Cheran Selvi Ch24 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 24. எமனையும் விழுங்குவான்
Cheran Selvi Ch24 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
இளவழுதியின் திட்டத்தைக் கேட்டதும் புலவர் புறாவென்று குறிப்பிட்டது இளமதியைத்தான். அந்த உவமை இளவரசிக்கு அன்று மிகப் பொருத்தமாகவே இருந்தது. வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிகள் பூண்டு அசல்
வெண்புறாவைப் போலவே இளவரசி அன்று இளவழுதியின் அறையில் உட்கார்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடையையும் சற்று நெளிந்து உட்கார்ந்திருந்த நிலையையும் கண்டு தான் “அழகிய புறாதான்” என்று சொல்லிப்
பெருமூச்செறிந்தான் சேரர் படைத்தலைவன். அவளை அஜ்மல்கானிடம் சிக்கவிடுவது அபாயம் என்று அறிந்துங்கூட அவன் தனது திட்டத்திலிருந்து மாற இஷ்டப்படவில்லை.
புலவருடைய செவ்விய முகம் சினத்தால் அதிகமாகச் சிவந்துவிட்டதையும், அவர் தனது மார்பிலிருந்த ருத்தி ராட்சத்தை நெருடியபோது அது ஒருவேளை பொடியாகி விடுமோ என்று அச்சப்படும் அளவுக்குப் புலவர் தமது
திண்ணிய விரல்களால் அதை நெருக்கிப் பிடித்ததையும் கண்ட இளவழுதி அதற்கு மசிந்தானில்லல. “புலவர் பெருமானே! என் மீது நீங்கள் கோபித்துப் பயனில்லை. இந்த இடத்திலிருந்து படைகளோடு நான் நகருமுன்பு எதிரியின்
பலத்தை அறிய விரும்புகிறேன்” என்றான் திட்டவட்டமாக.
புலவர் அவனை ஏறெடுத்து நோக்கினார் “பெண்ணை முன்னே விட்டு அவள் அளிக்கும் பாதுகாப்பில் செயல்பட விரும்பும் நீ ஒரு வீரனா?” என்று வினவினார் கடுப்பான குரலில்.
இளவழுதி இள நகை கொண்டான். என்னைவிடப் பெரிய வீரர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான்.
“யாரோ?” புலவர் கேள்வியில் வெறுப்பு மண்டிக் டெந்தது.
“அர்ஜுனன்.”
“அர்ஜுனனா?”
“ஆமாம். பெண்ணாயிருந்து ஆணாகிவிட்ட சிகண்டியை முன்னால் நிறுத்தி, அவள் பெண்ணாக இருந்த காரணத்தால் பீஷ்மர் வில்லைத் தொடாதிருக்கையில், அம்புகளைத் தொடுக்கவில்லையா அர்ஜுனன்?”
“புராண உவமை வேறா இதில்”
“புராணங்கள் தானே நமக்கு வழிகாட்டிகள்’ என்ற இளவழுதி “புலவரே! அந்த சிகண்டி, வீரமில்லாதவன். ஆனால் இளமதி வீரத்தின் சின்னம். எந்த நிலையையும் சமாளிக்க அவளால் முடியும்” என்றான்.
அதற்காக?” புலவர் வினவினார் எரிச்சலுடன்.
இளவழுதி அவர் எரிச்சலை லட்சியம் செய்யவில்லை அஜ்மல்கான் என்னைத் தொடராதபடி இளமதி அவனை நமது படைத்தளத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றான் இளவழுதி.
“நமது படைகளை அவன் நன்றாகக் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது உன் எண்ணமா?” என்று வினவினார் புலவர்.
“அல்ல. நமது படை முழுவதையும் அவன் பார்வையிடத் தேவையில்லை. ஒரு பகுதியைக் கண்டால் போதும். அஷ்டமுடி ஏரியின் இக்கரையில் இளமதி படகுடன் காத்திருக்கட்டும். அஜ்மல்கான் என் உடையில் வருவான். படகு பாதி
தூரம் ஏரியில் சென்றதும் அரசகுமாரியை அச்சுறுத்தி தன்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை இடுவான். அழைத்துச் செல்லட்டும் அரசகுமாரி
ஆனால் அக்கரையில் பாதி தூரத்துடன் அவன் திரும்பிவிடுவான்” என்று கூறினான் இளவழுதி.
“எதற்காகத் திரும்புவான்?” என்று புலவர் விசாரித்தார்.
“அஜ்மல்கான் அங்கு வருவதே படைகளைக் கணக்கெடுப்பதற்கு அல்ல. படைப்பிரிவுகளைப் பற்றி நான் சொன்னது உண்மையா என்பதை அறியவே வருகிறான். அவன் ஆசையை நாம் பூர்த்தி செய்து விட்டால் என்னை நம்புவான்.
அந்த நம்பிக்கை தான் இறுதியில் அவனை அழிக்கும்” என்று கூறினான் படைத்தலைவன்.
“நம் படைகளைக் காட்டி அவனைத் திருப்தி செய்து உன்னை நம்ப வைப்பதால் எப்படி அவன் அழிந்து போவான்?” என்று புலவர் மீண்டும் கேட்டார்.
“நான் நம்பிக்கை மோசம் செய்வேன்.”
“நீயா!”
“ஆம், சற்று முன்புதான் அரசர் போர்த்திட்டத்தை அஜ்மல்கானிடம் காட்டிக் கொடுத்தேன்.”
“அட பாவி!”
“அதில் அனுகூலமிருக்கிறது.”
“காட்டிக் கொடுப்பதில்? நம்பிக்கை மோசம் செய்வதில்?”
“இதெல்லாம் சாதாரண மனிதர் வாழ்க்கையில், அரசியலில், போரில், இவையெல்லாம் ராஜதந்திரம்.”
இதைக் கேட்ட புலவர் மட்டுமின்றி இளமதியும் அதிர்ச்சி நிரம்பிய விழிகளைப் படைத்தலைவன் மீது திருப்பினாள். அந்தப் பார்வைகளில் மண்டிக்கிடந்த இகழ்ச்சியை இளவழுதி கவனிக்கவே செய்தான். அந்த இகழ்ச்சியை உச்ச நிலைக்குக்
கொண்டு போக தன் மடியிலிருந்த பட்டுச் சீலையையும் எடுத்து இளவரசி கையில் கொடுத்தான்.
இளவரசி அதை எடுத்துக் கொண்டு எழுந்தாள். புலவரும் உடன் எழுந்தார். இருவரும் விளக்கொளியில் அந்தச் சீலையைப் பார்த்தனர். இளமதியின் கண்கள் உக்கிரத்தைக் கக்கின. “இது என் தந்தை ரகசியமாக வைத்திருக்கும்
போர்த்திட்டச் சீலை. இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்று சீறினாள் இளமதி.
இளவழுதி மஞ்சத்தில் உட்கார்ந்தபடி அலட்சியமாகச் சொன்னான் “மன்னரே என்னிடம் கொடுத்தார்” என்று.
புலவர் கண்கள் நெருப்பைக் கக்கின. “நம்பிக் கொடுத்தார்” என்றும் சொன்னார் நெருப்பு குரலிலும் பொறி பறக்க.
“ஆம்” என்றான் படைத்தலைவன் சர்வ சாதாரணமாக.
“நம்பிக்கை மோசம் செய்திருக்கிறாய்” என்றார் புலவர் நடுங்கும் குரலில்.
“சேர நாட்டுப் படைத்தலைவனை அப்படி அவ மரியாதையாகப் பேசக் கூடாது” என்று கேட்டுக் கொண்டான் இளவழுதி.
“நீ படைத்தலைவனா! இல்லை, இன்றுடன், ஏன் இந்த வினாடியுடன் உன் படைத்தலைமை ஒழிந்தது. மன்னரிடம் சொல்லி உன்னைச் சிறையிடச் சொல்கிறேன்” என்று கூவினார் புலவர்.
இளவழுதி ஆசனத்தை விட்டு எழுந்தான். “புலவரே! அனாவசியமாகக் காலம் கடத்தா தீர்கள். மன்னர் எனது பதவியை நீக்கும் வரை நான் படைத் தலைவன் தான். ஆகையால் இருவரும் சொல்வதைக் கேளுங்கள். நாளை இரவு நான்
கடற்கரைக்குச் செல்வேன். அஜ்மல்கான் உத்தரவுப்படி. அதே நேரத்தில் “ அஜ்மல்கான் ஏரிக்கரைக்கு, வருவான். அரசகுமாரி அவனைப் படகில் ஏற்றிச் செல்லட்டும். நான் அபகரித்துச் செல்லப் படுவேன். ஆனால் அஜ்மல்கான் அக்கரைக்குப்
போகட்டும். அவன் தப்ப முயலும் சமயத்தில் விட்டு விடுங்கள்” என்று திட்டவட்டமாக உத்தரவிட்டு இனி நீங்கள் செல்லலாம்” என்றான்.
ஆனால் புலவர் நகரவில்லை இளமதியும் அசையவில்லை, “இதில் என்ன சாதிக்க முயலுகிறாய்?” என்று புலவர் வினவினார் படைத்தலைவனை நோக்கி.
“போகப் போகத் தெரியும். இப்பொழுது நான் எதுவும் சொல்வதற்கில்லை, சொன்னபடி செய்யுங்கள்” என்று கூறிவிட்டு வாயிற்படியருகே சென்று அறைக் கதவைத் திறந்து விட்டான். அதன் குறிப்பை உணர்ந்து கொண்ட புலவர்
“வா இளமதி! இந்த இடத்தில் நிற்கவே எனக்குப் பிடிக்கவில்லை “ என்று இளமதியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
வாயிற்படியைத் தாண்டு முன்பு இளமதி தனது அழகிய விழிகளை அவன் முகத்தின் மீது பாய்ச்சினாள். அந்த விழிகளில் நேசமில்லை. பாசமில்லை பரிதாபம் மிகுந்திருந்தது. சீற்றமிருந்தாலுங்கூட சகித்துக் கொண் டிருப்பான்
இளவழுதி, அவள் பரிதாபம் அவன் இதயத்தைச் சம்மட்டிக் கொண்டு அடித்தது, தன்னைப் பற்றி மிகக் கேவலமான அபிப்பிராயம் அரசகுமாரிக்கு ஏற்பட்டு விட்டதை உணர்ந்ததால் பெருமூச்சு விட்டான் படைத் தலைவன். “பதவியில்
கிடைப்பது முக்கால்வாசி விரோதம், கெட்ட பெயர், நல்லது மிக சொல்பம்” என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு தனது பஞ்சணையில் படுத்தான். ஆனால் நித்திரை வரவில்லை
அவனுக்கு. இளமதியின் பரிதாபக் கண்கள் அப்பொழுதும் அவனை உற்றுப் பார்த்தன. அவற்றினின்று தப்ப தனது கண்களை மூடிக் கொண்டான் படைத்தலைவன். அவன் மனம் நிம்மதியிழந்து கிடந்தது.
நிம்மதியற்ற நிலையில் தான் இளமதியும் தனது அறையை நோக்கி நடந்தாள். அவளுடன் சென்ற புலவர் சட்டென்று எதையோ நினைத்துக் கொண்டு “ இளமதி! படைத்தலைவன் கொடுத்த பட்டுச்சீலை உன்னிடமிருக்கிறதா?” என்று
வினவினார்.
“இருக்கிறது” என்றாள் அரசகுமாரி.
“அப்படியானால் வா, மன்னரிடம் விஷயத்தைச் சொல்வோம்.” என்று மன்னரின் சயன அறையை நோக்கித் திரும்பினார் புலவர்.
இளமதி தயங்கினாள். சீலையை மன்னனிடம் காட்டினால் இளவழுதியின் தலை போய்விடும் என்று நினைத்ததால் புலவருடன் செல்லக் காலெடுத்து வைக்க வில்லை.
புலவர் கோபத்துடன் அவளை நோக்கினார். “இளமதி நீ அரசகுமாரி. உன் சொந்த உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காதே. நாட்டுக்கு உன் கடமையைச் செய் வா” என்று முரட்டுத்தனமாகக் கூறி அவளைப் பின் தொடரச் சைகை காட்டி
முன்னால் நடந்தார்.
அரசகுமாரி சற்று நிதானித்துவிட்டு அவருடன் நடந்தாள். மன்னன் பள்ளியறை முகப்புக்கு வந்ததும் அங்கிருந்த காவலர் தடுக்க ‘இளவரசியார் அரசரை அவசரமாகப் பார்க்க வேண்டும்” என்று புலவர் தெரிவிக்கவே காவலனொருவன்
கதவை மெள்ளத் திறந்து உள்ளே சென்றான். பல வினாடிகள் கழித்தே திரும்பிய அவன் இளவரசிக்கும் புலவருக்கும் தலை தாழ்த்தி, “உங்கள் இருவரையுமே மன்னர் வர உத்திர விட்டார்” என்று கூற இருவரும் மன்னன் பள்ளியறைக்குள்
நுழைந் தார்கள்.
ரவிவர்மன் பஞ்சணையைவிட்டு எழுந்து எதிரிலிருந்த வியாக்கிராசனத்தில் அமர்ந்திருந்தான். புலவரும் இளவரசியும் உட்கார இரு ஆசனங்களைக் காட்டினான். புலவர் உட்காரவில்லை. “மன்னா! இந்த அகாலத்தில் உன்னை எழுப்ப
இஷ்டமில்லை. ஆனால் அரசாங்க அலுவல் கட்டாயப்படுத்தியதால் வந்தோம்” என்று பூர்வபீடிகை போட்டார்.
ரவிவர்மன் பதிலுக்குத் தலையசைத்தான். “ஆம். மூன்றாம் ஜாமம் முடியப்போகிறது. இன்னும் மூன்று நாழிகை போனால் உஷத்காலம்’ என்றும் கூறினான் சாளரத்தின் மூலம் வெளியே தெரிந்த ஒரே ஒரு நக்ஷத்திரத்தையும்
தேய்மதியையும் நோக்கி.
புலவர் சங்கீத வித்வானைப்போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். “மன்னவா! உன் படைத்தலைவனை எத்தனை தூரம் நம்புகிறாய்?” என்று வினவினார்.
மன்னன் சர்வசாதாரணமாகப் புலவரை நோக்கினான். “நீங்கள் எத்தனை தூரம் நம்பச் சொன்னீர்களோ அத்தனை தூரம் நம்புகிறேன்” என்றான்.
“அந்த நம்பிக்கையை விட்டுவிடு” என்றார் புலவர் “ஏன்?” மன்னன் குரலில் பதற்றம் ஏதுமில்லை.
“அவன் மோசக்காரன்” என்றார் புலவர்.
அரசன் புலவர் மீது கண்களை நிலைக்கவிட்டான். “நீங்கள் கொடுத்தனுப்பிய ஓலைக்கும் இப்பொழுது செய்யும் மதிப்பீட்டிற்கும் சம்பந்தமில்லாமலிருக்கிறது” என்றும் சுட்டிக் காட்டினான்.
“ஆம். இப்பொழுது தான் அவனைப் புரிந்து கொண்டேன்” என்று கூறி இளமழுதி தன்னையும் அரசகுமாரியையும் அழைத்ததையும், அவன் அறையில் இட்ட உத்த ரவுகளையும் விவரித்தார் புலவர். அத்துடன் “அத்தாட்சி இதோ
இருக்கிறது” என்று பட்டுச் சீலையையும் அரச குமாரியிடமிருந்து வாங்கி அரசனிடம் கொடுத்தார்.
ரவிவர்மன் கண்களில் விவரம் புரியாத சாயை ஒன்று படர்ந்தது. அந்தப் பட்டுச்சீலையைக் கையில் வாங்கி விளக்கொளியில் பார்த்தான் சேரமன்னன். பிறகு அதை இரும்ப புலவர் கையிலேயே கொடுத்தான்.
“இப்பொழுது என்ன உத்தரவு?” என்று புலவர் வலுடன் கேட்டார்.
.
ரவிவர்வன் புலவரையும் இளமதியையும் ஒருமுறை கூர்ந்து நோக்கினான். “படைத்தலைவன் சொன்னபடி செய்யுங்கள்” என்றான்.
புலவருக்கு ஏதும் புரியவில்லை. இளமதியும் பிரமை நட்டிய விழிகளை தந்தைமீது நாட்டினாள். “இந்த பட்டுச்சீலையை என்ன செய்யட்டும்?” என்று வினவினாள்.
“படைத் தலைவனிடமே கொடுத்துவிடு” என்றான் ரவிவர்மன் குலசேகரன்.
புலவருக்கும் இளமதிக்கும் ஏதும் புரியவில்லை. ஒரு வரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு வெளியேனார் அறையைவிட்டு. அவர்கள் சென்றபின்பு ரவிவர் மன் இதழ்தளில் புன்னகையொன்று அரும்பியது; “சற்று
ஏமாந்தால் படைத்தலைவன் எமனையும் விழுங்குவான்” என்று இளவழுதியை சிலாகிக்கவும் செய்தான் உள்ளூர.