Cheran Selvi Ch26 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 26. உயிரும் அஜ்மல்கானும்
Cheran Selvi Ch26 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
கூடாரத்துக்குள்ளே மறைவுக்கு இடமேற்படுத்தத் தொங்கிய வண்ணச் சீலைகள் இரண்டை பிணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிற்றையும் பார்த்து அஜ்மல்கானின் சிரித்த முகத்தையும் பார்த்த புலவர் பெரிதும் வெகுண்டா
ரென்றாலும் ஏதும் செய்ய இயலாதவராய் பட்டுக் கயிற்றை அவிழ்த்து எடுத்துக் கொண்டு அரசகுமாரி நின்றிருந்த இடத்தை நோக்கி வந்தார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் அஜ்மல்கான் கவனித்துக் கொண்டிருந்ததால்
எந்தத் தந்திரமும் அந்த சமயத்தில் பலிக்காதென்பதைப் புரிந்துகொண்ட புலவர் இளமதியை நெருங்கி அஜ்மல்கான் உத்தரவுப்படி கயிற்றின் ஒரு நுனியால் அவள் கைகளைப் பிணைத்தார்.
“கயிற்றை அப்படியே கீழே தொங்கவிட்டு இன்னொரு நுனியால் கால்களையும் பிணைத்து விடுங்கள்” என்று அஜ்மல்கான் உத்தரவிடவே “காலையும் பிணைத்து விட்டால் அரசகுமாரி எப்படி நடப்பாள்?” என்று விசாரித்தார் புலவர்.
அஜ்மல்கான் முகத்தில் சீற்றம் லேசாக உதயமாயிற்று. “புலவரே! உமது நகைச்சுவையைக் காட்ட இது சமயமல்ல. சொன்னபடி செய்யுங்கள். இல்லையேல் இனி நீர் எந்தச் சுவையிலும் ஈடுபட அவசியமிருக்காது” என்றான் சீற்றம் நிரம்பிய
குரலில்.
அவன் சொன்ன தன் பொருளைப் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாதது போலவே கேட்டார் புலவர் “ஏன் என் ரசனைக்குக் குறைவு வந்துவிட்டது என்று நினைக்கிறாயா?” என்று.
“இல்லை” என்றான் அஜ்மல்கான் குரூரப் புன்முறுவல் கொண்டு.
“வேறு எதற்குக் குறைவு வந்துவிட்டது எனக்கு?” என்று விசாரித்தார் புலவர்.
“உயிருக்கு” என்றான் அஜ்மல்கான். ‘சரிசரி ஆகட்டும் தாமதிக்க வேண்டாம்” என்று துரிதப்படுத்தவும் செய்தான்.
வேறு வழியின்றிப் புலவர் இளமதியின் கால்களையும் பிணைத்தார். பிணைத்து முடிந்து “இப்பொழுது திருப்தி தானே?” என்றும் வினவினார் புலவர் அஜ்மல்கானை நோக்கி.
“திருப்திதான், திருப்தியைப் பூர்த்தி செய்யுங்கள்.” அஜ்மல்கானின் குரலில் ஏளன மிருந்தது.
“பூர்த்தி செய்வதா?” புலவர் கேள்வியில் திகில் இருந்தது.
“ஆம்”
“என்ன செய்ய வேண்டும்?”
“அரசகுமாரியைத் தரையில் உருட்டி விடுங்கள்.”
“எதற்கு?”
“கேள்வி கேட்காதீர்கள். சொன்னபடி செய்யுங்கள்.”
அதற்குப் பின் புலவர் அடியோடு பேச்சை நிறுத்திக் கொண்டார். அஜ்மல்கான் சொன்னபடி அரசகுமாரியை லேசாகத் தரையில் படுக்க வைத்து, பட்டுக்கயிறு எடுக்கப்பட்டதால் விரிந்து காற்றில் அலைந்து கொண்டிருந்த
ரீலைகளுக்கு அருகில் புரட்டிவிட்டார்.
“எதற்கும் அரசகுமாரி வாயிலும் சிறிது துணியை அடைத்து விடுங்கள். குயில் கூவாதிருக்கும்” என்று அஜ்மல்கான் தனது உத்தரவுடன் அரசகுமாரி குரலுக்குச் சிறிது பாராட்டுதலையும் அளித்தான்.
புலவரும் தலையசைத்தார். “ஸலீம்! தற்சமயம் உன் பெயர் அதுதானே, எதுவானாலும் என்ன, உன் குரூரத்தில் ரசிகத்தன்மையும் கலந்திருக்கிறது” என்று பாராட்டினார்.
“சரிசரி; வேலை நடக்கட்டும்” என்று துரிதப்படுத்தினான் அஜ்மல்கான்.
புலவர் குரல் திடீரென நிதானத்துக்கு வந்துவிட்டதையும் அவர் பேச்சிலும் விஷமம் துளிர்விடத் துவங்கி விட்டதையும் கண்ட அரசகுமாரிக்குக் காரணம் புரியவில்லை. புலவர் சீலைகளுக்குப் பின் அநாயாசமாகச் சென்று திரும்பி
வந்ததும் கையிலிருந்த துணியைச் சிறிது முரட்டுத்தனமாகவே தன் வாயில் அடைத்ததும் பிறகு தன்னைப் புரட்டி சீலைகளுக்கு அருகில் தள்ளிவிட்டதையும் காண அவளுக்கு உள்ளூர வியப்புடன் ‘புலவர் ஏதோ முடிவுக்கு
வந்திருக்கிறார்” என்று நினைப்பும் கலந்து கொண்டதால் அவள் கண்களை மூடிக் கொண்டாள் பயந்த பாவனையில்.
அவள் கண்கள் மூடியதையும் முகத்தில் பயத்தின் சாயை பரவி விட்டதையும் கண்ட அஜ்மல்கான் மீண்டும் புன்முறுவல் செய்தான். “எதற்கும் அஞ்சாத சேரன் செல்வியே அஞ்சுவது எனக்குப் பெருமை தருகிறது”
என்றும் அவளை நோக்கிக் கூறிவிட்டு சரி புலவரே! வெளியே நடவுங்கள்” என்று அவர் கழுத்தில் குறுவாளை அழுத்தினான்.
புலவர் பேசாமல் வெளியே நடந்தார். “மீதிப் படைகள் இருக்குமிடத்தை நோக்கிச் செல்லுங்கள் புலவரே! படைகள் என்னைப் பார்க்கக்கூடாது. நான் அவற்றைப் பார்க்கவேண்டும்” என்று உத்தரவிட்டான் அஜ்மல்கான்.
“கனகச்சிதமான யோசனை” என்று இகழ்ச்சி துலங்கும் குரலில் நகைத்த புலவர் எதிரேயிருந்த முந்திரித் தோப்புக்குள் நுழைந்து நடந்தார்.
கையில் இருந்த குறுவாள் அவர் கழுத்தைத் தடவிய வண்ணம் அவரைத் தொடந்த அஜ்மல்கான், “நான் சொன்னது நினைப்பிருக்கட்டும் புலவரே! என்னிடம் எந்த விளையாட்டும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று எச்சரித்தான்.
“ஆமாம், நீ குழந்தை. உன்னுடன் விளையாடுகிறேன்” என்று எரிச்சலுடன் பேசிய புலவர் முந்திரித் தோப்பின் ஊடே நடந்து சென்றார். பிறகு வளைந்து இன்னொரு தோப்பில் நுழைந்தார். இப்படி வளைந்து வளைந்தே சென்று
கொண்டிருந்தார். இரவில் அர்த்த ஜாமம் தாண்டி விட்டதை உணர்ந்த அஜ்மல்கான் “இன்னும் எத்தனை தூரம் போக வேண்டும்” என்று சிறிது சந்தேகத்துடன் விசாரித்தான்.
“மறைவிலிருந்து முழுப் படையையும் பார்க்க வேண்டுமானால் மறைவுக்குப் போகத்தானே வேண்டும்?” என்று புலவர் வினவினார்.
“மறைவு எத்தனை தூரமிருக்கிறது?” என்று வினவினான் அஜ்மல்கான்.
“இன்னும் அரை நாழிகை நடக்கும் தூரம் இருக்கிறது”
“எந்த இடத்தைச் சொல்கிறீர்கள்?”
“மன்னர் எந்த இடத்திலிருந்து படையைப் பார்க்கிறாரோ அந்த இடத்தைச் சொல்கிறேன்”
“மன்னர் தமது படையை மறைவிடத்திலிருந்து பார்ப்பானேன்?”
“தமது படைகளின் பயிற்சி, விழிப்பு, சன்னத்தம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க மன்னர் மறைவிலிருந்து படைகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பார்வையிடுகிறார்.”
“மன்னருக்கு நல்ல சூட்சம புத்தி.”
அதில் தான் மன்னரிடமிருந்து நாம் மாறுபடுகிறோம்.”
“அப்படியானால் எனக்கு சூட்சம புத்தியில்லை என்கிறீரா?”
“இன்றைய இரவு நடவடிக்கைக்குப்பின் அப்படி யாராவது சொல்வார்களா?”
பின் ஏன் சொன்னீர்?”
“என்னைச் சொல்லிக் கொண்டேன்.” “நம்மை என்றீரே?”
“உனக்குத் தமிழ் அறிவு குறைவாயிருக்கிறது அஜ்மல்கான்.”
“தமிழ் அறிவா?”
“ஆம். இல்லாவிட்டால் நாம், நம்மை என்று பெரியவர்கள் சொல்லும்போது தங்களை மட்டுமே குறிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பாய்.”
“நீர் அத்தனை பெரியவராக்கும்?”
“அப்படித்தான் நமது நினைப்பு” என்று கூறிய புலவர் நடையைத் துரிதப்படுத்தி ஒரு பெரிய மரத்தின் அடிக்கு வந்து சேர்ந்தார். “இந்த மரத்தில் ஏறிப்பார்” என்றும் கூறினார்.
அஜ்மல்கான் மரத்தையும் பார்த்துப் புலவரையும் பார்த்தான். “புலவரே! உஷார். வீணான சிந்தனை ஏதும் வேண்டாம்” என்று எச்சரித்துவிட்டுக் குறுவாளைக் கையில் ஏந்திய வண்ணம் மரத்தின் மீது தொத்தி ஏறி வெளியே கண்களை
ஓட்டினான். அங்கு அரசனின் படையின் ஒரு பகுதி தெரிந்தது. புரவிகளும் காலாட்படைகளும் எங்கும் விரிந்து புது உலகு ஒன்று படைக்கப்பட்டது போல் கிடந்தது. அஜ்மல்கான் படைகளை ஊன்றிக் கவனித்தான். பிறகு மனத்தில்
ஏதோ சந்தேகம் ஏற்படவே விடு விடுவென்று கீழே இறங்கி வந்தான். வந்தவன். புலவர் கழுத்தை இரு கைகளாலும் பிடித்தான். புலவர் கழுத்து மிகப் பெரியதாகக் கைக்கு அடங்காமலிருந்ததால் சினத்துடன் “புலவரே! உண்மையைச்
சொல்லும். இந்த இடத்திலிருந்துதான் மன்னர் படையைக் கவனிக்கிறாரா?” என்று வினவினான்.
“ஆமாம்”
“சத்தியமாக?”
“சத்தியமாக!”
“இந்தப் படையை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்”
“பின்னே எதற்காக என்னைக் காட்டச் சொன்னாய்?”
“இதைக் காட்டச் சொல்லவில்லை, அரசகுமாரி காட்டாத படைப் பகுதியைத்தான் காட்டச் சொன்னேன்.”
இதைக் கேட்ட புலவர் “தவறு உங்கள் இருவர்மேல்” என்று கூறினார்.
“எங்கள் இருவர் மேலா?” உஷ்ணத்துடன் கேட்டான் அஜ்மல்கான்.
“ஆம். அரசகுமாரி காட்டிய பகுதி எது என்பதை நீயும் சொல்லவில்லை, அவளும் சொல்லவில்லை” என்று வெறுப்புடனும் அலுப்புடனும் கூறிய புலவர் “விடு கழுத்தை” என்று கூறி அஜ்மல்கான் கைகளை தனது கழுத்திலிருந்து
அப்புறப்படுத்திவிட்டு, தாழ மண்ணில் படுத்துக் கொண்டிருந்த அந்த மரக்கிளைகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்.
அஜ்மல்கான் வெறுப்பும் கோபமும் நிரம்பிய விழிகளை அவர்மீது நிலைக்கவிட்டான். “புலவரே! உமது ஆயுள் இன்றுடன் முடிந்துவிட்டது” என்று கூறி தனது குறுவாளை மீண்டும் மடியிலிருந்து எடுத்துக் கொண்டான்.
“அது உன் கையிலுமில்லை, என் கையிலுமில்லை” என்றார் புலவர்.
“எது?”
“என் உயிரை முடிப்பது. அது முருகன் திருவுள்ளம்” என்ற புலவர் எதையோ உற்றுக் கேட்டார்.
“என்ன புலவரே?” என்று விசாரித்தான் அஜ்மல்கான்.
“குயில் எங்கோ கூவுகிறது” என்றார் புலவர்.
உண்மையில் அந்த சமயத்தில் குயில் எங்கிருந்தோ பலமுறை கூவியது. திடீரென அந்தத் தோப்புக்குள் திடு திடுவென்று பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. அஜ்மல்கான் புலவரைக் குத்தத் தனது சூறுவாளை ஓங்கினான். ஆனால்
குறுவாளை ஏந்திய கை புலவரின் இரும்புப் பிடியில் இருந்தது. ஒருமுறை அந்தக் கையை புலவர் உதற குறுவாள் கீழே விழுந்தது. அதைக் காலில் மிதித்துக் கொண்ட புலவர் ‘அஜ்மல்கான் ஓடி விடு, தப்பிக்கொள்” என்றார்.
அஜ்மல்கான் விழித்தான். “என்னை ஏன் காப்பாற்றுகிறீர்கள்?” என்று வினவினான்.
.
“உன் நண்பன் உனக்கு எந்தத் தீங்கும் வரக்கூடா தென்று கூறியிருக்கிறான்.”
“யார் படைத்தலைவனா?”
“நான் இங்கு வரப்போவது அவனுக்குத் தெரியுமா?”
“அப்படித்தான் தோன்றுகிறது.”
இன்றுடன் அவன் ஆயுள் முடிந்தது” என்று கூறிக் கொண்டே அஜ்மல்கான் பறந்தான் அந்த இடத்தை விட்டு,
“சொன்னால் இவனுக்குப் புரியவில்லை? யார் உயிரும் இவனிடம் இல்லை “என்ற புலவர் “முருகா! முருகா!” என்று ஆண்டவனை அழைத்தார்.
அங்கிருந்து பறந்த அஜ்மல்கான் படகை எடுத்துக் கொண்டு அஷ்டமுடியின் அக்கரையை அடைந்து தனது கூடாரத்துக்கு விரைந்தான். அங்கு வாயிலைக் காத்து நின்ற இரு அராபிய வீரர்களைக் கேட்டான், “அவன் எங்கே?” என்று.
“உள்ளே இருக்கிறான்” என்றான் வீரரில் ஒருவன்.
அவனிடமிருந்த வாளை உருவித் தன் கையில் எடுத்துக் கொண்ட அஜ்மல்கான் உள்ளே நுழைந்தான் ஆத்திரத்துடன். படைத்தலைவன் அங்கு இல்லை. கூடாரம் காலியாயிருந்தது.