Chittaranjani Ch20 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 20 ஹோமப் புகையா? யமப் புகையா?
Chittaranjani Ch20 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனியைத் தனது புரவியில் ஏற்றிவிட்டுக் கடிவாளத்தைப் பிடித்த வண்ணம் சண்டிகாதேவியின் குகையை நோக்கி நடந்த கௌதமிபுத்ர சதகர்ணி சற்று எட்ட நடந்து வந்து கொண்டிருந்த சேனாதிபதி வஜ்ரபாகுவை அருகில் அழைத்து, “சேனாதிபதி! போர்களில் ஏற்படும் ஆனந்தத்தைவிட கோவில் பூஜையிலும் மந்திரங்களை ஓதுவதிலிருக்கும் ஆனந்தம் எத்தனை சாந்தியைத் தருகிறது பார்த்தாயா?” என்று வினவினான்.
வஜ்ரபாகு லேசாகப் புன்முறுவல் கொண்டு, “எனக்கு இப்பொழுது பதவி மாற்றம் தர உத்தேசிக்கிறீர்களா?” என்று வினவினான்.
சேனாதிபதி எதைக் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட கௌதமிபுத்ரன், “எந்தப் பதவியைக் குறிப்பிடு கிறாய் சேனாதிபதி?” என்று விசாரித்தான் சற்றே ஏளனம் ஒலித்த குரலில்.
“புரோகிதர் பதவியை. முதலில் நீங்கள் பூஜாரியானீர்கள். அடுத்து என்னைப்புரோகிதனாக்கினீர்கள். இருவருமே புதுப் பதவிகளை வகிக்கலாம். மந்திரதந்திரங்களில் நீங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்களாகத் தெரியவில்லை. தாபிலேசு வரருக்கு அபிஷேக ஆராதனைகளில் என்ன திறமையைக் காட்டினீர்கள்! நமது ராஜ்ய ஆஸ்தான குருகூட இத்தனை ஸ்பஷ்டமாக மந்திரங்களை ஓதியதை நான் கேட்டதில்லை” என்றான் வஜ்ரபாகு லேசாக விஷமக் குரலில்.
“என்னைப் பூஜாரியாகச் சொல்கிறாயா?” என்று வினவினான் சதகர்ணி.
“சேனாதிபதி புரோகிதனாகும்போது மன்னர் பூஜாரியாவதுதான் தகும். இருவருமே கத்தி கேடயங்களை விட்டு மணியை எடுத்துக் கொள்ளலாம்” என்று சொன்னான் வஜ்ரபாகு.
“எந்த ஆயுதத்தின் உபயோகமும் யார்கையிலிருக்கிறதோ அவனைப் பொறுத்தது. சுவாமிக்கு மணியடிக்க உன் கையில் மணியைக் கொடுத்ததால் நீ அதைக் காஷ்டானன் தலையில் அடிக்கிறாய்” என்று கூறிக் குறுநகை கொண்டான் கௌதமிபுத்ரன்.
சேனாதிபதி பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையை உடைத்து நடந்து கொண்டே, “சுவாமிக்கு முதலில் மணியை அடித்துப் பார்த்தேன். பயனில்லை. காஷ்டானன் தலையில் அடித்தேன். உடனடியாகப் பயன் கிடைத்தது” என்று கூறிய சேனாதிபதி, “மன்னவா! ஒரு சந்தேகம்” என்று கேட்டான்.
“கேள் சேனாதிபதி” என்று ஊக்கினான் கௌதமிபுத்ரன்.
சற்று சிந்தித்துவிட்டுக் கேட்டான் சேனாதிபதி, “சண்டிஹோமம் செய்து பிசாசை ஓட்டி விட்டதாகவும் இரண்டாவது ஹோமத்திற்குப் பிறகு பயம் ஏதுமில்லை யென்றும் பொய் சொல்லி ஓடிவிட்ட மக்களைத் திரும்ப அழைத்தது எப்படி நியாயம்?” என்று.
“பிசாசு என்று பயமுறுத்தி மக்களை அவர்கள் குடிசை களிலிருந்து விரட்டித் தனது படைகளை இந்த மலைப் பகுதியில் இறக்கித் தளம் அமைக்கத் திட்டம் செய்தான் மகாக்ஷத்ரபன். அதே பிசாசுதந்திரத்தை நானும் கையாண்டு மக்களுடைய திகிலை அகற்றி அவர்களை இங்கு குடியேறச் செய்தேன். இதில் தவறு ஏதுமில்லை. தந்திரத்தைத் தந்திரத்தால் அறுப்பதுதான் நியாயம்” என்ற சதகர்ணி, “தவிர பிசாசு இப்பொழுது நமது பக்கம் திரும்பிவிட்டது. மற்றவர்களை விட்டு இப்பொழுது என்னைப் பிடித்துக் கொண்டது” என்று சொல்லிச் சித்தரஞ்சனி தொடையில் கையை வைத்தான் சாதவாகனன்.
திருமண மாலையணிந்து மணப்பெண் கோலத்திலேயே புரவிமீது வந்துகொண்டிருந்த சித்தரஞ்சனி புன்முறுவல் காட்டினாள். தன் தொடை மீது வைத்த கையைத் தனது கையொன்றால் பற்றி நெற்றித்தாள் தனது கோபத்தைக் காட்ட. ஆனால் அதற்கு மசியாத கௌதமிபுத்ரன் கையைச் சற்று மேலும் நகர்த்த சித்தரஞ்சனி சற்று பொய்க் கோபம் காட்டி ‘உம்’ என்று எச்சரிக்கை ஒலி கிளப்பினாள்.
“பிசாசுக்குக் கோபம் வருகிறது” என்றான் சாதவாகனன் லேசாக நகைத்து.
“மகாராஜா!” என்றான் சேனாதிபதி.
“என்ன சேனாதிபதி?”
“உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம்.”
“எப்படி?”
“பிசாசு கிடைத்தாலும் அழகான பிசாசாகக் கிடைக்கிறது. நீங்கள் சொல்கிறபடி கேட்கிறது… உங்களைத் திருமணம் செய்து கொள்கிறது. இந்த மாதிரி பிசாசு கிடைத்தால் எல்லோருமே பிசாசைத் திருமணம் செய்து கொள்வார்கள். அப்புறம் சாதாரணப் பெண்களுக்குத் திருமணம் ஆவது துர்லபமாகிவிடும்’ என்று சேனாதிபதி கூற மூவருமே நகைத்தார்கள்.
அப்படிப் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் சண்டிகைக் குகைக்கு அருகில் வந்ததும் சித்தரஞ்சனி புரவியைவிட்டு இறங்கினாள். எதிரே கொங்கணி வேதியர் பலர் காய்ந்த அரசுச் சுள்ளிகளைக் கொண்டு ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஹோம குண்டத்தைச் சுற்றி ஆண்களும் பெண்களுமாகக் கிராமவாசிகள் ஏராளமாக நின்று கொண்டிருந்தார்கள். கௌதமிபுத்ரனைக் கண்டதும் அந்தக் கூட்டமே தலை வணங்கியதும் கௌதமிபுத்ரனும் அவர்களைத் தலை சாய்த்து வணங்கித் தனது அங்கியைக் களைந்து பழைய பட்டுத் துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு ஹோமாக்கினி முன்பு உட்கார்ந்தான்.
சித்தரஞ்சனியையும் உட்காரச் சொல்லி தான் மட்டும் ஹோமத்தில் ஈடுபட்டான். சிவந்த முகம் அக்கினியில் ஜொலிக்க உட்கார்ந்திருந்த சித்தரஞ்சனியை மக்களெல் லோரும் பார்த்து அவள் அழகைக் கண்டு பிரமித்து பரஸ்பரம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதை யெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருந்த கௌதமிபுத்ரன் ஹோமம் முடிந்ததும் எழுந்து மக்களை நோக்கினான், மௌனமாக பல விநாடிகள். பிறகு பேசினான் மெதுவாக, “பெருமக்களே! இன்றுடன் உங்களைப் பிடித்த பிசாசு ஓடிவிட்டது. சண்டிஹோமம் செய்யத் தீர்மானித்த மறுநாளுக்குப் பிறகு அதைக் காணோம். இனி வர நியாயமில்லை. ஆகவே நீங்கள் தைரியத்துடன் இருங்கள். மக்கள் சக்திக்கு முன்பு எந்தச் சக்தியும் பயன்படாது. ஆயுதம் பூண்ட எதிரி வீரர்கள் ஐம்பது பேர் உங்கள் சக்திக்கு முன்பு செயலற்று விட்டதை நீங்களே பார்த்தீர்கள். நான் சொன்னபடி நீங்கள் பேருக்கு விலகி மரக்கூட்டங்களில் மறைந்திருந்து வீசிய கற்கள் நல்ல போர்ப் பயிற்சியுள்ள ஐம்பது வீரர்களை விரட்டி விட்டதைக் கவனித்தீர்கள். அம்பும் கத்தியுந்தான் பயனளிக்கும் என்ற புரட்டை நீங்கள் இன்று நிரூபித்து விட்டீர்கள். இனிமேல் அஞ்சாமல் எல்லோரும் உங்கள் இல்லம் திரும்புங்கள்” என்று கட்டளையிடும் தோரணையில் பேசினான்.
அவன் பேச்சைக் கேட்ட மக்களில் ஒரு வயோதிகன், “நீங்கள் சொல்வது சரி. கல்லையும் கட்டையையும் கொண்டு பெரும் போர் நடக்குமா?” என்று கேட்டான்.
அந்த வயோதிகனைக் கூர்ந்து நோக்கிய சதகர்ணி. “பெரியவரே! ராமாயணத்தில் பெரும் ராட்சதப் படை வானர வீரர்கள் ஏந்திய கற்களாலும் மரங்களாலுமே அழிந்தது. உவமையைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வானரர்களாக வந்தவர்கள் தேவர்கள். அந்த மகா வீரர்கள் தர்மத்தின் சக்தியை கல்லையும் மரத்தையும் கொண்டு நிரூபித்தார்கள். அது நமக்கும் படிப்பினை. இந்த மலை, இதைச் சேர்ந்த கிராமங்கள் உங்களுக்குச் சொந்தம். அதிலிருந்து உங்களை மகாக்ஷத்ரபர் விரட்டியது அநியாயம். அவர் கையாண்ட முறையும் தர்மமான முறையல்ல. அதை எதிர்த்து நிற்போம்” என்று பதில் சொன்ன சதகர்ணி. “இந்த ஹோமப் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு இல்லம் செல்லுங்கள். உங்களை வரவழைக்க அவசியமிருந்தால்…” என்று கூறி சேனாதிபதியைப் பார்த்தான்.
சேனாதிபதி தனது அங்கிப் பையிலிருந்து ஒரு சிறு வலம்புரிச் சங்கத்தை எடுத்துக் ‘கிறீச்’ சென்று பலமாக ஊதினான். “இப்படி சங்கு ஊதப்படும், இதைக் கேட்டதும் விரைந்து வருங்கள்” என்றான் சதகர்ணி.
“எதிரி இன்னும் அதிகப் படைகளைக் கொண்டு வந்தால்?” என்று மற்றொருவன் வினவினான் கூட்டத் திலிருந்து.
“இந்த ஹோமப்புகை அவர்களைக் கவனித்துக் கொள்ளும். மேற்கொண்டு எதையும் கேட்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு, “மாலையில் வந்து பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள்” என்றும் சொல்ல, கூட்டம் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது. “சேனாதிபதி! நாம் போஜனத்தை முடித்துக் கொள்வோம்” என்றான் சதகர்ணி.
“ஏது சாப்பாடு?” சேனாதிபதி கேட்டான்.
“தாபிலேசுவரருக்குப் பிரசாதம் செய்து வைத்திருக் கிறேன். நம் மூவருக்கும் அது போதும்” என்றான் சதகர்ணி.
“மன்னவா! தங்களுக்குச் சமையலும் தெரியுமா?” என்று கேட்டான் சேனாதிபதி.
“முதல் தரமாகச் சமைப்பேன்.”
“பூஜாரி உத்தியோகம் போனாலும் சமையல் உத்தியோகம் இருக்கிறது. மகாராஜா, உங்களுக்குக் குறைவு ஏதுமில்லை.”
இதைச் சொன்ன சேனாதிபதி நகைத்தான். சதகர்ணியும் ஹோம சாம்பலைத் திரட்டி வைக்கும்படியும் மாலையில் மக்களுக்கு விநியோகம் செய்யும்படியும் வேதியருக்குக் கூறி விட்டு சித்தரஞ்சனியுடனும் சேனாதிபதியுடனும் தாபிலே சுவரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தான். பிரசாதத்தை மற்ற இருவருக்கும் கொடுத்துத் தானும் உண்ட பின்பு தாபிலேசுவரர் சந்நிதியில் உட்கார்ந்த வண்ணம் தீர்க்க சிந்தனையில் இருந்தான்.
“என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.
“இன்றிரவு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்கிறேன்.”
அவனைத் தவறாகப் புரிந்து கொண்ட சித்தரஞ்சனி புன்முறுவல் செய்தாள். குறிப்பறிந்த சேனாதிபதி மெதுவாக எழுந்து அப்புறம் சென்றான். சதகர்ணி சொன்னான், “சித்தரஞ்சனி! இன்றிரவு நீ நினைப்பது போல் இருக்காது. பெரும் ஆபத்தை நான் எதிர்பார்க்கிறேன்” என்று.
“என்ன அப்பேர்ப்பட்ட அபாயம்?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.
”திட்டமாகச் சொல்ல முடியாது. மகாக்ஷத்ரபர் ஏமாறுபவர் அல்ல. இன்று ஏற்பட்ட தோல்வியையும் ஏற்று, கைகட்டிச்சும்மா உட்கார்ந்திருப்பவர் அல்ல” என்று கூறிய சதகர்ணி குரலில் கவலையைக் காட்டினான்.
இங்கு சதகர்ணி பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் சதகர்ணியை அழித்துவிட பயங்கரமான ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தான் நாகபாணன். தன் எதிரில் நின்றுகொண்டிருந்த க்ஷத்ரபனையும் காஷ்டானனையும் நோக்கி, “இன்னும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் உங்களுக்குச் சாதவாகனனை அழிக்க. அதிலும் நீங்கள் தோல்வியடைந் தால் உங்களிருவரையும் இந்த அஞ்சன்வேல் கோட்டையின் சதுக்கத்தில் தூக்குப் போடுவேன். சுறுக்குக் கயிற்றை உங்கள் இருவர் கழுத்திலும் என் கையாலேயே மாட்டி இறுக்கி உங்கள் விழி பிதுங்குவதைப் பார்ப்பேன்” என்று கூறிவிட்டு, “நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்” என்று மிகவும் பயங்கரமான திட்டமொன்றை விவரிக்கலானான்.
திட்டத்தை விவரிக்குமுன்பு ஒரு கேள்வி கேட்டான். “க்ஷத்ரபா! சண்டி ஹோமத்திலிருந்து எழுந்த புகையைக் கண்டாயா?” என்று.
“கண்டேன். ஆகாயமளாவிப் போயிற்று. ஹோமம் நன்றாக நடந்திருக்க வேண்டும்” என்றான் க்ஷத்ரபன்.
“அது ஹோமப் புகையல்ல” என்றான் நாகபாணன்
“வேறு எந்தப் புகை?” காஷ்டானன் கேட்டான்.
“நம்மை அழிக்க வந்த யமப்புகை” என்ற நாகபாணன் இகழ்ச்சி நிரம்பிய பார்வையைக் காஷ்டானன் மீது செலுத்தினான்.