Cheran Selvi Ch37 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 37. இரவில் இசையமுதம்
Cheran Selvi Ch37 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
காவலரால் வெளியிலிருந்து உந்தப்பட்டுத் தனது காலடியில் வந்து விழுந்த மனிதனைக் கண்டதும் உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட திக்பிரமை பிடித்து நின்றுவிட்ட இளமதி “அப்பா! இதென்ன விசித்திரம்? இவர் எப்படி இங்கு
வந்து சேர்ந்தார்?” என்று கேட்டாளென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. வந்து அவள் காலடியில் விழுந்தவன் அஜ்மல்கான்.
அவனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே நின்ற இளவரசி தந்தையைத் திரும்பி நோக்கி “இவர் தான் யக்ஷனா?” என்று இன்னொரு கேள்வியும் எழுப்பினாள்.
ரவிவர்மன் குலசேகரன் புன்முறுவல் கொண்டான். “இவனை யக்ஷனாக வைத்துக் கொள்வதில் தவறில்லை” என்று சர்வ சகஜமாகக் கூறினான். யக்ஷனோ யக்ஷிணியோ நமது உபாசனையால் தான் நம்மிடம் தோன்றி நமக்கு
உதவுகிறார்கள். உள்ளதைத் தெரியப் படுத்துகிறார்கள்.” என்றும் மன்னன் சொற்களை இரண்டாம் முறை கூட்டினான்.
ரவிவர்மன் குரலில் ஏதோ ஒரு விசித்திர ஒலி இருந்திருக்க வேண்டும். அதைக் காதில் வாங்கியதால் இளமதி தந்தையைக் கூர்ந்து நோக்கினாள். “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்று கூறினாள்.
“விளங்காததற்கு என்ன இருக்கிறது? உபாசனை இல்லாமல் யக்ஷன் பேச மாட்டான். ஆகவே இவனையும் சிறிது உபாசனை செய்ய வேண்டியதாயிற்று” என்று கூறிய சேர மன்னன் “யக்ஷரே! எழுந்திரும்” என்று உத்தரவிட்டான் கீழே கிடந்த
அஜ்மல்கானுக்கு.
அந்த உத்தரவைத் தொடர்ந்து எழுந்திருக்க முயன்ற அஜ்மல்கான் இருமுறை பிரயத்தனப்பட்டு எழுந்திருக்கவோ நிற்கவோ முடியாமல் மீண்டும் மீண்டும் தரையில் விழுந்தான். அதனால் முகத்தைச் சுளித்த சேர மன்னன் கையை
தட்டிக் காவலரை அழைத்து “இவனை நிற்கவையுங்கள்” என்று கூற இரு காவலர் இருபுறத்திலும் அஜ்மல்கானைத் தூக்கி நிற்க வைத்து இருபுறத்திலும் பிடித்துக் கொண்டனர். அந்த நிலையில் அஜமல்கான் முகத்தைக் கவனித்த
இளவரசி இளமதியின் வதனத்தில் வருத்தத்தின் சாயை மிக அதிகமாக விரிந்தது. “அப்பா! இவர் கால்கள் ஏன் நிற்கவில்லை?” என்று வினவினாள் தந்தையை நோக்கி.
“நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறார். அதுவும் வெகுவேகமாக உன்னை அழைத்து வந்த காவலருக்கு முன்பாகவே வந்துவிட்டார். வேகத்தின் களைப்பு, பயணக்கஷ்டம், காலில் ரத்தம் கட்டியிருக்கும்” என்றான் சேர மன்னன்
புதல்வியை சாந்தப்படுத்த.
“இல்லை இல்லை. இது பயணத்தால் ஏற்பட்ட விபத்து அல்ல. கால்கள் துவண்டு விழுகின்றன துணியைப் போல்” என்றாள் இளமதி
சேர மன்னன் மீண்டும் அஜ்மல்கானை நோக்கினான். “துணிவு அத்துமீறும்போது காலும் துணியாகி விடுகிறது” என்றும் சொன்னான் புன்முறுவலுடன்.
அதுவரை பேசாதிருந்த அஜ்மல்கான் பேசினான் “துணிவு காலைத் துணியாக்குவதில்லை” என்று.
“மிதமிஞ்சிய துணிவு?” அரசன் கேள்வி சகஜமாகயிருந்தது.
‘இப்படி விளையாடுவதைவிட, இப்படி என்னை முடமாக அடித்ததைவிட, நீங்கள் கொன்றிருக்கலாம் மகாராஜா” அஜ்மல்கான் பேச்சில் கிலி படர்ந்து கிடந்தது.
இளமதி தந்தையை மீண்டும் நோக்கினாள். “அப்பா! இது உங்கள் கைத்திறனா?” என்று வினவினாள்.
“இல்லை” மன்னன் சாதாரணமாகப் பதிலளித்தான்.
“பொய்” இடையில் பாய்ந்தது அஜ்மல்கான் குரல்.
“என் மீது பொய்க்குற்றம் சாட்டுகிறாயா!” மன்னன் குரலில் சிறிது கடுமை தெரிந்தது.
அஜ்மல்கான் அக்குரலைக் கேட்டு நடுங்கினான். “இல்லை மகாராஜா இல்லை” என்று நடுக்கத்துடன் கூவவும் செய்தான்.
தந்தைதான் அவனை இந்தக் கதிக்கு ஆளாக்கியிருக்கிறாரென்பதையும், அவள் கிலி எல்லை மீறியிருக்கிறதென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்ட சேரன் செல்வி அஜ்மல்கான் கால்களைக் கூர்ந்து நோக்கினாள். “கால்களில் காயம்
ஏதுமில்லை” என்றாள் முடிவில்.
“இவனை அடிக்கவோ வேறு தண்டனையோ நான் கொடுக்கவில்லை என்று தெரிகிறதா இளமதி?” என்று மன்னன் வினவினான்.
ஆனால் நடந்தது என்ன என்பதை இளமதி ஊகித்துக் கொண்டாள். “அப்பா! இந்த வித்தை உங்களுக்குத் தெரியுமென்பதை என்னிடம் நீங்கள் சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள் தந்தையை நோக்கி வியப்பு நிரம்பிய குரலில்.
ரவிவர்மன் புன்முறுவல் கொண்டான். “உனக்கு இந்த நரம்பு அடியைக் கற்பித்தது யார்?” என்று விசாரித் தான் புன்முறுவலின் ஊடே.
“சீனச்சேரியில் கற்றேன்”
“கற்பித்தது யார்?”
“ஒரு வயோதிக சீனன்’.
“பெயர்?”
“யுவான்”
இதைக் கேட்ட மன்னன் “யுவான் யுவான்” என்று இருமுறை மிக மதுரமான குரலில் கூறிக் கொண்டான். “என்றாவது ஒரு நாள் எனது சாஸனங்களுக்கு கவிபூஷணன் கவி புனைந்தால் யுவான் பெயரும் அதில் சேர்க்கப்படும்”
என்றும் மன்னன் தானே பேசிக் கொண்டான். “மகளே, அந்த யுவானை சேர நாட்டில் இருத்திக் கொண்டது நான் தான். சீனர்களுக்கு சேரி அமைத்துக் கொடுத்ததும் நான் தான். சீனர்கள் ஒன்று கடும் எதிரிகள் அல்லது கடும் நண்பர்கள்.
இரண்டுக்கும் நடுவில் இரண்டுங்கெட்டான். நிலைமை அவர்களுக்குக் கிடையாது. சீனத்திலிருந்து வாணிபத்துக்காக வந்த யுவானை நான் தான் கொல்லத்தில் இருக்கச் செய்தேன். பலமுறை அவன் என் உயிரைக் காத்திருக்கிறான்.
முதலில் அவன் தான் எனக்கு மல்யுத்தம் பழக்கிக் கொடுத்தான். உடலில் உள்ள நரம்புகளின் மர்ம ஸ்தானங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். ஒரு சிறு பிடியில் ஒரு சிறு நரம்பை அழுத்துவதன் மூலம் எந்த மனிதனையும்
செயலற்றுச் செய்து விடலாம். வேண்டு மானால் மனிதன் நாக்கை இழுத்துவிடவும் வழி இருக்கிறது. இதையெல்லாம் அவனிடம் கற்றேன், அவன் யாருக்கும் இதைப் போதிப்பதில்லை. எனக்கே நீண்ட நாள் கழித்துத்தான் கற்றுக்
கொடுத்தான். நீ என் புதல்வி என்பதால் என் வேண்டுகோளுக்கிணங்கி உனக்குக் கற்றுக் கொடுத்தான். இது ஒரு மகோன்னதக் கலை” என்று விளக்கினான் சேர மன்னன்.
மகோன்னதக் கலையா!” என்றான் அஜ்மல்கான் கிலியும் இகழ்ச்சியும் கலந்த குரலில்.
“ஆம் அஜ்மல்கான்! வேண்டுமானால் உன் நாவை இழுத்துக் காட்டுகிறேன். நா வெளியில் தொங்கியபடி இருக்கும். பேச மட்டும் வராது. ஆனால் நீர் சொட்டிக் கொண்டே இருக்கும்” என்று அரசன் வர்ணித்தான்.
“வேண்டாம் மன்னவா! வேண்டாம்” என்று அலறி னான் அஜ்மல்கான். இளமதி தந்தையைக் கேட்டாள் “அப்பா! இவனை எப்படிப் பிடித்தீர்கள்?” என்று.
“இவன் இந்த வழியில் வரப்போவதாகப் புலவர் தகவல் கொடுத்தார்” என்றான் மன்னன்.
இதைக் கேட்ட இளமதி, அஜ்மல்கானை மறந்தாள். “புலவரா! புலவர் எங்கிருக்கிறார்?” என்று விசாரித்தாள் ஆவலுடன்.
“மதுரைக்கும் இந்த குஸ்ரூகான் படைகளுக்கும் இடையில் இருக்கிறார். தமது படையால் வீரபாண்டியனையும் குஸ்ரூகான் படையையும் குறுக்கே துண்டித்து விட்டார்” என்றான் மன்னன்.
இளமதியின் கண்களில் வியப்பு விரிந்தது. “அப்பா! புலவர் நான் காணாமற் போனதைப் பற்றி உங்களுக்குத் தகவல் கொடுக்கவில்லையா?” என்று வினவினாள்.
“கொடுத்தார். அதே சமயத்தில் பலபத்ரனிடமிருந்தும் செய்தி வந்தது. இளவழுதியைக் காணவில்லையென்றும் இளவழுதியின் உத்தரவுப்படி படையை மதுரையை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் பலபத்ரன் செய்தி
அனுப்பியிருந்தான். ஆகையால் நீங்களிருவரும் குஸ்ரூகானிடம் இருக்கிறீர்கள் என்று முடிவு செய்து கொண்டோம்” என்றான் ரவிவர்மன்.
இளமதி வியப்பு நிரம்பிய விழிகளால் தந்தையை நோக்கினாள். “நீங்கள் எத்தனை நாளாக இங்கு இருக்கிறீர்கள்? என்று வினவினாள்.
“குஸ்ரூகான் பொதிய மலை வடகோடியில் என்று பாசறை அமைத்தானோ அன்றிலிருந்து ஐந்தாவது நாள் இங்கு பாசறை அமைத்தேன்” என்றான் ரவிவர்மன்.
“அப்படியானால் தங்கள் படைகள்?”
“சுற்றிலுமிருக்கின்றன”
“தெரியவில்லையே”
“தேவையானபோது தெரியும்”
இதற்குப் பின் மன்னனிடமிருந்து செய்தி வராதென்று தீர்மானித்த இளமதி “அப்பா குஸ்ரூகானின் அடுத்த திட்டம் என்ன?” என்று கேட்டாள்.
“அதைத்தான் நான் உன்னைக் கேட்டேன். நீ தானே அங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்ற சேர மன்னன் மெள்ள நகைத்தான்.
தந்தை தன்னைக் கேலி செய்கிறாரென்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டாள் இளமதி. “அப்பா! இவனை நடக்கும்படி செய்தாலென்ன” என்று அஜ்மல் கானை சுட்டிக் காட்டினாள்.
“குஸ்ரூகான் அடுத்தபடி எந்தப் பக்கம் திரும்புவான். என்பதை இவன் சொல்லிவிட்டால் நரம்புகளை சரிப்படுத்தி விடுகிறேன்” என்றான் மன்னன்.
“இவருக்கெப்படி குஸ்ரூகானின் நடவடிக்கைகள் தெரியும்?” இளமதியின் குரலில் சிறிதளவு சினம் ஒலித்தது.
“தெரிவதற்கு என்ன தடை?”
“இவரை குஸ்ரூகான் நம்பவில்லை.”
“எப்படித் தெரியும் உனக்கு?”
“இவர் கைகால்களைக் கட்டி வைத்திருந்தான்.”
“கைகால்களை அவிழ்த்துவிட்டால் நாங்கள் தப்ப உதவி செய்வதாக இவர் கூறியதைக் கேட்டு இவரைக் காவலில் வைத்தான். மறுநாள் இவர் தலையைக்கூட சிவிஇருப்பான்.”
“ஏன் சீவவில்லை? காவலிலிருந்து எப்படித் தப்பினான்?”
“தெரியவில்லை எனக்கு.”
“அவனையே கேள்.”
இளமதி அஜ்மல்கானை நோக்கினாள். அஜ்மல்கான் பரிதாபமாக விழித்தான். “இளவரசி, அது வெறும் நாடகம், குஸ்ரூகான் சொன்னபடி நான் ஆடினேன் உங்களை அனுப்பியதும் என்னையும் அனுப்பினார். உங்களைத் தொடர”
என்று கூறினான். அவன் குரல் நடுங்கியது.
“என்னுடன் தான் இரு காவலர் வந்தார்களே?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் இளவரசி.
“அவர்களை குஸ்ரூகான் நம்பவில்லை” என்றான் அஜ்மல்கான்.
அதைத் தொடர்ந்து மன்னன் சொன்னான்: இளமதி! அஜ்மல்கானை நம்புமளவுக்கு குஸ்ரூகான் வேறு யாரையும் நம்புவதில்லை. ஆகையால் குஸ்ரூகான் திட்டத்தை சொல்லக்கூடியவன் இவன் ஒருவன் தான், இன்னும் ஒரு நாள்
இவனுக்குப் பேசும் சக்தியிருக்கும். நாளைக்குள் உண்மை வராவிட்டால்…” என்று மன்னன் வாசகத்தை முடிக்கவில்லை. விளைவு என்னவென்பது அஜ்மல்கானுக்கு மட்டுமின்றி இளவரசிக்கும் புரிந்திருந்தது. மன்னன் மேற்கொண்டு
ஏதும் பேசாமல் அஜ்மல்கானைக் கொண்டு செல்லும்படி காவலருக்கு சைகை காட்டினான். அஜ்மல்கானை அவர்கள் தூக்கிச் சென்றதும் “வா இளமதி! இந்தப் பழுதடைந்த கோட்டையில் பழுதடையாத விசித்திரங்கள் பல இருக்கின்றன.
.
ஒன்றை நாளை உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறி விட்டு “பயணக் களைப்பு உனக்குமிருக்கும். நீ போய் உறங்கு” என்றான்.. அத்துடன் “சுந்தரி” என்று குரலும் கொடுத்தான். சுந்தரி வந்து இளவரசியை அழைத்துச் சென்றாள்.
இளவரசிக்கு மிக வசதியான ஓர் அறை ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த மஞ்சத்தில் படுத்தாள் இளமதி. படுத்த சில வினாடிகளில் உறங்கியும் விட்டாள். அந்த உறக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வெளியில்
அருகாமையிலிருந்து இன்னிசை காற்றில் மிதந்து வந்தது. குலசேகராழ்வாரின் பாசுரம் ஒன்றை யாரோ மிக இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார்கள். குரல் மிகப் பழக்கமான குரலாகத் தெரிந்தது இளமதிக்கு. அவள் படுக்கையில்
எழுந்து உட்கார்ந்து கொண்டு சாளரத்தின் மூலம் வெளியே நோக்கினாள். “சந்தேகமில்லை. அதே குரல் தான்” என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.