Cheran Selvi Ch34 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 34. பெண்ணால் விளையும் வினை
Cheran Selvi Ch34 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
குஸ்ரூகான் விவரித்த திட்டத்தைக் கேட்டதும் இளவழுதி, சேரமன்னனைப் பற்றியும் அவன் செல்வியைப் பற்றியும் பெரிதும் கவலை கொண்டானென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. குஸ்ரூகானின் கூரிய மூளையில்
அத்தனை பெரிய, கடுமையான, ஆனால் மேலுக்குப் பெருந்தன்மையான, யோசனை ஏற்படக்கூடு மென்பதை சேரர் படைத்தலைவன் கூட முன்கூட்டி யோசிக்காததால் அளவுக்கு மீறிய அதிர்ச்சிக்கும் உள்ளானான்.
இளமதியை தான் எப்படி ஒரு கருவியாக உபயோகப்படுத்தப் போகிறானென்பதை விவரித்ததும் இளவழுதியின் முகத்தில் விரிந்த கவலையையும் அதிர்ச்சியையும் கவனித்த குஸ்ரூகான் மிகுந்த திருப்தியுடன் புன்முறுவலும்
செய்து கொண்டான். “இளமதியை நான் விடுதலை செய்து அனுப்புவதில் உங்களுக்கு இஷ்டமில்லையென்று தெரிகிறது” என்று சொன்னான் குஸ்ரூகான் புன்முறுவலின் ஊடே.
“இது போலி விடுதலை” என்றான் இளவழுதி அலுப்புத் தட்டிய குரலில்.
“விடுதலையிலும் பிரிவுகள் பல உண்டா?” என்று வினவினான் குஸ்ரூகான் குரலில் இகழ்ச்சி துலங்க.
“உங்கள் திட்டத்திலிருந்து உண்டு என்று தெரிகிறது” என்ற இளவழுதியின் குரலில் எரிச்சலிருந்தது.
குஸ்ரூகான் அவனைக் கூர்ந்து நோக்கினான் சில வினாடிகள். “விடுதலையில் நிபந்தனை ஏதும் கிடையாது. அரசகுமாரி அவளிஷ்டப்படி செல்லலாம்” என்றான் குஸ்ரூகான் முடிவாக.
“ஆம் இஷ்டப்படி செல்லலாம். ஆனால் அவளை ரகசியமாக வீரர்கள் தொடருவார்கள். தகுந்த சமயத்தில் மீண்டும் சிறைப்படுத்துவார்கள்” என்று இளவழுதி சொன்னான்.
“எது தகுந்த சமயம்?” குஸ்ரூகானின் கேள்வியில் நகைப்பு உள்ளூர ஒலித்தது.
“இங்கிருந்து இளமதி விடுதலை செய்யப்படுவாள். தான் சுதந்திரமாகச் செல்ல முடியுமென்ற நினைப்புடன் புறப்பட்டுச் செல்வாள். அவள் போவதற்குப் புரவியும் தற்காப்புக்கு வாளுங்கூட கொடுக்கப்படும்.”
“நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர் படைத் தலைவரே!”
“இத்தகைய வசதிகளாலும் யாரையும் ஏமாற்றும் பெருந்தன்மை கலந்த உங்கள் புன்முறுவலாலும் இளவரசி ஏமாந்து பயணம் செய்வாள்.”
“உம்”
“விடுதலை கிடைத்தால் அவள் போகக் கூடியது இரண்டு இடங்கள். ஒன்று புலவர் இருக்குமிடம். இன்னொன்று மன்னர் இருக்குமிடம். இந்த இருவர் இருக்கு மிடங்களும் உங்களுக்குத் தற்சமயம் தெரியவில்லை. இளமதியைத்
தொடர்ந்தால் தெரியும். தெரிந்தால் அவர்கள் இருவரில் ஒருவர் மீது திடீர் தாக்குதல் நடத்த உங்களுக்கு சௌகரியமாயிருக்கும்” என்று விவரித்த இளவழுதி தனது ஈட்டிக் கண்களை குஸ்ரூகான் முகத்தில் பதியவிட்டு “ நான் சொன்னதில்
தவறு ஏதேனுமிருக்கிறதா?” என்று வினவினான்.
குஸ்ரூகான் கண்களில் மதிப்புச் சாயை பெரிதும் விரிந்தது. “தவறு இல்லை படைத்தலைவரே, தென்னகத்தில் கில்ஜி அரசை நிறுவ விரும்புபவன் எதிரிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளால் எப்படித் தன் இஷ்டத்தைச் சாதிக்க
முடியும்?” என்று வினவவும் செய்தான். அவன் குரலில் சாந்தி நிரம்பியிருந்தது. “உங்களைச் சந்தித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். ஒரு வேளை புல வரையும் சேர மன்னனையும் வெற்றி கொண்டு இங்கு அரசை ஸ்தாபித்தால்
எனது படைத்தலைவர் பதவிக்கு உங்களைவிட வேறு ஒருவர் கிடைப்பது கஷ்டம்” என்றும் மறைமுகப் பதவி ஆசையையும் ஊட்டினான் இளவழுதிக்கு.
இளவழுதி அதைக்கேட்டு முன்னைவிட பெரு அதிர்ச்சியடைந்தான். குஸ்ரூகானல்ல, டில்லி நவாபே வந்தாலும் தன்னை விலைக்கு வாங்க முடியாதென்பது அவனுக்குத் தெரியும். இருப்பினும் குஸ்ரூகான் தீர்க்கதரிசனத்தை
வியந்தான். தென்னகத்தில் இஸ்லாமிய அரசு ஸ்தாபிக்கப் பட்டு, உள்ளூர் தலைவர்களுக்கு மந்திரிப் பதவிகளும், படைத் தலைவர் பதவிகளும் அளிக்கப்பட்டால், அந்த அரசை அசைக்க யாராலும் முடியாதென்பதைச் சந்தேக மற உணர்ந்து
கொண்டதால் ஆயாசப் பெருமூச்சும் விட்டான் இளவழுதி.
அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களை குஸ்ரூகான் சந்தேகமறப் புரிந்து கொண்டான். “ஆம், படைத்தலைவரே! அது தான் என் உத்தேசம். நமது அரசில் எல்லோருக்கும் இடமிருக்கும். இதில் ஜாதி, மத, இனப் பிரிவினைகள் இருக்கா!
அதனால் மக்களுக்கு அரசில் ஒரு நம்பிக்கை உண்டாகும். அரசு ஸ்திரப்படும். மெள்ள அந்த அரசு போகப் போக விரிவும் அடையலாம். நாம் ஒரு நாட்டை ஆளும்போது மக்கள் சம்மதத்துடன் ஆள வேண்டும். மக்களின் ஆதரவும்
சக்தியும் உடனிருந்தால் அந்த அரசைக் கவிழ்க்க ரவிவர்மரால் கூட முடியாது” என்று கூறிய குஸ்ரூகான் வதனத்தில் திருப்தி பரிபூர்ணமாக நிலவியது.
இதற்கு மேல் குஸ்ரூகான் அரசைப் பற்றியோ அதை சாதிக்கும் முறைகளைப் பற்றியோ ஏதும் பேசவில்லை, “வாருங்கள் இளவழுதி. நாமிருவரும் சேர்ந்து சேரன் மகளை வழியனுப்புவோம்” என்றான்.
இளவழுதியின் முகத்தில் ஆச்சரியம் பெரிதும் புலர்ந்தது. “இந்த இரவிலா!” என்றும் வினவினான் அந்த ஆச்சரியம் குரலிலும் துலங்க.
“விடுதலை பெற இரவு, பகல் நேரம் இதெல்லாம் ஏது?” என்று கேட்டான் குஸ்ரூகான்.
“உண்மையான விடுதலைக்குக் கிடையாது. இந்த போலி விடுதலைக்கு…” இளவழுதி சொற்களை முடிக்கவில்லை.
“இதென்ன விளையாட்டுபடைத்தலைவரே! இளவரசி உங்களை இரவில் தனித்துச் சந்திக்கலாம், நீங்களிருவரும் மலைச்சாரலில் கட்டிப் புரள. ஆனால் விடுதலையாகிப் போக நேரம் குறுக்கே நிற்குமாக்கும்?” என்று இளவழுதியின்
சொற்களைக் குறுக்கே வெட்டினான் குஸ்ரூகான். அதற்கு மேல் ஏதும் பேசாமல் அஜ்மல் கானும் இளவரசியும் இருந்த கூடாரத்தை நோக்கிச் சென்றான். இளவழுதியும் தீர்க்க சிந்தனையுடன் அவனைத் தொடர்ந்தான்.
கூடாரம் மிக அமைதியாயிருந்தது. உள்ளே சென்ற இருவரும் அஜ்மல்கான் வெறுப்புடன் மஞ்சத்தில் கிடந்ததையும், ஒரு மூலையில் அரசகுமாரி அவனைச் சுட்டு விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டார்கள்.
அரசகுமாரியின் சீற்றத்தைக் கண்ட குஸ்ரூகானின் கண்கள் அஜ்மல்கானை நோக்கித் திரும்பின. நான் ஏதும் செய்யவில்லை. இவள் எதைச் சொன்னாலும் நம்பாதீர்கள்” என்று கூவினான் அவன்.
குஸ்ரூகான் பதிலேதும் சொல்லவில்லை அவனுக்கு. இளமதியை நோக்கிப் பேசினான், “இவன் உதவியை நீ மறுத்தது நியாயம் அரசகுமாரி. இவன் நம்பத்தகாதவன்” என்று.
இளவழுதி எதையோ புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். “அஜ்மல்கான்! இளமதி விடுதலையடைய உன் உதவி தேவையில்லை. ஏனென்றால் நானே விடுதலை செய்யத் தீர்மானித்திருக்கிறேன்” என்றான் அமீர்
குஸ்ரூகான்.
அஜ்மல்கான் முகத்தில் கிலி மிதமிஞ்சிப் பரவியது “ஐயோ! நான் ஏதும் சொல்லவில்லை” என்று கூவினான்.
குஸ்ரூகான் சொற்கள் இரும்போடு இரும்பு உராயும் ஒலியில் உதிர்ந்தன. “ஆம் சொன்னாய். உன் தளை களை அரசகுமாரி அவிழ்த்துவிடும் பட்சத்தில் அவளைத் தப்புவித்து விடுவதாகக் கூறினாய்” என்று மிகக் கடுமையுடன்
கூறினான்.
“சுத்தப் பொய். நான் அப்படி ஏதும் சொல்லவில்லை” என்று கதறினான் அஜ்மல்கான்.
“சதிகாரன் பேச்சு” என்ற குஸ்ரூகான் இளவரசியை நோக்கித் திரும்பி “இளவரசி! நீ புத்திசாலி” என்று சொன்னான்.
“எந்தவிதத்தில்?”
“சதிகாரன் பேச்சை நம்பாததற்கு. தனது இனத்தை மோசம் செய்பவன், யாரையும் மோசம் செய்வான் என்பதில் சந்தேகமில்லை.”
“ஆம்”
இதைக் கேட்ட அஜ்மல்கான் “என்ன ஆம்? என்னை உதவி செய்யக் கேட்டுவிட்டு என் மீதே குற்றத்தைத் திருப்புகிறாயா?” என்று கத்தினான் கூடாரம் அதிர.
குஸ்ரூகான் அவனை வெறுப்பு ததும்பிய விழிகளால் நோக்கினான். “நீ அதிகமாகக் கூவுகிறாய்” என்று சொல்லி நிதானித்தான்.
“கூவினால் என்ன?”
“வீரர்கள் கூவமாட்டார்கள்”
“வேறு யார் கூவுவார்கள்?”
“எவை என்று கேள்”
“எவையா?”
“ஆம் கோழிகளை அவர்கள் இவர்கள் என்று அழைப்பது கிடையாது. சாகு முன்பு கோழிகள் தான் கூவும்” என்று கூறி குரூர நகை செய்தான் குஸ்ரூகான், அத்துடன் தனது வீரர்கள் இருவரை அழைத்து, இவனைக் கொண்டு
போய் எனது கூடாரத்துக்குப் பக்கத்துக் கூடாரத்தில் வையுங்கள். நாளைக் காலையில் இவன் கதியை முடிவு செய்வோம்” என்று உத்தரவிட வீரர்கள் அஜ்மல்கானை குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிச் சென்று விட்டார்கள்.
அவன் தூக்கிச் செல்லப்பட்டதம் குஸ்ரூகான் இளவழுதியையும் இளம்தியையும் நோக்கி “நீங்களிருவரும் இன்னும் இரண்டு நாழிகைகள் தனித்திருக்கலாம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
அவன் கூடாரச் சீலையைத் தொங்கவிட்டுச் சென்ற மறு வினாடி இளமதி படைத்தலைவன் அணைப்பிலிருந்தாள். தனது மார்பில் புதைந்து கிடந்த அவள் தலையைத் தனது கையால் கோதிவிட்டான் இளவழுதி. “இளமதி! நாம் ஒரு
பயங்கரமான மிக சூக்ஷ்ம புத்தியுள்ள ஒருவனிடம் சிக்கியிருக்கிறோம். ஆகையால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் உன்னை விடுதலை செய்வான், அவனிஷ்டபடி விடுதலையடைந்து செல். ஆனால் நீ போக
நினைக்கும் இடத்துக்குப் போகாதே” என்றான்.
இளவரசியின் விழிகள் அவனை ஏறெடுத்து நோக்கின. அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை. அவன் மெல்லத் தலையைக் குனிந்து அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் புதைத்தான். இளவரசி உணர்ச்சிகள் வெள்ள
மெடுத்து ஓடின. ஆனால் இளவழுதி வெறும் கல்லாயிருப்பதைக் கவனித்தாள் சேரன் செல்வி. இதற்குக் காரணம் எதுவாயிருக்குமென்று நினைத்துப் பார்த்து ஏதும் புரியாததால் அவன் உடலுடன் இழைந்தாள் கன்னத்தில் புதைந்த
உதடுகள் அதிகமாகப் புதைந்தன. இதை கூடாரவாயில் சீலைக்கு அப்பாலிருந்து சீலை இடுக்கு மூலம் கவனித்த குஸ்ரூகான் முகத்தில் பெரும் மகிழ்ச்சி படர்ந்தது. “எந்த தந்திரசாலியும் மடையனாவதற்கு ஒரு பெண்ணிருந்தால் போதும்”
என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்றான்.