Cheran Selvi Ch32 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 32. குஸ்ரூவின் தாராளம்
Cheran Selvi Ch32 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
இன்ப லாகிரியில் திளைத்ததால் சூழ்நிலை மறந்து விட்ட இருவரும் மரத்தடியைப் பார்த்ததும் திக் பிரமையை அடைந்து விட்டார்களென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. இருவரில் முதலில் விழிப்படைந்த இளவழுதி தன்
கதியும் இளவரசியின் கதியும் அதோகதிக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். இளவழுதி தன்னை ஆண்மகன் என நினைத்துப் பாய்ந்த சமயத்தில் தனது இடைக்குறுவாளும் கீழே விழுந்து விட்டதால் தனக்கு ஆயுதப் பாதுகாப்பு
ஏதுமில்லையென் பதையும், சற்று எட்டக் கிடக்கும் அது தன் கைக்குக்கிட்ட வாய்ப்பில்லையென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்ட இளமதி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சிந்தனையில் மூழ்கிச் செயலற்று நின்றாள். இந்த
நிலைக்கும் இளவழுதி ஏதாவது வழி வகுப்பானென்ற எண்ணமும் அடுத்த சில வினாடிகளில் அவளை விட்டு அகலவே சிறிது பீதிக்கும் உள்ளானாள் சேரன் செல்வி.
மரத்தடியையும் அதன்கீழ் கூட்டமாக நின்ற பத்து எதிரி வீரர்களையும் கண்ட இளவழுதி சிறிது நேரம் சிந்தனை வசப்பட்டாலும் கடைசியாகத் துன்பப் பெருமூச்சே விட்டு “உங்களை நான் இங்கு எதிர்பார்க்க வில்லை”யென்று தோல்வி
தொனித்த குரலில் கூறினான். மரத்தடியில் மிக உயரமாக இடையில் பெரும்வாளையும் மார்பில் இரும்புக் கவசத்தையும் அணிந்திருந்த ஒருவனை நோக்கி.
“என்னை உனக்குத் தெரியுமா?” என்று வினவினான் அந்த வீரன். அப்படிக் கேட்டபோது அவன் குரலில் சிறிது வியப்பும் இருந்தது.
“அமீர் குஸ்ரூகானைத் தெரியாதவர்கள் யார் இருக்க முடியும்?’ என்று சொன்ள இளவழுதியின் குரலில் மரியாதை இருந்தது.
குஸ்ரூவின் புருவம் சற்று மேலெழுந்தது, பின்பு சுளித்தது, “நான் இங்கிருப்பது எப்படித் தெரிந்தது உனக்கு? அதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறேனே?” என்று கேட்டான் குஸ்ரூகான்.
“நாம் ரகசியமென்று நினைப்பதெல்லாம் எப்படியோ வெளி உலகுக்குத் தெரிந்துவிடுகிறது. தவிர சூரியனை விசிறி மறைத்துவிட முடியாது. மாலிக்காபூரைவிட கில்ஜி நவாபுக்கு அந்தரங்கமான குஸ்ரூகான் மாலிக்காபூருடன் தான்
வந்ததையோ பிறகு எக்காரணத்தாலோ இங்கு தங்கி விட்டதையோ நாங்கள் அறிவோம்” என்று இளவழுதி பேச்சுக் கொடுத்தான்.
குஸ்ரூவின் ரத்த விழிகள் நன்றாக மலர்ந்தன கோபத்தால். “நாங்கள் என்றால் இன்னும் யார்?” என்று வினவினான்.
“புலவர்” இளவழுதியின் பதில் விரைவில் உதிர்ந்தது.
புலவர் என்ற சொல்லைக் கேட்டதும் குஸ்ரூகான் முகத்தில் கோபம் அதிகமாக விரிந்தது. “யாரந்தப் புலவன் என்பது எனக்கு விளங்கவில்லை. எந்தச் செய்தியானாலும் அது ‘புலவன்’ என்ற சொல்லில் போய் முடிகிறது” என்று
அலுத்துக்கொண்ட குஸ்ரூகான் “அவன் என் கையில் அகப்பட்டால் கழுத்தை முறித்து விடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறினான்.
இளவழுதி நகைத்தான். “குஸ்ரூகான் அந்த ஒரு விஷயம் உங்களால்கூட முடியாது” என்றான்.
“ஏன்?” அதட்டலாக எழுந்தது கேள்வி.
“புலவர் கழுத்து மிகப் பெரியது. யார் கையிலும் அடங்காது” என்றான் இளவழுதி நகைப்பின் ஊடே.
குஸ்ரூகான் தன் கைகளைப்பிரித்தான். “சரி; அதையும் பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே “இளவழுதி! உன் உடைவாளை அவிழ்த்துக் கீழே போடு” என்று உத்தரவிட்டான்.
எதிர்ப்பினால் பயனில்லையென்பதை உணர்ந்து கொண்ட, இளவழுதி தன் வாளைக் கச்சையிலிருந்து அகற்றி இளவரசியின் வாளுக்குப் பக்கத்தில் விட்டெறிந்தான்.
“வாட்களும் அக்கம்பக்கத்தில் தான் படுத்திருக்கின்றன” என்று நகைத்த குஸ்ரூகான் “அவர்களிருவரையும் புரவியில் ஏற்றுங்கள்” என்று உத்தரவிட்டான் தன் வீரர்களுக்கு.
அதைக் கேட்டதும் சினத்தை முதன் முதலில் காட்டிய இளவழுதி “அரசகுமாரியை யார் தொட்டாலும் பிணமாகி விடுவீர்கள்” என்று தன் அங்கியில் மறைத்திருந்த குறுவாளை கையில் எடுத்துக் கொண்டான். “குஸ்ரூகான்! நான் தப்ப
உத்தேசமில்லை. தப்பவும் முடியாது. ஆகையால் உன்னுடன் வருகிறேன். ஆனால் அரசகுமாரி மீது யார் கை வைத்தாலும் அதனை வெட்டிப் போடுவேன் என்பதில் ஐயம் வேண்டாம்” என்ற இளவழுதி “அரசகுமாரி புரவியில் ஏறிக்கொள்”
என்று கூறி அவளைப் புரவியில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
குஸ்ரூகான் அவர்களைத் தடை செய்யவில்லை. அவர்களிருவரும் புரவியில் ஏறிக் கொண்டதும் “இளவழுதி நீ தப்ப முயலாத வரையில் இளவரசிக்கு ஆபத்து ஏதுமில்லை. அதற்கு குஸ்ரூகானின் ஆணையிருக் கிறது. தப்ப முயன்றால்
அவள் கதியைப் பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டுத் தன் வீரர்களை அவ்விருவரையும் சூழ்ந்து கொள்ள உத்தரவிட அந்தச் சிறு கூட்டம் நகர்ந்தது.
வீரர்களுக்கிடையே சென்ற இளமதி இருமுறை இளவழுதியை நோக்கினாள். இளவழுதி அவளைப் பார்க்கவில்லை. தலையைக் குனிந்த வண்ணம் புரவியில் பயணம் செய்தான். அவன் தீவிர சிந்தனையிலிருக்கிறான் என்பதை உணர்ந்து
கொண்ட இளமதி துன்பம் நிறைந்த உள்ளத்துடன் பயணம் செய்தாள். ராஜா இஷ்டப்பட்டால் ஒரே பாய்ச்சலில் படைத்தலைவனை அந்தக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்திவிட முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாளாதலால்,
அப்படித் தப்பித் தன்னையும் தப்புவிக்க ஏன் அவன் முயலவில்லை என்பதை எண்ணிப் பார்த்துப் பார்த்து விடை கிடைக்காததால் சிந்திப்பதையும் கைவிட்டாள்.
இப்படித் துவங்கிய பயணம் ஒரு நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்தது. இரண்டாம் நாளிரவில் ஒரு மலைப்பகுதியின் உச்சியிலிருந்த கூடாரத்துக்கு அவர் களைக் கொணர்ந்த குஸ்ரூகான் அவர்களைப் புரவிகளிலிருந்து இறங்கச்
சொல்லி அந்தக் கூடாரத்துக்குள் செல்லும்படி கட்டளையிட்டான். அவன் உத்தரவுப்படி அவர்கள் கூடாரத்தை அணுகியதும் “உள்ளே செல்லலாம். அங்கு உங்கள் நண்பர் இருக்கிறார்” என்றான் குஸ்ரூகான்.
இதைக் கேட்ட சேரன் செல்வி வியப்படைந்தாளானாலும் எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாத இளவழுதி புரவியிலிருந்து இறங்கி அவளையும் இறக்கிக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றான். அங்கு கண்ட காட்சி அவனுக்கு
அதிர்ச்சிக்குப் பதில் வியப்பையே தந்தது. அங்கு ஒரு மஞ்சத்தில் அஜ்மல்கான் அமர்ந்திருந்தான். அவன் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டிருந்தன.
அஜ்மல்கான் உள்ளே நுழைந்த இருவரையும் நோக்கி “உங்கள் விளையாட்டின் பயனை நாளை அனுபவிப்பீர்கள்” என்றான் கொதிக்கும் குரலில்.
“விளையாட்டா?” ஏதும் புரியாமல் கேட்டான் இளவழுதி.
“ஆம். குஸ்ரூகான் மதுரையிலிருப்பதாக எனக்குப் பொய் சேதி சொல்லி அனுப்பவில்லை நீ?” சீறினான் அஜ்மல்கான்.
இளவழுதி உண்மையாகவே பிரமித்தான். “நீ சொல்வது விளங்கவில்லை” என்றான் பிரமிப்பு குரலிலும் ஒலிக்க.
“கொல்லத்தில்.” அஜ்மல்கான் மூச்சு திணறியது கோபத்தில்.
“உம்?” இளவழுதியின் ‘உம்’மில் குழப்பமிருந்தது.
“குஸ்ரூகான் மதுரையிலிருப்பதாக சீலையில் எழுதி வைக்கவில்லை நீ?”
இளவழுதிக்கு மெள்ளப் புரிந்தது. சேர மன்னர் இவர்களை எப்படியோ குழப்பியிருக்கிறாரென்று. அதை வெளிக்குக் காட்டாமல் கேட்டான் ““அதனாலென்ன?” என்று.
“மதுரையில் இல்லை எங்கள் படைத்தலைவர் என்றான் அஜ்மல்கான்.
“வேறு எங்கு இருந்தார்?”
“இங்குதான்”
“அவர் படை?”
“அதுவும் இங்கிருக்கிறது.”
இளவழுதி சிந்தனையிலிறங்கினான். படை முழுவதுமா?” என்று கேட்டான் சிறிது சிந்தனைக்குப் பிறகு.
“ஆம்!”
“அப்படியானால் புலவர் மதுரையைத் தாக்கினால் அதன் கதி?”
“புலவர் தாக்கமாட்டார்.”
“ஏன்?”
“அவரையும் பிடித்து வர ஏற்பாடாகியிருக்கிறது!”
“என்ன ஏற்பாடு?”
“அது தெரியாது எனக்கு, ஆனால் குஸ்ருகானால் எதையும் சாதிக்க முடியும்.”
“அது புரிகிறது எனக்கு. எங்களை சிறை செய்து இங்கு கொண்டு வந்திருப்பதே அதற்கு அத்தாட்சி. சரி, உன்னை எதற்காகக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்?”
இதற்கு அஜ்மல்கான் பதில் சொல்லவில்லை. கூடாரத்துக்குள் நுழைந்த குஸ்ரூகானே பதில் சொன்னான். “காரணம் ஒரு சீலை” என்று.
‘சீலையா!”
“ஆம்.”
“எந்தச் சீலை”
பதிலுக்கு குஸ்ரூகான் தனது கச்சையிலிருந்து ஒரு சீலையை எடுத்து நீட்டி, “இதைப்பார் இளவழுதி. நீ கொடுத்தது தான்” என்று கூறினான்.
இளவழுதி அந்த சீலையை வாங்கிக் கொள்ளு முன்பே அதைப் பற்றி புரிந்து கொண்டான் சேர மன்னன் போர்த் திட்டத்தைப்பற்றி. தான் தயாரித்த பொய்ச் சீலையென்பதை, இருப்பினும் அப்பொழுது தான் அதைப் புதிதாகப்
பார்ப்பவனனப் போல் பாசாங்கு செய்து அதைக் கையில் வாங்கினான்.
“பிரித்துப் பார்.” அதிகாரத்துடன் வெளி வந்தது குஸ்ரூகான் உத்தரவு.
பிரித்து விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தான் இளவழுதி. “அரசர் போர்த்திட்டம்” என்றும் சொன் னான் பொய்த் திகிலைக் குரலில் காட்டி.
“இல்லை, போர்த்திட்டமில்லை.” குஸ்ரூகான் குரலில் கடுமை இருந்தது.
“பின்?”
“பொய்த்திட்டம். என் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த முட்டாளிடம் உன்னால் கொடுக்கப்பட்டது!”
இளவழுதி பதில் சொல்லவில்லை. குஸ்ரூகானே பேசினான்.
“இதைப் பார்த்ததுமே பொய்யென்று புரிந்து கொண்டேன். இந்தச் சீலையிலுள்ள வழிகளின் முடிவு எதிலும் பாசறை அமைக்க முடியாதென்பது தெளிவாகத் தெரிந்தது” என்ற குஸ்ரூகான் வார்த்தையை முடிக்க வில்லை. அவன்
முடிக்காமல் விட்டதிலேயே மிகக் குரூரம் ஒலித்தது.
“அதனால்?” என்று கேட்டான் இளவழுதி.
“அஜ்மல்கான், மாலிக்காபூரின் ஒற்றர், இந்தக் கதியை அடைந்தார்” என்று அஜ்மல்கானின் கையும் காலும் பிணைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினான் குஸ்ரூகான்.
இளவழுதி புரிந்து கொண்டான், அஜ்மல்கான் தன் முட்டாள் தனத்துக்குப் பலியாகப் போகிறான் என்பதை. ஆகவே தைரியமாகவே கேட்டான், “எங்களுக்கும் அதே கதிதானே” என்று. “சரி, கட்டிப்போடுங்கள்” என்றும் அசட்டையாகக்
கூறினான்.
.
குஸ்ரூகான் பதில் பெரு வியப்பை அளித்தது இளவழுதிக்கும் இளமதிக்கும். “வீரர்களை நான் கட்டுவது கிடையாது” என்றான் குஸ்ரூகான்,
“இளவழுதி! நாளை நான் மதுரைக்குக் கிளம்புகிறேன். அதுவரை தப்பமுயல்வதில்லை என்று வாக்களித்தால் இந்தப் பகுதியில் என் கட்டுக் காவலில் சுதந்திரமாக உலாவலாம் நீங்கள் இருவரும்” என்று கூறினான்.
குஸ்ருகான் பரந்த மனப்பான்மை திக்பிரமை அளித்தது இளவழுதிக்கு. ஆகவே “அப்படியே உறுதி கூறுகிறேன்” என்றான் இளவழுதி.
குஸ்ருகான் புன்முறுவல் செய்தான். கையை இரு முறை தட்ட வீரனொருவன் இளவழுதியின் வாளை ஏந்தி உள்ளே வந்தான். “இது உன் வாள். அதன் மேல் ஆணையிடு” என்று குஸ்ரூகான் புன்முறுவலுடன் கூறினான். இளவழுதி
ஆணையிட்டான். கயிறுகளால் பிணைப்பதைவிட பலமான பிணைப்பைத் தனக்கு ஏற்படுத்திவிட்டதை உணர்ந்தான் சேரர் படைத் தலைவன்.
“என்னையும் அவிழ்த்து விட்டாலென்ன?” என்று கெஞ்சினான் அஜ்மல்கான்.
வெளியே செல்லத் திரும்பிய குஸ்ரூகான் திரும்பினான். “நீ வீரனல்ல” என்று கூறிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான்.