Cheran Selvi Ch4 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 4. விசித்திர இரவு
Cheran Selvi Ch4 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
படிகளின் உச்சியில் தெரிந்த விளக்கொளியில் நின்றி ருந்த உருவத்தைக் கண்டதும் இளவழுதி பேரதிர்ச்சி அடைந்தானென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அங்கு நின்றிருந்தவள், தான் கடற்கரையில் சந்தித்த அழகியே
என்பதை அறிந்ததும் சில வினாடிகள் பிரமையும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்த அந்த வாலிப வீரன், தன்னை அழைத்து வந்த மனிதன் அந்தப் பெண்ணுக்கு இட்ட உத்தரவைக் கேட்டதும் சீற்றமும் அடைந்து சட்டென்று திரும்பினான்,
தனது பக்கத்தில் நின்றிருந்த மனிதனை நோக்கி, அந்தச் சமயத்தில் படிகளின் உச்சியில் நின்றிருந்த பாவை சொன்னாள், “எல்லாம் உங்கள் நன்மைக்காகத்தான், பேசாமல் வாருங்கள்” என்று.
அப்படிச் சொன்ன அவள் குரலில் கடுமை சிறிதும் இல்லாததையும் இனிமையே இருந்ததையும் கவனித்த இளவழுதி மேலே என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்” என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டு படிகளின் உச்சிக்குச்
சென்றான். அவன் படியருகில் வருகிறவரைக்கும் பதுமையென நின்றிருந்தவள் சற்று விலகி அவன் மேலே செல்ல வழிவிட்டு நின்றாளானாலும், அவன் அவளைத் தாண்டிச் சென்றபோது அவள் தேகம் அவன்மீது லேசாக உராயவே
இளவழுதியின் உடலில் இன்பத்தின் அதிர்ச்சி மின்சாரம் போல் ஊடுருவிச் சென்றதால் “மன்னிக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டு உச்சிப்படியை அடுத்த மாடியின் தாழ்வரையில் காலெடுத்து வைத்தான்.
மாடித்தாழ்வரையில் அவன் கால் எடுத்து வைத்ததும் மாடிப்படிக் கதவு சரேலென்று சாத்தப்பட்ட தன்றி, அந்தப் பெண் மட்டும் தனித்துத் தன்னை நோக்கி வந்ததையும், தன் கையை இரும்புப் பிடியாகப் பிடித்து அழைத்து வந்த அந்த
மனிதன் மறைந்துவிட்டதையும் கவனித்த இளவழுதி “இந்த இளமங்கையுடன் என்னைத் தனித்துவிட்டு அந்த மனிதன் ஏன் போய்விட்டான்? என்னை அறையில் தள்ளிப் பூட்டும்படி இவளிடம் உத்தர விட்டானே! இவளால் அது முடிகிற
காரியமா? இளவழுதியை ஏதுமறியாத இளம்பிள்ளை என்று நினைத்து விட்டானா அவன்?” என்று தன் மனத்துக்குள்ளே பல கேள்விகளை எழுப்பிக்கொண்டு, படிக்கதவைச் சாத்தி விட்டு வந்த அந்தப் பெண்ணை மீண்டும்
நோக்கினான்.
அப்போது முழுமதி நன்றாகக் கிளம்பிவிட்ட காரணத்தால், அந்த மாளிகைத் தாழ்வரையில் நிலவு பளிச்சென்று அடித்துக்கொண்டிருந்தது. அந்த நிலவில் தாழ்வரைக் கூரையைத் தாங்கி நின்ற வழவழத்த தூண்களிலும் பற்பல
சிற்றின்பக் காட்சிகள் கண்கவரும் வண்ணங்களில் தீட்டப்பட்டிருந்தன. அங்கிருந்த மேல் கூரையிலும் தமயந்தி அன்னத்துடன் குலாவும் மகோன்னதப் பெரும் சித்திர மொன்று காட்சியளித்தது. அதை அண்ணாந்து பார்த்த இளவழுதி,
மனத்தை அந்த இரண்டு அன்னங்களிட மிருந்தும் சிரமப்பட்டுப் பறித்துச் சற்று எட்ட நின்ற பெண்ணை நோக்கினான்.
கடற்கரையில் தான் எந்தக் கோலத்தில் அவளைப் பார்த்தானோ அதே கோலத்தில் தான் அவள் அப்பொழுது மிருந்தாள். படி உச்சியிலிருந்த தீபத்தை அவள் கையிலெடுத்து வைத்துக் கொண்டிருந்தது ஒன்றுதான்
வித்தியாசமாயிருந்ததே தவிர வேறு வித்தியாசமில்லை. தாழ்வரையின் தூணொன்றில் சாய்ந்து நின்ற அந்தப் பெண் தூணிலிருந்த சித்திரத்தின் எழிலை அர்த்தமற்றதாகச் செய்தாள். அவள் இடையை லேசாக ஒடித்து நின்றதால் ஒரு பக்கம்
இடைக்குக் கீழே பெரிதாக ஒதுங்கித் தூணைத் தடவிய அவள் பின்னழகு அந்த வாலிபனை உன்மத்தங் கொள்ளச் செய்தது. அந்தத் தூணுக்குப் பின்புறம் இருந்த ஆகாயத்தில் வலம் வந்து கொண்டிருந்த முழுமதி அவளுக்குப் பின்புறம்
இருந்ததால் அவள் தலைக்கு மல்லிகை வட்டத்தை ஏற்படுத்த ஆசைப்பட்டவன் போல் விளங்கினான். அந்தச் சமயத்தில் அவள் தூணைவிட்டுச் சட்டென்று ஒதுங்கி விட்டதால் தன் கிரணங்களை அவள் மார்பில் பாய்ச்சிய சந்திரன் தனக்குப்
பெண்ணாசையால் கிடைத்த பழைய சாபத்தை மறந்து விட்டவன் போல் அவள் அழகிய மார்பைக் கிரணங்களால் ஊடுருவினான். அந்த நிலையில் தனது சௌந்தரியம் பன் மடங்கு அதிகரிக்கத் தேவதைபோல் நின்ற அந்தப்
பெண்ணைப்பார்த்த பாண்டிய நாட்டு வாலிபன் தன்னைச் சிறைகொள்ள அந்தப் பெண்ணிடம் இருந்த இயற்கைக் கணைகளைவிட வேறு கணைகள் தேவையில்லையென் பதைப் புரிந்துகொண்டான்.
இந்த எண்ணங்களுடன் அவள் கண்களை ஏறெடுத்து நோக்கிய அவன் கண்களை அப்பெண்ணின் காந்த விழிகள் கவர்ந்து நின்றன ஒரு வினாடி. பிறகு அவள் பங்கய மலர் உதடுகள் சற்றே விரிந்து புன்முறுவல் கொட்டின. அப்படி
முறுவல் படர்ந்த நிலையில், “இப்படியே நின்றிருக்க அவகாசமில்லை, கடமை ஒன்றிருக்கிறது” என்று அவள் மெள்ளச் சொற்களை உதிரவிட்டாள். மிக நாசுக்காக வாசிக்கப்பட்ட ஜலதரங்கம் போல் உதிர்ந்து அந்த சொற்கள் இளவழுதியை
சுய நிலைக்கு இழுக்கவே, “என்ன கடமை அது?” என்று அவன் கேட்டான் பதிலுக்கு.
“அவர் இடவில்லை உத்தரவு” என்று பதில் சொன்னாள் அவள் சர்வ சாதாரணமாக,
இளவழுதி மெள்ள நகைத்தான். “என்னை அறையில் அடைத்துப் பூட்டிவிடும்படி சொன்னானே அதுவா?” என்று வினவினான் இளவழுதி நகைப்புக்கு நடுவே,
அந்த மனிதரைப் பார்த்து மரியாதைக் குறைவாக அந்த வாலிபன் கூறியதால் அவள் அழகிய முகத்தில் சினம் ஏறியது சிறிதளவு. யாரையும் மரியாதையாகப் பேகவது நல்லது” என்று சுட்டிக் காட்டினாள் அந்த இளமங்கை.
இதைக் கேட்ட இளவழுதியின் முகத்திலும் சினம் படர்ந்தது. “என்னை மரியாதைக் குறைவாக அவர் நடத்தலாமா” என்று வினவினான், சொற்களிலும் சினத்தின் சாயை படர.
“என்ன மரியாதைக் குறைவாக நடத்தினார்?” இதைக் கேட்ட அவள் குரலில் லேசாக நகைப்பொலி ஊடுருவியிருந்தது.
“எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பின்னால் பூனை போல் வந்தார்.”
“உம்”
“கையை இரும்புப் பிடியாகப் பிடித்தார்”
“உம்”
“ஒரு குழந்தையை இழுத்து வருவதுபோல் இழுத்து வந்தார் படிகளின் மீது”
“அதனாலென்ன?”
“கடைசியாக உன்னிடம் என்னை விட்டு அறையில் அடைத்துப் பூட்டச் சொன்னார்”
“ஆமாம்”
“இதெல்லாம் மரியாதையான வேலையா?” என்று வினவினான் கடைசியாக இளவழுதி கோபத்துடன்.
அந்தப் பெண் அவன் கோபத்தைச் சிறிதும் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. “எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொன்னீர்களே? எங்கு பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று வினவினாள் அலட்சியம் நிரம்பி நின்ற
குரலில்,
இளவழுதி உடனடியாகப் பதில் சொல்லத் தயங்கினான். பிறகு சமாளித்துக் கொண்டு, “மாளிகைக் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்…” என்று சொன்னான்.
“ கூரையில் என்ன இருந்தது, உங்களைப் பிடிக்க வரும் மனிதரைக் கூட கவனியாமல் நிற்க?” என்று வினவினாள் அவள்.
இளவழுதி இதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான், ஆக அவளே பதில் சொன்னாள். “மேலே ஒரு பெண்ணை ஒரு இளங்காளை கையைப் பிடித்து இழுக்கிறான். அதைப் பார்த்துக் கொண்டு நின்றீர்கள். இங்கு வந்து
மட்டுமென்ன, நிலை புரியாமல் தூண்களிலுள்ள பெண்களைப் பார்க்கிறீர்கள். பாண்டிய நாட்டு வீரர்களுக்கு சபல புத்தி அதிகம் போலிருக்கிறது. தூணுக்குச் சீலை கட்டினால் அதையும் பெண்ணென்று பார்த்துப் பல்லை இளிப்பீர்கள்
போலிருக்கிறது?” என்று சொன்ன அவள் மெள்ள நகைக்கவும் செய்தாள்
“போயும் போயும் உங்களை நம்பிப் புலவர் இந்தப் பெரிய பணிக்கு அனுப்பினாரே?” என்று சற்று ஏளனமாகவும் கூறினாள்.
இதைக் கேட்ட. இளவழுதி அசந்து போனான். “பாண்டி நாட்டில் நடந்தது இவளுக்கு எப்படி தெரிந்தது?’ என்று மனத்துள் வினா எழுப்பிக் கொண்ட அந்த வாலிபன், “புலவரா!” என்று வியப்புடன் ஒற்றைச் சொல் உதிர்த்தான்.
“உங்களை அனுப்பியது புலவர்தானே?” என்று கேட்டாள் அவள்.
“ஆம். உனக்கெப்படித் தெரியும்?”
“தெரியாமலா உங்களைத் திட்டிவாசல் வழியாக அனுப்பினேன்?”
“ஏன் அங்கேயே சமாப்தி ஆகிவிடுவேனென்று எதிர் பார்த்தாயா?”
“இல்லை. அது உங்களுக்கு ஒரு சோதனை”
“சோதனையா!”
“ஆம், நெருக்கடியான நிலையில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று சோதிக்க அந்த வழியைச் சொன்னேன்” என்ற அந்தப் பெண், “சோதனையில் நீங்கள் தேறி விட்டீர்கள்” என்றும் கூறினாள்.
இதைக் கேட்டதும் இளவழுதி அதுவரை கடைப்பிடித்த பொறுமையைக் கைவிட்டான். “இங்கு என்ன சுயம்வரம் வைத்திருக்கிறீர்களா?” என்று வினவினான் சினம் குரலில் பூர்ணமாகச் சொட்ட.
“சுயம்வரமா!” என்று கேட்டாள் அந்தப் பெண்ணும் வியப்புடன்.
“ஆமாம். வில்லை முறிப்பவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதாக ஜனகன் சோதனை வைத்தான். சுழலும் மீனை அடிப்பவனுக்கு மகளைக் கொடுப்பதாக துருபதன் சுல்கம் வைத்தான். இங்கு சோதனையில் தேறினால் எந்தப்
பெண்ணை வைத்திருக்கிறீர்கள் எனக்குக் கொடுக்க?” என்று வினவினான் இளவழுதி.
விஷமம் சொட்டும் கண்களுடன் அந்த இளநங்கை அவனை நோக்கினாள். “புராணத்தைச் சரியாகப் படிக்கவில்லை நீங்கள்” என்றும் சொன்னாள் விஷமமாக.
“நீ படித்திருக்கிறாயாக்கும்?” என்றான் இளவழுதி சினம் சிறிதும் தணியாத குரலில்.
“படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லிய கட்டங்களில் சோதனை வைத்தவர்கள் தந்தைமார். பெண் யாரும் சோதனை வைக்கவில்லை. இங்கு சோதனை வைத்தது நான் ஒரு பெண். ஆகையால் வேண்டுமானால் என் தந்தையைக் கட்டிக்
கொடுக்கிறேன் உங்களுக்கு” என்ற அவள் சற்று பெரிதாகவே நகைத்து, இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். வாருங்கள் உங்கள் அறைக்குப் போகலாம்” என்று சொல்லி விளக்கைக் கையில் ஏந்திய
வண்ணம் தாழ்வரைக் கோடியிலிருந்த அறையை நோக்கிச் சென்றாள்.
அப்படி அவள் நடந்தபோது அவள் பின்புற அங்க லாவண்யங்கள் தொடுத்த மோகனாஸ்திரங்களில் கண்களையும் மனத்தையும் பறிகொடுத்த வண்ணம் அவளைத் தொடர்ந்து சென்றான் இளவழுதி. அறைக் கதவைத் தன்
மடியிலிருந்த சாவியொன்றை எடுத்துத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அவள் அவனையும் வரும்படி சைகை செய்தாள்.
அறை உள்ளே நுழைந்த இளவழுதி அதன் அழகைப் பார்த்துப் பிரமித்து நின்றான். அங்கிருந்த விலை உயர்ந்த கட்டிலும் பஞ்சணையும் அரசர்களுக்குத் தக்கதாயிருந்தனவேயொழிய சாதாரண வீரர்களுக்கு ஏற்பட்டதாயில்லை. ஒரு
மூலையிலிருந்த வெண்கலப் பதுமை விளக்கின் அழகு சொல்லத் தரமல்லாததாயிருந்தது. பஞ்சணைக்கு அருகேயிருந்த ஒரு மஞ்சத்தில் பட்டுச் சீலையால் மூடப்பட்ட உணவுத்தட்டு ஒன்றும் பக்கத்தில் பால் வைத்து மூடப்பட்ட வெள்ளிச்
செம்பொன்றும் இருந்தது. அந்த அறையிலும் மனத்தை மயக்கும் புராண சித்திரங்களுக்குக் குறைவில்லை. அந்த அறையை அவன் அளவெடுத்ததைக் கையில் விளக்கேந்தியபடி அந்தப் பாவை பார்த்துக் கொண்டு அறை
மூலையிலிருந்த பதுமை விளக்கருகில் நின்றாள்.
அறையை அளவெடுத்த இளவழுதி திறந்து கிடந்த அறைச் சாளரத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தான். கீழே சற்று எட்ட நந்தவனம் இருந்தது. அந்த அரண்மனையிலிருந்த மலையை அடுத்து நின்ற ஒரு பெரிய ஏரியின் சிற்றலைகள் சந்திர
வெளிச்சத்தில் பல கண்ணாடிகளைப் போல் பளபளத்தன. ஏரியைச் சுற்றிலும் மலைப் பிரிவிலுமிருந்த தென்னை மரச் சோலைகள் அந்த வாலிபன் கண்களை ஈர்த்தன. அந்த இயற்கை வனப்பில் நீண்ட நேரம் மனத்தைப் பறிகொடுத்த
வாலிபன் சாளரத் தினின்று திரும்பி “அதுதானே அஷ்ட முடி ஏரி?” என்று வினவினான்.
“ஆம்” என்றாள் உள்ளே விளக்கை ஒரு மூலையில் வைத்துவிட்டுத் திரும்பிய அந்தப் பெண்.
“இந்த அரண் மனை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இடமும் சூழ்நிலையும் மிக இன்பமாயிருக்கிறது” என்றான் இளவழுதி.
“ஆம். அதனால் தான் அந்தப் பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது” என்றாள் பதிலுக்கு.
“கொல்லம் கண்டவன் இல்லம் வேண்டா என்ற பழமொழியா?” என்று மலையாளப் பழமொழியைச் சொன்னான் இளவழுதி. மேலும் சொன்னான்: “இந்த மலையாளமே அழகிகளுக்கும் கற்பகச் சோலைகளுக்கும் பெயர் போனது.
.
அதுவும் இந்தக் கொல்லம் கேரள நாட்டிலேயே சிறந்தது. இதைக் கண்டவர்கள் தங்கள் வீட்டுக்கே திரும்ப மாட்டார்கள் என்பதை அந்தப் பழமொழி சுட்டிக் காட்டுகிறது” என்று.
“அப்படியானால் நீங்களும் திரும்பமாட்டீர்கள் ஊருக்கு” என்றாள் அந்த இளமங்கை..
“மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்ன இளவழுதி உள்ளுக்குள் வேகமாக நடந்த அந்தப் பெண்ணின் இரு கைகளையும் இறுகப் பிடித்தான். அவன் தனது கைகளைப் பிடித்ததைக் கண்ட அந்தப் பெண்ணின் முகத்தில் சீற்றம் பலமாக
விரிந்தது. கண்கள் தீப்பொறியைக் கொட்டின. அடுத்த வினாடி அந்தக் கைகள் அவனிடமிருந்து எப்படியோ கழன்று கொண்டன. பதிலுக்கு அவள் வலது கை அவன் வலது கையின் மணிக் கட்டை பிடித்துப் பலமாகத் திருகியது.
அந்தப் பிடிப்பில் அவள் விரல்கள். அழுந்திய முறையில் இளவழுதியின் உடலில் மின்சாரம் போன்ற ஓர் அதிர்ச்சி ஊடுருவிச் சென்றது. அதே சமயத்தில் அவன் வலது கையைப் பின் பக்கம் திருப்பினாள் அவள்.
“வேண்டாம், விட்டுவிடு” என்ற அதிகாரக் குரல் அவள் கையைச் சட்டென்று தேக்கியது. இளவழுதியும் திரும்பி வாயிலை நோக்கினான். தன்னை இரும்புப் பிபிடியாகப் பிடித்து அழைத்து வந்த மனிதன் வாயிற் படிக்கு அப்பால் நின்று
கொண்டிருந்ததைக் கவனித்தான் இளவழுதி. அதை மட்டும் கவனிக்கவில்லை அவன். தன் கையை பிடித்த இளமங்கை கையை விட்டு அந்த மனிதனை நோக்கித் தலை தாழ்த்தி மகாராஜாவின் உத்தரவு” என்று சொன்னதையும்
கவனித்தான். இன்னொரு விசித்திரமும் நிகழ்ந்தது. “இளமதி நீ அத்து மீறிப் போய்விட்டாய், இவன் வலது கை செயலற்று விட்டால் இவனை வரவழைத்ததன் நோக்கம் என்ன ஆகும்?” என்று கேட்டார் மகாராஜா.
அவர் இதழ்களில் புன்முறுவல் படர்ந்து கிடந்தது. இளமதி தலை கவிழ்ந்தாள். பிரமை தட்டிய கண்களுடன் அவ்விருவரையும் பார்த்து நின்றான் இளவழுதி. “இந்த இரவில் இன்னும் என்னென்ன விசித்திரங்கள் நேரிடுமோ?” என்ற
எண்ணச் சுழலில் திளைத்துவிட்டான் பாண்டிய நாட்டு வாலிபன்.