Cheran Selvi Ch28 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 28. புலவரின் போர் வெறி
Cheran Selvi Ch28 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
அரண்மனைக்கு வெளியே படைகள் நகர்ந்த ஒலியைக் கேட்டும் தலையைக்கூட நிமிராமல் பகடையாடுவதிலே கண்ணும் கருத்துமாயிருந்த மன்னனுக்குத் தாம் சளைக்கவில்லை என்பதை – நிரூபிக்க புலவரும் தமது குண்டோதர
சரீரத்தை இம்மியளவும் அசைக்காமல் பகடையிலேயே தமது நினைப்பு பூராவையும் நிலை நிறுத்திப் பகடைக் காய்களின் எண்ணிக்கையைக் கணக் கெடுக்கலானார். மன்னர் இருமுறை கரங்களை உருட்டி “புலவரே! ஆறும் ஆறும்
பன்னிரண்டாகி விட்டது” என்று குறிப்பிட்டான்.
புலவர் அதை ஆமோதித்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்து “ஆம், இன்னும் மூன்று கிடைத்தால் போதும்” என்றார்.
மன்னர் சட்டென்று குனிந்த தலையை நிமிர்த்தி “எதற்கு மூன்று?” என்று வினவினான்.
பதினைந்து ஆவதற்கு?” என்றார் புலவர் மன்னன் கண்களுடன் தமது கண்களைக் கலந்து.
அந்தச் சமயத்தில் அரசகுமாரி வெகுவேகமாக ஆஸ்தான அறைக்குள் நுழைந்து ‘தந்தையே! வாசலில் நமது படை நகர்ந்து கொண்டிருக்கிறது” என்று மூச்சு வாங்கக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து கவீசுவரனான சமுத்திரபந்தனும் “ஆம் மன்னவா! அதை நானும் பார்த்தேன்” என்று ஆத்திரத்துடன் சொன்னான்.
மன்னன் தனது மகளை நோக்கிவிட்டு சமுத்திரபந்தன் மீது கண்களை நிலைக்கவிட்டான். பிறகு சொன்னான் சாதாரணமாக “தாரைகள் ஊதி படைகள் நகரும்போது யாருக்கும் தெரியாமலா இருக்கும்?” என்று.
சமுத்திரபந்தன் கண்களில் சினம் தெரிந்தது. அதன் தலைமையில் பாண்டியன் செல்கிறான்” என்று குறிப்பிட்டான் சினத்தின் உக்கிரம் குரலிலும் ஒலிக்க.
“படைகளை யாராவது நடத்த வேண்டுமல்லவா?” என்றான் ரவிவர்மன்.
சமுத்திரபந்தன் முகம் பிரளயாக்கினியாயிருந்தது. ‘உன் சேனையை நடத்த சேரநாட்டில் யாருமில்லையா?” என்று வினவினான்.
“இருக்கிறார்கள்.” அரசன் பதிலில் சுரணை இல்லை.
“அப்படியானால் பாண்டியன் படைத்தலைவனாகப் போக வேண்டிய அவசியமென்ன?”
“அவனும் தமிழனாயிருப்பதால்”
“எல்லா தமிழரும் ஒன்றா?”
“ஓரினம் என்று தான் சொல்கிறார்கள்”
“அப்படியானால் நீ ஏன் சமஸ்கிருதம் படிக்கிறாய்?”
“அதுவும் நமது நாட்டு மொழியானதால்”
“நாட்டு மொழி எதையும் படிப்பாய்?”
“முடிந்தால் படிப்பேன்” என்ற அரசன் மீண்டும் பகடையைக் கையில் எடுத்தான்,
சமுத்திரபந்தன் “மன்னவா! பகடையாட இது சமயமல்ல” என்று உஷ்ணத்துடன் சொன்னான்.
“ஏனோ? அரசன் கேள்வியில் வியப்பு இருந்தது.
“உன் படை பாண்டியன் தலைமையில் நகர்ந்து விட்டது. அதன் முன்பு கருடன் கொடி புரவியில் பிடித்துச் செல்லப்படுகிறது” என்றான் சமுத்திரபந்தன்.
மன்னன் தனது கண்களை கவீசுவரன் மீது நாட்டினான் மீண்டும். “அதற்கும் நான் பகடையாடுவதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.
சமுத்திரபந்தன் சீறினான் “படை நகரும்போது மன்னன் பகடையாடுவது தவறு. சம்பிரதாயங்கள் உடையும்போது மன்னன் இந்த மாதிரி விளையாட்டில் ஈடுபடுவது கேலிக் கூத்தாகும்” என்று.
“கொடியில் பழைய இலச்சினையான வில்லும் அம்பும் இல்லை என்பது உமக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது?” என்றான் மன்னன் அரியாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு.
“ஆம்” சமுத்திரபந்தன் பதில் திட்டமாகவும் உறுதியாகவும் இருந்தது.
மன்னன் முகவாய்க் கட்டையை இடது கையால் தடவிக் கொண்டான் ஒரு வினாடி.. “கவிபூஷணன் தமது வெற்றிக் கவிதையில் கருடன் கொடியை எழுதி விட்டாரே” என்றான் மன்னன்.
“கவிபூஷணன் கவிதைப்படிதான் இந்த ராஜ்யத்தில் காரியம் நடக்கும் போலிருக்கிறது?” என்று சமுத்திர பந்தன் கேட்டான்.
“கவிகளுக்குப் படிய வேண்டியது மன்னன் கடமை.”
“அப்படியானால் நான் சொன்னபடி கேட்பாயல்லவா?”
“கண்டிப்பாகக் கேட்பேன். அலங்கார சாஸ்திரம் சம்பந்தப்பட்ட வரையில், அந்தத் துறையில் உங்களை விடச் சிறந்தவர் கிடையாது.”
“கவிபூஷணன்?”
“சாஸனக்கவி. என் சாஸனங்களுக்குக் கவிதை வடிக்கிறார்.”
அதுவரை வாளாவிருந்த புலவர் மெள்ள உரையாடலில் இடை புகுந்து “வள்ளுவருக்கும் இது ஒப்புதல்” என்று கூறினார்.
சமுத்திரபந்தன் விழிகள் புலவரை நோக்கின எரிச்சலுடன். “வள்ளுவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கவும் செய்தான்.
“தமிழனின் வாழ்க்கையின் எல்லாத் துறைக்கும் வள்ளுவருக்கும் சம்பந்தம் உண்டு” என்றார் புலவர் மேலுக்கு அடக்கத்துடன்.
சமுத்திரபந்தன் புலவரை இபழ்ச்சியுடன் நோக்கினான். “இந்த படையெடுப்பைப் பற்றி வள்ளுவர் கூறியிருக்கிறாரா?” என்று வினவவும் செய்தான்,
“கூறியிருக்கிறார்” புலவர் குரலில் விஷமமிருந்தது
“என்ன கூறியிருக்கிறார்?” என்று கேட்டான் சமுத்திரபந்தன்.
புலவர் சிறிது சிந்தித்து விட்டு “இந்தப் படையெடுப்பில் கருடன் கொடி உபயோகப்படுத்தப்படுவதை ஆட்சேபித்தீர்கள்” என்றார் மெதுவாக.
“ஆம் ஆட்சேபித்தேன்”
“அது புதுமை என்பதால்?”
“ஆம்”
“பழமையை அதாவது பழைய வில்லு அம்பு சின்னத்தை மன்னன் மாற்றி விட்டது உமக்குப் பிடிக்கவில்லை?”
“இல்லை”
“இங்குதான் வள்ளுவர் வருகிறார்”
“வந்து என்ன சொல்கிறார்?”
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்கிறார். அதாவது பழைய விஷயங்கள் மாறி, புதுமைகள் தோன்றுவது தவறில்லை, காலத்தின் போக்கு அது என்பது தெய்வக் கவியின் வாக்கு,”
இதைக் கேட்ட சமுத்திரபந்தன் “மன்னா, நீ தமிழ்ப் புலவரின் கையாளாகி விட்டாய்” என்றான்.
“இல்லை சுவீசுவரரே. கவிபூஷணனுக்கும் அடிமை தானே, அவர் தமிழ்ப் புலவரல்லவே?” என்றான் மன்னன்.
“அப்படியானால்?” சீறினான் சமுத்திரபந்தன்.
“தமிழ் சமஸ்கிருதம் இரண்டுக்குமே நான் அடிமை” என்ற மன்னவன் புன்முறுவல் கொண்டான்.
அரசன் புன்முறுவல் சுவீசுவரனுக்கு வேப்பங்காயாயிருந்தது. திடீரெனத் திரும்பி அறையிலிருந்து வேகத்துடன் வெளியேறினார். அவர் வேகத்தை மன்னன் கவனித்தான். “அப்பா! இந்த மொழிச் சண்டை எப்பொழுதுதான்
ஒழியுமோ?” என்று அலுத்துக் கொண்டான். பிறகு எட்ட நின்ற மகளை நோக்கி, “இளமதி! நீ ஏதும் பேசவில்லையே?” என்றான்.
“அனாவசியத் தர்க்கத்தில் நான் ஈடுபட இஷ்டப் படவில்லை “ என்றாள் அரசகுமாரி.
“சரி; அவசியமான தர்க்கத்துக்கு வருவோம். என்ன சொல்ல நீ வந்தாய் இங்கே?” என்று வினவினான் மன்னன்.
இளமதி சிறிது நிதானித்தாள் கேட்பதற்கு. பிறகு சொன்னாள். “படைகளை வழியனுப்பக்கூட நீங்கள் வரவில்லை “ என்று.
“இங்கு புலவருடன்…” என்று இழுத்த மன்னன் சொற்களை இடையில் வெட்டிய இளமதி “பகடையாடிக் கொண்டிருந்தீர்கள்” என்றாள். அவள் குரலில் சிறிது கோபங்கூட துளிர்த்தது.
“ஆம்” என்ற மன்னவன் சட்டென்று பகடைக்காய்களை உருட்டினான்.
புலவர் காய்களைப் பார்த்ததும் ‘சரியாகி விட்டது மன்னவா’ என்று குதூகலித்தார்.
“எது சரியாகி விட்டது?” என்று கேட்டாள் அரசகுமாரி.
“ இப்பொழுது மூன்று விழுந்திருக்கிறது” என்று பகடையைச் சுட்டிக் காட்டினார் புலவர்.
‘ஆம்” அரசகுமாரியின் ஆம் தணலாக வெளி வந்தது.
“ஏற்கனவே பன்னிரண்டு எடுத்து விட்டார் மன்னவர்” என்றார் புலவர்,
“அதற்கென்ன?”
“பன்னிரண்டும் மூன்றும் பதினைந்து”
“கணக்கில் புலிதான் நீங்கள்”
“நானல்ல. மன்னவன் அரசகுமாரி மன்னவன்” என்று கூறிய புலவர் மன்னனை நோக்கி, “மன்னவா! பகடையைக்கூட உன்னிஷ்டப்படி வளைக்கிறாய். உன்னிஷ்டப்படி எண்ணிக்கை விழுகிறது” என்று சிலாகித்தார்.
அரசகுமாரி ஏதும் தெரியாமல் விழித்தாள். “ என்ன சொல்கிறீர்கள் புலவரே” என்று வினவினாள்.
“இளவழுதியுடன் அரசன் பெரும்படையில் சிறு பகுதியே போயிருக்கிறது. மொத்தம் பதினையாயிரம் பேர். இந்தக் கணக்கைப் பகடையில் சொல்கிறார் மன்னன்; அரசகுமாரி! உன் தந்தையை நீ இன்னும் சரியாக உணர்ந்து
கொள்ளவில்லை. அவன் பெரும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறான். நமது நாட்டில் மகா வீரர்கள் வரிசையில் மன்னன் இன்று நிற்கிறார். பெரிய இந்து சாம்ராஜ்யமும் அவன் கைகளில் உருவாகிறது.
பகடையாடும் போதும் படையெடுப்பின், எண்ணிக்கையை அவன் மறக்கவில்லை” என்று சொன்ன புலவர் பெருமை ததும்பிய விழிகளை ரவிவர்மன் மீது திருப்பினார்..
ரவிவர்மன் முகத்தில் அதுவரை இருந்த அமைதி சற்று கலைந்திருந்தது. மகளை நிமிர்ந்து நோக்கினான் ரவிவர்மன் குலசேகரன். “இளமதி! உன்னை அஜ்மல்கான் மீது ஒரு கண்ணை வைத்திருக்கச் சொன்னேன் ; அவனைப் பற்றி
ஏதாவது தெரியுமா?” என்று வினவவும் செய்தான்.
நேற்றிரவே மேற்கு நோக்கி மிக விரைவாகச் சென்று விட்டதாக ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றாள் இளமதி.
அரசன் முகம் லேசாக மலர்ந்தது. “ நல்லது” என்றான் அரசன்.
“அடுத்தது நான் என்ன செய்யவேண்டு?” என்று கேட்டாள் இளமதி.
பயணத்துக்குத் தயார் செய்து கொள்” என்று சொன்னான் மன்னன்.
“எங்கு போவதற்கு?” என்று அரசகுமாரி வினவினாள்.
மன்னன் நேரடியாகப் பதில் சொல்லவில்லை “புலவருடன் போவதற்கு?” என்று கூறினான்.
மன்னன் தன் மனதிலுள்ளதை வெளியிட விரும்பவில்லை என்பதை இளமதி புரிந்து கொண்டாள். ஆகையால் “சரி என்று மட்டும் கூறினாள்.
புலவர் ஒரு சந்தேகம் கேட்டார் படையில் எத்தனை பேரை நான் அழைத்துச் செல்லட்டும்?” என்று.
மன்னன் இதழ்களில் இள நகை விரிந்தது. “புலவரே” உமது அறிவு எந்த இதயத்தையும் பிளந்து பார்த்து விடுகிறது. என் இதயம் அதற்கென்ன விலக்கா?” என்று கேட்டுவிட்டு பதினைந்தாயிரம் பேர் போதுமா?” என்று வினவினான்.
“போதும். ஆனால் அதில் புரவிப்படை அதிகம் வேண்டாம்” என்றார் புலவர்.
மன்னன் தலையசைத்தான். “புலவரே! உமது நட்பு சேரநாட்டுக்குக் கிடைத்தது அதன் பாக்கியம்” என்று கூறித் தலைவணங்கினான்.
“இரண்டு நாளில் புறப்படலாமென்றிருக்கிறேன்” என்றார் புலவர்.
“இரண்டு நாட்கள் வேண்டுமா?” அரசன் கேள்வியில் கவலை இருந்தது.
“இரண்டு நாட்கள் விட்டுப் பிடிப்பது நல்லது” என்றார் புலவர்.
“யாரை?” என்று அரசகுமாரி வினவினாள்.
“அஜ்மல்கானை” என்ற புலவர் “நேற்றுதானே புறப்பட்டிருக்கிறான்” என்றும் சமாதானம் சொன்னார்.
அரசன் அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான்.
இளமதிக்கு விஷயம் திட்டமாக விளங்கவில்லையானாலும் அரசனும் புலவரும் ஏதோ மகத்தான திட்டத்தைத் தயாரிப்பதில் முனைந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.
“அப்படியானால் நாளை முதல் தங்கள் போர்த்திட்டங்கள் துவங்கட்டும்” என்றான் ரவிவர்மன்.
“விநாயக பூஜையுடன் துவங்குகிறேன்” என்று அறிவித்தார் புலவர்.
அவர் கூறியபடியே விநாயக பூஜையை மறுநாள் துவங்கினார் புலவர். விநாயக பூஜை அப்படிப் புதுவிதமாக இருக்குமென்று அரசகுமாரிக்கு அது துவங்கும் வரையில் புரியவில்லை. ஆனால் துவங்கியபோது புலவருக் கிருந்த
பக்தியைவிடப் போர் வெறி அவருக்கு அதிகமென்பதை இளமதி புரிந்து கொண்டாள்.