Cheran Selvi Ch41 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 41. மரணத்தின் வாயிலில்
Cheran Selvi Ch41 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
குஸ்ரூகானின் முகம் கூடார வாயில் சீலை வழியாக உள்ளே புகுந்து தரையில் கிரணங்களை இரண்டு பாளங் களாகப் பாய்ச்சியிருந்த கதிரவனின் உஷ்ணத்தைவிடப் பன்மடங்கு அதிக உஷ்ணத்தைக் காட்டியிருந்ததால், அவன்
உதடுகள் சொற்களை உதிர்க்க மறுத்தன நீண்ட நேரம். அப்படி அவை சொற்களை உதிர்த்தபோது அவை ஏதோ வெடித்து எரிமலைக்குள்ளிருந்து கிளம்பும் அக்கினி துண்டுகளைப் போலவே வெளிவந்தன. “உன்னை அனுப்பி ஐந்து
நாட்களாகின்றன” என்றான் குஸ்ரூகான் பற்களைக் கடித்துக் கொண்டு.
எதிரே நின்ற அஜ்மல்கான் உடல் குஸ்ரூகானின் கோபத்தைக் கண்டு ஒருமுறை வெலவெலத்து ஓய்ந்தது. “இல்லை நவாப் ஐந்து கண்டங்களாகின்றன” என்று அவன் சொன்ன பதிலில் கூட நடுக்கம் இருந்தது.
“என்ன உளறுகிறாய்? ஐந்து கண்டங்களா?” என்று குஸ்ரூகான் கேட்டான், சீற்றம் சிறிதும் தணியாத குரலில்,
“ஆம் நவாப்! நான் ரவிவர்மனிடம் இருந்த நான்கு நாட்களும் நான்கு கண்டங்கள். தப்பி வந்தது எல்லா வற்றையும்விட பெரிய கண்டம். ஆக மொத்தம் ஐந்தாகிறது” என்றான் அஜ்மல்கான்.
“கணக்கில் நீ புலி போலிருக்கிறது. நான்கும் ஒன்றும் ஐந்து என்று கண்டுபிடித்துவிட்டாய்” என்ற குஸ்ரூகான் இகழ்ச்சியும் ஆத்திரமும் கலந்த பார்வையை வீசினான் அஜ்மல்கான் மீது.
“அங்கிருந்தவரையில் நான் புலி அல்ல. எலியை விடக் கேவலமாயிருந்தேன். எலிகூட பாதகமில்லை. கூண்டிலகப்பட்டால் அதைக் கொல்லுவார்களே தவிர சித்திரவதை செய்ய மாட்டார்கள். கைகால்களைச் செயலற்றதாகச் செய்ய
மாட்டார்கள்” என்று கூறிய அஜ்மல்கான், தான் ரவிவர்மனிடமிருந்த நிலையை நினைத்து மீண்டும் நடுங்கினான்.
“கைகால்களை உடைத்து விட்டார்களா! உன் கை கால்கள் நன்றாகத்தானே இருக்கின்றன?” என்று கேட்டான் குஸ்ரூகான்,
“உடைக்கவில்லை. அதைவிடப் பயங்கரமான விளைவை ஏற்படுத்தினார்கள்” அஜ்மல்கான் சொன்னான் குஸ்ரூகானை நிமிர்ந்து நோக்கி.
“மந்திரம் போட்டார்களா?” இகழ்ச்சி ஒலித்தது குஸ்ரூகான் சொற்களில்.
“இல்லை.”
“வேறென்ன தான் செய்தார்கள்?”
“இரண்டு நரம்புகளை அழுத்தினான் சேரமன்னன் என் இடுப்பில், அதற்குக் கீழ் மின்னல் போல ஏதோ ஒரு வலி ஊடுருவிச் சென்றது. கைகால்கள் செயலற்று விழுந்தேன்.”
இதைக்கேட்டதும் குஸ்ரூகானின் கோபம் பன்மடங்கு அதிகப்பட்டது. “அஜ்மல்கான்! முட்டாள்! யாரிடம் இந்தக் கட்டுக்கதையைச் சொல்கிறாய்?” என்று அவன் சீறினான்.
“கட்டுக்கதையல்ல உண்மை. நீங்கள் பட்டால் தான் உங்களுக்குத் தெரியும்.”
“நான் பட வேண்டுமா? நான் என் இடுப்பை எதிரியிடம் காட்டி கைகட்டி நிற்பேனென்று நினைக்கிறாயா?”
“நீங்கள் கைகட்டி நிற்கவேண்டியதில்லை. ரவிவர்மன் வீரர்களே அதைச் செய்து விடுவார்கள்.”
அஜ்மல்கான் மிக சாமர்த்தியமாகத்தான் பேசினானென்றாலும், அதிலுள்ள நகைச்சுவையை அனுபவிக்கும் நிலையிலில்லை குஸ்ரூகான். “அரே அஜ்மல் உனக்கு நகைச்சுவை அதிகமாகிறது” என்றான் சிரித்துக் கொண்டு.
குஸ்ரூகான் கோபத்தைவிட சிரிப்பு பெரிய அனர்த்தம் என்பதைப் புரிந்து கொண்ட அஜ்மல்கான் சட்டென்று பேச்சைத் திருப்பினான். “நவாப்! உங்கள் நிலை மிக ஆபத்திலிருக்கிறது” என்று கூறினான்.
குஸ்ரூகான் பதில் அஜ்மல்கானை அசர வைத்து விட்டது.
“அஜ்மல்! என் நிலைக்கு ஆபத்து ஏதுமில்லை. ஆபத்து உனக்குத்தான்” என்றான் குஸ்ரூகான் மிக இளகிய குரலில்.
“எனக்கா நவாப்?” அஜ்மல்கான் குரல் மீண்டும் நடுக்கம் கண்டது.
“ஆம்.”
“நான் தவறு ஏதும் செய்யவில்லையே.”
“நீ வேவு பார்க்கப் போய் ரவிவர்மனிடம் சிக்கிக் கொண்டதே தவறுதான். சிக்கி நமது படை நுணுக்கங்களைக் காட்டிக் கொடுத்தது டில்லியிலுள்ள நமது சக்கிர வர்த்திக்குச் செய்த பெரும் துரோகம்.”
“இல்லை நவாப்! என் மீது வீண்பழி சுமத்தாதீர்கள். நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை சேர மன்னனிடம்.”
“பின் ஏன் அவன் உன் கால்களை முடக்க வைத்தான்.”
“சொல்ல மறுத்ததால், தவிர நவாப்…”
“என்ன?”
“ரவிவர்மனுக்கு நமது படைபலம், அது இருக்கும் திசை, தங்கள் திட்டம் எல்லாமே தெரிந்திருக்கிறது.”
இதைக் கேட்ட குஸ்ரூகான் பெருவியப்படைந்தான். “படை இருக்கும் திசை அவனுக்குத் தெரிந்திருக்கலாம். இங்கிருந்து போன அவன் படைத்தலைவன் சொல்லியிருக்கலாம்…” என்ற குஸ்ரூகான் சொற்களை இடை மறித்த
அஜ்மல்கான் “இல்லை இல்லை, உங்களிடமிருந்து வந்ததற்காக இளவழுதியையும் சிறையில் தள்ளிவிட்டான் சேரன்” என்று கூறினான்
இது இன்னும் வியப்பை அளித்தது குஸ்ரூகானுக்கு. “உண்மையாகவா?” என்று வினவினான் நம்பிக்கை சிறிதும் ஒலிக்காத குரலில்,
“ஆம் நவாப்.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“மன்னரே சொன்னார்.”
“சொன்னாரா!”
“ஆம்”
“அது உண்மையென்று உனக்கு எப்படித்தெரியும்?”
ரவிவர்மன் விளையாட்டுக்குக்கூட பொய் சொல்லமாட்டான்.” இதை மிகத் திட்டமாகச் சொன்னான் அஜ்மல்கான்.
அஜ்மல்கான் சொன்னது உண்மையென்பதை குஸ்ரூகானும் உணர்ந்திருந்தான். பொய்யென்பதை ராஜ தந்திரத்தை முன்னிட்டுக்கூட ரவிவர்மன் சொல்ல மாட்டான் என்பது கில்ஜியின் பிரதம அடிமைக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
ஆகவே அவன் தீவிர சிந்தனையில் இறங்கினான். ரவிவர்மன் போக்கு சிறிதும் புரியவில்லை குஸ்ரூகானின் கூறிய புத்திக்குக்கூட. இங்கிருந்து ஒற்றனை அனுப்புகிறேன். அவனை சிறை செய்துவிட்டு ஏதும் கேட்காமல் திருப்பி
அனுப்புகிறான் சேரன். அவன் படைத்தலைவன் புலவரிடமிருந்து கடிதம் வந்தது என்று கூறி என்னிடம் அனுமதி கேட்டுப் போகிறான். அவனையும் சிறை செய்கிறான் சேரன். இப்படியே போனால் அவன் மகளையும்,
புலவரையுங்கூட சிறை செய்வான் போலிருக்கிறது” என்று நினைத்துக் குழம்பினான் குஸ்ரூகான்.
அந்த சமயத்தில் அந்தச் செய்தியையும் சொன்னான் அஜ்மல்கான், “சேரன் அவன் புதல்வியையும் சிறை செய்து விட்டான்” என்று.
குஸ்ரூகான் முகத்தில் கோபம் மீண்டும் தாண்டவமாடியது. “என்ன உளறுகிறாய்? யார் உனக்கு இந்த செய்தியைச் சொன்னது” என்று கேட்டான் கொதித்த குரலில்.
“புலவர் சொன்னார் என்னை விடுவித்தபோது” என்றான் அஜ்மல்கான்.
“புலவரா! புலவர் இங்கல்லவா ஓலை அனுப்பினார். அங்கு எப்படி வந்தார் உடனடியாக” என்று கேட்டான் குஸ்ரூ.
“தெரியாது. ஆனால் புலவரும் அங்கிருந்தார்” என்றான் அஜ்மல்கான்.
இதைக் கேட்ட குஸ்ரூகான் சிந்தனையிலிறங்கினான் மீண்டும். “அப்படியானால் புலவர் படை தலைவனில்லா மல் இருக்கிறது. அதைத் தாக்க இதுதான் சமயம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அந்தச் சமயத்தில் யாரோ அவனது கூடாரத்துக்கு முன்பாகப் புரவியிலிருந்து வெகு வேகமாக இறங்கினான். உள்ளேவிட மறுத்த காவலனிடம் “அவசரம் படைத்தலைவரை உடனே பார்க்க வேண்டும்” என்று அதட்டினான்.
அடுத்த வினாடி காவலனை ஒதுக்கித் தள்ளிவிட்டு பூர்ண கவசத்துடன் உள்ளே வந்த வீரன் தலைவணங்கினான் குஸ்ரூகானுக்கு. குஸ்ருகான் விசாரிக்காத முன்பு அவனே சொன்னான். “படைத்தலைவரே! நமது படை கள்
இரண்டாகப் பிளக்கப்பட்டன” என்று.
குஸ்ருகான் சிலையென நின்றான். அவன் கண்களில் அது வரையிருந்த கோபம் அடியோடு மறைந்துவிட்டது. கண்கள் பூர்ண நிதானத்தைக் காட்டின. “எந்தப் பகுதியில்?”, என்ற கேள்வியில் சிறிதும் பதட்டமில்லை. பெரிய
தளபதிகளில் தானும் ஒருவன் என்பதை குஸ்ரூகான் அந்த சமயத்தில் நிரூபித்தான்.
“இங்கிருந்து வடமேற்கில் மதுரைக்கும் நமக்கும் இடையில் புலவர் படை புகுந்துவிட்டது” என்றான் வீரன்.
“எப்பொழுது?”
“இரண்டு நாட்களுக்கு முன்பு”
“யார் தலைமை வகித்து படையை நடத்தினார்கள் தெரியுமா?”
“முக்கியமாக யாரும் இல்லை. யாரோ ஒரு சாதாரண உபதலைவன்.”
குஸ்ரூகான் முகத்தில் பெருமிதம் விளைந்தது. பரவிவர்மன் தான் படைகளை நடத்துகிறான், படைகளுக்கு முன் பிருந்தல்ல, இருந்த இடத்திலிருந்தே காய்களை சதுரங்கத்தில் நகர்த்துவதுபோல் நகர்த்துகிறான். அவன் படைகள் இயங்க
எந்த சாதாரண உபதளபதியும் போதும்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட குஸ்ரூகான் அஜ்மல்கானை நோக்கினான். இதற்கு என்ன சொல்கிறாய்?” என்று வினவினான்.
“ஏதோ மாயாஜாலம் போலிருக்கிறது. தலைவனில்லாமல் படை நகருகிறது” என்றான் அஜ்மல்கான் பிரமிப்பு நிறைந்த குரலில்.
“மாயாஜாலமில்லை அஜ்மல். மனித ஜாலம். மனித அறிவு. ஆண்டவன் அதை சிலருக்கு அதிகமாகக் கொடுத்திருக்கிறான். அவர்களில் ரவிவர்மன் ஒருவன். அவன் தந்திரத்தின் எல்லையை நாமும் பார்ப்போம்” என்ற குஸ்ரூகான் சிறிது
பின்னாலிருந்த மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். நீண்ட நேரம் சிந்தனையில் இறங்கினான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து செய்தி கொண்டு வந்த வீரனை நோக்கி “என் உத்தரவு வரும் வரை நமது படைகள் எதிரிப் படைகளுடன்
மோத வேண்டாமென்று சொல்” என்று கூறினான். அதைக் கேட்டுத் தலைவணங்கி வீரன் வெளியே சென்றதும் அஜ்மல்கானையும் அனுப்பிவிட்டு மஞ்சத்தில் உட்கார்ந்த வண்ணம் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டான்
குஸ்ரூகான்.
போர் நிலைமை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. பொதியமலை வடக்குக் கோடியில் அவனிடமிருந்த படைப்பகுதி அவன் படையில் இரண்டிலொரு பாகம். ஒரு பாகம் மதுரைப் பாதையில் அவனிருந்த இடத்திலிருந்து ஒரு நாள்
பயணத்தில் முகாம் செய்திருந்தது. இந்த இரண்டு பிரிவுகளுக்குமிடையில் ரவிவர்மன் சிக்குவானென்று எதிர்பார்த்தான் குஸ்ரூகான், ரவிவர்மன் தலைமையிலிருந்து சிறு படையுடன் கிளம்பியதை ஒற்றர் மூலம் அறிந்த பின்னர் தான்
அவன் பொதியமலை வடகோடிக்கு படையைக் கொண்டு வந்தான். எப்படியும் ரவிவர்மன் மதுரையை நோக்கிச் செல்வான். ஒன்று புலவர் படையுடனோ பலபத்ரன் படையுடனோ இணைந்து கொள்ள யத்தனிப்பான்.
அப்பொழுது தன் படையைக் குறுக்கே பாய்ச்சி விடலாம் என்று கணக்குப் போட்டிருந்தான் குஸ்ரூகான். ஆனால் ரவிவர்மன் மதுரைக்குப் போகாமல் பொதியமலையின் தெற்குக்கு வந்ததை அறிந்ததும் அது மிக விசித்திரமாகப்
பட்டதால் அதன் உள் பயணத்தை அறிய, இளவழுதியின் முன் நாடகமாடி அரசமகளை விடுவித்து அவள் பின்னால் அஜ்மல்கானையும் அனுப்பினான். இளவழுதி போய்வர அனுமதி கேட்டதும் அதற்கும் இணங்கினான். தனது படை
.
மதுரை மார்க்கத்தை இரண்டு இடங்களில் துண்டித்திருக்கும் வரையில் தன்னை மீறி ரவிவர்மனோ, இளவழுதியோ எங்கும் செல்ல முடியாதென்று கணக்குப் போட்டிருந்தான். அந்தக் கணக்குத் தப்பாகி, தான் சேரனை மடக்கப் போக,
சேரன் தன்னை மடக்கி விட்டதை எண்ணியதும், மாற்றுத் திட்டம் என்ன வென்பதைப் பற்றிச் சிந்திக்கலானான். சிந்தனையில் மனத்தைப் பறிகொடுத்திருந்ததால், தலையைக் கைகளில் புதைத்துக் கொண்டிருந்ததால், எந்த சப்தமும்
செய்யாமல் உள்ளே இளவழுதி நுழைந்ததையோ அவன் உருவிய கத்தியுடன் தன்னெதிரே நின்றிருந்ததையோ குஸ்ரூகான் கவனிக்கவில்லை.
நீண்ட நேரம் கழித்துத் தலை நிமிர்த்தி இளவழுதி யைப் பார்த்தபோது சிறிதும் பதற்றப்படவில்லை மாலிக்காபூரின் உபதளபதி. மிக அலட்சியமாகவும், உதடுகளில் புன்சிரிப்புடனும் நோக்கினான் இளவழுதியை, இட்ட ஆணைப்படி
வந்துவிட்டாய்?” என்று சொன்னான் சகஜமாக.
வாளின் மீது இடும் ஆணையை நான் மீறியது கிடையாது. அதனால் வந்தேன்” என்றான் இளவழுதி.
“மீண்டும் சிறைப்பட?” குஸ்ரூகான் கேள்வியில் எந்தக் குரூரமோ இகழ்ச்சியோ இல்லை.
“ஆம்” என்றான் இளவழுதி.
“அப்படியானால் வாளை அப்படி வை.” நிலத்தைக் காட்டினான் குஸ்ரூகான்.
இளவழுதி வாளை நிலத்தில் போடவில்லை. வாளை குஸ்ரூகான் கழுத்தை நோக்கிப் பயங்கரமாக நீட்டிய வண்ணம் நடந்து வந்தான். அவன் ஒவ்வொரு அடியிலும் மரணம் தன்னை நெருங்குவதை குஸ்ரூகான் உணர்ந்து
கொண்டான்.
இத்தனைக்கும் குஸ்ரூகான் இமையைக் கூட அசைக்கவில்லை, மஞ்சத்தில் தன் அருகில் கிடந்த குறுவாளைக் கூட எடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவன் கூரிய கண்கள் மட்டும் இளவழுதியின் கண்களை இடைவிடாது
நோக்கிக் கொண்டிருந்தன. இளவழுதி அந்த வினாடியில், குஸ்ரூகான் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஏதோ சொல்ல இதழ்களை அசைக்க முயன்றான்.
அவனைப் பேசவிடவில்லை குஸ்ரூகான். கையமர்த்தி அவன் சொற்களை அடக்கி முடித்துவிடு பேச்சு வேண்டாம்” என்றான், உறுதி நிரம்பிய மெதுவான குரலில்.