Cheran Selvi Ch50 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 50. நவரச விளக்கம்
Cheran Selvi Ch50 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
வேட்டைக்காரன் விடுதிக்கூடத்தின் மூலையில், விளக்கு வெளிச்சம் சிறிதும் வீசாத இடத்தில் இளமதியை வெறியுடன் அணைத்த இளவழுதி அடுத்து வர இருந்த கடமையைச் சிறிதும் உணர்ந்தானில்லை. போர் முடிந்த மாதிரிதான்
என்பதற்கும் முடிந்தது என்பதற்கும் வேறுபாடு உண்டு என்று இளமதி சுட்டிக்காட்டியதை இவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. காமத்துக்குக் கண்ணில்லை என்பது பழமொழியாயிருக்க அதற்குக் காதும் இல்லையென்பதை
நிரூபித்தான் சேரர் படைத்தலைவன். இளமதியைக் காம வெறியுடன், இழுத்து அணைத்த வேகத்தில் அன்று போரில் அவன் மார்பில் ஏற்பட்டிருந்த இரண்டொரு காயங்கள் மீண்டும் வாயைத் திறந்து ரத்தத்தைக் கசியவிட்டன. கசிந்த
ரத்தத்திட்டுகள் அவள் மெல்லிய அங்கியை நனைத்ததோடு அங்கியுடன் இணைந்திருந்த அவள் மார்புக் கச்சையிலும் சிவப்பு அடையாளத்தைப் பொறித்தன. ஆனால் அவர்கள் இருந்த உணர்ச்சி நிலையில் இருவரும் ரத்தக் கசிவையோ
ரத்த அடையாளங். களையோ கவனிக்காமல் மேற்கொண்டு உரையாடலில் ஈடுபட்டார்கள். இளவழுதியால் பெரிதும் இறுக்கப்பட்ட இளமதிக்கு மூச்சுத் திணறும் போல் ஆகிவிட்டதால் “சற்று விடுங்கள்” என்றாள் இம்சை ஒலித்த குரலில்.
அந்த இம்சைக் குரலில் மகிழ்ச்சியும் கலந்திருந்ததைக் கண்ட இளவழுதி பரவசமடைந்தான். “விடாமல் என்ன செய்கிறேன்?” என்று வினவினான்.
முகத்தை அவன் விசாலமான மார்பில் புதைத்திருந்த இளமதி அவன் இதயத்துக்குச் செய்தி சொல்வது போல் மூச்சுத் திணறச் சொன்னாள் மெதுவாக, “என் உயிரை வாங்கிவிடுவீர்கள் போலிருக்கிறது” என்று.
“அத்தனை முரடனா நான்?” என்று கேட்டான் இளவழுதி அவளை இறுக்கிய கைகளைச் சிறிது தளர்த்தி பின் புறத்தில் தவழவிட்டு.
“இல்லை, வேட்டைக்காரன்” என்றாள் இளமதி நகைத்து.
‘வேட்டைக்காரனா!”
“ஆம். நீங்கள் இருக்கும் இடம் எது?”
“வேட்டைக்காரன் விடுதி.”
“அதுதான் வேட்டையாடுகிறீர்கள்.”
இதைக் கேட்ட இளவழுதியும் நகைத்தான். நகைத்த வண்ணம் கைகளை முதுகிலிருந்து கீழே இறக்கினான். “கையை கீழே இறக்கினால் உடைத்து விடுவேன்” என்று இளமதி சொன்னாள்.
அவளால் கையை உடைக்க முடியும் என்பதை இளவழுதி முன்னமே உணர்ந்திருந்தான். கொல்லத்தில் ஒரு நாள் நடந்ததை எண்ணியும் பார்த்தான். அவள் சீனப்பிடியின் பயங்கரத்தை நினைத்ததால் தனது கைகளை சிறிது தளர்த்தவும்
செய்தான். ஆனால் தளர்த்தியது இளமதிக்குப் பிடிக்காததால், “அடடே! அதற்குள் பயந்துவிட்டீர்களே” என்று கூறி, தனது தலையை அவன் மார்பின் மீதிருந்து நீக்கி அண்ணாந்து பார்த்தாள்.
ஆனால் அவள் கண்களை அவன் கண்கள் சந்திக்கவில்லை. அவன் கைகள் மட்டும் அவளை அனாயாசமாகத் தூக்கிக் கொண்டன. அப்படித் தூக்கிய நிலையில் வினவினான் இப்பொழுது எப்படிக் கையை உடைப்பாய்?” என்று.
பதிலுக்கு அவள் கைகள் எழுந்து அவன் கழுத்தைச் சுற்றின. முகமும் எழுந்து அவன் முகத்துடன் இழைந்தது. “இனி தாமதிக்க நேரமில்லை. மன்னர் காத்திருப்பார்” என்றாள் வேதனையுடன்.
மன்னர் காத்திருப்பார் என்பதை அவனும் உணர்ந்திருந்தாலும் அதைப் பற்றி அவன் லட்சியம் செய்யவில்லை. “காத்திருக்கட்டும்” என்று பதில் சொன்னான் இளவழுதி. அவள் முகத்தோடு தன் முகத்தை நன்றாக இழைத்த வண்ணம்
கூடத்தின் மூலையிலிருந்து விளக்கு இருக்குமிடம் வந்தான்.
“உம்…விளக்கு இருக்கிறது. பந்தம்கூட இருக்கிறது” என்று எச்சரித்தாள் இளமதி.
“அணைத்து விடட்டுமா?” என்று கேட்டான் இளவழுதி.
“நல்ல அழகு” என்று கூறிய இளமதி அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
இறங்கியதும் தன் மேலாடையைச் சரிபடுத்திக் கொள்ள முயன்றாள். கச்சையில் பதிந்திருந்த ரத்தத் திட்டுகளைக் கண்டு அச்சத்தின் வசப்பட்டாள். “ஐயோ! இதோ பாருங்கள்” என்றாள்.
அப்பொழுது தான் அந்தக் கரைகளைக் கவனித்த இளவழுதியும் சங்கடமடைந்தான். “என் மார்பு ரத்தம்” என்று சங்கடம் துளிர்த்த குரலிலும் சொன்னான்.
காயங்களுக்கு நீங்கள் சரியாக பச்சிலை வைத்துக் கட்டவில்லை” என்றாள் சேரன் செல்வி சினத்துடன்.
இல்லை. அதற்கு அவகாசமில்லை. காயமும் பல மில்லை ரத்தமும் உறைந்து விட்டது. அதனால் வெறும் துணியில் கட்டுப் போட்டேன்” என்று தான் ஏதோ பெரும் குற்றம் செய்தவனைப் போல் சமாதானம் சொன்னான் படைத்தலைவன்.
“அதையும் ஒழுங்காகப் போடவில்லை” என்று அரச மகள் சீறினாள்,
“ஆம்.”
“என்ன. ஆம்; என் மேலாடையிலும் இந்த ரத்தம் தெரியும்.”
“தெரிந்தாலென்ன?”
“பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?”
“யார் பார்ப்பார்கள்? யார் கேட்கப் போகிறார்கள்?” என்ற இளவழுதி “அட மறந்துவிட்டேனே ஒன்று செய். உன் மேலாடையை எடுத்துவிடு” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை “என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள்
மிதமிஞ்சிய சீற்றத்துடன்.
இளவழுதி புன்முறுவல் கொண்டான். “தவறாக நினைக்காதே. அதற்குப் பதில் என் பட்டு இருக்கிறது. அதைப் போர்த்திக் கொள். ரத்தக்கறை தெரியாது” என்றான்.
இதைக் கேட்டதும் அவள் கோபம் அதிகமாயிற்று. “உங்களுக்குப் புத்தி லவலேசம் இருக்கிறதா?” என்று
கேட்டாள் சினம் சிறிதும் தணியாத குரலில்.
“என் புத்திக்கென்ன குறைச்சல்?” இளவழுதி வினவினான் பணிவுடன்.
“நான் உடை மாற்றிச் சென்றால் என் தந்தை என்ன நினைப்பார்? புலவர்தான் என்ன நினைப்பார்?” என்று வினவினாள் அவள்.
இளவழுதியைப் பாராட்டவும், அடுத்த நடவடிக்கையைப் பற்றி விவரிக்கவும் அவன் பாசறைக்கு வந்து இளவழுதியையோ இளமதியையோ காணாத புலவர் வெளி முற்றத்தின் தாழ்வரையில் உட்கார்ந்திருந்தார். கூடத்து மூலையில்
ஏற்பட்ட அரவத்தால் நடப்பதை ஓரளவு ஊகித்துக் கொண்ட புலவர் வெறுப்புடன் தலையை ஆட்டிவிட்டு இருவரும் இருட்டிலிருந்து வரட்டும் என்று காத்திருந்தபோது, கூடத்து மூலைக்கு வந்தாலும் வெளி முற்றத்தின் பக்கம்
வராமலே அவர்களிருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டும், இருவர் நாடகத்தையும் பார்த்துக் கொண்டும் உள்ளூர நகைத்துக்கொண்டார். ஆனால் தமது பெயர் அடிபட்டதும் சும்மா இராமல் “புலவரைப் பற்றிக் கவலை
வேண்டாம்.” என்று சற்று இரைந்தே சொன்னார்.
புலவர் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்து கொண்ட இளவழுதி, இளமதியை விடுவித்துப் பிரிந்து நின்றான். அவளும் தரையில் சங்கடத்துடன் அசைந்தாள். “புலவரே” என்று சீற்றத்துடன் அழைக்கவும் செய்தாள்.
புலவர் கண்களில் விஷமக்களை சொட்டியது. “ஏன் இளமதி?” என்று பதில் குரல் கொடுத்தார்.
இளமதி அவரை நோக்கி நடந்து வந்தாள் அழகு இடை அசைந்தாட. “எப்பொழுது வந்தீர் புலவரே?” என்றும் வினவினாள். அவள் குரலில் மேலே சினமும், உள்ளே அச்சமும் இருந்ததைப் புலவர் கவனித்தார். ஆகையால் பட்டதும்
படாததுமாகப் பேசினார் “சற்று முன்பு வந்தேன்” என்று.
“வந்தால் உமது வரவை ஏன் அறிவிக்கவில்லை?’ என்று கேட்டாள் இளமதி எரிச்சலுடன்.
“படைத்தலைவரைக் கேள்” என்றார் புலவர்,
“அவரை எதற்காகக் கேட்க வேண்டும்?” அரசகுமாரி வெகுண்டு பேசினாள்.
புலவர் உள்ளுக்குள் லேசாகச் சிரித்துக் கொண்டார்.
“நான் வந்தபோது என் வரவை அறிவிக்க காவலர் யாரும் இல்லை. அவர்களைப் படைத்தலைவர்தான் வெளியே அனுப்பியிருக்க வேண்டும்…” என்று இழுத்தார் புலவர்.
இளமதியின் இதயத்தில் நாணம் படர்ந்தது.
“அதனால்?” என்று வினவினாள் குரலிலும் நாணம் ஒலிக்க.
“இங்கு யாருமில்லை. ஆகையால் உட்கார்ந்து விட்டேன். பிறகுதான் அரவம் கேட்டது கூடத்தின் மூலையிலிருந்து. குரல்களும் கேட்டன. நான் தனியாயில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். தலையிடவும் துணிவில்லை “ என்றார்
புலவர்.
அதுவரை வாளாவிருந்த இளவழுதி உரையாடலில் புகுந்து “புலவரே நகைச்சுவையைக் குறைத்துக் கொள்ளும்” என்றான்.
புலவர் மசியவில்லை. இளவழுதியை ஏறெடுத்து நோக்கினார். “ஒரு சுவையிலிருந்து இன்னொரு சுவை தொடருகிறது. இது காப்பிய இலக்கணம்” என்று சொன்னார். அத்துடன் விடவில்லை புலவர். “ இளவழுதி! நீ என்னிடத்தில்
தமிழ் படித்தவன். ஆகையால் புரிந்து கொள்வது எளிது. இன்று பகலில் வீரரசம் நடமாடியது மதுரைக்குப் புறம்பே. பிறகு இந்தப் பாசறையில் தொடர்ந்தது சிருங்காரம் எனப்படும் இன்ப ரசம். அதைத் தொடர்ந்து இப்பொழுது
துளிர்க்கிறது நகைச்சுவை ரசம்.” என்று விளக்கினார்.
இளமதிக்குப் புலவரின் விவரணம் மிக இன்பத்தைக் கொடுத்ததால் அவள் நகைத்தாள் லேசாக. “நவரசங்களில் பிரதான ரசங்களைத் தொட்டு விட்டீர்கள்” என் றாள் நகைப்பின் ஊடே.
“மற்ற ரசங்களும் இருக்கின்றனவே” என்றார் புலவர் தமது காப்பிய உணர்ச்சியைக் காட்டி.
இளமதி இளவழுதியை விட்டு நடந்து வந்து புலவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். “அவற்றையும் விவரியுங்கள் புலவரே!” என்று கேட்டாள்.
வெளி முற்றத்து விளிம்பில் உட்கார்ந்திருந்த புலவர் எதிரே நின்ற இளவழுதியை ஏறிட்டு நோக்கினார். பிறகு இளமதியின் பக்கம் திரும்பி, “இப்பொழுது பயரசம் தெரிகிறது” என்றார்.
“எங்கே புலவரே?” இளமதியின் கேள்வியில் விஷம மிருந்தது.
“படைத்தலைவர் முகத்தில்.”
“அவர் ஏன் பயப்பட வேண்டும்?”
“திருட்டுத்தனம் செய்யும் யாருக்கும் பயம் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கு அது கிடையாது.”
புலவரின் இந்த விவரணத்தைக் கேட்டதும் சினம் படர்ந்த முகத்துடன் எச்சரித்தாள் இளமதி “புலவரே! நிதானமாகப் பேசும்” என்று.
“சரி” என்று புலவர் மகிழ்ச்சியைக் காட்டினார்.
“எது சரி?” என்று வினவினாள் அரசகுமாரி.
“அடுத்த ரசம் வந்து விட்டது.”
“என்ன ரசம்?”
“ரௌத்ரம், அதாவது கோபம். மிகச் சிறந்த ரசம். காப்பியத்துக்கு இன்றியமையாதது” என்றார் புலவர். “என்ன படைத்தலைவரே, உமக்கு சுரணையே கிடையாதா? அரச குமாரியைப் பார்த்தாவது கோபிக்கக் கற்றுக் கொள்ளும்” என்றும்
.
தொடர்ந்து கூறினார்.,
அதற்கு பதிலேதும் சொல்லவில்லை இளவழுதி. குருநாதர் இங்கு வந்தது நவரச விவாதத்துக்கு அல்ல வென்று நினைக்கிறேன்” என்று மட்டும் கூறினான்.
“இல்லை. எதிர்பார்த்து ரசங்கள் பிறப்பதில்லை. இராம காவியமே மோகித்த இரு கிரௌஞ்சங்களிலிருந்து தான் விளைந்தது” என்று புலவர் சுட்டிக் காட்டினார்.
“ராமாயணத்துக்கும் நீர் வந்ததற்கும் என்ன சம்பந்தம்?” என்று சீறினான் படைத்தலைவன்.
“சீதையை ராமன் பிரிய வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம்” என்றார் புலவர்.
“என்னவோ?”
“அங்கு சீதையை ராவணன் தூக்கிச் சென்றான். நான் ராவணனல்ல, ஆகையால் உங்களைப் பிரிக்கும் கடமை மட்டும் என்னைச் சேருகிறது”. இதைச் சொன்ன புலவர் இளவழுதி! இப்பொழுதே நீ உன் படைப்பிரிவுடன் வீர
தவளப்பட்டணம் செல்ல வேண்டும்” என்று மெள்ள விஷயத்துக்கு வந்தார்.
இளவழுதியும் ஏதோ போர்த்துறையில் திருப்பம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். “விளங்கச் சொல்லுங்கள் புலவரே!” என்று கேட்டான்.
“வீரபாண்டிய போர் முடிந்துவிட்டது. ஆனால் பாண்டியருடன் போர் முடியவில்லை. மூத்தவனான சுந்தரபாண்டியன் மறைவிடத்திலிருந்து வெளிவந்த விட்டான். அவன் படை இப்பொழுது வீரதவளபட்டிணத்தில் நம்மை எதிர்க்கத்
தயாராயிருக்கிறது அதை நீ சமாளிக்கவேண்டுமென்பது மன்னர் எண்ணம்’ என்று புலவர் விளக்கினார்.
முற்றும் எதிர்பாராத இந்தச் செய்தி இள வழுதிக்கும் இளமதிக்கும் திகைப்பை அளித்தது. போர் மேலும் முற்றுகிறது என்பதை இருவரும் உணர்ந்தார்கள். முடிந்த மாதிரிதான் என்று இளமதியிடம் சொன்னது எத்தனை தவறு என்பதை
இளவழுதி புரிந்து கொண்டான்.
“அரசர் உனக்காகக் காத்திருக்கிறார்” என்று மேலும் கூறிய புலவர் எழுந்திருந்தார்.
இளமதியும் எழுந்திருந்தாள் தனது மேலாடையிலிருந்து ரத்தக் கறையை குனிந்து நோக்கினாள். “அதைப் பற்றிக் கவலைப்படாதே. அதைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை, இப்பொழுது நீ நமது பாசறைக்குச் செல், நான்
படைத்தலைவருடன் அரசர் இருக்குமிடம் போகிறேன்” என்றார் புலவர். மேலும் சொன்னார்: “நீங்கள் ஏதாவது பரஸ்பரம் விடை பெற வேண்டுமானால் நான் வெளியே நிற்கிறேன்” என்று.
“புலவரே? நகைச்சுவைக்கும் எல்லையுண்டு” என்று சீறி வெளியே சென்று விட்டாள் இளமதி.
இளமதி புலவரைத் தொடர்ந்தான். மன்னரின் பாசறையில் போர் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.