Chittaranjani Ch34 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 34 கடைசிக் கோரிக்கை!
Chittaranjani Ch34 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
அருணோதய காலத்தில் எங்கும் அவலக் குரல் கேட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் சாதவாகனன் அருகில் நின்ற சித்தரஞ்சனி, பூஜாரி பூஜை பாத்திரங்களுடன் தாபிலேசுவரர் கோவிலுக்கு வந்ததைப் பார்த்து, “இது பூஜை செய்யும் சமயமா?” என்று உள்ளூர நினைத்தாலும் அதை வாய்விட்டுச் சொல்லாமல் பெருமூச்செறிந்தாள். அவள் பெருமூச்சின் காரணத்தை உணர்ந்து கொண்ட சாதவாகனன், “எதை முன்னிட்டும் பூஜை நிற்க முடியாது சித்தரஞ்சனி. வெற்றியோ தோல்வியோ மரணமோஜீவிதமோ எல்லாமே அவனிஷ்டப்படி நடக்கிறது” என்று விளக்கம் சொன்னான்.
சித்தரஞ்சனி அப்பொழுதும் சமாதானத்தை அடைந்தாள் இல்லை. எதிரிகள் நாசத்துக்கும் தோல்விக்கும் சாதவாகனன் திட்டங்களே காரணமென்பதை உணர்ந்திருந்ததால், “இந்தப் போர்த் திட்டத்தைக் கடவுளா தயாரித்தார்? படைகளை அவரா நடத்தினார்?” என்று விசாரித்தாள்.
“அவனன்றி ஓரணுவும் அசையாது என்று நீ கேள்விப் பட்டதில்லையா சித்தரஞ்சனி?” என்று வினவினான் சாதவாகனன்.
“கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானால் நீங்கள் திட்டம் வகுப்பானேன்? அவனே வகுத்திருக்கலாமே” என்றாள் அவள்.
“அவன்தான் வகுத்தான்.”
“என் உடலில் திட்டம் தீட்டியது அவனா!”
“ஆம்.”
“உங்கள் புத்தி?”
“அதை இயக்குபவனும் அவன்தான்.”
“அப்படியானால்?”
“புத்தி கர்மவசப்படி இயங்குகிறது. கர்மாவைத் திசை திருப்பும் சக்தி ஆண்டவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது” என்று தத்துவம் பேசிய சாதவாகனன். ”சித்தரஞ்சனி! நான் இங்கு தன்னந்தனியாக வந்தேன். நாகபாணன் அப்பொழுதே என்னை அழித்திருக்கலாம் அழிக்க அவன் புத்தி வேலை செய்யவில்லை. உன்னைப் பிசாசாக்கி மலைவாசிகளைப் பயமுறுத்தி விரட்டிவிட்டான். கோழைகள், சாமான்ய ஜனங்கள் என்று நினைத்தவர்கள் வீரர்கள் ஆனார்கள். இந்த தாபோல் மலையில் நடந்த விசித்திரங்களே ஆண்டவன் இருக்கிறான், அவனால் இந்த உலகம் அசைகிறது என்பதை நிரூபித்தன. நான் அவன் ஆயுதங்கள். அவ்வளவுதான்” என்றான்.
சித்தரஞ்சனி மேற்கொண்டு பேசவில்லை. இந்த வேதாந்த விசாரத்துக்கு அவள் சித்தமாக இராததால், ”அடுத்து ஆண்டவன் என்ன செய்யப் போகிறான்?” என்று வினவினாள்.
“கடமைக்கு நம்மைத்தூண்டிவிடப் போகிறான்’ என்று சதகர்ணி சொல்லிக் கொண்டிருக்கையில் உள்ளே மணியைப் பெரிதாக அடித்தார் பூஜாரி.
பூஜாரி காட்டிய தீபாராதனையில் ஜொலித்த தாபிலேசுவரர் பிம்பத்தை வெளியிலிருந்தே தரிசித்து கைகூப்பிச் சிரம் தாழ்த்திய சாதவாகனன், “ஈசுவரனை வணங்கு சித்தரஞ்சனி. அவனில்லாவிட்டால் இன்று நாமில்லை” என்று கூற அவளும் வணங்கினாள். மீண்டும் பூஜாரி அடித்த கோவில் மணி மலைப் பகுதியெங்கும் ஊடுருவிச் சென்றதால் அதைத் தங்கள் வெற்றி மணியாகக் கருதி உள்ளம் பூரித்த சித்தரஞ்சனி, “தாபிலேசுவரர் உங்கள் வெற்றிக்கு மணியோசை காட்டுகிறார்” என்றாள்.
சாதவாகனன் முகத்தில் பரிபூர்ணமான சாந்தம் நிலவியது. “எனது வெற்றியாவது? அவன் வெற்றிக்கு அவன் அடித்துக் கொள்கிறான் மணியை” என்று சொன்னான்.
இதனால் எரிச்சல் கொண்ட சித்தரஞ்சனி, “பூஜாரிதான் அடிக்கிறார் மணியை” என்று கடுமையாகவே பேசினாள்.
சாதவாகனன் கேட்டான், “பூஜாரியின் கை எப்படி ஆடுகிறது?” என்று.
“இப்படிப் பேசினால் எனக்குக் கோபம் வரும்” என்று சீறினாள் சித்தரஞ்சனி.
“கோபம் மனித பலவீனங்களில் ஒன்று” என்று கூறிய சாதவாகனன் ரத்தக் கறைபடிந்த தனது வாளை நோக்கி, “சித்தரஞ்சனி! இதைக் கழுவிவிட்டு வருகிறேன்” என்றான்.
“கவலைப்படாதீர்கள். தேவையானால் தாபிலேசுவரரே கழுவுவார்’ என்று சித்தரஞ்சனி சொல்லி ஏளன நகையும் கூட்டினாள். “நீங்கள் இத்தனை பாசாங்குக்காரர் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது” என்று கூறினாள்.
பதிலுக்குப் புன்முறுவல் செய்த சாதவாகனன், “சித்தரஞ்சனி! வெற்றி மமதையை அளிக்கக்கூடாது. அகங்காரம் மனிதனை அழித்துவிடும். இந்த வெற்றி நமக்குப் பணிவை அளிக்க வேண்டும். கடமையையும் உணர்த்த வேண்டும்” என்றான். “அடுத்து மலைவாசிகளைக் கொண்டு மலையைச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு அப்பொழுது போரை முடித்துக்கொண்டு மலையேறி வந்த காஷ்டானனை நோக்கி, “தளபதி! நிலைமை எப்படியிருக் கிறது?” என்று வினவினான்.
“யவனன் படையில் பாதி அழிந்துவிட்டது. மீதிப் பேருடன் அவன் பின்வாங்குகிறான். நாகபாணன் படைகளில் முக்கால்வாசி நாசம்” என்று அறிவித்தான் தளபதி.
“பின்வாங்கும் படையைத் துரத்த வேண்டாம். காய மடைந்தவர்களுக்குச் சிகிச்சை ஏற்பாடாகட்டும். மறைந்த தலைவர்கள் சடலம் கிடைத்தால் எனக்குத் தெரியப்படுத்து” என்று சாதவாகனன் கூறினான்.
“மறைந்த தலைவர்களா? அவர்களை நாம் ஏன் தேட வேண்டும்?” என்று காஷ்டானன் கேட்டான்.
சாதவாகனன் சிறிது நேரம் மௌனமாயிருந்தான். “காஷ்டானனா! நமக்கொரு கடமை இருக்கிறது” என்று சொன்னான் துக்கம் தோய்ந்த குரலில்.
சாதவாகனன் துக்கத்தைக் காஷ்டானனும் கவனித்தான். சித்தரஞ்சனியும் கவனித்தாள். அதற்குக் காரணம் புரியாததால் இருவரும் சாதவாகனனை வியப்பு நிரம்பிய விழிகளால் நோக்கினார்கள். சாதவாகனன் மெதுவாகப் பேசினான்: “காஷ்டானனா! இந்தச் சித்தரஞ்சனியை வளர்த்து எனக்குக் கொடுத்தவர் எனது மாமனார். அவர் சடலத்தைக் கண்டு பிடி. அவருக்குக் கௌரவமான அடக்கம் செய்வது எனது கடமை.”
இதைக் கேட்ட சித்தரஞ்சனியின் கண்களில் நீர் உதயமாகத் தொடங்கியது. “எனது தந்தை…” என்று சொன்ன குரல் தழுதழுத்தது.
“வேல் பாய்ந்து விழுந்து விட்டார். இல்லாவிட்டால் என்னை வெட்டியிருப்பார்” என்றான் காஷ்டானன்.
அதற்குமேல் பேச்சை வளர்த்தாத சாதவாகனன், “காஷ்டானனா! க்ஷத்ரபர் விழுந்த இடத்துக்கு எங்களை அழைத்துச் செல்” என்று கூறி, “சித்தரஞ்சனி! நீயும் உடன் வா” என்று சொல்லி, காஷ்டானன் முன் செல்ல அவனைப் பின்பற்றி நடந்தான்.
காஷ்டானன் தனது புரவியைத்தாபிலேசுவரர் கோவிலுக்கு முன்பே நிறுத்திவிட்டு மலைச்சரிவில் சென்றான். மலையில் பாதி தூரம் இறங்குவதற்கே குறுக்கே கிடந்த மனித சடலங்களின் காரணமாகவும் விழுந்த கிடந்த புரவிகளின் காரணமாகவும் மிகவும் கஷ்டமாயிருந்ததாலும் அந்தத் தடைகளை நீக்க இரண்டு மூன்று வீரர்களை ஏவினான். அவர்களும் மெதுவாக வழி செய்து கொடுக்க சாதவாகனன் சுற்றுமுற்றும் இருந்த நாசத்தைக் கவனித்ததால் சிறிது வருத்தமுற்றுப் பின்னால் நடந்து சென்றான்.
க்ஷத்ரபன் விழுந்த இடத்தைக் காஷ்டானன் திட்டமாக அறிந்திருந்ததால், அந்த இடத்திற்கு நேராக வந்து நின்று சிறிது சுற்றும்முற்றும் நோக்கினான். எந்த இடத்தில் க்ஷத்ரபன் விழுந்தானோ அந்த இடத்தில் அவன் சடலத்தைக் காணாத தால் வியப்புடன் சுற்றுமுற்றும் தேட ஆரம்பித்தான். அந்த இடத்தை ஆராய்ந்த சாதவாகனன் மலைப்பாறையில் ரத்தக் கறை கோடிட்டதுபோல் போகவே அந்த அடையாளத்தைப் பின்பற்றிச் சென்றான். எட்ட இருந்த புதருக்கருகில் புஸ்புஸ் என்று ஏதோ சத்தம் கேட்கவே அங்கு சென்று புதரை விலக்கிப் பார்த்த சாதவாகனன், மார்பில் பாய்ந்த வேலுடன் ரத்த வெள்ளத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டு க்ஷத்ரபன் மரணாவஸ்தையில் இருப்பதைப் பார்த்து அவனருகில் உட்கார்ந்து அவன் உயிர் பிரியவில்லையென்பதால் சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்த்தான். அப்பொழுது க்ஷத்ரபன் உதடுகள், “சித்தரஞ்சனி” என்ற சொல்லை உதிர்த்தது மிகவும் பலவீனமாக.
சாதவாகனனுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த சித்தரஞ்சனி தந்தையின் அருகில் உட்கார்ந்து அவன் காதில், “அப்பா !” என்றாள்.
க்ஷத்ரபன் மெதுவாகக் கண்களை விழித்தான். மார்பிலிருந்த வேலைக் காட்டி, “இன்னும் சில நிமிடங்கள்தான் சித்தரஞ்சனி!” என்று அவள் கையைப் பற்றிக் கொண்டான். பிறகு கௌதமிபுத்ரனைப் பார்த்து, “என் சித்தரஞ்சனிக்குத் தகுந்தவன்” என்று முனகினான். “என்னை…” என்று ஏதோ சொன்னான்.
“என்ன செய்ய வேண்டும்? எதுவாயிருந்தாலும் செய்கிறேன்” என்றான் சாதவாகனன்.
க்ஷத்ரபன் கோட்டைப் பக்கம் விழித்தான். ”அங்கு அடக்கம்” என்றவன் மேற்கொண்டு பேசவில்லை. அவன் உடல் ஒருமுறை நடுங்கி நின்றுவிட்டது. சித்தரஞ்சனியின் கண்கள் நீரால் மங்கின, உதடுகள் துடித்தன. வேலை நீக்கினான் சாதவாகனன்.
“காஷ்டானனா! இவரிஷ்டப்படி இவரைக் கோட்டையில் புதைத்துவிடு. நீயும் சித்தரஞ்சனியும் போய்ச் சடலத்தை அடக்கம் செய்து வாருங்கள்” என்று கூறிவிட்டு எழுந்தான்.
அன்று பிற்பகல் கோட்டையில் நின்று தாபோல் மலையைக் கவனித்துக் கொண்டிருந்த நாகபாணன் சித்தரஞ்சனியும் காஷ்டானனும் ஒரு படகில் வந்து இறங்கியதையும், அதிலிருந்த ஒரு சடலத்தை நான்கு வீரர்கள் சுமந்து வந்ததையும் கவனித்து வியப்பின் எல்லையை எய்தினான். “சித்தரஞ்சனியைத் தனியாக அனுப்பச் சாதவாகனனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு படகுத் துறைக்கு விரைந்தான்.
நன்றாக போர்த்தப்பட்ட சடலத்தை நாங்கு வீரர் தாங்கி வர அதற்கு முன்னால் வந்த சித்தரஞ்சனியையும் காஷ்டானனையும் நெருங்கி வந்து நின்றான்.
“விலகி நில்” என்று அதிகார தோரணையில் காஷ்டானன் நாகபாணனுக்குச் சைகை காட்டினான். நாகபாணன் நகரவில்லை !