Cheran Selvi Ch45 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 45. உணவை மறந்தவன்
Cheran Selvi Ch45 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
மதுராபுரியில் முப்பெரும் வாயில்களை நோக்கி வந்து கொண்டிருந்த சேரமான் படையின் மூன்று பிரிவுகளில், வடக்கு வாயிலை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்த பிரிவை, மதுரைக்கு ஒரு காத தூரத்துக்கு முன்பே
சந்தித்தான் இளவழுதி. அவன் சென்ற சமயத்தில் இரவு முற்றிவிட்டதால், பலபத்ரன் அதற்கு இளைப்பாற இரண்டு ஜாமங்களை அளித்திருந்ததன் விளைவாக, படைப்பிரிவின் புரவி வீரரும் காலாட்களும் ஆங்காங்கிருந்த மரத்தடிகளில்
உட்கார்ந்திருந்தனர். சிலர் புரவிகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டும் அவற்றின் கால்களை உருவி விட்டு அடுத்த பயணத்துக்குத் தயார் செய்து கொண்டும், மற்றும் சில காலாட்கள் தங்கள் விற்களின் நாண்முறுக்கையும், அம்பறாத்
துணிகளிலிருந்த அம்புகளையும் சரி பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். இன்னும் சிலர் தரையில் மல்லாந்து படுத்து ஆகாயத்திலிருந்த நக்ஷத்திரங்களைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி மேலுக்கு
இளைப்பாறுவதாகத் தோன்றினாலும் அந்தப் படையின் விழிப்பும் துடிப்பும் சிறிதும் குறையவில்லையென்பதை சற்று தூரத்திலிருந்த ஒரு குன்றின் மீதிருந்து கவனித்துக்கொண்டிருந்த இளவழுதி சந்தேகமறப் புரிந்து கொண்டான்.
அதனால் திருப்தியடைந்த உள்ளத்துடன் தன் புரவியைத் தட்டி விட்டு வெகுவேகமாகக் குன்றிலிருந்து இறங்கிப் படைத் தளத்தை அடைந்ததும், படை முகப்பிலேயே இரு வீரரால் தடுக்கப்பட்டான். அந்த முகப்பில் பந்தம்
ஏதுமில்லாதிருந்தாலும் பக்கவாட்டிலிருந்த மரங்களின் மறைவிலிருந்து திடீரென இருவீரர்கள் வந்து தன்னை மடக்கியதும், மற்றும் பல வீரர்கள் அவர்களைத் தொடர்ந்து தன்னைச் சூழ முற்பட்டதையும் கண்ட அந்த பாண்டிய வாலிபன்
மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவன் மகிழ்ச்சியை அதிகப்படுத்த அவர்கள் பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது அதிகாரத் தோரணையில் “யாரவன்?” என்று. வந்தவன் பலபத்ரன் என்பதை அறிந்ததும் மௌனமாகவே புரவியிலமர்ந்திருத்த
இளவழுதியை அந்த இருட்டில் பார்க்க முடியவில்லையென்றாலும் ராஜாவைப் பார்த்துவிட்ட பலபத்ரன், “அடடே! நில்லுங்கள். அந்தப் புரவியைத் தெரியவில்லை உங்களுக்கு?” என்று கேட்டதோடு வீரர்களை விலக்கிக் கொண்டு
முன்னால் வந்து “தளபதி! வர வேண்டும். இப்படித் திடீரென்று தங்களை நான் எதிர் பார்க்கவில்லை” என்று வியப்புடன் கூறினான்.
இளவழுதி ராஜாவை விட்டு இறங்கி “உபதளபதி! நீங்கள் என்னை மறந்தாலும் ராஜாவை மறக்கவில்லை” என்று கூறி நகைத்துவிட்டு, “நான் இந்தப் படையை இயக்கியிருந்தாலும் இத்தனை சன்னத்தமாக என்னால் அதை வைத்திருக்க
முடியாது” என்று பாராட்டவும் செய்தான்.
அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை பலபத்ரன். தலையை மட்டும் தாழ்த்தித் தளபதியை வணங்கி வீரர்களை அகன்று செல்லும்படி பணித்து விட்டு இளவழுதி பின்தொடர தனது பாசறையை நோக்கி நடந்தான், மூன்று மரங்கள்
முக்கோணமாக இயற்கையில் நெருங்கிக் கூடாரம் அமைத்துத் தந்திருந்த இடத்திற்கு இளவழுதியை அழைத்து வந்த பலபத்ரன் அந்த மூன்று மரங்களுக்கிடையிலிருந்த புல்வெளியில் உட்கார்ந்து இளவழுதி அமர கீழே கிடந்த தனது மேல்
அங்கியை விரித்துப் போட்டான். இளவழுதி அதில் உட்காராமல் தனது அங்கியையும் கழற்றி அத்துடன் போட்டு விட்டு “உபதளபதி! யாரையாவது அழைத்து ராஜாவுக்கு தீனி வைக்கச் சொல்லுங்கள் சென்ற இரண்டு நாட்களாக
இடைவிடாமல் பயணம் செய்திருக்கிறது” என்றான்.
புரவியைக் கவனிக்கும்படி பலபத்ரன் இரு வீரர்களுக்கு உத்தரவிட்டு ‘. தாங்களும் இரண்டு நாள் அன்ன ஆகாரமில்லாமல் பயணம் செய்திருக்க வேண்டுமே” என்று வினவினான்.
“பட்டினி கிடந்து எனக்குப் பழக்கம்”என்ற இளவழுதி “உணவைப் பிறகு கவனிப்போம் உங்களுக்கு மன்னர் என்ன உத்தரவு அனுப்பியிருக்கிறார்?” என்று விசாரித்தான்.
“பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரே ஒரு ஓலை அனுப்பினார். அதில் என்னை, சற்று வடக்கில் சென்று தெற்கு நோக்கி இறங்கி மதுரையின் வடக்கு வாயிலைத் தாக்கும்படி உத்தரவிட்டிருந்தார்” என்ற பலபத்ரன் “ஆமாம்! தாங்கள்
என்னை விசாரிக்கிறீர்களே போர் பற்றி, மன்னர் உங்களுக்கு எதுவும் சொல்லவில்லையா?” என்று வினவவும் செய்தான்.
“இல்லை”என்றான் இளவழுதி.
“இல்லையா?” வியப்பு நிரம்பிய பலபத்ரன் விழிகள் படைத்தலைவனை நோக்கின.
“இல்லை”
“நீங்கள் மன்னரிடமிருந்து தானே வருகிறீர்கள்?”
“இல்லை”
இந்தப் பதில் பலபத்ரன் வியப்பை அதிகப்படுத்தவே “வேறு எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று விசாரித்தான் வியப்பு குரலிலும் விரிய.
“குஸ்ரூகானிடமிருந்து’ என்றான் இளவழுதி முழந்தாள்களை கட்டி உட்கார்ந்த வண்ணம்.
அதிர்ச்சி என்ற சொல்லுக்கு ஏதாவது உவமை காட்ட வேண்டுமானால் அந்த உவமையாக விளங்கினான் பலபத்ரன். “எதிரியிடமிருந்தா?” என்ற கேள்வியில் அதிர்ச்சி பெரிதும் இருந்தது.
“ஆம்.”
“குஸ்ரூகான் குரூரம் மிகப் பயங்கரமென்று கேள்வியாயிற்றே!”
“பொய் வதந்தி”
“அப்படியானால் குஸ்ரூகான்…”
“தாராள மனப்பான்மையுடைய எதிரி. அவன் தயவில்லாவிட்டால் நான் அஜ்மல்கானிடமிருந்து தப்பியிருக்க முடியாது.”
இளவழுதியின் கடைசி விளக்கம் பலபத்ரனை இன்னும் அதிகக் குழப்பத்தில் ஆழ்த்திவிடவே “எனக்கு ஏதும் புரியவில்லை படைத்தலைவரே” என்று கூறினான்.
இளவழுதியே விளக்கம் தந்தான். “குஸ்ரூகானிடம் நான் சிறையிருந்தேன். அந்தச் சிறையில் என்னைக் கொன்று விட்டிருப்பான் அஜ்மல்கான். ஆனால் குஸ்ரூகான் இரவோடு இரவாக என்னை விடுவித்து அழைத்துக் கொண்டு
கிளம்பினான். நேற்றுத்தான் என்னை விட்டுத் திரும்பி மறுபடியும் தன் படைத்தளத்தை நோக்கிச் சென்றான்” என்று விவரித்தான் இளவழுதி.
இதைக் கேட்ட பலபத்ரன் பல நிமிடங்கள் பேசாமலே உட்கார்ந்திருந்தான். பிறகு கேட்டான் “அவன் படைகள் எங்கு நம்மைத் தாக்கும்?” என்று.
இளவழுதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பதில் சொன்ன போது அதில் விளக்கமில்லை. கேள்வியே இருந்தது. “குஸ்ரூகான் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?” என்று வினவினான்.
தங்கு தடங்கலில்லாமல் வந்தது பலபத்ரன் பதில். “எதிரியை மதுரையை நெருங்கவிட்டு பின்னால் தாக்குவேன். முன்புறத்தில் மதுரைக் கதவுகளைத் திறந்து கொண்டு வீரபாண்டியன் வந்தால் இடையில் எதிரியின் படை அகப்பட்டு
அழிந்துவிடும்” என்று.
இளவழுதி நகைத்தான். “அப்படி அகப்பட்டுக் கொண்டால் நீ என்ன செய்வாய்” என்று வினவினான்.
“போரிடுவேன்.” பலபத்ரன் சீற்றத்துடன் பேசினான்.
“அந்தப் போரின் முடிவு அழிவைத் தருவது” என்றான் இளவழுதி.
“இறந்தால் வீர சொர்க்கம்.”
“நாம் வீரசொர்க்கமடைவதற்காகவா படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தோம்?”
“வேறு எதற்கு?”
“சுதந்திரமே ஒரு சொர்க்கம் உபதளபதி. அதை நாம் அடைந்து வாழப் பார்க்கிறோம். நீ வீழ்ந்து மேலுலகம் செல்லப் பார்க்கிறாய், நான் இன்னும் சில காலம் இங்கேயே இருக்க உத்தேசித்திருக்கிறேன்.” என்ற தளபதி மகிழ்ச்சி துலங்க
நகைத்தான்.
பலபத்ரன் முகத்தில் சிறிது சினம் உதயமாயிற்று. “தாங்களாயிருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று விசாரித்தான் குரலிலும் சிறிது உஷ்ணத்தைக் காட்டி.
இளவழுதி பலபத்ரனைக் கூர்ந்து நோக்கினான். “என்ன செய்வேனென்பதை குஸ்ரூகானிடம் சொன்னேன்” என்று சொன்னான், சில வினாடிகளுக்குப் பிறகு.
“என் படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து மூன்று இடங்களில் மதுரையைத் தாக்குவேனென்றும், குஸ்ரூகான் பின்புறத்தில் தாக்க வந்தால் இரண்டு படைப் பிரிவுகள் இரண்டு இடங்களில் அதைத் துண்டிக்குமென்றும்,
மூன்றாவது படைப் பிரிவும் திடீரெனத் திரும்பித் துண்டிக்கப்பட்ட முதல் பிரிவை அழித்துவிடுமென்றும் சொன்னேன். பிறகு மீதியிருக்கும் படையின் கதியை எண்ணிப் பார்க்குமாறு கூறினேன்” என்றான் இளவழுதி.
இதைக் கேட்ட பலபத்ரன் ஆச்சரியம் ததும்பிய கண்களுடன் இளவழுதியை நோக்கினான். “படைத் தலைவரே! உம்மைக் காரணமில்லாமல் மன்னர் படைத் தலைவராக நியமிக்கவில்லை” என்று பாராட்டவும் செய்தான்..
இளவழுதி பலபத்ரனை நோக்கி “உபதளபதி! அதற்குள் பாராட்டிவிடாதீர்கள். அதற்கு குஸ்ரூகான் சொன்ன பதிலையும் கேளுங்கள். நீங்கள் என் படையைப் பின்னால் தாக்கும்போது வீரபாண்டியன் மதுரைக் கதவுகளைத்
திறந்துகொண்டு வந்து உங்கள் மேல் விழுந்தால் என்ன செய்வீர்கள்?” என்று சிறு அஸ்திரமொன்றை வீசினான்.
“சரியான கேள்விதான். அப்படி வீரபாண்டியன் தாக்கினால் நமது நிலை அபாயந்தான்” என்று ஒப்புக் கொண்ட பலபத்ரன் “ அதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?” என்றும் வினவினான்.
இளவழுதி நிலத்தில் கண்களை ஓடவிட்ட வண்ணம் சொன்னான். “வீரபாண்டியன் வெளியில் வரமாட்டான் எங்களைத் தாக்கவும்மாட்டான் என்று பதில் கூறினேன்.”
“ஏன் வீரபாண்டியன் நம்மைத் தாக்கமாட்டான்?” என்று வினவினான் பலபத்ரன்.
“மதுரை இப்பொழுதுதான் மாலிக்காபூரால் அழிந்திருக்கிறது. நம்மை வீரபாண்டியன் அழித்தால் குஸ்ரூகான் படை மதுரையில் நுழைந்துவிடும். அதன் விளைவு மதுரை மக்களுக்குத் தெரியும். அந்த நிலை நிலவ, குஸ்ரூகானின்
இஸ்லாமியப் படைகள் உள்ளே நுழைய வீர பாண்டியன் ஒருகாலும் அனுமதிக்கமாட்டான்” என்று சொன்ன இளவழுதி, “பலபத்ரா! மாலிக்கா பூரைப் போன் றவனல்ல குஸ்ரூகான். அவன் நாட்டைச் சூறை யாடவோ, அழிக்கவோ
இஷ்டப்படவில்லை. இஸ்லாமிய அரசை இங்கு ஸ்தாபிக்கும் பெரிய நோக்கத்துடன் இருக்கிறான். ஆனால் இது வீரபாண்டியனுக்குத் தெரியாது” என்றும் கூறினான்.
பலபத்ரனுக்கு விஷயங்கள் விளக்கமாகத் தெரிந்தன. இருப்பினும் இதெல்லாம் உங்கள் ஊகந்தானே?” என்று கேட்டான்.
“ஊகந்தான். ஆனால் அத்தாட்சியும் இருக்கிறது” என்றான் இளவழுதி.
“என்ன அத்தாட்சி?”
“வீரபாண்டியனுக்கும் குஸ்ரூகானுக்கும் போர் ஒப்பந்தம் இருக்கிறது. அதை செயல்படுத்த உத்தேசமிருந்தால் புலவர் படை இரு படைகளையும் துண்டித்தபோதே வீரபாண்டியன் நம்முடன் போருக்கு வந்திருக்க வேண்டும். அப்படி
வந்திருந்தால் குஸ்ரூகான் பொதிய மலையிலிருந்து இறங்கி ஐந்தே நாள் பயணத்தில் நம்மைத் தாக்கியிருப்பான். அதை வீரபாண்டியன் செய்யவில்லை.”
இதைக் கேட்ட பலபத்ரன் வியப்பின் வசப்பட்டான். “இப்பொழுது வீரபாண்டியன் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறான்!” என்று வினவவும் செய்தான்.
“போரிட உத்தேசிக்கிறான்.”
“நம்முடனா!”
“ஆம்.”
“அப்பொழுது குஸ்ரூகான் என்ன செய்வான்?”
“ஏதும் செய்யமாட்டான்.”
“படைத் தலைவரே! இது மிக விசித்திரமாயிருக்கிறது.”
“விதித்திரம் ஏதுமில்லை இதில், பாண்டியனும் சேரனும் அடித்துக் கொள்ளட்டுமென்று விட்டுவிட்டு அந்தப் போரினால் சீர்குலைந்த படைகளுடன் வரும் சேர மன்னனைக் காஞ்சியில் சந்திப்பான். என் ஊகம் சரியானால் ருஸ்ரூகான்
.
படை காஞ்சி நோக்கி நகர்ந்திருக் கும்” என்று விவரித்தான் இளவழுதி.
“காஞ்சியில் நம்மைச் சந்திப்பது என்ன விசேஷம்?” என்று பலபத்ரன் கேட்டான்.
“காஞ்சிக்கு வடக்கில் மாலிக்காபூர் இன்னும் முகாம் செய்திருக்கிறான். அந்த தைரியம் ஒன்று. இரண்டாவது காஞ்சியின் மதில்கள் அணுக முடியாதவை. இது இரண்டாவது காரணம்” என்று கூறினான் இளவழுதி.
மேலும் சந்தேகம் கேட்டான் பலபத்ரன். “குஸ்ரூகான் சென்றுவிட்டதால் சேரமன்னர் போர் தொடுக்காமல் இருந்துவிட்டால்? காஞ்சிக்குப் போகாமலிருந்து விட்டால்?”
“இந்த சமயத்தில் இந்து சமயத்தைக் காக்கவும் கோயில்களைப் பாதுகாக்கவும் ரவிவர்மன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஆகவே காஞ்சியை நோக்கி நிச்சயம் வருவார் என்பது குஸ்ரூகானுக்குத் தெரியும்” என்ற தளபதி
“உபதளபதி! ரவிவர்மனைப் போன்ற மன்னர்கள் சரித்திரத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறோம். ஆகையால் அவர் லட்சியத்தில், புதிய பணியில் நாமும் பங்கு கொள்வோம்’ என்ற இளவழுதி எழுந்தான்.
பலபத்ரனும் உடன் எழுந்து அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.
“நாளைக் காலையில் நமது படை புறப்படுகிறது. நாளை மாலையில் நான் மதுரையைத் தாக்கப் போகிறேன்” என்றான் இளவழுதி,
“உணவு அருந்தவில்லையே நீங்கள்” என்றான் பலபத்ரன்.
“மறந்துவிட்டேன். ஏதாவது உணவு கொண்டு வரச்சொல்” என்று கூறிய இளவழுதி படை. களைப் பார்வையிட நடந்து சென்றான்.