Cheran Selvi Ch6 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 6. நிலவில் கலைமகள்
Cheran Selvi Ch6 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
அமரர் உலகத்திலிருந்து என்ன காரணத்தாலோ இந்த அவனிக்கு வந்து விட்ட அப்ஸர மகள் நடந்து செல்வதைப் போல, நடையிலும் அழகு சொட்ட விடுவிடு என்று தனது அறையை விட்டு வெளியே சென்ற அரசமகள் கண்ணுக்கு
மறையுமட்டும் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற இளவழுதி, அன்று என்றுமில்லாக் குழப்பத்துடனிருந்தான். கொல்லத்தின் துறைமுகத்தில் கால் வைத்ததிலிருந்து மிகத் துரிதமாக விளைந்துவிட்ட நிகழ்ச்சிகள் எல்லாமே
அவனுக்கு சொப்பனம் போலி ருந்தன. தான் யாரோ என்று எண்ணி அரண்மனைக்கு வழியைக் கேட்ட பெண்ணே கடைசியில் அரசகுமாரியாக மாறியதும், அவள் தனக்குச் சோதனை வைத்ததும், அதே இரவில் தான் சாதாரணமாக யாரும்
பார்க்க முடியாத சேரவேந்தனைச் சந்திக்க நேர்ந்ததும், கொல்லத்து அரசர் அவர் மகளையே தனக்கு உணவு பரிமாற நியமித்ததும், சகலமும் விசித்திரமாயிருந்தது அந்த வாலிப வீரனுக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக, புலவர் அளித்த
ஓலையைப் படித்ததும் இளவரசி திடீரென சீற்றம் கொண்டதும், அதைப் படித்ததுண்டா என தன்னை நோக்கிச் சுடுசொற் களை உதிர்த்ததும் புரியாத புதிராயிருந்தது இளவழுதிக்கு.
இத்தகைய நிகழ்ச்சிகளால் குழம்பி நின்ற இளவழுதி, இளமதி சென்றபின் சிறிது நேரம் அறையில் உலாவினான் தீர்க்க சிந்தனையுடன். பிறகு பஞ்சணையில் படுத்துக் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டு தலைக்குப் பின்னால் இரு
கைகளையும் வைத்துக் கொண்டு உறங்க முயன்று கண்களை மூடினான். கண்கள் மூடினவேயொழிய மனம் மூடாததால் அது புத்தியில் ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளையும், முக்கியமாக இளமதியையும் சுற்ற விட்டுக்
கொண்டிருந்தது. “இளமதி எத்தனை அலட்சியமாக என்னைக் கடற்கரையில் பார்த்தாள்” என்று அவன் நினைத்தபோது மனக்கண்ணிலிருந்து அவள் அவனை அலட்சியப் பார்வை பார்த்தாள். “அரசகுமாரி எனக்குப் பணிப்பெண்ணாகி
உணவு அருந்த கூஜாவிலிருந்து நீரை எடுத்துக் கொடுத்தாளே” என்று எண்ணியபோது அவன் மனக்கண்ணில் அவள் கூஜாவுடன் வரும் காட்சியும் உணவுத் தட்டின்மேல் மூடியை எடுத்த விதத்தையும் அந்தச் செய்கைகளின் போது
ஒவ்வொரு அசைவிலுமிருந்த அழகையும் கண்ணை மூடிய நிலையிலும் அவன் பார்த்தான்.
தான் உணவருந்தியபோது எதிரே பதுமைபோல் இளவரசி நின்ற சமயத்தில் தலை குனிந்திருந்ததேயொழிய சிந்தனை சிறிதும் குலையா ததையும், அவள் எதிரில் நிற்பதே தனக்குப் பெரும் சங்கடமாயிருந்ததையும் நினைத்து, ஒரு
பெண்ணிடம் நான் எத்தனை பயந்தேன்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு அது பயமல்ல வெட்கம் என்று தெரிந்ததும், “பெண் வெட்கப்படுவதுண்டு; ஆண் வெட்கப்படுவதுண்டா? என் விஷயத்தில் சகலமும் தலை
கீழ்ப்பாடமாயிருக்கிறது” என்று எண்ணிச் சிறிது புன்முறுவலும் கொண்டான்.
அந்தச் சமயத்தில் அறைக்கு வெளியேயிருந்து ஒரு வீணையின் மெல்லிய இசையும் அதையடுத்து குயிலினு மினிய குரலும் இரண்டும் சேர்ந்து ஒன்றுக்கொன்று இழைந்து அவன் காதில் புகவே மஞ்சத்திலிருந்து எழுந்து சாளரத்தின்
பக்கம் சென்று வெளியே நோக்கி னான் இளவழுதி. கண்ணுக்கு ஏதும் புலப்படவில்லை அவனுக்கு முழுமதியின் பட்டப்பகல் போன்ற வெளிச்சத்திலும். ஆனால் அந்த இன்ப நாதம் திரும்பத் திரும்ப அவன் செவிக்குள் பாய்ந்து
கொண்டிருந்தது. வீணையைத் தொடர்ந்த சொற்களில் சமஸ்கிருதமிருந்ததால் ஏதோ ஒரு வடமொழிக் கவிதை இசைக்கப்படுவதை உணர்ந்தான் இளவழுதி.
நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த வேளை அது. அந்தச் சமயத்தில் யார் அப்படித் தனிமையில் வீணை வாசிக்கமுடியும் என்று தன்னை வினவிக்கொண்ட இளவழுதி, தனது வாளை மஞ்சத்தில் போட்டுவிட்டு எப்பொழுதும்
தன்னைவிட்டுப் பிரியாத ஒரு குறுவாளை மட்டும் இடையில் மறைத்துச் சொருகிக் கொண்டு படிகளை நோக்கிச் சென்றான். படிக்கதவு அடைக்கப்படாமல் திறந்தே இருந்ததைக் கவனித்த அவன் தனக்கு மன்னன் கட்டுத்திட்டங்கள்
எதையும் ஏற்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, படிகளில் இறங்கிக் கீழேயிருந்த பெரிய தாழ்வரைக்கு வந்து சுற்றுமுற்றும் நோக்கினான். வீணாநாதம் அப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருந்தது ஒரே சீராக. அந்த ஒலி அந்த
மாளிகையை அடுத்த நந்தவனத்திலிருந்து வருவதைக் கண்ட இளவழுதி, நந்தவனத்தை நோக்கி நடந்தான். நந்தவனத்தில் புகுந்ததும் வீணை ஒலிவரும் திசையை நோக்கிச் சென்றான். அடுத்த பத்தடி தூரத்தில் விரிந்தது ஒரு சொர்க்கக்
காட்சி.
நந்தவனத்தில் அப்பகுதியில் மட்டும் மரங்கள் சக்கிர வட்டமாக நின்றிருந்தன. அவற்றின் நடுவே ஒரு சிறு மடு இருந்தது. அதன் ஒரு மூலையிலிருந்த சிறு அருவி அதற்கு நீரைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மரங்கள் இல்லாத
காரணத்தால் அந்தச் சிறு மடுவின் நீர் நிலவில் பளபளத்துக் கொண்டிருந்தது. மடுவைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த படிகளொன்றில் இளமதி உட்கார்ந்திருந்தாள் கையில் வீணை ஏந்தி. அவள் அப்பொழுது மாலை ஆடையை மாற்றி
வெள்ளைப் பட்டு அணிந்திருந்தாள். தலையில் மல்லிகைச் சரமொன்றும் புதிதாகப் புனையப்பட்டிருந்தது. குழல்கள் சிறிது பிரிந்து அவர் நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு வேளை வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும்
கலைமகளே அங்கு வந்து விட்டாளோ என்று பிரமித்தான் இளவழுதி.
அவள் குனிந்து வீணையை விரல்களால் தடவிக் கொண்டிருந்தாள் உலகை மறந்து. அவள் கண்கள் இரவு பங்கஜங்கள் போல் மூடிக்கிடந்தன. இதழ்கள் நிலவொளியில் மிகச் சிவப்பாகத் தெரிந்தன. வீணையை அவள் குனிந்து தடவிய
போது அதில் பட்டுவிட்ட அவள் மார்பின் முகடுகள், ஏதோ ஒரு தந்தியைத் தொட்டுப் புதிதாக ஏதோ ராகத்தைக் கிளப்பிப் புது நாதத்தை சிருஷ்டிப்பன போல் தோன்றியது இளவழுதிக்கு.
இப்படிப்பட்ட காட்சியை அவன் அன்றுவரை பார்த்ததில்லை. ஒரு வேளை தான் காண்பது சொப்பனமாயிருக்கலாமோவென்று நினைத்தவன் தன்னை ஒருமுறை கிள்ளிவிட்டுக் கொண்டு, அதனால் வலி எடுத்ததால் கனவல்ல நனவு
தானென்பதைப் புரிந்து கொண்டான். பிறகு தனது மறைவிடத்திலிருந்தே அவள் வீணை வாசிப்பைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
எத்தனையோ வீணை வித்வான்களை அவன் மதுரையிலும் வீரதவளப் பட்டணத்திலும் பார்த்திருக்கிறான். அவர்கள் வாசிப்பைக் கேட்டுமிருக்கிறான். சில வேளைகளில் ரசித்துமிருக்கிறான். அந்த ரசனை எவ்வளவு பிசகு என்பதை
அந்த வேளையில் இளவழுதி சந்தேகமறப் புரிந்து கொண்டான். அந்த முரட்டு வித்வான்கள் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட வீணையை முரட்டு அடி அடித்ததையும், தந்திகளைத் தங்கள் விரோதிகளாகப் பாவித்து இழுத்தும் இழைத்தும்
பிராணனை வாங்கியதையும் எண்ணிப் பார்த்து “வீணைக்கு ஏற்பட்டவை பூங்கரங்கள், தளிர்விரல்கள்” என்று வீணையை யார் வாசிக்கலாம் என்பதற்கு இலக்கணமும் கட்டினான்.
இந்த எண்ணங்களோடு இளமதியின் வாசிப்பில் திளைத்துவிட்ட அந்த வாலிபன், சற்று முன்பு தன்னைப் பார்த்துச் சீறிய அந்த வதனம். அந்த மடுவின் பளிங்குச் சுனைப்படிகளில் அவள் உட்கார்ந்திருந்த அந்த சமயத்தில் எத்தனை
சாந்தமாயிருந்தது என்பதை எண்ணிப்பார்த்து ஆனந்தத்தில் திளைத்தான்,
இப்படிக் கிட்டத்தட்ட ஒரு நாழிகை ஓடியதும் அவள் வீணையைத் தடவுவதை நிறுத்தி வாயால் மட்டும் இரண்டொரு சுலோகங்களைச் சொல்லிப் பார்த்தாள். பிறகு அவற்றை வீணையில் வாசித்தாள். இப்படி நிறுத்தி நிறுத்தி
வாசித்ததும் ஒரு அழகாய்தானிருந்தது அவளுக்கு. இப்படி அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற இளவழுதி அது மிக பண்பாடற்ற செய்கை என்பதைப் புரிந்து கொண்டு மரத்தின் மறைவிலிருந்து பளிங்குச் சுனையை நோக்கிச்
சென்றான்.
அவன் வரும் காலடிகள் அவள் காதில் விழுந்திருந்ததால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. சுலோகங்களைச் சொல்வதிலும் அவற்றுக்கு இசையமைப்பதிலுமே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் இசையில்
அடியோடு இணைந்து விட்டதை உணர்ந்த இளவழுதி தான் வந்திருப்பதை உணர்த்த “மன்னிக்க வேண்டும்” என்று குரல் கோடுத்தான்.
இளமதி சட்டென்று குழந்தையை அணைப்பதுபோல் வீணையை அணைத்துக் கொண்டு உட்கார்ந்த வண்ணமே ஏறெடுத்து நோக்கினாள். அப்போது அவள் முகத்தில் அறையில் காட்டிய சீற்றமில்லை. அளவு மிகுந்த நாணமு
மில்லை. அளவுடன் ஏற்பட்ட நாணத்துடன் ஒரு புன்முறுவலும் கலந்திருந்தது அவள் முகத்தில். “வந்து நேரமாயிற்றா?” என்று அவள் உதடுகள் விரிந்து உதிர்த்த கேள் வியிலும் சங்கீதம் இருந்தது.
இளவழுதி பெரும் சங்கடமடைந்தான். “இந்த இடத்துக்கு இப்பொழுது தான் வந்தேன்” என்று சொன்ன அவன் வார்த்தையிலும் சங்கடமிருந்தது.
“வேறு எங்கு இருந்தீர்கள்?” என்று வினவினாள் அவள் மீண்டும்.
மரக் கூட்டத்தின் மறைவிலிருந்தேன். சங்கீதத்துக்கு இடைஞ்சலாக வந்து நிற்க இஷ்டமில்லை” என்று இளவழுதி சொன்னான்.
“ஓ!” என்றாள் அவள் சிந்தனையை எங்கேயோ ஓட்டி. ஒரு வினாடிக்குப் பிறகு கேட்டாள், “உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா?” என்று.
அவள் அப்படிப் பேச்சை வளர்த்தியது இளவழுதிக்குப் பெருவியப்பாயிருந்தது. நள்ளிரவில் நந்தவனத்தின் நட்ட நடுவில் வீணை வாசிக்கும் இளவரசி தன்னைப் போன்ற வாலிபனைக் கண்டதும் பயந்து எழுந்து கோபிக்காமல்
சங்கீதத்தைப் பற்றிப் பேசியது மிக விசித்திரமாயிருந்ததால், “என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? சங்கீதம் பிடிக்காதவன் உலகில் இருப்பானா?” என்று வினவினான் இளவழுதி. |
“இல்லாமலென்ன? எத்தனையோ பேர் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னாள் அவள்.
“இருக்க முடியாது” என்றான் இளவழுதி.
“ஏன்?”
“வடமொழியில் அதாவது இத்தனை நேரம் நீங்கள் பாடிய மொழியில் ஒரு சுலோகம் உண்டு”.
“என்ன சுலோகம்?”
“சிசுர் வேத்தி,பசுர் வேத்தி, வேத்தி கானரஸம் பணீ” என்று தனது வடமொழி அறிவைக் காட்டிய இளவழுதி “சங்கீதத்தைக் குழந்தை அறியும், மிருகம் அறியும், பாம்பு அறியும் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க மனிதன் அதை
அறியாமலும் ரசிக்காமலும் இருக்க முடியுமா?” என்று வினவினான்,
“ஏனிருக்க முடியாது? குழந்தையை விட அறிவு குறைந்த வயது வந்தவர்களிருக்கிறார்கள். மிருகத்துக்குள்ள தன்மை கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள்” பாம்பின் விஷமொன்றை மட்டும் வைத்துக் கொண்டிருப் பவர்கள்
இருக்கிறார்கள்” என்று அரசகுமாரி பெருமூச்சு விட்டாள்.
“அந்த வகையறாக்களில் நான் சேர்ந்தவனல்ல” என்றான் இளவழுதி. – பிறகு கேட்டான், “தினம் இந்த நேரத்தில் இங்குதான் வீணை வாசிப்பீர்களா?” என்று.
“ஆம்” என்றாள் இளமதி.
“நள்ளிரவு இப்பொழுது…” என்று இழுத்தான் இளவழுதி.
“ஆனால் நிலவிருக்கிறது. அமைதியிருக்கிறது. சாதகத்துக்கு செளகரியமான இடம் இது. அதுவும் இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கும் நாடக மனப்பாடத்துக்கு இது மிகவும் சிறந்த இடம்” என்று இளமதி கூறினாள்.
இளவழுதியின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன. “நாடகமா!” என்று வினவிய அவன் கேள்வியிலும் வியப்பு ஊடுருவி நின்றது.
இளமதி வீணையின் தந்திகளில் ஒன்றைச் சுட்டி விட்டு “ஆம்” என்றாள்.
“என்ன நாடகம்?” என்று ஏதும் தெரியாதவன் போல் கேட்டான் இளவழுதி.
“பிரத்யும்னுப்யுதயம். என் தந்தை எழுதியது. சென்ற ஆண்டில் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மனாப சுவாமி உற்சவத்தின் போது அரங்கேற்றப்பட்டது” என்று பெருமையுடன் சொன்னாள் இளமதி.
இதைக் கேட்ட இளவழுதி புன்முறுவல் கொண்டான். “அந்த நாடகத்தில் உங்களுக்கும் பங்கு உண்டா “ என்று வினவினான்.
“உண்டு “
“நடிப்பீர்களா?”
“இல்லை. பாடுவேன் வீணையிடன் நாடக சுலோகங்களை”
“பின் பாட்டா?”
“இல்லை. முன் பாட்டுதான். மேடைக்கு எதிரில் உட்கார்ந்துதான் வாசிப்பேன். எனக்கு தனி மஞ்சம் போட்டிருப்பார்கள்.” இதைச் சொன்ன இளமதி மெள்ள நகைத்தாள். வீணையை எடுத்துக் கொண்டு எழுந்து நிற்கவும் செய்தாள்.
அஷ்டமுகி ஏரியின் காற்று மிதமாக வந்து கொண்டிருந்தாலும் அவள் எழுந்த வேகத்தில் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரத்திலிருந்து மலர்கள் சில உதிர்ந்தன பளிங்குப்படியில்.
“ நேரமாகிறது வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவள் கிளம்பினாள்.
“ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றான் இளவழுதி.
படியின் மேல் எடுத்து வைத்த காலை அவள் திரும்ப இழுத்துக் கொண்டாள் “ஏன்?” என்று கேட்டாள்.
.
“நான் கொண்டு வந்த ஓலையில் என்ன எழுதியிருந்தது!” என்று வினவினான் இளவழுதி.
“எதற்காகக் கேட்கிறீர்கள்?”
“ அதைப் படித்ததும் உங்கள் முகத்தில் சினம் தெரிந்தது. கோபத்துடன் சென்று விட்டீர்கள்? அப்படிக் கோபப்படும்படியாக என்ன இருந்தது? அப்படி என்ன எழுதியிருந்தார் புலவர்?” என்று வினவினான் இளவழுதி.
இளமதி அவனை நன்றாக ஏறெடுத்து நோக்கினாள். “அதை என் தந்தையிடம் கேளுங்கள்” என்று கூறி விட்டு நடந்தாள்.
இளவழுதி பெரும் சிந்தனையில் ஆழ்ந்தான். தனக்கே புரியாத ஏதோ பெரும் அரசியல் சங்கடத்தில் புலவர் தன்னை அழுத்தி விட்டதை அவன் உணர்ந்தான், அந்த உணர்வுடன் நந்தவனத்தின் மரக்கூட்டங்களுக்குள் நுழைந்து
சென்றான். இந்த அரச மகளின் இசைத்திறமை எத்தகையது என வியந்து கொண்டான் உள்ளுர. “இந்த அரசமகளும் ஒரு கலைமகள்” என்று சொல்லவும் செய்தான் வெளிப்படையாக
“அதை நமக்குப் பயன்படுத்தியும் கொள்ளலாம்” என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கவே சட்டென்று திரும்பினான் இளவழுதி. அந்த மரக்கூட்டத்தில் மற்றொரு பகுதியிலிருந்து ஒருவன் வெளி வந்தான். அவன்
நடையில் ஓசை எதுவுமில்லை, பூனை போல் நடந்து வந்தான். நடையில்தான் பூனையே தவிர அவன் கண்களில் நரியின் தந்திரமிருந்தது. புலியின் உக்கிரமிருந்தது. மர இலைகளின் இடுக்குகளின் வழியே வந்த முழுமதிக் கிரணங்கள்
அந்த மனிதன் முகத்தை நன்றாகவே எடுத்துக் காட்டின.
இளவழுதி சட்டென்று தன் கச்சையிலிருந்த குறுவாளை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். ஆனால் அந்த மனிதன் அதைக் கண்டு அச்சப்படவில்லை. அவன் இடையிலிருந்த குறுவாளைப் பதிலுக்கு உருவவுமில்லை. “நமக்குள்
சண்டை அவசியமில்லை, பேசாது என்னுடன் உனக்குப் பயன் உண்டு” என்றான்.