Cheran Selvi Ch23 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 23. புறாவுக்குப் புதுப்பணி
Cheran Selvi Ch23 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
பட்டுச் சீலையை விளக்கொளியில் பார்த்துப் பிரமிப் படைந்த அஜ்மல்கான் இளநகை கொண்டதை இளவழுதி பார்க்கவே செய்தான். அதற்கான காரணமும் அவனுக்குப் புரிந்திருந்தது. பணத்துக்கு நாட்டை விற்கும் மனிதனென்று
அஜ்மல்கான் தன்னை எடை போட்டு விட்டானென்பதை அறிந்து கொண்டான் சேரன் படைத்தலைவன், அந்த அறிவினால் அவன் உள்ளம் எரிமலையானாலுங் கூட அதை முகம் சிறிதளவும் வெளிக்குக் காட்டவில்லை. “என்ன ஸலீம்
சீலையைப் பார்த்தாகி விட்டதா?” என்று வினவிய போது அவன் குரலிலும் எந்தவித உணர்ச்சியும் தெரிய வில்லை.
அஜ்மல்கான் பட்டுச் சீலையை மிக நிதானமாக மடித்துக் கச்சையில் செருகிக் கொண்டான். “பார்த்து விட்டேன்” என்றும் பதில் சொன்னான்.
இளவழுதியின் முகம் வறண்டு கிடந்தது உணர்ச்சி ஏதுமில்லாமல். “அப்படியானால் அதைத் திருப்பிக் கொடு” என்று கேட்டான்.
“ இது பெரிய பொக்கிஷம் இளவழுதி. இதைத் திருப்பிக் கொடுப்பதற்கில்லை” என்றான் அஜ்மல்கான்.
இளவழுதியின் இதழ்களில் மெள்ள புன்முறுவல் அரும்பிற்று. “வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று வினவினான் படைத் தலைவன் ஏளனக் குரலில்.
“மாற்றுத் திட்டத்தை உடைக்க வேறு திட்டம் தயாரிப்பேன்” என்றான் அஜ்மல்கான். சொல்லி பயங்கரமாக ஒருமுறை நகைக்கவும் செய்தான்.
இளவழுதியும் நகைத்தான். ஆனால் அது பயங்கர நகைப்பல்ல. ஏளனத்தின் சிகரம் அதில் தெரிந்தது. “. இதுவரை ஒரு அறிவாளியுடன் உறவு கொண்டிருப்பதாக நினைத்தேன்” என்றான் படைத்தலைவன் இகழ்ச்சிச் சிரிப்பின் ஊடே.
“இப்பொழுது நான் அறிவாளியல்லவென்பது உன் நினைப்பா?” என்று வினவினான் அஜ்மல்கான் சிறிது உஷ்ணத்துடன்.
“எப்பொழுது அந்தப் பட்டுச் சீலையை நீ கச்சையில் வைத்துக் கொண்டாயோ அப்பொழுதே புரிந்து விட்ட து.”
“என்ன புரிந்து விட்டது!”
“அறிவுக்கும் உனக்கும் அடியோடு சம்பந்தமில்லை யென்பது.”
“பட்டுச் சீலையை நான் வைத்துக் கொள்வதற்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்?”
இதற்கு இளவழுதி உடனடியாக பதில் சொல்லவில்லை. அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் இருமுறை நடந்தான். பிறகு சட்டென்று அஜ்மல்கானுக்கு வெகு அருகில் நின்று ‘அந்தப் பட்டுச் சீலை நான் தயாரித்ததில்லை” என்றான் மிக
மெதுவான குரலில்.
அஜ்மல்கான் விழிகள் வியப்பைக் கக்கின. “வேறு யார் தயாரித்திருக்க முடியும்?” என்று வினவினான் திகைப்புத் தட்டிய குரலில்.
“மன்னர்!” தெளிவாகவும் திட்டமாகவும் உதிர்ந்தது படைத் தலைவன் பதில்.
“யார்! மன்னரா!”
“ஆம்.”
“அவருக்கெப்படி நான் தயாரித்த திட்டம் தெரியும்?”
“அதைத்தான் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.”
“உன்னைத் தவிர நான் வேறு யாருக்கும் சீலையைக் காட்டவில்லை.”
“நான் சீலையில் கண்ட படத்தையும் வரைந்து மாற்றுத் திட்டத்தையும் வரைந்து உன்னை அச்சுறுத்தி பணம் சம்பாதிக்க இஷ்டப்பட்டேனென்று நினைக்சிறாயா!” என்று வெறுப்புடன் வினவிய இளவழுதி மேலும் சொன்னான், “நான்
திரும்ப அரண்மனை சென்றதுமே மன்னர் என்னை அழைத்து ரகசியமாக இந்த சீலையைக் காட்டினார். இந்தத் திட்டம் நமது திட்ட மென்று முதலில் நினைத்தேன். பிறகு மன்னர் விளக்கொளியில் சீலையைக் காட்டினார். நானே
அதிர்ச்சியடைந்தேன். ஆகையால் இங்கு என்னை வேவு பார்ப்பவர்கள் யாரோ இருக்கிறார்கள். அவர்களை முதலில் யாரென்று கண்டுபிடி. இல்லையேல் நாமிருவருமே கொல்லத்து வெட்டுப் பாறைக்கும் போக வேண்டி வரும்.”
உணர்ச்சியுடன் படைத்தலைவன் பேசியதைக் கேட்ட அஜ்மல்கான் பதட்டம் அடையவில்லை. தவிர சிந்தனையின் வசப்பட்டான் பல வினாடிகள். “ஆம். யாரோ ஒருவன் இருக்கிறான் இங்கு, அதைக் கண்டு பிடிக்கிறேன்” என்று
முணுமுணுத்தான், ஒருமுறை பல்லையும் கடித் தான். “சரி, இந்தச் சீலை எதற்கு உனக்குத் திரும்பவும்?” என்றும் கேட்டான் படைத் தலைவனை நோக்கி,
இளவழுதி அஜ்மல்கானை உற்று நோக்கினான். “எடுத்த இடத்தில் திரும்ப வைக்க” என்று சொன்னான்.
“அது எந்த இடம்?”
“அரசர் தலையணைக்கு அடியில்”
“அப்படியானால் இதைத் திருடினாயா!”
“அரசியல் பாஷையில் இதற்குப் பெயர் திருட்டு அல்ல. ராஜதந்திரம்” என்று விளக்கினான் படைத்தலைவன். இதைக் கேட்ட அஜ்மல்கான் பெரியதாகவே நகைத்தான், அவன் நகைப்பு வேப்பங்காயாக இருந்தது படைத்தலைவனுக்கு. “ நீ
நகைப்பதைப் பார்த்தால் இந்த இழிதொழில் உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது?” என்று வினவினாள் படைத்தலைவன்,
படைத்தலைவன் கேள்வியிலிருந்த கசப்பை அஜ்மல்கான் உணரவே செய்தான். ஆகையால் படைத்தலைவனை நெருங்கி அவன் தோள்மீது கையை வைத்து “தவறாக நினைக்காதே. யாராலும் ஏமாற்ற முடியாத சேர மன்னர் கண்ணிலேயே
மண்ணைத் தூவிய உன் திறமையை நினைத்தே நகைத்தேன். இப்பொழுது நாம் இருவரும் பெரிய அரசாங்க சூதாட்டத்தில் பங்கு கொண்டிருக்கிறோம். இதை நாம் இருவருமே மறக்கக் கூடாது” என்று கூறி கச்சையிலிருந்த சீலையை
எடுத்துப் படைத்தலைவன் கையில் திணித்தான். படைத்தலைவன் அதைத் தன் கச்சையில் பத்திரப் படுத்திக் கொண்டான். பிறகு அஜ்மல்கானை உட்காரச் சொல்லித் தானும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு “இப்போது என்ன செய்ய
உத்தேசிக்கிறாய்?” என்று வினவினான்.
அஜ்மல்கான் சில வினாடிகள் தரையை நோக்கிக் கொண்டிருந்தான், பிறகு தலையை நிமிர்த்தி “என்ன செய்யப் போகிறேன் என்று தீர்மானிப்பதற்கு முன்பு எதிரியின் படைபலம் தெரிய வேண்டும்” என்றான் கவலை ஒலித்த குரலில்.
“எவ்வளவு இருக்குமென்று நினைக்கிறாய்?” என்று படைத்தலைவன் கேட்டான்,
“மொத்தம் பதினையாயிரம் இருக்கலாமென்று என் ஊகம்” என்ற அஜ்மல்கான் இளவழுதியின் முகத்தில் விரிந்த ஏளனத்தைக் கவனித்து “ஊகம் சரியில்லையா?” என்று வினவினான்.
“ஊகத்தை நான்கால் பெருக்கிக் கொள்” என்றான் இளவழுதி.
அஜ்மல்கான் விழிகள் வியப்பால் முகத்தை விட்டு வெளி வந்து விடுவன போல் தெரிந்தது. “அறுபதினாயிரமா?” என்ற கேள்வியில் திகைப்பு பலமாக இருந்தது.
“ஆம் யானைப்படை பத்தாயிரம், புரவிப்படை இருபதினாயிரம், காலாட்படை முப்பதினாயிரம், காலாட்படையில் யந்திரப் பிரிவு தனியாயிருக்கிறது” என்று புள்ளி விவரம் கொடுத்த சேனாதிபதி எழுந்தான் ஆசனத்தை விட்டு. “ஸலீம்!
உன்னைவிட, என்னை விட, சதா கூட இருக்கும் இரு கவிகள், ஒரு புலவர் உட்பட எல்லோரைக் காட்டிலும் மகா தந்திரசாலியும் மகாவீரனுமான ஒரு மனிதனிடம் நீ சிக்கி இருக்கிறாய். மிகுந்த எச்சரிக்கையுடன் திட்டமிட்டாலொழிய மன்னர்
நிறுவியிருக்கும் இரும்பு அரண் போன்ற பெரிய படையை நாம் உடைக்க முடியாது” என்றும் சொன்னான் படைத் தலைவன் சிந்தனை ததும்பிய குரலில்.
அஜ்மல்கான் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. உட்கார்ந்த நிலையிலேயே தலையைத் தூக்கிப் படைத்தலைவன் கண்களைச் சந்தித்தான், “என்னை என்ன செய்யச் சொல்கிறாய்!” என்று வினவினான்.
“நம்பச் சொல்கிறேன்” என்றான் படைத் தலைவன்.
“யாரை?”
“என்னை”
“நம்பாமலா என் திட்டத்தையே உன்னிடம் காட்டியிருக்கிறேன்?”
“திட்டத்தைத்தான் காட்டினாய், உன் படையைக் காட்டவில்லை. உன் படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள். எங்கிருக்கிறார்கள், என்ற விவரங்களை நீ சொல்லவில்லை.”
“அதை நான் சொல்வேனென்று எதிர்பார்க்கிறாயோ?”
“ஆம், எதிர்பார்க்கிறேன்.”
“எதனால் எதிர்பார்க்கிறாய்?”
“அரசர் படைபலத்தை நான் உன்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கலாம். அல்லது ஒன்றும் பாதியுமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கு அதில் இஷ்டமில்லை. ஏனென்றால் நாம் பெரிய காரியங்களை பரஸ்பர நம்பிக்கையால் தான்
சாதிக்க முடியும்.”
இதை அஜ்மல்கான் ஒப்புக் கொண்டான். சிறிது சிந்தனை வசப்பட்டுப் பிறகு சொன்னான்; “நாளை இதே நேரத்துக்குக் கடற்கரைக்கு வா. உன்னைப் பார்த்ததும் படகு செலுத்துபவன்’ ஒருவன் கையை அசைப்பான். அவனைத்
தொடர்ந்து நட. அவன் உன்னை என் படைத் தளத்துக்கு அழைத்துச் செல்வான்” என்று.
“சரி அப்படியே செய்கிறேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் சீலை ஜாக்கிரதையாக இருக்கிறதா என்பதை கச்சையில் பார்த்துவிட்டு அஜ்மல்கானிடம் விடை பெற்றுச் சென்றான் இளவழுதி.
அங்கிருந்து அரண்மனையை அடைந்தவன் நேராகத் தனது அறைக்குச் செல்லாமல் அந்தப்புர வாயிலை நோக்கி நடந்தான். அதைக் கிட்டியதும் இரு முறை கதவைத் தட்டினான்.
சுந்தரி கதவைத் திறந்தாள். “யார்” என்று கேட்க விரும்பியவள் இளவழுதியைக் கண்டதும் “இந்த நேரத்தில் இங்கு எங்கு வந்தீர்கள்?” என்று கேட்டாள் சினத்துடன்.
“அரசகுமாரியை உடனடியாகப் பார்க்கவேண்டும்” என்றான் இளவழுதி,
“நடுநிசி தாண்டி விட்டது.”
“பாதகமில்லை.”
“இந்த சமயத்தில் யாரும் இங்கு வரக்கூடாது. அதுவும் அரசகுமாரியை இப்பொழுது எழுப்பவும் அனுமதியில்லை.”
“அனுமதி நான் கொடுக்கிறேன்.”
“நீங்களா!”
“ஆம்” என்ற இளவழுதி “அவசரம். புலவரை அழைத்துக் கொண்டு அரசகுமாரியை என் அறைக்கு வரச்சொல்” என்று கூறிவிட்டு வேகமாகத் தனது அறையை நோக்கிச் சென்றான்.
அறைக்குச் சென்றதும் அந்தச் சீலையைத் தனது தலையணைக்கு அடியில் பத்திரப்படுத்தினான். சற்று நேரத்துக்கெல்லாம் அரசகுமாரியும் புலவரும் வரவே அவர்களை உட்காரச் சொல்லி எதிரில் நின்று கொண்ட படியே சொன்னான்
படைத்தலைவன். “நாளை இரவு முழுவதும் நான் அரண்மனைக்கு வரமாட்டேன்” என்று.
“ஏன்?” என்று கேட்டார் புலவர்.
“எதிரியால் அபகரிக்கப் படுவேன்” என்றான் இளவழுதி.
புலவர் சிறிதும் நம்பிக்கையற்ற பார்வையை அவன் மீது செலுத்தினார். “நீயா” என்ற கேள்வியில் பெரும் அவநம்பிக்கை இருந்தது.
.
“ஆம்.”
“தெரிந்தும் சிக்க வேண்டிய அவசியமென்ன?”
“அரசாங்க அவசியம்.”
“சரி, அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
செய்ய வேண்டியது என்னவென்பதைத் தெரிவித்தான் இளவழுதி. அதைக் கேட்ட புலவர் கொதித்து எழுந்தார். “இளவழுதி! உனக்கு மூளை கலங்கிவிட்டது. வல்லூ றிடம் புறாவைக் கொடுக்கச் சொல்கிறாய்?” என்று சீறவும் செய்தார்.
இளவழுதி இளமதியை நோக்கினான். “புறாதான். அதுவும் அழகிய புறா தான்” என்றும் சொல்லிக் கொண்டான். பிறகு அவனிடம் ஏக்கப் பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.
“வேறு வழியில்லை” என்றும் முடிவாகச் சொன்னான்.