Cheran Selvi Ch33 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 33. இளமதியின் கதி
Cheran Selvi Ch33 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
மாலிக்காபூருக்கு அடுத்தபடி நவாப் அலாவுதீன் கில்ஜிக்கு மிக அந்தரங்கமானவனும், மாலிக்காபூரைப் போல் அத்தனை வீரனல்ல என்றாலும் நுட்பமான புத்தியை உடையவனுமான குஸ்ரூகான் வெளியே சென்றதும் தனியாக
விடப்பட்ட மூன்று கைதிகளில் கைகால் கட்டப்படாத இரு கைதிகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “அரச குமாரி! நீங்கள் வேண்டுமானால் அந்த மஞ்சத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள், நீண்ட தூரம் பயணம்
செய்திருக்கிறீர்கள்” என்று கூறி அஜ்மல்கான் உட்கார்ந்திருந்த மஞ்சத்தைச் சுட்டிக் காட்டினான் இளவழுதி.
இளமதி தனது அழகிய விழிகளில் வியப்பு விரிய இளவழுதியை உற்று நோக்கி “அங்கு எப்படி நான் உட்கார முடியும்?” என்று வினவினாள்.
“ஏன்? உட்கார்ந்தாலென்ன?’ என்று இளவழுதி வினவினான் சர்வ சாதாரணமாக.
“ஒற்றர்பிரான் உட்கார்ந்திருக்கிறாரே?” என்றாள் இளமதி.
“அவரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவரை எடுத்துக் கீழே இந்த மூலையில் போட்டு விடுகிறேன்” என்று கூடாரத்தின் ஒரு மூலையைக் கையால் ஆட்டிக் காட்டினான் சேரர் படைத்தலைவன்.
அதுவரையில் மௌனமாயிருந்த அஜ்மல்கான், அவர்கள் உரையாடலைக் கேட்டதும் கொந்தளித்தான். “கை கால் கட்டப்பட்டிருப்பதால் என்னால் எழுந்திருக்க முடியாதென்ற தைரியத்தில் பேசுகிறாய்?” என்று இளவழுதியை நோக்கிப்
பேசினான் அவன், கொந்தளிப்பு குரலிலும் சந்தேகமற ஒலிக்க.
இளவழுதி தனது கூரிய கண்களை அவன்மீது நிலைக்க விட்டான். “அறிவாளியை எந்தப் பிணைப்பும் அதிக நாள் பிணைக்காது” என்றான் இளவழுதி சிறிது சிந்தனைக்குப்பிறகு. அவன் பார்வையிலும் சரி பேச்சிலும் சரி ஏதோ ஒரு
தனி அழுத்தமும் குறிப்பும் இருப்பது நன்றாகத் தெரிந்தது அஜ்மல்கானுக்கு. அவன் அவ்விதம் பேசியதைக் கேட்டதும் இளமதி கூட சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் பார்வையையும் அதில் தொக்கி நின்ற கேள்வி யையும் அவன் பார்க்கவே செய்தானானாலும் அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அஜ்மல்கானை நோக்கி, “நான் சொல்வது புத்தியுள்ளவர்களுக்குப் புரியும்” என்று
சொல்லிவிட்டுக் கூடாரத்தைவிட்டு வெளியேறினான்.
தனியே விடப்பட்ட மற்ற இருவரும் சிறிது நேரம் மௌனமே சாதித்தார்கள். கடைசியில் அஜ்மல்கானே சொன்னான். “அரசகுமாரி! இந்த மஞ்சத்தில் ஒரு ஓரத்தில் உட்காருங்கள்” என்று அதைச் சொல்லி தானிருந்த மஞ்சத்தின் ஒரு
கோடியைக் காட்டினான்.
அரசகுமாரி அவனுக்குப் பதிலும் சொல்லவில்லை. அவன் காட்டிய இடத்தில் உட்காரவுமில்லை. கூடாரத்தில் அவனெதிரே சிறிது தூரம் குறுக்கும் நெடுக்கும் உலாவினாள். பிறகு கூடாரத்தின் தரையில் ஒரு மூலையில் போய்
உட்கார்ந்து கொண்டாள். ஆனால் அஜ்மல்கான் விடவில்லை. “அரசகுமாரி நாம் ஏதாவது செய்து தப்பினாலொழிய நாளைக்குக் கொல்லப்படுவோம்” என்று குறிப்பிட்டான். அவன் குரலில் அச்சம் பெரிதும் பரவிக்கிடந்தது.
இளமதி அதுவரை குனிந்திருந்த தலையை லேசாக நிமிர்த்திளாள். “நாளையைப்பற்றி இன்றைக்கென்ன கவலை?” என்று கேட்டாள்.
“உயிரைப் போக்கிக் கொள்வதில் அத்தனை ஆசையா உனக்கு?” என்று வினவினான் அஜ்மல்கான்.
“ஆசையுமில்லை, அச்சமுமில்லை” என்றாள் இளமதி வெறுப்புடன்.
“இந்த இளவழுதியிருக்கிறானே…” என்று துவங்கினான் அஜ்மல்கான்.
“அவருக்கென்ன?” சுள்ளென்று வந்தது அரசகுமாரியின் பதில்.
“அவனால்தான் இத்தனை கேடும் விளைந்தது. அவன் செயலால் தான் நாம் நாளை இறக்கப் போகிறோம்’ என்றான் அஜ்மல்கான் வெறுப்பு நிரம்பிய குரலில்.
“அவர் அப்படி என்ன செய்தார்?”
“என்னிடம் உண்மைப் போர்த்திட்டத்தைச் சொல்லாமல் பொய் சீலையை எழுதிக் கொடுத்தான்.குஸ்ரூகான் மதுரையில் இருந்தது தெரிந்தும் தெரியாதது போல் நடித்தான். அவன் என் கூடாரத்தில் இணைத்து வைத்த சீலைச்
செய்தியை நம்பி மதுரை போகும்போது வழியிலேயே அவரால் சிறை செய்யப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டேன்.”
மதுரையில் குஸ்ரூகான் இருக்கும் விஷயம் உண்மையில் படைத்தலைவனுக்குத் தெரியா தென்பதும், அந்தப் போர் சீலையை பொய்யாக எழுதி ஏமாற்றியது படைத் தலைவனென்றாலும், மதுரையைப்பற்றிச் செய்தியளித்தது தன்
தந்தையென்பதையும் உணர்ந்ததால் சிறிது புன் முறுவல் கொண்டாள் இளமதி.
‘சிரிப்பதற்கு இது சமயமல்ல” என்றான் அஜ்மல்கான்.
“அழுவதால் ஏதாவது பயனுண்டா?” என்று வினவினாள் இளமதி.
“இல்லை” என்ற அஜ்மல்கான் மேற்கொண்டு பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்தான்.
இப்படி இவர்கள் கூடாரத்தில் பேசிக் கொண்டிருக்கையில், வெளியே சென்ற இளவழுதி மிக நிதானமாக அந்த மலைத்தளத்தில் நடந்து சென்றான். குஸ்ரூகான் தன்னைக் கொண்டு வந்திருப்பது மதுரையை அடுத்த மலைச்சாரலே
என்பதையும், இன்னும் ஒரே நாள் பயணத்தில் மதுரையை அடைந்துவிடலாமென்பதையும் புரிந்துகொண்டான். ஆனால் ஆங்காங்கு எட்ட புதர்க் கூட்டங்களில் எரிந்துகொண்டிருந்த பந்தங்களிலிருந்து குஸ்ரூகானின் படை
சக்கிரவட்டமாக நிறுத்தப்பட்டிருப்பதால் அதைக் கடந்து செல்ல நினைப்பதோ தப்ப முயல் வதோ சுத்த முட்டாள் தனம் என்பதையும் புரிந்து கொண்டான்.
குஸ்ரூகானைப் பார்த்ததிலிருந்தும் அவன் நடந்து கொண்ட விதத்திலிருந்தும் மாலிக்காபூரை விட மிக தந்திரசாலியான ஒரு தலைவனிடம் தான் சிக்கிவிட்டதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். மாலிக்காபூர் சாதித்ததைவிட
நிரந்தரமான சாதனைகளைப் புரியவே குஸ்ரூகான் இத்தனை நிதானமாகவும், ஆழ்ந்த சிந்தனையுடனும் நடந்துகொண்டிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டான். “மாலிக்காபூராயிருந்தால் இத்தனை நேரம் எங்கள் தலை களை
வெட்டியிருப்பான். என் கதையும் அத்துடன் முடிந்திருக்கும். ஆனால் இவன் போக்கு வேறு விதமாயிருக்கிறது இவன் திட்டம் நிறை வேறினால் தமிழ் அரசுகள் மண்ணில் புதைந்து விடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இத்தகைய நினைப்புகளால் சிந்தை துயரத்தில் அமிழ்ந்து கிடக்க நடந்து ஒரு புதருக்கு அருகில் வந்த இளவழுதியை “சேரர் படைத்தலைவருக்குப் பயண அலுப்பே கிடையாது போலிருக்கிறது!” என்ற குரல் சட்டென்று நின்ற இடத்தில்
நிற்க வைத்தது.
குரல் யாரென்பதைப் பற்றிச் சந்தேகமில்லாததால் திரும்பிப் பார்க்காமலே சொன்னான் இளவழுதி “மனத்தில் அலுப்பிருக்கும்போது உடல் அலுப்பை எப்படிக் கவனிக்க முடியும்?” என்று.
“உண்மை படைத்தலைவரே!” என்று மிகுந்த மரியாதையுடன் பேசிய குஸ்ரூகான் “மன அலுப்பை மனம்தான் போக்க முடியும்” என்றான்.
அதைக் கேட்டதும் மெள்ளத் திரும்பி குஸ்ரூகானை நோக்கினான் இளவழுதி. சற்று எட்ட இருந்த குஸ்ரூகானின் முகத்தில் புன்முறுவல் பரந்து கிடந்தது. கண்களில் குரூரச்சாயை என்பது மருந்தளவுக்கும் கிடையாது. “நீங்கள்
சொல்வது, ஓரளவு புரிகிறது” என்றான் இளவழுதி உதடுகளில் புன்முறுவலைப் படரவிட்டு.
“புரிந்துகொள்ளும் சக்தி உங்களிடமிருப்பது எனக்குத் தெரியும்” குஸ்ரூகான் குரலில் மரியாதையிருந்தது, திடமும் இருந்தது.
“மனத்தை சிறிது மாற்றிக் கொண்டால் மன அலுப்பு போகுமென்கிறீர்கள்” என்றான் இளவழுதி.
“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான் குஸ்ரூகான்.
இளவழுதி மெள்ள நகைத்தான். “உங்கள் மனத்தையும் சிறிது மாற்றிக் கொண்டால் என்ன?” என்று வினவினான் இளவழுதி.
“என் மனத்தையா!”
“ஆம்”
“அதில் இருப்பது உனக்குத் தெரியுமா?
“தெரியும்”
“அப்படியானால் மனோதத்துவ சாஸ்திரம் உனக்குத் தெரியும் பூர்ணமாக.”
“பூர்ணமாக என்று சொல்ல முடியாது! பூர்த்தி என்பது எதிலும் கிடையாது” என்று தத்துவம் பேசினான் இளவழுதி.
இம்முறை நகைத்தவன் குஸ்ரூகான். “வேதாந்தமும் பேசுகிறாய்” என்றான் அவன் சிரிப்பின் ஊடே.
“வேதாந்தம் என்பது சிறந்த சிந்தனைக் கூட்டத்தின் தொகுப்புத்தான்” என்றான் இளவழுதி.
குஸ்ரூகான் எதுவும் பேசவில்லை சில விநாடிகள், பிறகு கேட்டான் உறுதியான குரலில் “என் மனத்தில் இருப்பது என்ன?” என்று. –
“ராஜ்ய ஆசை” என்றான் இளவழுதி.
“ராஜ்ய ஆசையா!”
“ஆம்”
“எந்த ராஜ்ய ஆசை?”
“தென் திசையில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறீர்கள். ஆகையால் உங்கள் ஆசை மாலிக்கா பூரின் ஆசையைப் போன்றதல்ல. சிறந்த ஆசை. எந்த ஒரு மனிதன் தன் மதத்தின் மீதும் அதன் கொள்கையின் மீதும் பூர்ண
நம்பிக்கை வைக்கிறானோ, அந்த நம்பிக்கை யைச் செயலிலும் காட்ட முற்படுகிறானோ அவன் உத்தமன். குஸ்ரூகான்! நீங்கள் அத்தகைய உத்தமர். ஆழ்ந்து சிந்தித்தேன். உங்கள் நிலையில் மாலிக்காபூர் என்ன செய்திருப்பார் என்று.
என்னையும் இளவரசியையும் வெட்டிப் போட்டிருப்பார். சேர நாட்டில் புகுந்து கொள்ளையடித்திருப்பார். அவர் படையெடுப்பு கொள்ளைப் படையெடுப்பு. கொள்ளையுடன் அவர் நோக்கம்முடிந்துவிடுகிறது. உங்கள் போக்கு
தீர்க்கதரிசனம் வாய்ந்தது. நீங்கள் தெற்கிலும் அரசை ஸ்தாபிக்க விரும்புகிறீர்கள். உங்கள் மதத்தை வேரூன்றச் செய்ய முயலுகிறீர்கள். உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்” என்று நிதானத்துடனும் மரியாதை ததும்பும் குரலிலும்
பேசினான் இளவழுதி.
குஸ்ரூகான் நின்ற இடத்தில் கல்லாய்ச் சமைந்து நின்றான். “படைத்தலைவரே! என் மனத்தைத் துருவிப் பார்த்திருக்கிறீர். நீங்கள் கூறியது உண்மை. கொள்ளை பயனளிப்பதில்லை. கொள்ளை கொடுத்த மாந்தர் மீண்டும்
உழைப்பினால் செல்வத்தை அடைகிறார்கள். கட்டிடங்களை இடிக்கலாம். இடித்தால் கட்டுவதற்கு நாள் பிடிக்காது. இத்தகைய அழிவில் எனக்கு நம்பிக்கை யில்லை. இஸ்லாம் உயர்ந்த மதம் என்று நான் நினைக்கிறேன். அதன்
கொள்கைகளை அஸ்திவாரமாக வைத்துத் தெற்கில் ஒரு அரசை ஸ்தாபிக்க எண்ணினேன். அதனால் தான் இங்கேயே தங்கினேன்” என்றான்.
“எந்த மதமும் உன்ன தமானதுதான் குஸ்ரூகான். அந்தந்த மதத்தார்கள் தங்கள் மதங்களை, தத்துவங்களை நம்புவதால் சிறப்படைகிறார்கள். அது கிடக்கட்டும் தாங்கள் மாலிக்காபூருடன் வருவதே யாருக்கும் தெரியாதே” என்றான்
இளவழுதி.
விளம்பரத்தில் இஷ்டமில்லை. அது ஒரு காரணம். விளம்பரப்படுத்துவதால் எதிரிகள் எச்சரிக்கை அடைந்து விடுகிறார்கள். அதைத் தவிர்ப்பதும் ஒரு காரணம்” என்று குஸ்ரூகான் கூறினான்.
“ஆனால் உங்கள் வருகை எங்கள் மன்னருக்கு தெரிந்திருக்கிறதே, அது எப்படி?” என்று இளவழுதி வினவினான்.
குஸ்ரூகான் சொன்னான் “உங்கள் மன்னர் என்று நீங்கள் குறிப்பது வீரபாண்டியனை அல்லவென்று நினைக்கிறேன். நீங்கள் பாண்டிய வம்சமாயிருந்தாலும் சேரனுடன் சேர்ந்திருக்கிறீர்கள். சேர மன்னர் மிகுந்த அறிவாளி. அவர்
அறியாதது எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்பொழுதுகூட என்னை முறியடிப்பதற்கு ஏதாவது பெரும் ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று கூறி, சிறிது நேரம் சிந்தனை வசப்பட்ட
.
குஸ்ரூகான் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு “படைத் தலைவரே! உங்களைச் சிறை செய்ததில் அர்த்தமிருக்கிறது. ஆனால் இளவரசியைச் சிறை செய்ததில் அர்த்தமில்லை. ஆனால் இளவரசி உங்களுடனிருப்பதாக எனக்குத்
தகவல் இல்லை” என்றான்.
“அப்படியா!” இளவழுதியின் கேள்வியில் சந்தேகமிருந்தது.
“ஆம், உங்களிருவரையும் சேர்த்துப் பார்த்தபோது நானே அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அப்பொழுது பிரித்து அழைத்து வருவது சரியல்ல என்று நினைத்தேன்” என்றான் குஸ்ரூகான்.
“இப்பொழுது?”
“பிரிப்பது பயனுள்ளது என்று தோன்றுகிறது”
“பயன் யாருக்கு?”
“எனக்குத்தான்”
“இளமதியை என்னிடமிருந்து பிரித்து என்ன செய்ய உத்தேசம்?”
உத்தேசத்தை விளக்கினான் குஸ்ரூகான். அதைக் கேட்ட இளவழுதி திகைத்தான். இளமதி, சேரமன்னன் இவ்விருவர் கதியையும் நினைத்து மனம் புழுங்கி நிலை குலைந்தான், எதற்கும் அசையா மனமுடைய சேரர் தளபதி.