Chittaranjani Ch15 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 15 மூட்டையில் இருந்த மணவாளன்
Chittaranjani Ch15 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
செடி மறைவுக்குச் சென்று சேலையின் ஒரு பக்கத்தை உடலில் சுற்றி, இன்னொரு பகுதியை உலர்த்த அந்தப் பகுதியின் தலைப்பைப்பக்கத்திலிருந்த மரக்கிளைமீது கட்ட முயன்ற சமயத்தில், தனது கையிலிருந்த தலைப்பைப் பின்னாலிருந்த கரமொன்று வாங்கி மரக்கிளையில் கட்டி விட்டதும், அதைத் தொடர்ந்து இரு கைகள் பின்னாலிருந்த வண்ணம் தனது பூவுடலை அணைத்து விட்டதையும் உணர்ந்த சித்தரஞ்சனி, அப்படித் துணிகரமாகத் தன்னை அணைக்கக் கூடியவன் கௌதமிபுத்ரனைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்ற தீர்மானத்தினாலும், ஏற்கெனவே அவன் கைகளின் தன்மையையும் திடத்தையும், வாகையும் உணர்ந்திருந்ததாலும், எந்த எதிர்ப்பையும் காட்டாமலும் இருந்த இடத்தைவிட்டு அகலாமலும் அப்படியே நின்றுவிட்டாள்.
சேலையின் ஒரு பகுதியை மார்பையும் அவள் சுற்றிக் கட்டியிருந்ததால் அவள் நாணத்தையும் கண்ணியத்தையும் உணர்ந்த கௌதமிபுத்ரன் தான் அணைத்த அந்த புஷ்ப உடலின் மிருதுத் தன்மையும் கலந்தே இருந்ததைப் புரிந்து கொண்டு, “எந்தப் பெண்ணையும் ஆசை மெதுவாக்குகிறது. ஸ்பரிசம் கெட்டிப்படுத்துகிறது” என்ற இயற்கையை வியந்த வண்ணம், பின்புறத்தில் வெளேரென்று தெரிந்த முதுகின் மேற்புறத்தில் தனது உதடுகளை ஊன்றினான். சித்தினிகளின் அழகையும் மிஞ்சும் சித்தரஞ்சனியைப் பின்புறம் இறுக அணைத்ததால் அவள் உடல் ஒரு விநாடி அச்சத்தால் ஸ்தம்பித்து அடுத்த விநாடி ஆசையால் சிறிது நெகிழ்ந்து விட்டதால் தன்னை அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்பதால் அவன் தனது உடலைக் கொண்டு கடினமாகவே அவள் உடலை நெருக்கினான்.
அவள் முன்கழுத்தை நோக்கித் தனது உதடுகளைப் புரட்டிய கௌதமிபுத்ரன் மெதுவாக அழைத்தான், “பெண்ணே !” என்று.
அவள் மெதுவாக மதுரமாக நகைத்து, “நான் பெண் ணென்பதை இப்பொழுதுதான் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டாள்.
“பெண்ணென்று புரியாமலா இப்படி…?” என்று சொற்களை முடிக்காமல் விட்டான் சதகர்ணி.
முடிக்காமல் விட்ட சொற்களில் மறைந்து கிடந்த முழுமையைப் புரிந்துகொண்ட சித்தரஞ்சனி, “பேச்சை ஏன் அரைகுறையாக விட்டீர்கள்?” என்று முணுமுணுத்தாள்.
கௌதமிபுத்ரன் அவள்மீது நன்றாக இழைந்து அவள் காதுக்கருகில் உதடுகளைக் கொண்டுபோய், “சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
“உம், சொல்லுங்கள்” என்றாள், அவள். அவன்மீது நன்றாகச் சாய்ந்தும் கொண்டாள்..
“சித்தரஞ்சனி….” அவன் துவங்கினான்.
“உம்.”
“அரைகுறையிலிருக்கும் இன்பம் முழுமையில் கிடையாது.”
“அப்படியா!”
“ஆம். ஒரு பொருளை நாம் எதிர்பார்ப்பதில் இருக்கும் வேகம் அது கைக்கெட்டிய பின் இருப்பதில்லை.”
“ஓகோ!”
“பூர்த்தியைவிடப் பூர்த்திக்குச் செல்லும் பாதை கடினமாயிருந்தாலும் இன்பமானது.”
“கவியைப் போல் பேசுகிறீர்கள்” என்றாள் சித்தரஞ்சனி.
கௌதமிபுத்ரன் சொன்னான்: “உணர்ச்சியிலிருந்து விளைவது கவிதை. உணர்ச்சி ஊட்டுவதற்குத்தக்க பொருள் வேண்டும். தக்க நிகழ்ச்சி வேண்டும். இரண்டும் என் கண்முன் இருக்கின்றன. நிகழ்ச்சியிலிருந்து நெகிழ்ச்சி உண்டாகிறது. நெகிழ்ச்சியிலிருந்து கவிதை உரு எடுக்கிறது” என்று கூறிய கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனியைத் தனது இரு கைகளாலும் திடீரெனத் தனக்கு எதிர்ப்புறத்தில் திருப்பிக் கொண்டு சற்று எட்டப் பிடித்து அவளை நோக்கினான்.
மார்புவரை இறுக அவள் சுற்றியிருந்த ஈரச் சேலையையும் அவள் மார்பகம் மீற முயன்று கொண்டிருந்தது. அதன் விளை வாகச் சேலையால் இறுக்கப்பட்ட இடத்தின் விளிம்புகள் சற்றே புடைத்திருந்தன. பிறைச் சந்திர வடிவத்தில், முழங் கால்களுக்குக் கீழே சேலையில்லாததால் இரண்டு பவளத் தூண்கள் இருப்பது போன்ற பிரமையை அவை அளித்தன. பவளத் தூண்களுக்குப் பிரிந்த தாமரை இதழ்கள் போன்ற விரல்கள் பேரழகை ஊட்டின. இந்த அழகுகளிலிருந்து சற்றே அவள் முகத்தை ஏறெடுத்து நோக்கிய சதகர்ணி, அவள் முகம் சற்று அண்ணாந்து இருந்ததையும் அம்புஜக் கண்கள் மூடியிருந்ததையும், செம்பருத்தி இதழ்கள் போன்ற அதரங்கள் மட்டும் லேசாக விரிந்திருந்ததையும் கண்டான். அந்த இதழ்களின் ஏக்கம் அவனுக்குப் புரிந்திருந்ததால் அவளை முன்புறத்திலும் நன்றாகத்தழுவித்தனது இதழ்களை அவள் இதழ்களோடு இணையவிட்டான்.
இணைந்த இதழ்கள் இழைந்தன. உடல்கள் ஒன்றின. அவன் கைகளைப் போலவே அவள் கைகளும் எழுந்து அவன் கழுத்தை வளைத்தன. அவன் முரட்டுக்கன்னத்தோடு தனது வழுவழுத்த கன்னத்தையும் அவள் இழைத்தாள். பிறகு மெல்லச்சரிந்தாள் நிலம் நோக்கி. அப்படிச்சரிந்ததால் மேலே கிளையில் கட்டிய சேலை கிழிந்தது சர்ரென்று. அதையும் பொருட்படுத்தாமல் தரையில் கிடந்தாள் அவள். நிலமோ கினியெனக் கிடந்து சித்தத்தை அள்ளும் சித்தரஞ்சனியின் முன்பு மண்டியிட்டு உட்கார்ந்த கௌதமிபுத்ரன் அவளை நன்றாகவே கண்களால் பருகினான். பிறகு மெள்ள அவள்மீது குனிந்து, “சித்தரஞ்சனி! பொழுது புலர்ந்து விட்டது…” என்றான் ரகசியமாக.
சித்தரஞ்சனி தனது கண்களை முழுக்க விரிக்காமல் அரைப் பார்வையாக அவனைப் பார்த்தாள். ”அதனா லென்ன?” என்றும் கேட்டாள். “சண்டிகையும் வரம் கொடுத்து விட்டாள்” என்றும் சொன்ன அவள், “ஆமாம், அசரீரியை நீங்கள் கேட்கவில்லையே” என்றும் வினவினாள்.
“இல்லை.”
“ஏன்?”
“சரீரியும். அசரீரியாக முடியும்,” என்று புதிர் போட்டான் அவன்.
“எனக்கு விளங்கவில்லை” என்றாள் அவள்.
“அஹம் பிரும்மாஸ்மி என்று கேட்டிருக்கிறாயா?” என்றான் சதகர்ணி.
“இப்பொழுதென்ன வேதாந்தம்?” என்றாள் அவள்.
“சற்று முன்பு அசரீரியாயிருந்தேன். சரீரியாக மாறினேன். எல்லாம் உனக்காக” என்றான் சதகர்ணி.
“விளங்கவில்லை எனக்கு” என்றாள் சித்தரஞ்சனி
“நீ எதிர்க்கரையிலிருந்து படகில் இங்கு வந்ததைக் கவனித்தேன். நீ போகுமிடம் தெரியுமாதலால் முன்னமே சென்று சண்டிகையின் திவ்ய மங்கள விக்ரகத்துக்குப் பின்னால் மறைந்தேன். உனக்கு வரமும் அளித்தேன். நீ அங்கிருந்து புறப்பட்டதும் நானும் புறப்பட்டு உன்னைத் தொடர்ந்தேன். நீ திரும்பியும் பார்க்கவில்லை என்னை. ஆகவே உன்னைத் தொடர்ந்தேன். செடி மறைவில் உனக்கு உதவினேன். இப்பொழுது செடி மறைவில் …” என்று நடந்ததை விளக்கினான்.
“செடி மறைவில்?” என்றும் அவள் கேட்டாள்.
“மேலும் உதவுவேன்” என்றான் சதகர்ணி.
எந்த உதவியைப் பற்றி அவன் பிரஸ்தாபிக்கிறா னென்பதைப் புரிந்துகொண்ட சித்தரஞ்சனி பேச்சை வேறு திசையில் திருப்பி, “அசரீரியின் குரல் உங்கள் குரல் மாதிரி இல்லையே?” என்று கேட்டாள்.
“குயில் மாதிரி கூவுவேன். காக்கை மாதிரி கத்துவேன். குழல் ஊதுவேன்…” என்று மேலும் ஏதோ சொல்லப்போன சதகர்ணியை இடைமறித்து, “ஆமாம், நதியின் எதிர்க் கரையில் குழல் ஊதினீர்கள் எதற்காக?” என்று சித்தரஞ்சனி கேட்டாள்.
“எனது புரவியை அழைக்க. என் குழலைக் கேட்டதும் எதிர்க்கரையில் தலையைக் காட்டியது. அங்கேயே தங்கும் படி சைகை செய்தேன். அங்கேயே இருந்தது. அதனால் தான் இப்புறம் வர முடிந்தது” என்றான் சதகர்ணி.
கௌதமிபுத்ரன் ஜகஜ்ஜாலப் புரட்டன் என்பதைச் சித்தரஞ்சனி சந்தேகமற உணர்ந்து கொண்டாள். “ஆமாம்! உங்களைத்தான் மூட்டையாகக் கட்டிக்கொண்டு போனார்களே! எப்படித்தப்பினீர்கள்?” என்று வினவினாள்.
“அதைப்பற்றி இப்பொழுதென்ன?” என்ற கௌதமி புத்ரன் அவள் பக்கத்தில் தரையில் படுத்து அவளைத் திருப்பித் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.
அவள் பேச்சிழந்து கிடந்தாள். அதே சமயத்தில் கடலில் நின்ற மரக்கலத்தில் பேச்சு பலமாக நடந்து கொண்டிருந்தது. “நீங்கள் அனைவரும் முட்டாள்கள்” என்று நாகபாணன் சீறிக் கூவினான். அன்று க்ஷத்ரபன் மிகுந்த புத்திசாலித் தனத்துடன் நடந்து கொண்டிருந்தான். மகாக்ஷத்ரபர் வரும்வரையில் மூட்டையைப் பிரிக்க வேண்டாமென்று உத்தரவிட்டுத் தளத்தில் கிடந்த மூட்டையைக் காலால் ஒரு முறை உதைத்தான். மூட்டைக்குள்ளிருந்து முனகல் பலமாகக் கேட்டது.
“மாப்பிள்ளையாகக் கனவு காண்பவன் கதியெல்லாம் இப்படித்தான். க்ஷத்ரபன் மாப்பிள்ளையாவது அத்தனை சுலபமா?” என்று க்ஷத்ரபன் இரைந்தான். “ஹூம், ஹூம்” என்று மூட்டைக்குள்ளிருந்து முனகல் மீண்டும் மீண்டும் கேட்டது.
“இன்னொரு முறை முனகினாயோ என் கத்தியை முட்டைக்குள் பாய்ச்சி விடுவேன்” என்று கூவினான் க்ஷத்ரபன்.
பொழுது விடியும் நேரத்தில் நாகபாணனும் மரக்கலத்துக்கு வந்து சேர்ந்தான். மூட்டை கட்டியபடியே இருந்ததைப் பார்த்து, “இன்னும் ஏன் மூட்டையை அவிழ்க்கவில்லை?” என்று கோபத்துடன் வினவினான் நாகபாணன்.
“மூட்டையை அவிழ்க்க உத்தரவில்லையே?” என்றான் க்ஷத்ரபன்.
“சரி சரி; அவிழ்த்துவிடு” என்று நாகபாணன் உத்தர விட்டதும் மரக்கல மாலுமிகள் மூட்டையை அவிழ்த்தனர். மூட்டைக்குள்ளிருந்து எழுந்தவனைப் பார்த்ததும் நாகபாணன் மிகுந்த சீற்றத்தை அடைந்தான். அடுத்த விநாடி மூட்டைக்குள் இருந்து எழுந்த காஷ்டானன் கை கால்களை உதறிச் சரிப்படுத்திக் கொண்டு வேகமாக க்ஷத்ரபன் மீது பாய்ந்து அவன் குரல் வளையைப் பிடித்துக் கொண்டான்.