Cheran Selvi Ch49 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
அத்தியாயம் – 49. காமக் காற்று
Cheran Selvi Ch49 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
முன்னறிவிப்பு ஏதுமின்றித் தனது பாசறைக்கு வந்து ஓலையொன்றைத் தன் காலடியில் எறிந்துவிட்டு முகத்தில் இகழ்ச்சி உலாவ, பவள உதடுகள் லேசாகத் துடிக்க நின்றிருந்த பாண்டிய ராணியைக் கண்ட இளவழுதியின் நிலை பரம
சங்கடமாயிருந்தது. வேட்டைக்காரன் இல்லத்துக் கூடத்தின் தூணில் கட்டப்பட்டிருந்த பந்தத்தின் சுடரொளி நிலமங்கையின் சுந்தர வதனத்தை அக்னிப் பிழம்பில் அடித்திருந்ததைக் கவனித்தான். அந்த அக்னிப் பிழம்பில் நிலவிய
இகழ்ச்சியின் காரணத்தையும் புரிந்து கொண்டான், தனது காலடியில் கிடந்த ஓலையில் எழுதியிருந்தது என்ன என்பதையும் ஊகித்துக் கொண்டதால், அதை எடுக்காமலே துயரந் தோய்ந்த உள்ளத்துடன் நில மங்கையைக் கூர்ந்து
நோக்கினான் சில வினாடிகள். வினாடிகள் அதிகமில்லையென்றாலும் இருவரிடையே நிலவிய மௌனம் அந்த சில வினாடிகளையும் பெரும் நரகமாக அடித்திருந்தது.
மௌனத்தை நிலமங்கையே உடைத்தாள். இறுதியில் “ஓலையை எடுத்துப் படிக்கலாம். உங்கள் லட்சியப் பூர்த்தி அதிலிருக்கிறது” என்றாள் அவள்.
தலையை நிலத்தில் தாழ்த்திக் கீழே கிடந்த ஓலை மீது கண்களை நாட்டினான் இளவழுதி. “படிக்க அவசியமில்லை” என்று பதில் சொன்னான் சங்கடம் நிரம்பிய குரலில்.
“ஏன்?” என்று கேட்டாள் நிலமங்கை அவனைச் சுட்டு விடும் குரலில்.
“ஓலையில் பொறிக்கப்பட்ட செய்தி. அதைப் பிரிக்காமலே தெரிகிறது” இளவழுதி அவளைப் பார்க்காமலே பேசினான்.
“எப்படித் தெரிகிறது?”
“செய்தி ஓலையில் மட்டுமல்ல, ராணியார் முகத்திலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.”
“நீங்கள் மனோதத்துவ நிபுணரா என் முகத்திலிருந்து ஓலையின் கருத்தறிய?” என்று கேட்டாள் ராணி.
இளவழுதி மெள்ள சுயநிலையடைந்தான். வழக்கமான பாணியில் பேசவும் ஆரம்பித்தான். “இதற்கு எந்த வித நிபுணத்துவமும் தேவையில்லை. ஆனால் ஒன்று சேரன் மகளே! நீங்கள் இரண்டாவது முறை வீர பாண்டியனைக் காப்பாற்றி
விட்டீர்கள்” என்று கூறிப் புன்முறுவலும் கொண்டான்.
நிலமங்கையின் விழிகளில் சிறிது சந்தேகச் சாயை படர்ந்தது. “இரண்டாவது முறையா!” என்று சந்தேக மும் வியப்பும் இணைந்த குரலில் வினவினாள் பாண்டிய ராணி.
இளவழுதியின் இதழ்களிலிருந்த புன்முறுவல் சிறிது அதிகமாகவே விரிந்தது. “பாண்டிய ராணியார் ராணியாராகும் முன்பு நடந்த கதையை சொல்கிறேன். அப்பொழுது குறுவாளெறிந்து பலரைக் கொன்று சுந்தர பாண்டியன்
தீர்த்துக்கட்ட முயன்ற வீரபாண்டியனைக் காப்பாற்றி வீரதவளப் பட்டணம் அழைத்துச் சென்றீர்கள். சேர மன்னன் உதவியால், அதாவது உங்கள் தந்தையின் உதவியால் பாண்டிய மன்னனாகவும் ஆக்கினீர்கள்” என்ற இளவழுதி நிதானித்து
ராணியை நோக்கினான்.
இதைக் கேட்ட நிலமங்கையின் முகம் பழைய நினைப்புகளால் பெரிதும் சாந்தமடைந்தது. கோபம் மறைந்து சந்திரனைப் போல் குளிரவும் செய்தது. நாணத்தால் சந்துஷ்டியும் குழப்பமும் அடைந்தது. “அது பழைய கதை, சேரன் படைத்
தலைவரே” என்ற அவள் குரலிலும் குழைவு காணப்பட்டது.
இளவழுதியின் முகத்தில் திருப்தி நிலவியது. “ஆனால் அது புதிய கதைக்கு வித்து” என்று கூறினான் திருப்தி குரலிலும் நிலவ.
நிலமங்கையின் விழிகள் பளிச்சிட்டன. “புதிய கதையா!” என்ற அவள் குரலில் ஏதோ எதிர்பார்ப்பு இருந்தது.
“ஆம்” என்றான் இளவழுதி.
“புதிய கதை எனக்குப் புரியவில்லை “ நிலமங்கையின் குரலில் தெம்பு இருந்தது முதன் முதலாக.
“ராணி சிந்தித்துப் பாருங்கள். இன்று உங்கள் கணவர் உட்கார்ந்திருப்பது உங்கள் தந்தை கொடுத்த சொத்து. அதை அவர் பறிக்க விரும்பமாட்டார். அரசை மட்டுமின்றி மகளையும் கொடுத்த ரவிவர்மன் பாண்டிய மன்னரை
கேவலப்படுத்தவோ அடிமைப்படுத்தவோ விரும்புவதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் உங்கள் தந்தையைப் புரிந்து கொள்ளவில்லையென்றுதான் அர்த்தம். நீங்கள் எறிந்த அந்த ஓலையில் வீரபாண்டியன் தோல்வியை
ஒப்புக்கொண்டிருக்கிறார். மதுரைக்குள் வந்து அதை ஏற்றுக்கொள்ள அழைக்கிறார் மாமன்னரை. ஆனால் ரவிவர்மர் மதுரைக்குள் வரமாட்டார். அதன் அரியணையில் உட்கார்ந்து மருமகனை எதிரே நிற்கும் இழிநிலைக்கு ஆட்படுத்த
அவர் இங்கே மற்றவரல்ல. வீரபாண்டிய மன்னர் தோல்வியை ஒப்புக் கொண்டதே போதும், மதுரைக்குள்ளே நுழையவோ ஜெயபேரிகை கொட்டவோ நாங்கள் விரும்பவில்லை” என்று திட்ட வட்டமாகக் கூறினான் சேரன்
படைத்தலைவன்.
“அத்தனை திட்டமாகக் கூற உங்களுக்கு ஏது அதிகாரம்? தந்தையைக் கலந்துவிட்டீர்களா” என்று நிலமங்கை வினவினாள்.
“இல்லை “
“அப்படியானால் மன்னர் உத்தரவு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“என்னைச் சற்று முன்பு மனோதத்துவ நிபுணனா என்று கேட்டீர்கள்?”
“ஆம்”
“அதை இப்பொழுது ஒப்புக் கொள்ள முடியும்.”
“அதாவது எல்லாம் நீங்களே ஊகித்தது?”
“ஆம்.”
“படைத்தலைவரே ஊகத்தில் அரச காரியங்கள் நடக்க முடியாது. எதற்கும் உங்கள் மன்னரைக் கேட்டுச் சொல்லுங்கள்” என்ற நிலமங்கை கீழே தான் எறிந்த ஓலையைக் குனிந்து எடுத்து இளவழுதியிடம் நீட்டினாள்.
இளவழுதி அதை வாங்கி மடியில் செருகிக் கொண்டு “பாண்டிய மன்னரிடம் சொல்லுங்கள். அவர் தோல்வியை ஒப்புக்கொண்டதால் மேற்படி நாசம் தவிர்ந்ததென்று. நாங்கள் இங்கு பத்து நாட்கள் தங்குவோம், அந்தப் பத்து
நாட்களில் எங்கள் படைக்கு வேண்டிய உணவு வாதிகளை அவர் செய்து தர வேண்டும். மற்றபடி மதுரையின் பழைய வாழ்க்கை பழைய படி நடக்கட்டும்” என்று கூறினான்.
“சேர மன்னன் சார்பாக சகலத்தையும் இளவழுதியே பேசி முடித்துவிட்டதைக் கண்ட நிலமங்கை பெரும் பிரமிப்புக்கு உள்ளானாள். இளவழுதியின் சுய நம்பிக்கை, பெரும் போக்கான முடிவுகள், அவன் மீது அவளுக்கிருந்த மதிப்பை
அதிகப்படுத்தியது. ஆகவே கூறினாள் “ இளமதி சரியான தலைவனைத்தான் பிடித்திருக்கிறாள்” என்று.
அந்த சமயத்தில் இளமதியும் உள்ளே நுழைந்தாள். நிலமங்கையும் இளவழுதியும் உரையாடிக் கொண்டிருந்ததையும், தான் நுழைந்தபோது தனது பெயர் அடிபட்டதையும் கேட்டு “அக்கா” என்று அழைத்தாள் அன்பு குரலில்
பெருகியோட.
நிலமங்கை தனது தங்கையை நோக்கினாள்’ “இளமதி? இந்த நேரத்தில் இங்கு என்ன வேலையாக வந்தாய்?” என்று வினவினாள்.
“படைத்தலைவரைக் காண” என்ற இளமதியின் குரலில் சங்கடமிருந்தது.
“அது சகஜம்” என்ற நிலமங்கை நகைத்தாள் மெதுவாக.
இளமதியின் முகம் சிவந்தது சிறிது. “எது சகஜம்?” என்று வினவினாள் சினத்துடன்.
“நீ படைத்தலைவரை இந்த நேரத்தில் பார்க்க வருவது.”
“எப்படி சகஜம்?”
“படைத் தலைவரைத்தான் கேட்கவேண்டும். நீங்கள் சந்திக்கும் நேரம் காரணம் எல்லாம் எனக்கா தெரியும்?”
இளமதி முறுவல் கொண்டாள். “ஏன் தெரியாது அக்கா? நீ பாண்டிய மன்னரை அழைத்துக் கொண்டு வீரதவளப்பட்டணம் ஓடியதும் இரவில் தானே?” என்றும் சொன்னாள் முறுவலின் ஊடே.
“இளமதி!” சினம் இருந்தது நிலமங்கையின் குரலில்.
“எதற்கு அக்கா கோபம்” என்று இளமதி கேட்டாள்.
“பழைய கதையை. ஏன் இழுக்கிறாய்?” என்றாள் நிலமங்கை.
“நீ புதுக்கதையை இழுத்ததால்” என்றாள் இளமதி.
“என்ன கதையை நான் இழுத்தேன்?”
இளமதி சரியான தலைவரைத்தான் பிடித்திருக்கிறாள் என்று சொல்லவில்லை நீ?”
“சொன்னேன், அது தவறா?”
இந்த சமயத்தில் அந்த மங்கையர் உரையாடலில் இடை புகுந்த இளவழுதி “எது தவறோ என்னவோ பாண்டியர்கள் கையாலாகாதவர்கள்” என்று கூறினான்.
பாண்டியர்கள் கையாலாகாதவர்கள்!” வியப்புடன் வினவிளாள் நிலமங்கை.
“ஆம். சேர நாட்டு மங்கையரிடம் சிக்கிக்கொள்கிறார்கள். இதை நினைத்தால் இப்பொழுது பாண்டியன் அடைந்திருக்கும் தோல்வி ஒரு தோல்வியே அல்ல” என்ற இளவழுதி நகைத்தான்.
இதனால் இருமங்கையரும் வெகுண்டு இளவழுதியை நோக்க இளவழுதி “இன்னொரு போர் வேண்டாம். இப்பொழுது தான் போர் முடிந்திருக்கிறது” என்று கூறினான்.
“இளமதி! மன்னர் ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறாரா?” என்றும் வினவினான்.
“ஆம்”
“சொல் இளமதி”
“வெற்றிக் கொண்டாட்டம் ஏதும் வேண்டாமென்று சொல்லிவிட்டார். வீரபாண்டியன் தோல்வியை ஒப்புக் கொண்டால் படை மதுரைக்கு வெளியிலேயே நிற்கட்டும் என்று கூறிவிட்டார். வீரபாண்டியன் மனம் புண்படும் எந்த
நடவடிக்கையிலும் இறங்க வேண்டாமென்பது மன்னர் கட்டளை” என்று இளமதி விடுவிடு என்று செய்தியைச் சொன்னாள்.
இதைக் கேட்ட நிலமங்கையின் நீள்விழிகளில் நீர் திரண்டது. சேரமன்னன் தன்னையும் தன் கணவனையும் கருணையால் கொல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டதால் அவள் மனம் பாகாக உருகிக் கொண்டிருந்தது. இந்த
நினைப்பால் எழுந்த துக்கத்தைத் தீர்த்துக்கொள்ள இளமதியை அணுகி அவள் தோளில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அதுவரை தேக்கியிருந்த அணை உடைத்துக்கொண்டதால் தேம்பினாள், குலுங்கினாள் இளமதியின்
தோள் மீது.
இளமதி அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள். “அக்கா! திடமான உன் மனம் இப்படி கரையக் கூடாது. பாண்டியர், சேரர் என்ற பெயர்களை அகற்றி “தமிழர்’ என்ற பொதுப்பெயரை வைத்துப் பார், இதில் தோல்வி யாருக்கும் இல்லை.
பெரிய சரித்திரமுள்ள தமிழினத்தைக் காப்பாற்றி இந்து சமயம் சிதறாதிருக்கும் ஒரு பணி நடந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தத் தோல்வியே பாண்டிய மன்னருக்கு ஒரு வெற்றி” என்று கூறினாள்.
நிலமங்கை அதை ஆமோதித்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள் அவள் தோள்மீது. பிறகு அவளிடமிருந்து விலகி சகோதரியை நோக்கிய நிலமங்கை இளமதி நம் தந்தையின் செய்தியை நீ கொண்டு வரு முன்பே
படைத்தலைவர் மன்னர் அபிப்பிராயம் எப்படி என்பதைக் கூறிவிட்டார். மன்னன் மனத்தை அறியக் கூடிய படைத் தலைவர் மிக அபூர்வம். இளமதி! எந்தக் சாரணத்தை முன்னிட்டும் இவரைத் தப்பவிடாதே” என்று கூறினாள். கண்ணின்
.
நீரையும் துடைத்துக் கொண்டாள். ஏதோ சொல்ல வாயைத் திறந்தாள் ஒருமுறை. பிறகு ஏதும் பேசாமல் அவ்விருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
நிலமங்கை சென்றதும் இளமதி வருத்தத்துடன் சொன்னாள். “அவளுக்கு என்னை அரண்மனைக்கு அழைக்க ஆவல். ஆனால் தோல்வியுற்ற நிலையில் உதட்டில் எழுந்த அழைப்பைத் தேக்கிக் கொண்டு போய் விட்டாள்” என்று
இளமதியின் குரலில் துக்கம் மிதமிஞ்சி ஒலித்தது.
இளவழுதியும் நிலமங்கையின் மனநெகிழ்ச்சியை அறிந்தே இருந்தான். ஆதலால் பெருமூச்சு விட்டான். பிறகு சுற்றுமுற்றும் நோக்கினான். “யார் இங்கே? ஒரு வரையும் காணவில்லையே?” என்ற சற்றே இரைந்தே கேட்டான்,
“நிலமங்கை வந்ததும் போய்விட்டிருப்பார்கள். ராணிக்கு மரியாதை காட்ட” என்றாள் இளமதி.
“உனக்கு மரியாதை காட்ட நீ வந்ததும் உள்ளே வர மறுக்கிறார்கள்” என்று கூறிக்கொண்டே இளவழுதி இளமதியை அணுகினான். அவன் கைகள் மெதுவாக அவளை வளைத்தன. “இளமதி! இன்னும் எத்தனை நாள்” என்று
வினவினான்.
இளமதி முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டு கேட்டாள். “எதற்கு?” என்று.
இளவழுதி அவள் காதை நோக்கிக் குனிந்தான்.
“உன் அக்காவின் நிலையை நீ அடைய” என்றான் மிக ரகசியமாக.
அவன் என்ன சொல்கிறானென்பது அவளுக்குப் புரிந்துதானிருந்தது. ஆகவே அவனுடன் மிகவும் இணைந்தாள். “ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டும்” என்றாள் மிக மெதுவாக.
“அதாவது?”
“போர் முடிந்தபின்.”
“கிட்டத்தட்ட முடிந்தமாதிரிதான்.”
“முடிந்தது என்பதற்கும் முடிந்தமாதிரி என்பதற்கும் வித்தியாசமுண்டு.”
அந்த வித்தியாசம் அவனுக்குப் புரிந்திருந்தது. ஆனால் அந்த வித்தியாசம் அத்தனை பெரிதாக இருக்கு மென்பதை அந்த இருவருமே உணரவில்லை. வேட்டைக்காரன் விடுதியில் இருவரும் தனித்திருந்த வேளையில்,
அப்பொழுது எழுந்தது அதுவரை அடங்கியிருந்த வேட்கை. அந்த விடுதிக்கூடத்தின் மூலைக்கு அவளை அழைத்துச் சென்ற இளவழுதி திடீரென அவளை முரட்டுத்தனமாக அணைத்தான். அந்த சமயத்தில் அவள் பெரிதும்
பலவீனப்பட்டிருந்தாள். இளவழுதியின் இயற்கையான உறுதி, கடமை உணர்ச்சி;” எல்லாம் காமமெனும் காற்றில் பறந்து கொண்டிருந்தது.