Chittaranjani Ch25 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 25 காஷ்டானனுக்குப் புதிய பதவி!
Chittaranjani Ch25 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
நாகபாணன் தன்னிடம் சிறையிருப்பதாகச் சொன்ன பூஜாரி கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதையும், அர்ச்சனை மந்திரங்களை மிக தாஷ்டீகமான குரலில் உச்சரிப்பதையும் கண்ட காஷ்டானன், தனக்கு அந்தச் சமயத்தில் ஏற்பட்டது அதிர்ச்சியா வியப்பா என்று நிர்ணயிக்க முடியாத நிலையை அடைந்ததால் அவன் குழப்பம் மிக அதிகமாயிற்று. பூஜாரி தன் கண்முன்னே இருந்ததால் நாகபாணன் செய்தி எத்தனை அனர்த்தமாகி விட்டதென்பதை உணர்ந்தான் காஷ்டானன். கௌதமி புத்ரன் மறுநாள் இரவில் மரக்கலத்துக்குச் செல்லும்போது வேறு யாரையாவது துணை கொண்டு வந்தால் பூஜாரி தூக்கிலிடப்படுவாரெனக் கூறுமாறு நாகபாணன் சொன்னதை எப்படிச் சொல்வது, எதற்காகச் சொல்வது, என்று திண்டாடினான் காஷ்டானன். அவன் திண்டாட் டத்தை கவனித்துப் புன்முறுவல் கொண்ட கௌதமிபுத்ரன் “காஷ்டானனா! முதலில் பூஜாரியிடம் பிரசாதம் வாங்கிக் கொள். பிறகு நாகபாணன் தூது விஷயத்தைச் சொல்லலாம்” என்று ஆறுதலாகப் பேசினான்.
அந்த ஆறுதலே தன் இதயத்தைக் குத்துவது போலிருந்த தால், “சாதவாகனரே! பூஜாரி…” என்று இழுத்தான்.
”அவருக்கென்ன?” ஏதுமறியாதது போல் கேட்டான் சாதவாகனன்.
காஷ்டானன் தனது முகத்தில் மேலும் குழப்பத்தைக் காட்டினான். “இங்கு எப்படி வந்தார்?” என்று வினா ஒன்றை விடுத்தான் காஷ்டானன் குரலிலும் குழப்பம் தெரிய.
“இதுதானே தாபிலேசுவரர் கோவில்?” என்றான் சாதவாகனன்.
“ஆம்.”
“இங்குதானே அவர் பூஜை செய்யும் வழக்கம்?”
“ஆம்.”
“அவர் இங்கு வருவதிலோ பூஜை செய்வதிலோ என்ன விசித்திரமிருக்கிறது?”
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்பதை அறியாததால் காஷ்டானன் கேட்டான், “நீங்கள் பூஜை செய்தீர்கள் நடுவில் சில நாட்கள்?” என்று.
“செய்தேன். பூஜாரி உடல் நலமில்லாததால்” என்று சர்வ சகஜமாகப் பேசினான் சாதவாகனன்.
காஷ்டானன் விடவில்லை. “உடல் நலமில்லா திருந்தாரா?” என்று கேட்டான்.
“ஆம். ஏன், சந்தேகமா அதில்?”
“இல்லை.”
“உம்?”
“ஊருக்குப் போயிருந்ததாகச் சொன்னார்கள்.”
“சொன்னது யார்?”
“திட்டமாக யாருமில்லை. பராபரியாகக் காதில் விழுந்தது.”
இதைக் கேட்டு இளநகையை இதழ்களில் விரித்துக் கொண்ட சதகர்ணி, ‘பராபரியாக வேறென்ன காதில் விழுந்தது?” என்று கேட்டான் நகைப்பொலி தொனித்த குரலில்.
“எதிரியிடம் சிறைப்பட்டுவிட்டதாகக் கேள்விப் பட்டேன்” என்று திணறினான் காஷ்டானன்.
“ஆகவே இவரைத் தூக்கில் போடுவதாக நாகபாணன் சொன்னதை என்னிடம் சொல்ல அஞ்சுகிறீர்?” என்று கேட்ட சதகர்ணி நகைத்து, “வேறென்ன சொன்னார் மகாக்ஷத்ரபர்?” என்றும் வினவினான்.
“தங்களை மரக்கலத்தில் சந்திக்கச் சித்தமாயிருப்ப தாகவும், தாங்கள் தனித்து வராமல் துணைக்கு யாரையாவது அழைத்து வந்தால்…” மேலே சொல்லவில்லை காஷ்டானன். பூஜாரி தன் கண்முன்னே இருந்ததாலும் அவரைத் தூக்குப் போடுவதாக நாகபாணன் செய்த மிரட்டலுக்கு அர்த்த மில்லையென்பதாலும் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தி விட்டான்.
அதற்குமேல் சதகர்ணி அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் கோவிலுக்குள்ளே வரும்படி சைகை செய்து முன்னால் சென்றான். பூஜாரி கற்பூரத் தட்டை எடுத்து ஆரத்தி காட்டியதும் அவர் கொண்டு வந்த கற்பூர ஜ்வாலையைக் கைகளால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான் கௌதமபுத்ரன். பூஜாரி கொடுத்த விபூதியையும் நெற்றியில் அணிந்து கொண்டான்.
காஷ்டானனுக்கும் தட்டைக் காட்டச் சொல்லி, கற்பூர ஜ்வாலையில் கட்டை விரலைக் காட்டி அதில் பிடித்த திருஷ்டிக்கரியை காஷ்டானன் நெற்றியில் தீட்டினான்.
“இது என் மதமல்ல… என்று காஷ்டானன் கூவியதைப் பொருட்படுத்தாது அவன் நெற்றியிலும் விபூதி தீட்டி, “இன்று முதல் நீ சைவ மதம்” என்று கூறினான்.
“எதற்காக நான் மதம் மாற வேண்டும்?” என்று கேட்டான் காஷ்டானன்.
“என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் என் மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” என்றான் சதகர்ணி.
“ஏன்?”
“மதம்தான் மனிதர்களைப் பிணைக்கும் பெரிய சக்தி.”
“என் மதத்திலேயே நான் இருந்தால் என்ன?”
“இனி நீ நாகபாணனிடம் போக முடியாது. போனால் பூஜாரி தப்பிய விஷயத்தைச் சொல்லும்படியிருக்கும். சொன்னால் உன்னை வெட்டிவிடுவான்’ என்ற சதகர்ணி. “நீ என் பக்கத்திலிருப்பதே உனக்குப் பாதுகாப்பு” என்று கூறி, “நாளை இரவு நான் நாகபாணனைச் சந்தித்தவுடன் பெரிய நிகழ்ச்சிகள் விளையும்” என்றும் எச்சரிக்கை தொனித்த குரலில் சொன்னான். பிறகு காஷ்டானனைக் கூட்டிக் கொண்டு சண்டிகாதேவி குகைக்குச் சென்றான்.
காலை நேரம் கடந்து கதிரவன் மேலே எழுந்து விட்டதால் காடு எங்கும் சூரியரச்மிகளால் புது மெருகு கொண்டது. திறந்திருந்த குகைக்குள்ளும் இரண்டு கிரணங்கள் பட்டையாகப் பாய்ந்து படிகளைத் தழுவிச் சென்றதால் கதிரவன் சண்டிகாதேவியின் திருவடிகளைத் தொட முயன்ற பிரமையை சிருஷ்டித்தான். குகைக்கு மேலிருந்த செடிகள் சில மலர்களைப் படிகளில் உதிர்த்திருந்ததால் கதிரவன் மலர்ப்பூஜையாகச் செய்ய முன் வந்ததுபோல் தோன்றியது. இந்தச் சூழ்நிலையில் குகையின் உள்ளிருந்து சித்தரஞ் சனியின் குரல் அமுதமயமாக ஒலித்தது. அந்த தேவி கானத்தைக் கேட்டு மெய்மறந்து பல நிமிடங்கள் நின்று விட்ட சாதவாகனன், “வா போவோம்” என்று காஷ்டானனுக்கு உத்தரவிட்டு, படிகளில் இறங்கிச் சென்றான். காஷ்டானன் பின்தொடர்ந்தான்.
சண்டிகாதேவி முன்பு உட்கார்ந்து சங்கீத உபாசனையில் ஈடுபட்டிருந்த சித்தரஞ்சனி, தேவியை வணங்கிவிட்டு, தன்னைத்தாண்டி விழுந்த சதகர்ணியின் நிழலைக் கண்டதும் திரும்பினாள். காலையில் நீராடியதால் உலராத தலையில் ஜடை இடாமல் அடிமுடிச்சுப் போட்டு, மலர்களைக் கூந்தலின் பரப்பில் சொருகியிருந்த சித்தரஞ்சனியே ஒரு தேவதையாகக் காணப்பட்டாள். அவள் நெற்றியில் துலங்கிய குங்குமப் பொட்டும் விபூதிக் கீற்றும் கழுத்தில் தீட்டியிருந்த பூஜைப் பிரசாதமான சந்தனமும் அவளைத் தேவகன்னி கையாக அடித்திருந்தது.
தெய்வீகம் கலந்த அந்த அழகைப் பார்த்த கௌதமி புத்ரன் பேசும் சக்தியை இழந்து பல விநாடிகள் நின்று விட்டான். காஷ்டானன் உள்ளத்தில் அச்சம் கலந்த பிரமிப்பு உண்டாயிற்று. தான் மணக்க இருந்த சித்தரஞ்சனி தன்னை அடியோடு ஏறிட்டுப் பார்க்காததையும், சதகர்ணியைப் பார்த்ததும் வெட்கம் கலந்த பார்வையை வெளியிட்டதையும், கவனித்துக் கைக்குக் கிட்டாத அந்தக் கனியைப்பற்றி நினைப்பதும் உயிருக்கு அபாயம் என்ற எண்ணத்தால் தனது பார்வையைச்சண்டிகாதேவிமீது நிலைக்கவிட்டான். அதைக் கண்ட சதகர்ணி, “சித்தரஞ்சனி! காஷ்டானன் நமது மதத்தில் சேர்ந்துவிட்டார். நமது படையில் ஒரு முக்கிய பதவி வகிப்பார்” என்று சித்தரஞ்சனிக்குக் காஷ்டானன் மத மாற்றத்தை எடுத்துரைத்தான்.
“கட்சி மாறுகிறாரா?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.
“கட்சி மாறாவிட்டால் பதவி எப்படி கிடைக்கும்?” என்று கேட்ட சதகர்ணி, “நமது படைகளுக்கு இவர் தலைவர்” என்று சொன்னான்.
காஷ்டானன் பிரமை உச்சக் கட்டத்தை அடைந்தது. “நான் உங்கள் படைத்தலைவனா?” என்று வியப்புடன் கேட்டான்.
“ஆம்.”
“வஜ்ரபாகு இருந்தாரே?”
“அவர் வேறு அலுவலாகத்தலைநகரம் சென்று விட்டார். அவருக்குப் பதில் உன்னை நியமித்திருக்கிறேன். உனக்கு இதில் ஒரு அதிர்ஷ்ட மிருக்கிறது” என்றான் சதகர்ணி.
“என்ன அதிர்ஷ்டம்?” என்று சந்தேகத்துடன் கேட்டான் காஷ்டானன்.
“சித்தரஞ்சனியின் உத்தரவுப்படி நீ நடந்துகொள்ள வேண்டும். அவள் உத்தரவை எனது உத்தரவுபோல் பாவித்து நட. உனக்கு எந்த ஆபத்தும் வராது” என்றான் சதகர்ணி.
“ஆமாம், இங்கு படைகள் ஏது? மலைவாசிகள் கூட்டம் படையாகுமா?” என்று கேட்டான் காஷ்டானன்.
“படையின் திறன் படைத்தலைவன் அளிக்கும் பயிற்சியைப் பொறுத்தது” என்ற சதகர்ணி காஷ்டானனை நோக்கி, “படைத்தலைவரே! நாளை இரவு நான் நாகபாணன் மரக்கலத்திற்குப் போகும்போது மூன்று மரக்கலங்கள் வடக்கிலிருந்து வரும். அவற்றுக்கு நாகபாணன் மரக்கலத் திலிருந்து தீபத்தால் அடையாளம் காட்டுவார்கள். அந்த அடையாளத்தைக் கவனித்து நான் திரும்பியதும் என்னிடம் சொல்லும்” என்று கூறிவிட்டு, “சித்தரஞ்சனி! இவருக்கு நமது படைகளைக் காட்டு” என்று உத்தரவிட்டு எட்ட இருந்த தனது புரவியில் ஏறிக் கொண்டு கடற்கரையை நோக்கிச் சென்றான்.
தன்னைத் தொடரும்படி காஷ்டானனுக்குச் சலுகை செய்த சித்தரஞ்சனி மலையின் சரிவிலிருந்த ஒரு பாதை மூலம் மலையின் மறுபக்கத்தை நோக்கிச் சென்றாள். ஒரு ஜாமம் முழுவதும் பயணம் செய்த பிறகு மலையின் மறுபக்கச் சரிவில் நின்று தனது இனிய குரலில் இசைக்கத் தொடங் கினாள். அவள் குயில் சாரீரம் மேலே படிப்படியாக எழுந்து மேல் ஸ்தாயியை எட்டும் சமயத்தில் தடதட வென்று இரு புரவிகள் வரும் ஓசை கேட்டது. இரு வீரர்கள் மலையின் மறுபக்கச் சரிவின் அடர்ந்த காட்டிலிருந்து வேகமாக வந்து சித்தரஞ்சனிக்குத் தலை வணங்கினார்கள் “இவர் உங்கள் படைத்தலைவர். அழைத்துச் செல்லுங்கள்” என்று சித்தரஞ்சனி உத்தரவிட்டாள். புரவியிலிருந்து இறங்கிய இரு வீரரும் காஷ்டானனுக்கு இருபுறத்திலும் வந்து அவன் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிடியில் அச்சத்துடன் சென்ற காஷ்டானன் திரும்பத் திரும்பத் தன்னைப் பார்த்த வண்ணம் பரிதாபமாகச் செல்வதைக் கண்ட சித்தரஞ்சனி புன்முறுவல் கொண்டாள். ‘கௌதமிபுத்ரர்ராஜதந்திரம் இணையற்றது. அவரை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது?’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். சதகர்ணியைப் போன்ற மகாவீரன் தனது மையலில் சிக்கியதைப் பற்றிப் பெருமையும் கொண்டாள். ‘அடி சித்தரஞ்சனி! என்ன இருந்தாலும் நீ அதிர்ஷ்டசாலி!’ என்று உள்ளூரத் தன்னைச் சிலாகித்தும் கொண்டாள்.