Cheran Selvi Ch8 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 8. பிரம்மாஸ்திரம்
Cheran Selvi Ch8 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
முந்திய இரவில் நந்தவனத்தில் தன்னை ஏதோ ஒரு வித சதிக்கு இழுத்த ஸலீம், தன்னை முன்பின் அறியாதது போல் நீங்கள் தான் இளவழுதியா?” என்று கேட்டதைக் கண்ட பாண்டிய வாலிபன், ஸலீமின் நெஞ்சுரத்தையும்
உணர்ச்சிகளை அடியோடு மறைத்துக் கொள்ளக்கூடிய திறனையும் பெரிதும் வியந்தான். தவிர அவன் அரண்மனையில் அரசருடன் அதிகாலையில் வாள்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால், அவன் நந்தவனத்துக்கு வந்தது அகஸ்மாத்தாக
அல்லவென்றும், அரண்மனையிலேயே முதல் நாள் தங்கி திட்டமிட்டே அவன் அரச மகளைக் கவனித்திருக்க வேண்டுமென்றும், தன்னையும் நன்றாக அறிந்தே தொடர்ந்திருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான் இளவழுதி.
இதயத்தில் இத்தகைய எண்ணங்கள் எழுந்து நடமாடினாலும் அவை எதையும் வெளிக்குக் காட்டாமல், “ஆம். நான் தான் அந்தப் பெருமையுடையவன்” என்று பதில் சொன்ன இளவழுதி, “தங்கள் பெயரைச் சொல்ல வில்லையே?” என்று
சற்று இடக்காகவும் கேட்கவும் செய்தான்.
இளவழுதிக்கு பதில் சொல்ல ஸலீம் வாயைத்திறக்கு முன்பாக மன்னர் இடையில் புகுந்து “தவறு என்னுடையது. இவர் பெயர் ஸலீம்” என்று அறிமுகப்படுத்தினார்.
அரசர் அறிமுகப்படுத்தியதும் ஒருவரையொருவர் நோக்கி மரியாதையாகத் தலை வணங்கியதும் அரசரே மேற்கொண்டு சொன்னார். “இவர் நமது பெரிய கடை வீதியிலுள்ள அரபுக் கடை சொந்தக்காரனின் சகோதரர்” என்று.
“வணிகரா?” என்று வினவினான் இளவழுதி, ஸலீமையும் அரசரையும் மாறி மாறி நோக்கி.
“வணிகர் தான். ஆனால் வாட்போரிலும் மிகச் சிறந்தவர்” என்று மன்னர் ஸலீமைப் பாராட்டினார்.
புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இளவழுதி தலையசைத்தான். “ அது தெரிகிறது. இல்லாவிட்டால் சங்கிரம தீரருடன் வாள் பயிற்சி செய்ய முடியுமா?” என்று அரசரையும் மறைமுகமாகப் பாராட்டினான்.
மகாராஜா ரவிவர்மன் குலசேகரன் புன்முறுவல் கொண்டார். “வீரனே! இந்த வயதிலேயே மன்னர்களைப் புகழக் கற்றுக் கொண்டிருக்கிறாய், வாழ்க்கையில் உனக்கு முன்னேற்றம் நிச்சயம்” என்றும் சொன்னார், முறுவலின் ஊடே.
அத்துடன் விடவில்லை அரசர். இவரில்லாவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று ஒரு வெடியையும் எடுத்து வீசினார்,
இதைக் கேட்ட இளவழுதியின் கண்களில் பிரமிப்பு விரிந்தது. ஸலீமின் கண்களில் நரியின் தந்திரச்சாயை படர்ந்தது. மகாராஜா மேற்கொண்டு விவரிப்பதை நிறுத்த இஷ்டப்பட்டவன்போல், “மகாராஜா சிறு விஷயத்தையும்
பெரிதாக்குகிறார். அதைப்பற்றி இப்பொழுது எதற்குப் பிரஸ்தாபம்?” என்றான் ஸலீம்.
ஆனால் மகாராஜா விடவில்லை, “சேரமன்னன் நன்றி கெட்டவனல்ல ஸலீம். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நகர சோதனை வந்தபோது திடீரென என்னைத் தாக்கிய நான்கு சதிகாரர்களிடமிருந்து நீங்கள் என்னைத் காத்திராவிட்டால்
இன்று சேரநாடு வேறு மன்னனைத் தேட வேண்டியிருக்கும்” என்று விஷயத்தை மெள்ள அவிழ்த்து நன்றி ததும்பிய கண்களையும் ஸலீமின் மீது நிலைக்கவிட்டார்,
தன் கண்களோடு மனத்தையும் சேர்த்து ஊடுருவிய சேர நாட்டு மன்னன் பார்வையைத் தாங்காத ஸலீம் சங்கடத்துடன் அசைந்தான் நின்ற நிலையில். திடீரென்று அந்தப் பேச்சை மாற்ற முயன்று, “மகாராஜா! நமது வாள் பயிற்சி
தடைப்பட்டுவிட்டது. கடந்த விஷயத்தைப் பற்றிப் பேசி நாம் காலங்கழிப்பானேன்?” என்று தனது வாளை ஒரு முறை தடவிக் கொடுத்தான்.
இளவழுதியின் கண்களில் திடீரென ஒரு வேட்கை பிறந்தது. “அதற்காகத் தாங்கள் கவலைப்பட வேண்டாம். வாள் பயிற்சி மேலும் வேண்டுமானால் நானிருக்கிறேன்” என்றான் பாண்டிய வீரன்.
மகாராஜா இளவழுதியை நோக்கினார் பொருள் புதைந்த பார்வையுடன்,
“ஏற்கனவே சொன்னேன், உனக்கு முன்னேற்றம் நிச்சயம் என்று” என்றும் கூறினார் மகாராஜா.
மகாராஜா இதை எதற்குச் சொல்கிறார் என்பது புரியாத இளவழுதி “ஆமாம் சொன்னீர்கள்” என்றான்.
““இப்பொழுது மகாராஜாவின் ஸ்தானத்தைப் பிடிக்கப் பார்க்கிறாய். இது முன்னேற்றமல்லவா?” என்ற மகாராஜா “சரி உன்னிஷ்டம். என் ஸ்தானத்தில் நீயே வாள் சுழற்று ஸலீமுடன்” என்று கூறினார்.
ஸலீமின் நரிக்கண்கள் புலிக்கண்களாயின. “மகாராஜா, இளவழுதி வாலிபர்” என்று ஆட்சேபித்தான்.
“இருந்தாலென்ன? நடுத்தர வயதுள்ள நம்மிருவரை விட வேகமிருக்கும், பலமிருக்கும்” என்று மகாராஜா இளவழுதியை தாங்கிப் பேசினார்.
“அனுபவம் போதாதிருக்கலாம்” என்றான் ஸலீம்.
“தங்களைப் போன்றவர்களுடன் வாள் பயிற்சி பெற்றால் அனுபவம் தானே வந்துவிடுகிறது” என்ற இளவழுதி மேற்கொண்டு ஏதும் பேசாமல் தன் அங்கியைக் கழற்றி அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டு வாளை உருவிக்
கொண்டு ஸலீம் இருக்குமிடம் வந்தான்.
இளவழுதியின் நீளமற்ற பட்டைவாளைப் பார்த்த ஸலீம் “வாள் மிகவும் குட்டையாயிருக்கிறது. வேறு வாள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று யோசனை கூறினான்.
“இது கிரேக்க நாட்டு வாள், குட்டையாகத் தானிருக்கும். இதில் தான் எனக்குப் பயிற்சி” என்ற இளவழுதி “துவங்குங்கள். மகாராஜாவை வீணாகத் தாமதப்படுத்த வேண்டாம்” என்று கூறி வாளைத் தடவிக் கொடுத்து நீட்டினான்.
ஸலீமும் தனது கனமான வாளை நீட்டி அதன் முனையால் இளவழுதியின் வாளை லேசாகத் தொட்டான். அடுத்த வினாடி இருவர் வாட்களும் பயங்கரமாக மோதி பெரும் ஒலியை எழுப்பின அந்தக் கூடத்தில்.
இருவர் போராட்டத்தையும் மகாராஜா நின்ற வண்ணமே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இளவழுதியின் வாள் குட்டையாயிருந்தாலும் அது ஸலீமின் வாளை எல்லாவிதத்திலும் தடுப்பதையும், அதன் விளை வாக நிதானத்தை
இழந்த ஸலீம், வேகமாகக் குதித்தும் பின்வாங்கியும் பயிற்சிக்குப் பதில் உண்மைப் போரையே துவங்கி விட்டதையும் கண்டார். எதிரி நிதானத்தை இழக்க இழக்க இளவழுதி பெரிதும் நிதானமடைந்து விட்டதையும் அவன் கண்களில் ஒரு
பயங்கர ஒளிவிடத் தொடங்கி விட்டதையும் அதிகமாக அசையாமலும் முன்னேறாமலும் பின் வாங்காமலும் அவன் போராடுவதையும் கண்ட மகாராஜாவின் கண்களில் திருப்திச்சாயை பெரிதும் படர்ந்தது.
அந்தத் திருப்தியை அதிகமாக்கவோ என்னவோ திடீரென்று ஸலீமின் வாளை வேகமாகத் தட்டி ஒதுக்கி விட்டு அது அளித்த பாதுகாப்பை அகற்றிவிட்டு ஸலீமை நோக்கி முன்னேறத் தொடங்கினான் இளவழுதி. தன் மார்பு வரை எட்ட
முடியாத அந்தக் குட்டை வாள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் தன் மார்பை இரண்டு மூன்று முறை தடவி விட்டதைக் கண்ட ஸலீமும் இளவழுதிக்கு எதில் குறைவிருந்தாலும் வாள் போர் அனுபவத்தில் குறைவில்லையென்பதைப்
புரிந்துகொண்டு, அலட்சியத்தைக் கைவிட்டு எச்சரிக்கையுடன் போராட முற்பட்டான். ஸலீமின் கனமான நீண்ட வாள் பலமுறை இளவழுதியை நோக்கி வந்தும் எதிரியின் குட்டைவாளால் மீண்டும் தடுக்கப்பட்டு உயரத்
தூக்கப்பட்டது. போர் மும்முரமாக மும்முரமாக இளவழுதியின் நிதானம் மிக அதிகப்படுவதையும் ஸலீம் கவனித்தான், இந்த போர் அதிகம் நீடிக்குமானால் தன்கதி அதோ கதியாகிவிடுமென்பதை உணர்ந்து தற்காப்புப் போரில்
இறங்கினான். ஆனால் கிரேக்க வாள் அவன் தற்காப்பை உடைத்தது. அதுமட்டுமல்ல, அவன் வாளையும் உடைத்திருக்கும். அப்படி உடைக்க இளவழுதி வாளை ஓங்கியதும் மன்னர் “போதும்” என்றார் அதி காரக் குரலில்.
அந்த உத்தரவைக்கேட்ட இருவரும் தங்கள் வாட்களைத் தாழ்த்தினர். “மன்னர் ஆணை” என்றும் கூறி மன்னரை வணங்கினர்.
ஸலீமைப் பெருமையுடன் நோக்கினார் மன்னர். “உங்களுக்கு மிக்க நன்றி” என்றும் சொன்னார்.
ஏதும் புரியாமல் விழித்தான் இளவழுதி.
ஸலீமும் திகைத்தான். “எனக்கா! நன்றியா! எதற்கு?” என்று வினவினான் திகைப்பும் வியப்பும் கலந்த குரலில்.
“இளவழுதி வாலிபன் என்பதற்காக நீங்கள் விட்டுக் கொடுத்ததற்கு” என்றார் மன்னர்.
“இவர் விட்டுக்கொடுத்தாரா? எனக்கா” என்று கேட்டான் இளவழுதி.
“ஆம். இவர் பெருந்தன்மை உனக்குத் தெரியாது. பார்வைக்குத்தான் இவர் போராடினார். மற்றபடி கொடுக்க வேண்டிய இடமெல்லாம் உனக்குக் கொடுத்தார்” என்ற மன்னர் “மிக்க மகிழ்ச்சி ஸலீம். நீங்கள் உங்கள் அறைக்குச் செல்லுங்கள்,
உணவுக்குப் பின் சந்திக்கலாம்; இளவழுதி! நீயும் உன் அறைக்குச் செல்” என்று கட்டளை இட்டார்.
அந்தக் கட்டளைக்கு அடிபணிய அறைக் கோடியிலிருந்த தனது அங்கியை நாடிச் சென்றான் இளவழுதி. அவன் போனதும் சொன்னான் ஸலீம், “மகாராஜா! எனக்கு அலுவலிருக்கிறது, நான் கடைக்குச் செல்ல உத்தரவளிக்க வேண்டும்”
என்று.
“ஒரு நாள் இருந்திருக்கிறீர்கள். அதற்குள் அரண்மனை கசந்துவிட்டதா?” என்று மகாராஜா கேட்டார் வருத்தம் நிரம்பிய குரலில்.
“அலுவலிருக்கிறது மகாராஜா!”
“என்ன அலுவல்?”
“இன்றைக்குக் கப்பல் வருகிறது அரபு நாட்டிலிருந்து. அதில் அருமையான விலைமதிக்க முடியாத பொருள்கள் வருகின்றன. நான் கூட இருந்து சரக்கை இறக்க வேண்டும்.”
இதைக் கேட்ட மகாராஜா பெருமூச்செறிந்தார். “உங்களை அரண்மனையிலிருந்து வெளியேவிட மனம் வரவில்லை” என்றும் சொன்னார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“என்ன சொல்கிறீர்கள் மகாராஜா!” அதிர்ச்சி நிரம்பிய குரலில் கேட்டான் ஸலீம்.
“ஒன்றுமில்லை. உங்களைப் பிரிய மனம் வரவில்லை” என்ற மகாராஜா, நீங்கள் இன்னும் சில நாட்கள் இங்கு தானே இருப்பீர்கள் “ என்று வினவினார்.
“மகாராஜாவிடம் உத்தரவு பெறாமல் போக மாட்டேன்” என்றான் ஸலீம்.
அதற்குப் பிறகு மகாராஜா ஆட்சேபணை ஏதும் சொல்லவில்லை. “சரி உங்களிஷ்டம். இந்தப் பக்கம் வந்தால் அரண்மனைக்கு வராமலிருந்து விடாதீர்கள். அரண்மனையின் எந்தப் பகுதியும் உங்களுக்குத் திறந் திருக்கும்” என்று உபசார
வார்த்தை சொன்னார்.
அத்துடன் மகாராஜாவிடமும் அங்கியைத் தரித்துக் கொண்டு வந்த இளவழுதியிடமும் விடைபெற்றுச் சென்று விட்டான் ஸலீம். அவன் போவதைப் பார்த்துக் கொண்டே நின்ற மகாராஜா, “வா இளவழுதி! நாம் போகலாம்” என்று
இளவழுதியை அழைத்துக் கொண்டு போர்க் கூடத்தை விட்டு வெளியே வந்து அந்தப்புர மாளிகையை நோக்கி நடக்கலானார். இளவழுதியும் ஏதும் பேசாமல் அரசரைத் தொடர்ந்து சென்றான்.
அந்தப்புர மாளிகையை அடைந்ததும் பழையபடி இளவழுதியைப் படிமூலம் செல்லவிடாமல் திறந்திருந்த பெருவாயில் வழியாக உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு மூன்று கட்டுகளை ஏதும் பேசாமல் கடந்தார்
மகாராஜா. அக்கம் பக்கத்தில் நின்றிருந்த பணிப் பெண்கள் தலைவணங்கியதைக் கூடக் கவனியாமல் மகாராஜா சென்றதிலிருந்து அவர் தீர்க்க சிந்தனையிலிருக்கிறார் என்பதை இளவழுதி புரிந்து கொண்டான். அதே சிந்தனையுடன் ஒரு
விசாலமான அறைக்கெதிரே வந்த மகாராஜா அங்கிருந்த பணிப் பெண் ஒருத்தியை அழைத்து “இளவரசி எங்கிருக்கிறாள்?” என்று வினவினார்.
“இசை அரங்கில் இருக்கிறார்” என்று பணிப்பெண் கூறியதும் மகாராஜா அந்த அறையைக் கடந்து எதிரேயிருந்த ஒரு கூடத்துக்குள் நுழைந்தார். அந்தக்கூடத்தின் அழகு சொல்லத்தரமல்லாததாயிருந்தது. எங்கும் நானா வித இசைக்
கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. சுவர்களிலெல்லாம் கின்னர ஸ்திரீகள் இசைக்கருவிகளை மீட்டும் வண்ணச் சித்திரங்கள் கண்களைப் பறித்தன. கூடத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு மேடையிருந்தது. அந்த மேடையின் பின் சுவரில்
கலைமகளின் பெரும் ஓவியம் காட்சியளித்தது. அதற்கு முன்பாக இன்னொரு கலைமகள் போல் இளமதி அமர்ந்து வீணையைத் தடவிக் கொண்டிருந்தாள். மன்னர் வரும் காலடிச் சத்தம் கேட்டதும் எழுந்து நின்றாள்.
மன்னர் அவளை அன்புடன் நோக்கினார். “இளமதி நீ அதிசயக் காட்சியை இன்று காலைப் பார்க்கத் தவறி விட்டாய்” என்று சொன்னார் மெதுவாக.
“என்ன காட்சி தந்தையே?” என்று இளமதி கேட்டாள்.
“வாள் போர்” என்றார் மகாராஜா.
“பயிற்சி மகாராஜா! பயிற்சி” என்று திருத்தினான் இளவழுதி.
“பயிற்சியாவது மண்ணாங்கட்டியாவது. நான் தடுக்காதிருந்தால் அவனைக் கொன்றிருப்பாய்” என்று மகாராஜா அவனை மகிழ்ச்சியுடன் நோக்கினார்.
“யாரது?” என்று வினவினாள் இளமதி ஏதும் புரியாமல்.
“ஸலீம்” என்றான் இளவழுதி ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.
.
மகாராஜா இளவழுதியை உற்று நோக்கினார். அவன் பெயர் ஸலீம் அல்ல” என்றார் வெறுப்பு மண்டிய குரலில்.
“வேறு என்ன?” இளவழுதியின் குரலில் பிரமிப்பு மிதமிஞ்சிக் கிடந்தது.
“அஜ்மல்கான்” என்று பெரிய அதிர் வெடியை எடுத்து வீசினார் மகாராஜா.
“யார்? மாலிக்காபூரின் ஒற்றனா?” என்றான் இளவழுதி அதிர்ச்சியுடன்,
“ஆம்” என்றார் மகாராஜா
“தெரிந்துமா அரண்மனைக்குள் அனுமதித்தீர்கள்?” என்று வினவினான் இளவழுதி,
மகாராஜாவின் இதழ்களில் ஒரு விஷமங் கலந்த புன்முறுவல் உதயமாயிற்று. “எதிரி மீது கண் வைக்க அவனை அருகில் வைத்துக் கொள்வதைவிட சிறந்த வழி கிடையாது” என்றார்.
“அப்படியானால் உங்களை ஸலீம் தப்புவித்ததாகச் சொன்னீர்களே?”
“அது ஒரு நாடகம். ஸலீம் அனுப்பிய நான்கு பேர் என்னை வளைத்துக்கொண்டார்கள். நான் வாளை உருவு முன்பு ஸலீம் மறைவிலிருந்து ஓடி வந்தான். அவர்களுடன் போராடுவது போல் பாசாங்கு செய்தான். அவர்கள் ஓடி
விட்டார்கள். அந்தப் போரில் யாருக்கும் ஒரு கீறல் காயம் கூடக் கிடையாது. என்னை அணுக ஸலீம் விரித்த வலை அது. அதில் நான் விழுந்து விட்டதாகப் பாசாங்கு செய்தேன். அரண்மனைக்கு வரவும், தங்கவும் அனுமதி கொடுத்தேன்.
இன்று வாட்பயிற்சியில் கூட கலந்து கொண்டேன்.”
இதைச் சொன்ன மகாராஜா மெள்ள நகைத்தார். “மீதி விஷயங்களை இளமதி சொல்லுவாள்” என்று கூறி விட்டு மகாராஜா வெளியே செல்லக் காலடி எடுத்து வைத்தவர் சட்டென்று திரும்பி, “இளவழுதி!” என்று அழைத்தார்.
“மகாராஜா!” என்று கேட்டான் இளவழுதி.
“நேற்றிரவு அவன் சொன்னபடி அவன் கடைக்குப் போய் வா. உங்கள் ஒப்பந்தத்தை முறிக்க வேண்டாம்” என்று கடைசியாக ஒரு பிரம்மாஸ்திரத்தையும் வீசிவிட்டு நடந்தார் மகாராஜா.