Chittaranjani Ch17 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 17 காஷ்டானனுக்குப் புதிய பதவி!
Chittaranjani Ch17 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
திருமணத்திற்கு மணமகள் தேவையென்றும் அவளைக் காணவில்லையென்றும் கூறிவிட்டு, நாகபாணன் நகைத் ததைக் கண்ட க்ஷத்ரபனும், காஷ்டானனும் அந்த நகைப்பை ரசிக்க முடியாததாலும், நாகபாணனை எதிர்த்து ஏதும் பேசும் துணிவில்லாததாலும் அதிர்ச்சியுற்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பல விநாடிகள் நின்று விட்டாலும், காஷ்டானன் மட்டும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அவள் எப்படிக் காணாமல் போனாள்? அவளைத் தப்ப விட்டது யார்?” என்று வினவினான் சிறிது சினத்தையும் ஏமாற்றத்தையும் குரலில் காட்டி.
மாப்பிள்ளையின்தைரியத்தை க்ஷத்ரபனும் வரவழைத்துக் கொண்டு, “அவள் தப்புவதற்கு யார் காரணம் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்று கூறினான்.
“கண்டுபிடித்துத் தகுந்தபடி தண்டிக்கவும் வேண்டும்” என்றான் காஷ்டானன்.
நாகபாணன் இதழ்களில் வெறுப்பும் இகழ்ச்சியும் கலந்த புன்னகைதாண்டவமாடியது. “தண்டனை என்ன என்பதை நீங்களே தீர்மானித்துவிடலாம்” என்றான் நாகபாணன் சொற்களிலும் நகைச்சுவை ஒலிக்க.
“சிறையில் போட்டுச் சித்ரவதை செய்யலாம்” என்று க்ஷத்ரபன் தண்டனையைக் குறிப்பிட்டான்.
நாகபாணன் அப்பொழுதும் சிறிதும் மசியாமல் சர்வ சாதாரணமாகச் சொன்னான், “அப்படியானால் நீங்கள் இருவரும் இப்பொழுதே சிறைக்குப் போகலாம், சித்திர வதைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று.
காஷ்டானன் முகத்திலும் க்ஷத்ரபன் முகத்திலும் திகில் மிக அதிகமாகப் பரவியதால், க்ஷத்ரபன் பேசாவிட்டாலும் “நாங்களா?” என்று கேட்டான் காஷ்டானன்.
“நாங்கள் சிறைக்குப் போகவேண்டிய காரணம்?” என்று க்ஷத்ரபனும் குரலில் திகிலைக் காட்டினான்.
நாகபாணன் தனது ஆசனத்திலிருந்து, மெதுவாக எழுந்து நின்றுகொண்டு அவர்கள் இருவரையும் வெறுப்புடன் நோக்கிவிட்டு, “என்னுடைய கட்டளைகளை நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றியிருந்தால் இத்தனை நேரம் சாதவாகனன் நமது மரக்கலத்தில் அபராந்தாவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பான். இன்னும் இரண்டு நாட்களில் நமது சிறைச்சாலையில் கட்டுண்டு கிடப்பான். இங்கு நாம் நிம்மதியாக நமது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக் கலாம். சித்தரஞ்சனிக்கும் திருமணத்தை முடித்திருப்பேன். ஆனால்…” என்று சிறிது பேச்சை நிறுத்திய நாகபாணன் க்ஷத்ரபன்மீது தனது கண்களை நாட்டி, “சாதவாகனனுக்குப் பதில் இந்த முட்டாளைக்கட்டிக்கொண்டு வந்தாய் மரக்கலத் துக்கு. மரக்கலத்தை அடைந்த பின்பாவது மூட்டையை அவிழ்த்துப் பார்த்தாயா? அதுவும் இல்லை. மூட்டையி லிருந்து சாதவாகனன் என்று நம்பிச்சித்தரஞ்சனி சுதந்திரமாக உலாவ அனுமதித்தேன். இத்தனை விவகாரத்துக்கும் எனது திட்டங்கள் உடைந்ததற்கும் சித்தரஞ்சனி காணாமற் போனதற்கும் நீதான் முதல் காரணம்” என்று சீறினான். அடுத்துக் காஷ்டானனை நோக்கி, “சித்தரஞ்சனி காணாமற் போனதற்கு நீயும் காரணம். உன்னை யார் மரத்தடியில் நின்று மண்டையில் அடிவாங்கிக் கொள்ளச் சொன்னது?” என்று அவனையும் காரணமில்லாமல் தூற்றிவிட்டு, “இன்று மாலைக்குள் சித்தரஞ்சனியைப் பிடித்து வாருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட சிறைத்தண்டனையும், சித்திரவதையும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்” என்று மிரட்டவும் செய்தான்.
நாகபாணன் கோபத்தைச் சிறிது குறைக்க, “கவலைப்பட வேண்டாம் பிரபு! சித்திரஞ்சனியை நானே பிடித்து வருகிறேன்!” என்று காஷ்டானன் கூறினான்.
“சாதவாகனனை நான் பிடித்து வருகிறேன். அவனைச் சிறைச்சாலையில் தள்ளி நானே சித்திரவதை செய்கிறேன்” என்று கூறினான் க்ஷத்ரபன்.
அவர்கள் சபதத்திலோதிறமையிலோ சிறிதும் நம்பிக்கை யில்லாத நாகபாணன், “இவர்களைப்போல் நூறு பேர் இருப்பதற்குப் பதில் கௌதமிபுத்ரன் ஒருவன் என்னிட மிருந்தால் எனது சாம்ராஜ்யத்தை மகாராஷ்டிரத்தில் நிலைக்கச் செய்ய அதிக காலம் பிடிக்காது” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவர்களைவிட இது விஷயத்தில் தானே நேரிடையான முயற்சி எடுக்க வேண்டிய அவசியத் தையும் புரிந்து கொண்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தீர்மானித்து, தனது மரக்கல மாலுமிகள் இருவரைக் கோட்டைக்கு வரும்படி செய்தியனுப்பினான்.
இதற்கிடையில் சித்தரஞ்சனியை எப்படியாவது பிடித்து வரும் நோக்கத்துடன் கோட்டையிலிருந்து நாலைந்து வீரர்களுடன் படகில் புறப்பட்ட காஷ்டானனும், க்ஷத்ரபனும் வாசிஷ்டியின் சங்கமத் துறையில் வந்து இறங்கினார்கள். காஷ்டானனையும் இரு வீரர்களையும் தாபோல் மலையின் வடக்குப் பகுதியில் ஏறவிட்டு, தான் மட்டும் மற்ற மூன்று வீரர்களைத் துணைகொண்டு தென் பகுதியில் ஏறினான். அப்படி இருபுறத்திலும் இரு பிரிவு களாக ஏறினால் ஒருபுறம் தாபிலேசுவரர் கோவிலும், இன்னொரு புறத்தில் சண்டிகையின் குகையும் இருந்ததால் அவர்கள் இரண்டு இடங்களில் எங்கிருந்தாலும் பிடித்து விடலாம் என்ற நிச்சயத்துடன் திட்டமிட்ட க்ஷத்ரபன் தென்பகுதியிலிருந்த தாபிலேசுவரர் கோவிலை நோக்கிச் சென்றான்.
அன்று காலை மலையின் சூழ்நிலை மிகரம்யமாயிருந்தது. நன்றாகச் சூழந்து கிடந்த பனிக் கூட்டம் ஆங்காங்கு மலையுச்சிப் பாறைகளில் தொக்கி சூரிய கிரணங்களை லேசாகத் தடுத்து அனுப்பியதால் அங்கங்கு சின்னஞ்சிறு வானவிற்கள் தோன்றி மலைக் காட்டு வண்ணமலர்களுடன் போட்டி போட்டன. எதிரே வருபவர்கூடத் தெரியாத அளவுக்குப் பனி சூழ்ந்து கிடந்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் மலையின் தென்பகுதியில் ஏறிச் சென்ற க்ஷத்ரபன் தாபிலேசுவரர் கோயிலை அடைந்தபோது உள்ளே சுவாமிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. பூஜாரி தீபாராதனை காட்டியபோது பக்கத்திலிருந்த ஒருவர் அடித்த மணியோசை பெரிதாக ஒலித்துக் காட்டுப் பகுதி முழுவதையும் ஊடுருவிச் சென்றதைக் கண்ட க்ஷத்ரபன் பூஜாரியைப் பிடித்தால் சாதவாகனன் அகப்பட்டுவிடுவான் என்று நினைத்து, பூஜை முடியட்டுமென்று காத்திருந்தான் கோவில் வாயிலுக்கு வெளியே. தன்னுடன் வந்த வீரர்களையும் வாயில் பக்கத்திலிருந்த கருங்கல் பிரகாரத்தில் உட்கார வைத்துப் பூஜாரி வந்ததும் அவரைப் பிடிக்கச் சித்தமாயிருக்கும்படி உத்தரவிட அவர்களும் வாயிற்படிக்கு இரு பக்கத்திலும் உட்கார்ந்து பூஜாரி வெளியே வரும் சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
பூஜாரி அன்றைக்கென்று நீண்ட நேரம் அர்ச்சனை செய்துகொண்டே இருந்ததால் கொஞ்சம் நேரத்தில் வெளியே வருவதாகக் காணோம். இதனால் பொறுமை இழந்த க்ஷத்ரபன், “யாரையா பூஜாரி! சீக்கிரம் வெளியே வா” அதிகாரக் கூச்சலிட்டான்.
உள்ளே மந்திரங்களைப் பெரிதாக உச்சாடனம் செய்த வண்ணம் அர்ச்சனையைப் பலமாகச் செய்துகொண்டிருந்த பூஜாரி அந்தக் கூச்சலைச் சிறிதும் லக்ஷியம் செய்தவராகத் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை க்ஷத்ரபன் கூச்சலிடத் துவங்குமுன் பெரிய வெண்கல மணியுடன் வெளியே வந்த ஒரு மனிதன், “அர்ச்சனை நடக்கும்போது கூச்சலிடாதே” என்று எச்சரித்தான். அப்படி அவன் சொல்லிக் கொண்டே அந்தப் பெரிய மணியைத் தூக்கிப் பிடித்த விதத்திலிருந்து, மீண்டும் கூச்சலிட்டால் அந்த மணி தனது தலையில் மோதிவிடும் என்பதை உணர்ந்த க்ஷத்ரபன், “பூஜாரியுடன் அவசரமாகப் பேச வேண்டும்” என்று சிறிது குரலைத் தாழ்த்திக் கூறினான்.
“கொஞ்சம் பொறு. முடிவாக மங்கள ஆரத்தி எடுத்ததும் அவரே வெளியே வருவார். அப்பொழுது பேசலாம்” என்றான் அந்த மனிதன்.
“பொறுப்பதற்கில்லை” என்றான் க்ஷத்ரபன்.
“அப்படியானால் மாலையில் வா” என்றான் அந்த மனிதன்.
அவனை முன்பார்த்திராததால் யாரோ புது மனிதன் வந்திருப்பதாக நினைத்த க்ஷத்ரபன், “நீ இந்த மலைக்குப் புதிதா?” என்று வினவினான்.
“உன்னைப் பார்த்தால்தான் புதிதாக இருக்கிறது” என்றான் அந்த மனிதன்.
“இதற்கு முன் நான் உன்னைப் பார்த்ததில்லை” என்றான் க்ஷத்ரபன்.
“நீ பார்க்காத மனிதர்களெல்லாம் இந்த ஊருக்குப் புதிதா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான் அந்த மனிதன்.
அவன் காட்டிய அலட்சியத்தையும் பேச்சிலிருந்த தாஷ்டீகத்தையும் கவனித்த க்ஷத்ரபன் சற்று சிந்தனையில் இறங்கி, “பூஜாரி வயோதிகராயிற்றே என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் உன்னையும் அவரையும் கை கால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்” என்று சீறினான்.
சீற்றம் மிகுந்த அவன் சொற்களைக் கேட்ட அந்தப் புது மனிதன் பெரிதாக நகைத்தான். “பூஜாரி வயோதிகரா, என்னய்யா உளறுகிறாய்? இந்தக் கோவில் பூஜாரியை நீ பார்த்ததில்லையா?” என்று வினவினான் நகைப்பின் ஊடே.
“பூஜாரி வயோதிகரில்லையா?” என்று க்ஷத்ரபன் கேட்டான்.
“இல்லை.”
“சிறு பிள்ளையோ?”
“இல்லை.”
“எதற்கும் இல்லை இல்லை என்று என்னய்யா பதில்?”
“வாலிபர்” என்ற அந்த புது மனிதன், “இன்றைக்கு பூஜாரி சகஸ்ர நாமார்ச்சனை செய்கிறார். ஆகையால் நேரமாகும். விசேஷ பூஜை” என்றான்.
“இன்றைக்கு என்ன விசேஷம்?”
“விவாஹம்.”
“யாருக்கு?”
“பூஜாரிக்குத்தான்.”
“அவர் விவாகத்திற்கு அவரே பூஜை செய்கிறாரா?”
“ஆம்.”
“இதென்னய்யா விசித்திரம்?” என்ற க்ஷத்ரபன் சட்டென்று மூச்சை இறுக்கப் பிடித்துக் கொண்டான். உள்ளிருந்த பூஜாரி மங்கல ஆரத்தியை ஏந்தி வந்து எல்லோருக்கும் காட்டினார். எல்லோரும் கண்களில் தீபத்தை ஒத்திக் கொண்டதும், விபூதிப் பிரகாதமும் கொடுத்தார். க்ஷத்ரபனைப் பார்த்ததும் புன்முறுவல் செய்து, “வர வேண்டும்” என்று முகமன் கூறினார்.
க்ஷத்ரபன் வாயைத் திறக்கவில்லை. விவரிக்க இயலாத வியப்பினாலும் பிரமையாலும் பூஜாரிமீது வைத்த கண்ணை வாங்கவில்லை. நல்ல பட்டுகளிரண்டை இடுப்பிலும், மார்பிலும் அணிந்து, பட்டை பட்டையாக விபூதியை உடல் முழுவதும் தீட்டிக்கொண்டு, விபூதிப் பிரசாதம் கொடுத்த கௌதமிபுத்ரனை நோக்கி, “கௌதமிபுத்ரா! இதென்ன புது வேடம். உனக்குத் திருமணமென்றால் பெண் யார்?” என்று வினவினான்.
“வேறு யார்? தங்கள் வளர்ப்புச் செல்விதான்’ என்ற கௌதமிபுத்ரன் விபூதியை வாயிற்படியின் இருபுறங்களிலும் நின்றிருந்த வீரர்களுக்கும் கொடுத்தான். விபூதியை வாங்கிக் கொண்ட வீரர்கள் விழித்தார்கள் என்ன செய்வதென்று அறியாமல்.
கௌதமிபுத்ரன் வாயிற்படிக்கு அருகில் நின்ற புது மனிதனை நோக்கி, “சேனாதிபதி! உள்ள நிலையை இவருக்கு விளக்கி அனுப்பிவிடு” என்று உத்தரவிட்டான். அவன் உத்தரவிட்டு உள்ளே திரும்புவதற்குள் சற்றுத் தூரத்தில் பேரரவம் கேட்கவே கௌதமிபுத்ரன் நின்ற இடத்திலேயே நின்றான். சுமார் நாலைந்து மலைவாசிகள் காஷ்டானனைப் பலவந்தமாக இழுத்து வந்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான், “இவர் சண்டிகை குகையில் நாலைந்து வீரருடன் நுழைய முற்பட்டார். அங்கு ஹோமம் நடக்கிற தென்று சொன்னோம், கேட்கவில்லை. பலவந்தமாக இழுத்து வந்தோம்” என்று.
காஷ்டானனுக்கிருந்த எரிச்சலில், “டேய் பூஜாரி! நாளைக்கு நீ பூஜை செய்வதை நான் பார்த்துவிடுகிறேன்” என்று கூச்சலிட்டவன் சற்று நிதானித்து பூஜாரி அருகில் வந்து, ”சாதவாகனா! நீயா பூஜாரி! இதென்ன வேஷம்?” என்று கேட்டான்.
“பூஜை செய்வது வேஷமா?” என்று கேட்டான் சதகர்ணி.
”உண்மையான பக்தி மனத்திலிருந்தால் போதாதா? உடம்பு முழுவதும் விபூதி பூசவேண்டுமா?” என்று வினவினான் காஷ்டானன்.
கௌதமிபுத்ரன் புன்முறுவல் செய்தான். “சில வியாதி களுக்கு உள்ளுக்கு மருந்து கொடுத்தால் போதும். சில வியாதி களுக்கு உள்ளுக்கும் மருந்து கொடுத்து வெளியிலும் தைலம் பூச வேண்டும். அப்படித்தான் பக்தியும். அவரவர் பக்கு வத்தைப் பொறுத்தது” என்றான் புன்முறுவலின் ஊடே.
அதற்குப் பிறகு கௌதமிபுத்ரன் பேச்சை வளர்த்தாமல், “காஷ்டானா! இன்று இரவு பூஜை முடிந்த பிறகு எனக்குத் திருமணம். அதில் உனக்கும் பங்கு உண்டு” என்றான்.
“எனக்கு என்ன பங்கு?”
“மாப்பிள்ளைத் தோழன். இதுவரையில் நீ கண்டிராத அளவுக்கு உனக்கு மரியாதை செய்கிறேன்.”
“எனக்கு மரியாதையும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்.”
“உன்னிஷ்டம்” என்று சொல்லி உள்ளே செல்ல முயன்ற சாதவாகனனை “நில்” என்று கூச்சலிட்டு நிறுத்தி, “சித்தரஞ்சனி எங்கே?” என்று வினவினான் காஷ்டானன் கோபத்துடன்.
மணியுடன் நின்றிருந்த சேனாதிபதி சொன்னான். “சாதவாகன மகாராணியாகப் போகிறவரை பெயர் சொல்லி அழைப்பது பெரும் குற்றம்” என்று.
“அவள் என் மனைவி” என்று கூவினான் காஷ்டானன். அடுத்து அவன் கூவவில்லை. சேனாதிபதியின் கையிலிருந்த மணி காஷ்டானன் தலைமீது இறங்கிவிட்டது. அந்தச் சமயத்தில் பெண்கள் பலர் புடைசூழ சர்வாலங்கார பூஷிதையாகச் சித்தரஞ்சனி அங்கு வந்துகொண்டிருந்தாள்.