Cheran Selvi Ch20 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 20. சம்பிரதாயமும், சமுத்திரபந்தனும்
Cheran Selvi Ch20 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
விதானத்தைப் பார்க்கப் பார்க்க கவி சமுத்திரபந்தனின் இதயம் வெடித்துவிடும் நிலைக்கு வந்ததால் அவன் புரவியின் மீதே பல வினாடிகள் உட்கார்ந்துவிட்டான். அன்று விதானத்தின் மீது பறந்து கொண்டிருந்தது சேரர்களின்
பரம்பரைச் சின்னமான வில்லையும், அம்பையும் தாங்கிய கொடியல்ல. யதுவம்சத்தின் சின்னமான கருடத் துவஜம் மிகக் கம்பீரமாக அரண்மனை மகுடத்தின் மீது காற்றில் படபடத்தது. விதானத்தின் மீதும் அரண்மனைக் கோட்டை மீதம்
எரிந்துகொண்டிருந்த பலவித விளக்குகளும் பந்தங்களும் அந்தக் கொடியின் மீது பட்டு அதன் மஞ்சள் நிறத்தை சொர்ணமயமாக்கியதன்றி, அதன் நடுவே சிறகு விரித்து வெள்ளைக் கழுத்துடனும் பழுப்பு உடலுடனும் பாய வருவது
போலிருந்த கருடனுடைய உடலுக்கும் தனி மெருகு பூசியதாலும், கொடியுடன் சேர்ந்து தாங்களும் ஆடியதாலும் ஏதோ புதுமைகள் அரண்மனைக்குள் உருவாவதை எடுத்துக் காட்டின கவியின் பொறாமைக் கண்களுக்கு.
அந்தப் பொறாமையின் விளைவாக மிகுந்த உக்கிரத்துடன் புரவியிலிருந்து குதித்துப் புயல் வேகத்தில் கோட்டை வாயிலுக்குள் புகுந்து அரண்மனையை நோக்கி விரைந்த கவி, அக்கம் பக்கத்திலுமிருந்த வீரர்கள் தலை வணங்கிப்
பணிந்ததைக்கூட கவனியாமல் சென்றான். அரண்மனையை அடைந்த பின்பும் கவி வேகத்தைத் தளர்த்தினானில்லை. அரண்மனையின் பல கட்டுகளையும் கடந்து கடைசி கட்டுக்கு வந்து அங்கிருந்த ஒரு சிறு அறைக்குள் நுழைந்தான்.
நுழைந்தவன் அந்த அறை இருந்த நிலை கண்டு சினந்து நின்றான் சில வினாடிகள்.
அறையெங்கும் நீண்ட ஓலை நறுக்குகள் ஒரே அளவில் சீவப்பட்டு கட்டுக்கட்டாய் கிடந்தன. அறையின் நடுவில் பின்னால் ஒரு யவனப் பெண்விளக்கு சுடர் விட்டு வெளிச்சம் காட்ட முகத்தில் புன்முறுவலுடன் எதையோ ஓலையில்
எழுதிக் கொண்டிருந்தான் கவிபூஷணன். கவியைச் சிறப்பாக எழுதுவதாலேயே கவிபூஷணன் என்ற சிறப்புப் பெயர் பெற்று, அதனால் சொந்தப் பெயர் மறந்து விட்டாலும் புகழ் மறையாது வளர்ந்ததால் சேர மன்னன் சந்நிதானத்துக்கே
பூஷணமாயிருந்த அந்த வாலிபக் கவியின் பக்கத்தில் மன்னன் ரவிவர்மனும் உட்கார்ந்திருந்தான் மிகுந்த பயபக்தியுடன். மன்னன் உடனிருந்தாலும் அதைக் கவனியாமலே கவிபூஷணன். நறுக்கு ஓலைகளில் கவிதைகளை வேகமாகத்
தீட்டிக் கொண்டிருந்தான் எழுத்தாணியால். ஒரு ஓலையை எழுதி முடித்ததும் அதை மன்னனிடம் இடது கையால் கொடுத்து விட்டு மற்றொரு ஓலையில் எழுத முற்பட்டான். ஒவ்வொரு ஓலையையும் பார்த்தபோது மன்னன் முகத்தில்
ஒளிவிட்ட மகிழ்ச்சி ரேகை கவி சமுத்திரபந்த னுக்கு மிதமிஞ்சிய எரிச்சலைக் கொடுத்தது.
கவிபூஷணன் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தாலும், அதை மன்னன் ரசித்துக் கொண்டிருந்தபடியாலும் இருவருமே சமுத்திரபந்தன் வந்ததைக் கவனிக்க வில்லை. தன் வரவைத் தெரியப்படுத்த சமுத்திரபந்தனே ‘உம்” என்ற
வெறுப்பு ஒலியைச் சிறிது இரைந்தே தனது நாசியின் மூலம் வெளியிட்டான். அந்த “உம்’ காரம் கவி பூஷணன் எழுத்து ஒட்டத்தைத் தடைப்படுத்தியது. மன்னனையும் சிறிது திரும்பிப் பார்க்க வைத்தது.
சமுத்திரபந்தனைப் பார்த்த சேரமன்னன் தலை வணங்கினான். “கவீசுவரரை இன்று முழுவதும் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை” என்று கூறவும் செய்தான் ரவிவர்மன்.
சமுத்திரபந்தன் தனது சினம் ததும்பிய கண்களை கவிபூஷணன் மீது நாட்டிவிட்டு மன்னன்மீதும் திரும்பினான். “மன்னர் சபையில் கவிகளுக்குப் பஞ்சமேது? ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர் இருக்கிறார்” என்றான் கவி
சமுத்திரபந்தன்.
“இரண்டு கண்கள் இருக்கும்போது ஒரு கண்ணை மாத்திரம் பயன்படுத்துவது அவசியமா?” என்று வினவினான் மன்னன்.
“கண்களிலும் வலது கண் இடது கண் என்று வித்தியாசமுண்டு” என்றான் கவி.
“முழுப் பார்வைக்கு இரண்டும் தேவையல்லவா?” என்று கேட்டான் மன்னன்.
“தேவையல்லவென்று தெரிகிறது” என்றான் கவி உக்கிரத்துடன்.
“எப்படித் தெரிகிறது? எங்கு தெரிகிறது?” என்று மன்னன் வினவினான்.
“உன் அரண்மனையின்மீது தெரிகிறது” என்றான் சமுத்திரபந்தன் சீற்றம் சிறிதும் தணியாத குரலில்.
ரவிவர்மன் கவிபூஷணனை நோக்கினான். “சமுத்திரபந்தன் கொடிமாற்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்” என்றும் கூறினான்.
அதுவரை ஓலைமீது குனிந்து கொண்டிருந்த கவிபூஷனன் தனது அழகிய முகத்தை நிமிர்த்தி கவி சமுத்திரபந்தனை நோக்கினான் “கருடன் கொடி உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று வினவினான் மிக மெதுவான குரலில்.
“சேரன் கொடி கருடன் கொடி அல்ல. வில்லும் அம்பும் சேரமன்னர் இலச்சினை” என்றான் சமுத்திரபந்தன்.
“அதனால்?”
“கருடன் கொடி சம்பிரதாயத்துக்கு விரோதமானது.”
“அதாவது?”
“சம்பிரதாயம் மாற்றப்பட்டுவிட்டது.”
“அவசியத்தையொட்டி சம்பிரதாயத்தை மாற்றுவது தானே விவேகம்?”
“விவேகமல்ல. சம்பிரதாயத்தை மாற்றுகிறவன் இந்துமத விரோதி.”
“இந்து மதத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. சம்பிரதாயத்தால் மட்டும் சநாதன மதம் ஜீவிக்கவில்லை. மனுவிலிருந்து யாக்ஞவல்க்யர் வரை பல ரிஷிகள் மத சம்பிரதாயங்களையும் சட்ட திட்டங்களையும் காலத்திற்கேற்ப, சமூக
அவசியத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார்கள். அதனால் தான் இந்துமதம் இன்னும் உயிருடனிருக்கிறது. உதாரணமாக சேர நாட்டில் சம்பிரதாயம் மாறுவதும் புதிதல்ல.” கவிபூஷணன் சொற்களை ஆவே சத்துடன் கொட்டினான்.
சமுத்திரபந்தன் விழித்தான். வியப்பும் குழப்பமும் கலந்த பார்வையொன்றை கவிபூஷணனின் மீது வீசினான். “புதிதல்லவா?” என்றும் கேட்டான் சந்தேகக் குரலில்.
‘அல்ல’ என்ற கவிபூஷணன் அதை விளக்கவும் முற்பட்டு “வேணாட்டு மன்னர்கள், அதாவது இந்தக் கொல்லத்தின் சங்ககால மன்னர்கள், யதுவம்சத்தைச் சேர்ந்தவர்கள். யதுவம்சத்தின் கொடி கருடன் கொடி. பிற்காலத்தில் சேரர்களின்
மற்றொரு பிரிவினர் உபயோகித்த வில்லம்பு இலச்சினையை வேணாட்டு மன்னர்களும் உபயோகித்தார்கள். இப்பொழுது மீண்டும் பழைய கொடிக்குப் போய்விட்டோம்” என்று கூறினான்.
கவிசுவரனான சமுத்திரபந்தன் சிறிது நேரம் நின்ற படியே மௌனம் சாதித்தான். “இப்படி கொடி மாற்றத்தைப் படைவீரர் ஒப்புக் கொண்டார்களா? மக்கள் ஒப்புக் கொண்டார்களா?” என்று கேட்டான் கவி.
கவிபூஷணன் உட்கார்ந்த நிலையிலேயே பதில் சொன்னான். எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். இன்று சேர அரசு பேரரசாகும் தருவாயிலிருக்கிறது. அதற்குப் பூர்வாங்கம் கருடத்துவஜம். இந்தக் கொடி வெகு சீக்கிரத்தில் இங்கு
மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் மீதும் சோழ நாட்டின் மீதுங்கூடப் பறக்கும். அதற்காக கருட மந்திரத்தையும் மன்னருக்குச் சொல்லி வைத்திருக்கிறேன்” என்றான் கவிபூஷணன்.
“மந்திரத்தில் மாங்காய் விழுமா?” இடக்காகக் கேட்டான் சமுத்திரபந்தன்.
“சம்பிரதாயத்தைப் பற்றி பேசும் உங்களுக்கு நமது பழைய மந்திரங்களில் நம்பிக்கை இல்லையா?’ என்று கவிபூஷணன் வினவினான்
இப்பொழுது இன்னொரு அஸ்திரத்தை வீசினான் சமுத்திரந்தன். ‘ புலவர் இந்த மாறுதலுக்குச் சம்மதித்தாரா?” என்று.
அதைக் கேட்ட. அரசன் சற்று சிந்தனைக்குள்ளானான். ஆனால் கவிபூஷணன் சளைக்கவில்லை. “யார் ஒப்புதலும் இதற்குத் தேவையில்லை’ என்று சொன்னான். அத்துடன் தனது கையிலிருந்த இரண்டு மூன்று ஓலை நறுக்குகளை
எடுத்து சமுத்திரபந்தனிடம் நீட்டி, ‘இதிலிருப்பதுபோல்தான் நடக்கும். மன்னன் வெற்றிக்குப் பிறகு இந்த சுலோகங்கள் திருவத்தியூர் கோவிலில் வெட்டப்படும்” என்றான்.
அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த புலவர் “திருவத்தியூரா? எங்கிருக்கிறது?” என்று கேட்டார்.
கவிபூஷணன் தனது அழகிய உதடுகளில் புன்முறுவலைப் படரவிட்டுக் கொண்டான். ‘தமிழ்ப் புலவரான தங்களுக்கும் புரியவில்லையா?” என்று வினவினான் புன்முறுவலின் ஊடே.
“புரியவில்லை பூஷணமே விளக்கலாம்” என்றார்.
“ஹஸ்திகிரி என்று சமஸ்கிருதத்தில் காஞ்சிக்குப் பெயர். ஹஸ்தி என்றால் யானை. அது அத்தி ஆயிற்று தமிழில் அதைக் கொண்ட ஊர் அத்தியூர் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்டது. அதற்குப் பெருமை சேர்க்க ‘திரு’
இணைக்கப்பட்டது. அருளாளப் பெருமாள் இருக்கும் சின்ன காஞ்சிபுரம் தான் – திருவத்தியூர்” என்று வரலாற்றை விளக்கினான் கவிபூஷணன்.
இந்த வரலாற்றைக் கேட்டுப் புலவர் பிரமித்தார். “பைந்தமிழில் பூஷணத்துக்கு நல்ல பயிற்சி இருக்கிறது.” என்று சிலாகிக்கவும் செய்தார். அத்துடன் பேசாமலிருக்கவில்லை அவர். ‘விதானத்தில் கொடியைப் பார்த்தேன்” என்றார் புலவர்.
“பார்த்தீரா?” சமுத்திரபந்தன் உற்சாகத்துடன் கேட்டான்.
“பார்த்தேன், கருடன் கொடி சிறப்பாயிருக்கிறது” என்றார் புலவர்.
“சம்பிரதாய விரோதம்” என்றான் சமுத்திரபந்தன்.
புலவரின் செவ்விய பெரிய உதடுகள் விரிந்து புன்முறுவலொன்றை வெளியிட்டன. “ஆம்” என்ற அவர் பதிலிலும் சமுத்திரபந்தனுக்கு இசைவான ஒலி எதுவும் இல்லை.
ஆகவே சமுத்திரபந்தன் கேட்டான் “இது உமக்கு ஒப்புதலா?” என்று.
“எது?”
“சம்பிரதாயக் கொடி மாறுதல்”
“மாறினால் என்ன?”
“ஆம் இலக்கணப் புலவரே! சம்பிரதாயக் கொடிகள் தென்னகத்தை மாலிக்காபூரிடமிருந்து காப்பாற்றவில்லை. இந்த மாற்றுக் கொடி நல்லது செய்யுமென்றால் அதை வேண்டாமென்பானேன்?” என்று வினவினார் புலவர்.
“புலவரே?” எரிச்சலுடன் எழுந்தது சமுத்திரபந்தன் குரல்.
“ஏன் கவிஞர் பெருமானே?”
“நீரும் இவர்கள் வலையில் விழுந்துவிட்டீர்” என்றான் மன்னனையும் கவிபூஷணனையும் காட்டி.
“வலை நல்லதாயிருந்தால் விழுவது தவறில்லை. இந்தக் கருடன் மீண்டும் தமிழகத்தின் பெருமையை உயர்த்துமென்றால், மக்களைப் பாதுகாக்கு மென்றால் இது தான் நமக்குத் தேவை” என்று திட்டவட்டமாகச் சொன்னார் புலவர்.
“பழைமையை மறந்துவிட்டீர் புலவரே” என்றான் சுவீசுவரன்.
“ஆம். பழைமையால் மாலிக்காபூரை எதிர்க்க முடியவில்லை. புதுமையைப் பார்க்கலாமென்பது அடியவன் விருப்பம்” என்றார் புலவர்.
- சமுத்திரபந்தன் அத்துடன் விடவில்லை. “நீர் கொண்டு வந்திருக்கும் புதிய சேனாதிபதிக்கு இந்த மாறுதல் உடன்பாடா?” என்று வினவினான்.
“கேட்கவில்லை “ என்றார் புலவர்.
“ஏன்?”
“சேனாதிபதி முக்கிய அலுவலில் இருக்கிறார்.”
“என்ன முக்கிய அலுவல்?”
“அரசகுமாரியைத்தான் கேட்க வேண்டும்.”
“எங்கே அரசகுமாரி?” என்று சீறினான் சமுத்திரபந்தன்.
புலவர் புன்முறுவல் மிக அதிகமாக விரிந்தது. “புதிய சேனாதிபதியைத்தான் கேட்க வேண்டும்!” என்றார்.
.
“எதற்காக சேனாதிபதியைக் கேட்க வேண்டும்!” என்றான் சமுத்திரபந்தன்,
“இருவரும் ஒரே இடத்தில் இருப்பதால்.” இதைச் சொன்ன புலவர் பெரிய தொந்தி குலுங்கச் சிரித்தார்.
புலவரின் நகைச்சுவைக்கு இலக்கான இளவழுதியும் இளமதியுங்கூட அதே சமயத்தில் நகைத்துக் கொண்டிருந்தார்கள் அஷ்டமுடி ஏரியின் படகு ஒன்றில்.