Cheran Selvi Ch3 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 3. சித்திர மாளிகை
Cheran Selvi Ch3 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
இரு காவல் வீரர்களின் வாட்கள் இதயத்தைத் தொட்டு நிற்க, அரண்மனைக் கோட்டைச் சுவர் மீதிருந்த காவலனொருவன் எறிந்த குறுவாள் கழுத்தை நோக்கிச் சீறிவர, சிந்தனைக்கும் மீறிய அபாயமான நிலையில் சிக்கிக் கொண்டவன்
இளவழுதியைத் தவிர வேறெவனா யிருந்தாலும் அவன் கதை அந்த இரவிலேயே முடிந்திருக்கும். ஆனால் அபாயத்தையே சிறு வயதிலிருந்து அனுபவித்து வந்த இளவழுதி அந்தப் பயங்கர நிலையிலும் லேசாக நகைத்தான். நகைத்த
வினாடியில் ஏதோ இந்திர ஜாலவித்தை போல் உருவப்பட்ட அவனது வாள் மார்பைத் தாக்கி நின்ற இரு வாட்களையும் தாக்கி மேலுக்கு உயர்த்தி விட்டதன்றி, மேலிருந்து வந்த குறு வாளையும் வேகத்துடன் தட்டி விட்டதால் அந்த வாள்
அவனை விட்டு சற்று எட்ட இருந்த மரக் கூட்டத்தை நோக்கிப் பறந்தது. அது பறந்த நேரத்தில் எதிரேயிருந்த வீரர்களின் வாட்களையும் அவன் ஏக காலத்தில் தாக்கி விலக்கி விட்டதன்றி, அவர்களில் ஒருவன் தோளிலும் தன் வாளின்
நுனியை மெல்லப் பாய்ச்சிவிட்டு, திட்டி வாசலுக்குள் காற்றின் வேகத்தில் புகுந்துவிட்டான். தோளில் காயம்பட்ட வீரன் அலறியதாலும் வாள் அகற்றப்பட்ட மற்றொரு வீரன் “உள்ளே விடாதீர்கள், புடியுங்கள்” என்று கூச்சல் போட்ட
காரணத்தினாலும் திட்டி வாசலுக்குள் அவன் நுழைந்ததும் மற்றும் பல வீரர்கள் அவனைத் துரத்தலானார்கள். அப்படித் துரத்தப்பட்ட சமயத்திலும், சுமார் பதினைந்து வீரர்களை ஒருவன் சமாளிப்பது நினைக்கத்தகாத செயலானாலும்,
இளவழுதி சட்டென்று திரும்பி, முன்னால் வந்த இரு வீரர்களை மட்டும் அவர்கள் வாட்கரங்களைக் காயப்படுத்தியும் இன்னுமிருவர் வாட்களைத் தன் வாளால் சுழற்றிப் பறக்கவும் செய்து விட்டு எதிரே தெரிந்த அரண்மனை நந்தவனத்தில்
புகுந்துவிட்டான். நந்தவனம் மிக அடர்த்தியாயிருந்ததால் அவன் அங்கிருந்து கொண்டு தன்னைத் துரத்திய வீரர்களைப் பார்க்க முடிந்ததே தவிர, வீரர்கள் அவனைப் பார்க்க முடியாததால் அவர்கள் பரஸ்பரம் பேசிக்கொண்டதையும்,
அவர்களிலொருவன் காட்டிய சைகையைக் கண்டு பந்தங்கள் பல வந்துவிட்டதையும் கவனித்த இளவழுதி, நந்தவனமும் சல்லடை போட்டு சலிக்கப்படு மென்பதையும், தன் ஆபத்து இன்னும் நீங்க வில்லையென் பதையும் புரிந்து
கொண்டான்.
அந்தச் சமயத்தில் அவன் சிந்தனை, கடலருகே தான் கண்ட சித்தினியை நோக்கிச் செல்லவே, இத்தனைக்கும் அவள் தான் காரணமென்பதைச் சந்தேகமற உணர்ந்ததால் சீற்றமும் கொண்டான். சர்வசாதாரணமாக அரண்மனைப்
பெருவாயிலில் போயிருந்தால் தான் சிறிதளவு சங்கடங்கூட இல்லாமல் அரசமாளிகையை அடைந்திருக்க முடியுமென்பதையும், யாரும் புகத்தகாத திட்டி வாசலில் தன்னைப் புகச்செய்த அந்தப் பெண் வேண்டுமென்றே தனக்கு அந்த
வழியைக் காட்டியிருக்கிறாளென்பதையும் நினைத்துப் பார்த்து “இதனால் அவளுக்கு என்ன லாபம்!” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும், விடை ஏதும் கிடைக்காததால் தன் தலையை ஒரு முறை குழப்பத்துடன் ஆட்டினான்.
அந்தச் சமயத்தில் நந்தவனத்துக்குள் பந்தங்களின் வெளிச்சம் வரத் துவங்கவே இனி அங்கு தாமதிப்பதில் பொருளில்லையென்பதைப் புரிந்து கொண்ட அந்த வாலிப வீரன் சட்டென்று திரும்பி நந்தவனத்துக்குள் நடந்து விட்டான்
வெகுவேகமாக. நந்தவனம் மிக அழகாயிருந்தாலும், செண்பக மரங்களும் முல்லைக் கொடிகளும் தங்கள் புஷ்பங்களை அவன் மீது உதிர்த்தாலும் அவற்றை யெல்லாம் ரசிக்கும் நிலையில் மனம் இல்லாததால் அவன் சற்று வேகமாகவே
நந்தவனத்துக்கு அப்பால் தெரிந்த ஒரு பெரிய மாளிகையை நோக்கிச் சென்றான். அந்த மாளிகை முகப்பை அடைந்ததும் அங்கு யாராவது காவலர் இருப்பார்களோவென்ற நினைப்பால் கண்களை அந்த மாளிகையின் பிரும்மாண்டமான
தூண்களை நோக்கித் துருவவிட்டான். அங்கு யாரும் இல்லையென்பதை அறிந்ததால் வாளை மீண்டும் உறையில் போட்டுக் கொண்டு நந்தவனத்திலிருந்த ஒரு மரத்தில் சிறிது நேரம் சாய்ந்து நின்றான். பிறகு காவலற்ற அந்த
மாளிகையில் முன்புறத் தூண்களை நோக்கி ஓடி ஒரு தூணின் மறைவில் சட்டென்று மறைந்தான். பிறகு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு எதிரே தெரிந்த ஒரு பெருங்கதவை நோக்கி நடந்தான்.
நடந்த அந்த சமயத்தில் அவன் மனத்தில் சந்தேகங்கள் பல எழுந்து நின்றன. ‘இத்தனை பெரிய மாளிகையில் ஏன் காவல் ஏதும் அடியோடு இல்லை, பெரிய விளக்குகள் ஜாஜ்வல்லியமாக எரிகின்ற காரணத்தினாலா? அப்படி விளக்குகள்
எரிவதால் நான் இங்கு உலாவுவது தூரத்திலுள்ள எந்தக் காவல் வீரனுக்கும் தெரிய வேண்டுமே. அப்படித் தெரிந்தால் அவர்கள் ஏன் எச்சரிக்கைக் குரல் கொடுக்கவில்லை? நந்தவனத்துக்குள் என்னை தொடர்ந்த வீரர்கள் என்ன
ஆனார்கள்?” ஆகிய பல கேள்விகள் மனத்தே எழுந்ததால் அந்த மாளிகையில் ஏதோ பெரிய மர்மம் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான் இளவழுதி,
அத்தகைய நினைப்புகளுடன் சட்டென்று அந்த மாளிகையில் நடையை நிறுத்தி, தான் நின்றிருந்த இடத்தையும் நன்றாகக் கவனித்தான். மாளிகை முகப்புத் தாழ்வரையின் பிரும்மாண்டமான தூண்கள் ஒவ்வொன்றிலும் பல்வகை
வண்ணச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஒரு தூணில் பெண்ணொருத்தி நீராடியதால் நனைந்த குழலுடனும் உடையுடனும் குடமேந்தி நின்றாள்.இன்னொரு தூணில் இன்னொருத்தி கன்னத்தில் கையை வைத்து ஏதோ
சிந்தனையுடனிருந்தாள். மற்றொன்றில் ஒரு பெண் தன் மார்புக்கச்சையிலிருந்த குறுவாளை உருவிக் கொண் டிருந்தாள். அத்தனை சித்திரங்களும் எந்த நிலையிலிருந்தாலும் தன்னை உற்றுப் பார்ப்பது போலிருந்த பிரமையே
ஏற்பட்டது இளவழுதிக்கு. அந்த முகப்புத் தாழ்வரையில் கூரையை நோக்கினான் வாலிபனான இளவழுதி. அங்கு ஒரு அரச குமாரன் ஒரு பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணுக்கும் அது
இஷ்டமாயிருந்தாலும் இஷ்டமில்லாதது போல் நாணப் பார்வை பார்த்தாள் அவள்,
இந்த ஓவியங்களைப் பார்த்த இளவழுதி தான் சேர மன்னனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் சரியாகத் தானிருக்கிறதென்று நினைத்தான். அரசன் கலைப்பிரியனென்றும், பெரிய கவியென்றும் அவன் கேள்விப்பட்டிருந் தான். தவிர
சேரன் மகாவீரனென்றும், வாட்போரிலோ, விற்போரிலோ, மற்போரிலோ அவனை யாரும் வெற்றி கொள்ள முடியாதென்பதையும் அவனை சேர நாட்டுக்கு அனுப்பிய பெரியவர் சொல்லியிருந்தார். அவர் தன்னை எச்சரித்த முறை
அப்பொழுதும் அவன் நினைவிலிருந்தது. “இளவழுதி; நீ உக்கிரப் பெருவழுதியின் வமிசத்தில் வந்தவன். அதனால் தான் தற்காலத்தில் பழக்கமில்லாத அந்தத் தூய தமிழ்ப் பெயரையொட்டி உனக்கு இளவழுதி யென்று பெயரிட்டேன்.
இப்பொழுது தமிழ்நாடு இருக்கும் நிலை உனக்குத் தெரியும். இஸ்லாத்தின் உருவியவாள் பாண்டிய அரசை இரண்டாக வெட்டி விட்டது. சில மாதங்களில் பெரும் அனர்த்தங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து நாட்டைக் காப்பாற்றக்
கூடியவன் சேரமன்னன் ஒருவன் தானிருக்கிறான். அவன் கலையில் கைதேர்ந்தவன். சமஸ்கிருதத்தில், பெரிய பண்டிதன், சமரில் நிகரற்றவன். அவனைத் தமிழகம் சங்கிரமதீரன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கிறது. அவனை நீதான் இந்த
நாட்டைக் காக்க அழைத்து வரவேண்டும்” என்றார் பெரியவர்.
“நான் எப்படி அரசரை அழைத்து வரமுடியும்?’ என்று வினவினான் இளவழுதி.
“அவன் பெண்ணை முதலில் சந்தித்துவிடு. அவளிடம் இந்த ஓலையைக் கொடு” என்று கூறி ஒரு ஓலையையும் அவனிடம் கொடுத்தார்.
“‘முடியாத பணியில் ஏவுகிறீர்கள், புலவரே! அரச குமாரியை நான் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டான் இளவழுதி.
“உன்னால் முடியாது என்று நான் நினைத்திருந்தால் உன்னை நான் அனுப்ப மாட்டேன்” என்ற புலவர், “இன்றே புறப்படு, தொண்டியிலிருந்து கடல் மார்க்கமாக” என்றார்.
“ஏன் கடல் மார்க்கமாகப் போகவேண்டும்?” என்று வினவினான் இளவழுதி.
“தரை வழியை இஸ்லாமியப் படைகள் அடைத்து விட்டன. தவிர அஜ்மல்கானும் கடல் வழியாகத்தான் போகிறான்” என்று பெரியவர் கட்டிக் காட்டினார்.
“யாரது அஜ்மல்கான்”
“மதுரையை ஆக்ரமித்துவிட்ட மாலிக்காபூரின் அந்தரங்க ஒற்றன்.’
“அவன் ஏன் சேரநாடு செல்கிறான்?”
“எனக்குத் தெரியவில்லை.”
சிறிது சிந்தனை வசப்பட்டான் இளவழுதி. “அரசகுமாரியின் பெயர்?” என்று கேட்டான் சில வினாடிகளுக்குப் பிறகு.
“இளமதி” என்றார் பெரியவர், அதுவரை கவலையுடனிருந்த முகத்தில் சிறிது மகிழ்ச்சியைப் பரவவிட்டு.
“இளமதி. எத்தனை அழகான பெயர்” என்றான் இளவழுதி.
“அழகுக்குத் தகுந்த பெயர். நேரில் பார், சித்திரப் பாவையாயிருப்பாள்” என்றார் பெரியவர்.
அதற்குப் பிறகு அவர் ஏதும் சொல்லவில்லை.
அவனைத் தொண்டியில் கப்பலில் ஏற்றிவிட்டார். பத்து நாள் கப்பல் பயணத்துக்கப்பால் கொல்லம் துறை முகத்திலிறங்கியபோது இளமதியைச் சந்தித்த இளவழுதி, “இந்தப் பெண்ணே இத்தனை அழகாயிருக்கும் போது இளவரசி
எப்படியிருப்பாளோ?” என்று எண்ணிப் பார்த்தான்.
அந்த எண்ணம் சித்திரமாளிகையின் முகப்புத் தாழ் வரையிலும் அவன் அகக்கண்ணில் எழுந்து உலாவியதால் சிறிது புன்சிரிப்பும் கொண்டான்.
இத்தகைய நினைப்புகளில் ஆழ்ந்து நிலைத்து நின்று விட்ட காரணத்தால் அம்மாளிகைத் தாழ்வரையின் கோடியிலிருந்த கதவு திறக்கப்பட்டதையோ, அதிலிருந்து ஆஜானுபாகுவான ஒரு மனிதன் வெளிப்போந்ததையோ இளவழுதி
கவனிக்கவில்லை. அந்த உருவம் ஓசைப்படாமல் வந்து அவனுக்குப் பின்னால் நின்று அவன் தோள் மீது கையை வைத்தபின்பே கனவுலகத்திலிருந்து திரும்பிய இளவழுதி சட்டென்று தனது வாளின் பிடிமீது கையை வைத்தான்.
ஆனால் அந்தக் கையை அசைக்க முடியவில்லை அவனால். பின்னால் வந்த மனிதன் கையொன்று இளவழுதி யின் வலது கரத்தை இரும்பு சலாகையைப் போல் அசைய வொட்டாமல் பிடித்தது. அத்துடன் அந்த மனிதன்
இளவழுதியின் காதுக்கருகில் குனிந்து, “வாளுக்கு அவசிய மில்லை. சத்தம் செய்யாமல் என்னைத் தொடர்ந்து வா” என்று மிக மெதுவாகக் கூறினான். பிறகு சட்டென்று திரும்பி, தான் வந்த கதவை நோக்கி நடந்தான்.
திடீரென நிகழ்ந்த அந்த விசித்திரத்துக்குக் காரணத்தை அறியாத இளவழுதியும் அந்த மனிதனைத் தொடர்ந்து சென்றான். அவனுடன் அந்த வாயிலிலும் நுழைந்தான். அவன் நுழைந்ததும் கதவு சட்டென்று தாழிடப்பட்டது. வந்த
மனிதனின் இரும்புக்கை அவன் கையைப் பிடித்து உயர ஓடிய படிகளில் அவனை அழைத்துச் சென்றது. எங்கும் இருட்டாயிருந்தபடியால் படிகள் கண்ணுக்குப் புலப்படவில்லையானாலும் இள வழுதி அந்த மனிதனுடன் மிகுந்த
எச்சரிக்கையுடன் ஏறிச் சென்றான். படிகளின் உச்சியில் விளக்கொன்று தெரிந்தது. அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது இளவழுதிக்கு
அங்கு நின்றிருந்த உருவத்திடம் அந்த மனிதன் சொன்னான்: “கொண்டு வந்து விட்டேன் இவனை. எதற்கும் அந்த அறையில் வைத்துப் பூட்டி விடு” என்று.
அந்த உருவமும் அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தது.