நேற்று இரவு முதல். “

“என்ன நேற்று இரவு முதல்? ”

அவள் சொன்ன பதில் அவனைப் பிரமிக்க வைத்ததா? குழம்பச் செய்ததா? அவனுக்கே புரிய வில்லை.

Previous articleChandramathi Ch5 | Chandramathi Sandilyan | TamilNovel.in
Next articleChandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here