Cheran Selvi Ch36 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 36. யக்ஷ விஜயம்
Cheran Selvi Ch36 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
பொதிய மலைத்தொடரின் ஒரு கோடியில் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருந்த பாண்டியர்களின் அந்த மலை உச்சிக் கோட்டை மிகப் பெரியது என்று சொல்ல முடியாதென்றாலும், மிகப் பலமாகவே கட்டப் பட்டிருந்ததாலும், அதன்
முகப்பு மண்டபத்தையொட்டி பின்னால் இரண்டு ஸ்தூபிகள் பெரும் பிசாசுகளைப் போல் இருளில் நின்று கொண்டிருந்ததாலும், சுற்றியிருந்த பெருமரங்கள் நெருங்கி, அவற்றில் சில கோட்டை முகப்பு மண்டபத்தின் விதானத்தைத்
தொட்டுத் தாழ்ந்து இருந்ததாலும், சிருஷ்டிக்கப்பட்ட பயங்கரச் சூழ்நிலையை மண்டபத்தின் சிறு விளக்கு போக்கடிப்பதற்குப் பதில் அதிகப்படுத்தவே செய்தது. இந்த நிலையில் மோகினிப் பிசாசைப்பற்றி உள்ளிருந்து வந்த மனிதர்
பிரஸ்தாபித்ததும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கிரீச்சென்ற விபரீத சிரிப்பொலியும் காவலர் இருவரின் குலையை அதிகமாக நடுக்கிவிடவே இருவரும் ஓடக் கூட திராணியில்லாமல் திகில் பிடித்துச் சிலைகளென நின்றுவிட்டனர் அந்த
முகப்பு மண்டபத்தின் முன்னணியிலேயே.
அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த மனிதர் மட்டும் சொன்னார். “மோகினியைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அவள் யாரையும் கொல்லமாட்டாள்” என்று.
அந்தப் பெரிய மனிதர் பிசாசை மோகினியென்றும் தன் சொந்த மகளை அழைப்பது போல் அவள் இவள் என்று அழைத்ததையும் கேட்ட காவலர் இருவருக்கும் வியப்பு மட்டுமின்றி அந்த மனிதரைப் பற்றியும் அச்சம் அதிகமாகவே
அவர்களில் ஒருவன் “ஐயா! பிசாசை மதிக்காத நீங்கள் ஒருவேளை மந்திரவாதியா?” என்று வினவினான். அவன் குரலில் பீதியும் பீதியின் விளைவான நடுக்கமும் அதிகமாக இருந்தது.
பதிலுக்கு அந்த மனிதர் மீண்டும் பழையபடி கடகடவென நகைத்தார். “என்னை நன்றாகப் பார் என்னைப் பார்த்தால் நானும் உன்னைப்போல் ஒரு மனிதன் தான் என்பதைப் புரிந்து கொள்வாய் “ என்று கூறினார்.
இரு காவலர்களும் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அந்த மனிதர் ஆஜானுபாகுவாயிருந்தார். கண்கள் மிகத் தீட்சண்யமாக மண்டபத்தின் சிறு விளக்கின் சிற்றொளி யிலும் பிரகாசித்தன. அவருடைய தோரணையிலும் பார்வையிலும்
அதிகாரம் மிதமிஞ்சி நின்றது.
ஆகவே காவலரில் ஒருவன் “ஐயா, உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் மாதிரி தெரிகிறது” என்று பாராட்டினான்.
“பெரிய மனது பண்ணி எங்களுடன் அரசகுமாரியை அனுப்பிவிட்டால் நாங்கள் போய்விடுகிறோம்” என்றான் இன்னொரு காவலன்.
அந்த மனிதரின் கண்களில் தீடீரென ஆலோசனை படர்ந்தது. “ நீங்கள் சொல்வது சரி” என்று முடிவில் ஒப்புக்கொண்டார்.
“எது?” என்று கேட்டான் ஒரு காவலன் உற்சாகத்துடன்.
“மோகினியை அரசகுமாரியென்று சொன்னது. அவளும் அரசகுமாரியாயிருந்து ஏதோ ஒரு காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுதான் பிசாசாயிருக்கிறாள்” என்று பிசாசின் கதையைச் சொன்னார் அந்தப் பெரிய மனிதர்.
இதைக் கேட்ட காவலர் திகைத்தனர். மீண்டும் மீண்டும் அந்த மனிதர் பிசாசு விஷயத்தைப் பேசுகிறாரே யொழிய அரசகுமாரியைப் பற்றிய பிரஸ்தாபமில்லாதிருப்பதைக் கண்டு “ஐயா! பிசாசு அரசகுமாரியை நாங்கள் கேட்கவில்லை.
எங்களுடன் வந்த கொல்லத்து இளவரசியைக் கேட்கிறோம்” என்றான் காவலன்.
“ஆமாம். இந்த மண்டபத்திற்குள் தான் அவர்கள் மறைந்தார்கள் சற்று முன்பு” என்றான் இன்னொருவன்.
அந்த மனிதரின் புருவங்கள் சற்றே சுளித்தன சிந்தனையில் “உங்களுடன் சேரன் செல்வி வந்தாளா!” என்ற அவர் கேள்வியில் வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது.
“ஆம்” என்றான் மற்றொரு காவலன்.
“யார்? இளமதியா!” என்று மீண்டும் வினவினார் அந்த மனிதர்.
“காவலருக்குச் சிறிது தைரியம் பிறந்தது. “ஆம். ஆம்” என்று இருவரும் ஏககாலத்தில் கூவினார்கள். “ஐயா! உங்கள் காலில் விழுகிறோம்” என்றான் ஒரு காவலன்.
இன்னொருவன் அவர் கால்களைப் பிடித்துக்கொள்ள தலையைக் குனிந்து கைகளை நீட்டினான். அடுத்த வினாடி பெரிதாக அலறினான். அவன் அலறுவதைக் கண்ட முதல் காவலன் “ஏன் கூவுகிறாய்?” என்று அதட்டினான்.
இரண்டாமவன் பேசவில்லை. ‘அதோ பார்! அதோ பார்” என்று குளறினான். அந்த மனிதரின் கால்களைச் சுட்டியும் காட்டினான்.
முதல்வன் அவர் கால்களை நோக்கினான். அவருக்கு இரண்டு கால்களும் கணுக்காலுக்குக் கீழ் இல்லை. நிலத்தில் ஊன்றாத குச்சுக்கால்கள் அந்தரத்தில் நின்றிருந்தன. அதைக் கண்ட முதல்வன் சட்டென்று திரும்பினான் கோட்டை
வாசலை நோக்கி, இரண்டாமவன் அவனுக்கு முன்பாகவே வாசலை எட்டிவிட்டான் குதிரை பாய்ச்சலில். அடுத்த நிமிடம் இருவரும் கோட்டையை அடுத்த மலைச்சரிவில் பறந்து கொண் டிருந்தார்கள். சேண மிடப்பட்டிருந்த அவர்களது
புரவிகள் அவர்களுக்குப் பின்னால் ஓடின அவர்களைப் பிடித்து விடலாமென்ற யோசனையில். ஆனால் பயம் ஏற்படும்போது மனிதனுக்கு ஏற்படும் வேகம் குதிரைக்குக் கிடையாதென்பதை இரண்டு காவலரும் அன்று நிரூபித்தார்கள்.
அப்படி அந்தக் காவலர் ஓடுவதை பார்த்துக் கொண்டே மண்டபத்தின் முகப்பில் நின்ற அந்த மனிதர் வெளியே தெரிந்த ஆகாயத்தில் மின்னிய விண்மீன்களைப் பார்த்தார் சில வினாடிகள். “அட! இரண்டாம் ஜாமம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது. மோகினி சாப்பிட்டாளோ இல்லையோ” என்று முணுமுணுத்துக் கொண்டே மண்டபத்தின் இருளடர்ந்த பகுதிக்கு அவர் சென்றதும் அடுத்திருந்த பெரிய கதவு ஒன்று திறந்தது. அதற்குப் பின்னால், பெரு
வெளிச்சமும் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் கதவை ஒரு கையால் பிடித்த வண்ணம் இளமதி இதழ்களில் புன்முறுவல் தவழ நின்றிருந்தாள். அந்த மனிதரை நோக்கி அவ்ள் கேட்டாள் “எனக்குப் புதுப் பெயர் சூட்டியிருக்கிறீர்கள்
போலிருக்கிறதே?”“ என்று.
ரவிவர்மன் குலசேகரன் நகைத்தான், பெண்களைப் பேயாகப் புராணங்களில் வர்ணித்திருப்பது முற்றிலும் மெய்யென்பதை இன்று தான் உணர்ந்து கொண்டேன். நீ போட்ட கூச்சல் என்னையே குலை நடுக்க மெடுக்கச் செய்துவிட்டது”
என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.
“என்னைப் பேய் என்று சொன்னதைப் பின்னாலிருந்து கேட்டேன். அதற்கேற்ப நடந்து கொண்டேன்” என்ற அரசகுமாரி ‘ஆமாம்! அவர்கள் உங்களைப் பார்த்து ஏன் ஓடினார்கள்” என்று வினவினாள்,
கணுக்காலுக்குக் கீழ் நான் கறுப்புத்துணியைச் சற்றியிருந்ததால் இருட்டில் காலின் அந்தப் பாகம் தெரியவில்லை. அதுவும் காவலர் இருவரும் எட்ட இருந்தே பேசினார்கள். ஆகவே தரையில் ஊன்றிய கால்களை அவர்கள்
கவனிக்கவில்லை. அந்தரத்தில் நிற்பதாக நினைத்துக் கொண்டார்கள்” என்று மகாராஜா விளக்கினார்.
அப்பொழுது தான் தந்தையின் கால்களைப் இவனித்தாள் அரசகுமாரி. பாதங்களும் அவற்றுக்கு மேலும் மையைவிட கருமையான துணி சுற்றப் பட்டிருந்தது. நல்ல இருளில் நின்றால் கருப்புத்துணி வரை இறங்கிய
வெள்ளைச்சராய்க்குக் கீழே எதுவும் தெரியாதென்பதையும், தந்தை வேண்டுமென்றே மிக லாவகமாக முன் மண்டபத்தூண்களின் பக்கத்தில் நின்றிருக்கவேண்டுமென்பதையும் ஊகித்த இளவரசி லேசாக நகைத்தாள். அத்துடன் கேட்டாள்
“நான் இங்கு வருவேனென்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று.
“நீ புத்திசாலியென்பது எனக்குத் தெரியும். தவிர ஒரு காத தூரத்தில் பாசறை அமைத்திருக்கும் குஸ்ரூவின் தளத்திலிருந்து நீ கிளம்பினால் உனக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது பாழடைந்த இந்த பாண்டியர்
கோட்டைதானென்பதைப் புரிந்துகொண்டு இங்கு வருவா யென்று எதிர்பார்த்தேன்” என்றான் ரவிவர்மன்.
அரசகுமாரி ஏதோ மேலும் கேள்வி கேட்க முற்பட்டாள். ஆனால் சேர மன்னன் எந்தக் கேள்வியையும் அனுமதிக்காமல் “முதலில் கைகால் முகம் கழுவி உணவருந்து. பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவளை உள்ளே அழைத்துச்
சென்றார். முன் மண்டபத்தை அடுத்த கூடம் மிகப் பெரிதாயிருந்தது. அதன் பெரும் கதவுகள் உள்ளேயிருந்த வீரர்கள் இருவரால் சாத்தப்பட்டதும் அந்த மண்டபத்தில் மற்றொரு கோடி யிலிருந்து சுந்தரி வெளி வந்தாள். “வாருங்கள் அரச
குமாரி” என்று அன்புடன் அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றாள்.
அரசகுமாரி அந்த மண்டபத்தின் திண்மையையும் தூண்களின் வலுவையும் பார்த்துக்கொண்டே தோழியைப் பின் தொடர்ந்தாள். பாழடைந்த நிலையிலும் அந்தக் கோட்டையின் உட்புறம் மிகக் கம்பீரமா யிருந்ததையும் ஒவ்வொரு
பகுதியையும் தாங்கி நின்ற கருங்கல் தூண்களின் சித்திர வேலைப்பாடும் சீரழிந்த நிலையிலும் பாண்டியர் கலைச் சிறப்புக்குச் சான்றாகவும் வீரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்ததையும் அரசகுமாரி கவனித்தாள். பாபநாசம்
கொட்டுந்தளத்தை அடுத்த இந்தக் கோட்டையில் தான் சேர நாட்டை வென்ற வீரபாண்டியன் பாசறை அமைத்திருந்தான் என்பதை நினைத்த அரசகுமாரியின் மனத்தில் ஏதேதோ கனவுகள் கிளம்பின. அந்தக் கனவுகள் கிளம்பிய
நினைப்பு களுடன் பதுமை போல் நடந்து சென்ற இளமதியை சுந்தரி அடுத்திருந்த கட்டுக்கு அழைத்துச் சென்று முகம் கழுவ நீரும் வாசனைத் திரவியங்களும் அளித்தாள். முகம் கழுவி கை கால்களை சுத்தம் செய்து பயண அலுப்புத்
தீர்ந்த அரசகுமாரியைப் பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற சுந்தரி அவள் குழல்களை தைலந் தொட்டுத் தடவி வாரி விட்டாள். திலகமும் அணிவித்தாள். அரசகுமாரி அணிய புதுச்சேலையையும் கொடுத் தாள்.
இந்த அலங்காரங்களால் பழைய அரசகுமாரியாகி விட்ட இளமதியை போஜன மண்டபத்துக்கு சுந்தரி அழைத்துச் சென்றாள். அங்கு மகாராஜாவும் இரண்டு கவிகளும் அவளுடன் உணவருந்தத் தயாராயிருந்தார்கள். சீரழிந்த அந்த
மண்டபத்தில் மஞ்சங்களின் வசதி ஏதுமில்லாததால் தரையிலேயே மூவரும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்த அரசகுமாரி மெள்ளப் புன்முறுவலொன்றை இதழ்களில் படர விட்டுக் கொண்டாள்.
அதைக் கவனித்த கவிபூஷணன் கேட்டான் “தரை என்று நினைக்கிறாயா அரசகுமாரி?” என்று.
“நினைத்தால் என்ன தவறு? அரசகுமாரி தரையில் எப்படி உட்காருவாள்?” என்று வினவினான் கவி சமுத்திரபந்தன்.
“மன்னாதி மன்னர்கள் தரையில் சயனித்துக் கூட இருக்கிறார்கள் என்றான் கவிபூஷணன்.
“அப்படியானால் எல்லோரும் தரையில் சயனிக்க வேண்டியது அவசியமென்பது உங்கள் எண்ணமா?” என்று சமுத்திரபந்தன் ஆத்திரத்துடன் வினவினான்.
“மனிதன் மண்ணில் பிறக்கிறான். மண் அளிக்கும் உணவை உண்கிறான். அவற்றால் வளர்கிறான். பிறகு மண்ணில் மறைந்து மக்கி மண்ணோடு மண்ணாக கலந்து விடுகிறான். ஆகையால் இடையில் மண்ணில் படுப்பது தானா தவறு?”
என்று வினவினான் கவிபூஷணன்.
“உமது கற்பனை அத்து மீறுகிறது” என்று சீறினான் சமுத்திரபந்தன்.
“அந்தக் கஷ்டம் உங்களுக்கில்லை” என்றான் கவி பூஷணன் நகைத்து.
“எது?”
“கற்பனை.”
இன்னும் சிறிது அந்த உரையாடலை வளரவிட்டால் கவிகள் கைகலந்து விடுவார்களென்று அஞ்சிய ரவிவர்மன் “கவிச் சண்டைக்கு இப்பொழுது அவகாசமில்லை. சேரநாடு இப்பொழுது பெரும் எதிரிகளுடன் போராட
வேண்டியிருக்கிறது” என்று வலியுறுத்தவே இரு கவிகளும் ஒருவரை யொருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டு பேச்சை அடக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் தரையில் இலை சேர்த்து சுந்தரி உணவு பரிமாறவே நால்வரும்
மௌனமாகவே உணவருந்தினர்.
உணவருந்தியதும் சேரமன்னன் புலவர்களிருவரையும் நித்திரைக்கு அனுப்பி விட்டு தனது செல்வியுடன் கோட்டையில் வேறொரு பகுதியை நோக்கி நடந்தான். அங்கு செல்லு முன்பு சுந்தரியை நோக்கி “சுந்தரி நீயும்
உணவருந்திவிட்டு வந்து சேர்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
கோட்டையின் அந்தப் பகுதி மற்ற இடங்களை விட சிறிது சீராகவே இருந்தது. அதன் நுழைவாயிலைப் பூரண ஆயுதமணிந்த இரு காவலர் காத்து நின்றனர். நுழைவாயிலைக் கடந்து மிகப்பெரிய அறையொன்றுக்கு வந்த ரவிவர்மன்
அங்கிருந்த இரண்டு கல் மஞ்சங்களைச் கட்டிக் காட்டி ஒன்றில் அரசகுமாரியை அமரச் செய்தான், இன்னொன்றில் தான் அமர்ந்தான். அமர்ந்ததும் தனது கைகளை மடியில் குறுக்காகப் போட்டு விரல்களைப் பின்னிக்கொண்டான். “சரி!
சொல். இப்பொழுது குஸ்ரூகானின் அடுத்த திட்டம் என்ன? எந்தத் திசையில் திரும்பப் போகிறான்?” என்று விசாரித்தான் மன்னன் தலையைக் குனிந்த வண்ணம்.
“அப்பா!” என்றாள் இளமதி வியப்புடன்.
“என்ன இளமதி?”
“என்னை குஸ்ரூகான் சிறைப்படுத்தியது தெரியுமா உங்களுக்கு?”
“தெரியாமலா இங்கு வந்து உனக்காகக் காத்திருக்கிறேன்” என்று மன்னன் மிக நிதானமான குரலில் கேட்டான்.
.
“குஸ்ரூகானிடம்…” அரசகுமாரி துவக்கினாள் பேச்சை.
மன்னன் இடைமறித்து இளவழுதி சிறையிருக்கிறான்” என்று வாசகத்தை முடித்தான்.
“அதுவும் தெரியுமா உங்களுக்கு?” அரசகுமாரியின் கேள்வியில் பிரமிப்பு இருந்தது.
அரசன் பதிலுக்குக் கூறினான் “அஜ்மல்கான் கைகால் கள் கட்டப்பட்டு சிறையிருப்பதும் தெரியும்” என்று.
இளவரசியின் பிரமிப்பு உச்ச நிலையை அடைந்தது. “அப்பா! உங்களுக்கு யக்ஷிணி உபாசனை உண்டா?” என்று கேட்டாள் பிரமிப்பு குரலிலும் ஒலிக்க.
“எதற்கு யக்ஷிணி உபாசனை?”
“இருந்த இடத்திலிருந்தே சகலத்தையும் அறிய”
“யக்ஷிணி ஆணா பெண்ணா?”
“பெண்தான்”
“ஆணாயிருந்தால் யக்ஷனா?”
“ஆமாம்”
“யக்ஷன் தான் சொன்னான்”
“உங்களிடம்?”
“நேரில் வந்து”
“நேரில் வராமல் எப்படிச் சொல்ல முடியும்?”
“இப்பொழுது காட்ட முடியுமா யக்ஷனை”
“ஓ தாராளமாக முடியும்” என்ற ரவிவர்மன் கைகளை இருமுறை தட்டினான்.
அந்தக் கைத்தட்டலை அடுத்து உள்ளே தலை நீட்டிய இரு காவலரிடம் “அவரை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான் மன்னன்.
சற்று நேரத்துக்கெல்லாம் வெளியிலிருந்து உந்தப் பட்ட ஒரு மனிதன் உள்ளே வந்து தரையில் விழுந்தான். அவனைக் கண்ட இளமதியின் பிரமிப்பு சகல எல்லைகளையும் தாண்டியதால் “அப்பா! அப்பா! இதென்ன விசித்திரம்” என்று
கூறியவண்ணம் ஆசனத்திலிருந்து சரேலென எழுந்திருக்கவும் செய்தாள். “இவர் இங்கு வருவாரென்று நான் இம்மியளவும் சிந்திக்கவில்லை” என்று உணர்ச்சி பொங்கக் கூறவும் செய்தாள்.