Chittaranjani Ch36 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சித்தரஞ்சனி – சாண்டில்யன்
அத்தியாயம் – 36 சொர்க்க பூமி
Chittaranjani Ch36 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
சாதவாகனன் மற்றொரு விஷயத்தை அறிந்து வரச் சொன்னதாகக் காஷ்டானன் கூறியதைப்பற்றித்தன்னிடமும் சொல்லியிருப்பதாக யவனனும் சொன்னதும் சில விநாடிகள் குழப்பமடைந்த நாகபாணன் அவ்விருவரும் சொன்ன பதிலைக் கேட்டதும் மிதமிஞ்சிய பிரமையையே அடைந் தான். “தாங்கள் இதுவரை பல இடங்களில் கொள்ளை யடித்துச் சேமித்து வைத்திருக்கும் வெள்ளி, தங்க நாணயக் குவியல்களை எங்கு மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று சாதவாகனர் அறிந்து வரச் சொன்னார்” என்று காஷ்டானன் கூறியதும் ஒரு விநாடி பிரமை அடைந்த நாகபாணன் அடுத்த விநாடி வெறுப்பு மிகுந்த குரலில், “இதை விட சாதவாகனன் என்னைக் கொன்று போடலாமே” என்று வெறுப்புடன் கூறியதும், “தங்களைக் கொல்வதால் பயன் ஏதுமில்லை என்று சாதவாகனர் நினைக்கிறார்” என்றான் காஷ்டானன்.
அதுவரை சினத்தைக்கூடியவரை அடக்கிக் கொண்டிருந்த நாகபாணன், “எனது செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொண்ட பின் நான் ஏன் வாழ வேண்டும்?’ என்று கேட்டான்.
“பிராணன் உயர்ந்ததல்லவா?” என்று கேட்டான் யவனன்.
“பணம் போன பின் பிராணன் இருந்து என்ன பிரயோசனம்? பணமில்லாதவன் பிணம் என்ற பழமொழி கேட்டதில்லையா?” என்று சீறினான் மகாக்ஷத்ரபன்.
அப்பொழுது மீண்டும் மன்றாடிய யவனன், “மகாக்ஷத்ர பரே! உமது உயிரை வைத்துக் கொள்ளவோ போக்கிக் கொள்ளவோ உமக்கு உரிமையுண்டு. ஆனால் சாதவா கனரிடம் சிக்கியிருக்கும் உமது படைப் பகுதியும் எனது படைப்பகுதியும் சேர்ந்த வீரர்கள் உமது பிடிவாதத்துக்காக காட்டினான்.
“எனது பொக்கிஷம் இருக்குமிடத்தை நான் சொல்ல மறுத்தால்?” என்று மறுபடியும் ஆக்ரோஷத்துடன் வினவினான் நாகபாணன்.
“உமது வீரர்களே உம்மைக் கொன்று விடுவார்கள். நமது படைகள் கலகம் செய்யும் குறிகள் தெரிகின்றன. வீரர்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லத்துடிக்கிறார்கள்” என்றான் யவனன்.
மகாக்ஷத்ரபனான நாகபாணன் தான் சகலவிதத்திலும் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்துகொண்டு தலையைக் கவிழ்ந்து கொண்டான். பிறகு மெதுவாகப் பேசினான்: ‘காஷ்டானனா! யவனர் தலைவா! நான் சேமித்து வைத்திருக்கும் பொக்கிஷம் பூராவும் “ஜோகல் தம்பி (நாஸிக்) பகுதியில் இருக்கிறது” என்று, இதைச் சொல்லி முறிந்த மனத்துடன் கோட்டையை நோக்கித் திரும்பிச் சென்றான்.
அவன் போவதைப் பார்த்துக்கொண்டே நின்ற சித்தரஞ்சனி அந்தப் பெரிய வீரனால் வெற்றியைத் தாங்க முடிந்ததே தவிர தோல்வியைத் தாங்க முடியவில்லை என்று தனக்குள் அனுதாபப்பட்டாள். பிறகு காஷ்டானனுடனும் மற்ற வீரர்களுடனும் அக்கரையை நோக்கிச் சென்றாள். அவளை நதிக்கரையிலேயே வரவேற்ற சதகர்ணி அவளைத் தனது புரவியில் ஏற்றிக் கொண்டு தாபிலேசுவரர் கோவிலுக்குச் சென்றான். ஈசுவரனை வணங்கிவிட்டு சண்டிகா தேவியையும் வணங்கினான்.
மறுநாள் இரண்டு ஆலயங்களிலும் அபிஷேக ஆராதனை களை மிகுந்த விமரிசையுடன் செய்ய மலைவாசிகளுக்கு உத்தரவிட்ட சாதவாகனன், அந்த விழாக்களில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டான். அடுத்து இரண்டு நாட்களில் தனது படைகளுக்கும் அந்தப் பகுதிக்கும் மகாக்ஷத்ரபனாக காஷ்டானனை நியமித்து, “இங்கே மக்கள் அரசை நிறுத்திவிட்டு பிரதிஷ்டானத்துக்கு வந்து சேர். அங்கும் நீதான் மகாக்ஷத்ரபன்” என்றான்.
காஷ்டானன் பிரமை பிடித்து, “சாதவாகனரே! இத்தனை பெரிய பதவியை என்னால் தாங்க முடியாது” என்றான்.
“இது ஒன்றும் பெரிய பதவியல்ல. நீ செய்த சேவைக்குத் தகுந்த பரிசு. சாதவாகன அரசு பேரரசாக வெகு சீக்கிரம் விரிவடையும். அதன் அமைப்பில் உனக்கும் பங்கிருக்கும்” என்றான்.
காஷ்டானன் சாதவாகனன் காலிலும் சித்தரஞ்சனியின் காலிலும் விழுந்தான். அதைக் கண்டு புன்முறுவல் கொண்டான் சாதவாகனன். அந்தப் புன்முறுவலுக்குக் காரணத்தை உணர்ந்திருந்த சித்தரஞ்சனி அவனுடன் தனிமையிலிருக்கையில் கேட்டாள். “காஷ்டானன் வணங்கியபோது ஏன் சிரித்தீர்கள்?” என்று.
“உனக்குப் புருஷனாக வர இருந்தவன் ஒரு முறை காலில் விழுந்தான். நான் ஆயுள் முழுவதும் உன் காலைப் பிடிக்க வேண்டுமே என்று நினைத்தேன்” என்று கூறிப் பெரிதாக நகைத்தான். சித்தரஞ்சனியின் கண்களில் தீப்பொறி பறந்தது.
தாபிலேசுவரர் மலையிலிருந்து மக்களின் ஜெயகோஷம் கலந்த வாழ்த்துடனும் பூஜாரியின் ஆசி வசனங்களுடனும் கிளம்பி பிரதிஷ்டானா வந்த மகனையும் மருமகளையும் கௌதமி பாலஸ்ரீமங்கல ஆரத்தியுடன் வரவேற்றாள்.
“குழந்தாய்! இவள்தானே…?” என்று கேட்டாள் தாய், மருமகளை அணைத்துக்கொண்டு.
“அந்தப் பிசாசு இதுதான். அங்கு பிடித்துக் கொண்டது இதுவரை என்னை விடவில்லை” என்றான் கௌதமிபுத்ரன்.
கௌதமி பாலஸ்ரீ, “டேய்! உன் துஷ்டத்தனத்தை இவளிடம் காட்டாதே” என்று கடிந்துகொண்டு சித்தரஞ் சனியை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அன்றிரவு, தனது பள்ளியறையிலிருந்து வெளியே வானில் ஓடிய முழுமதியைப் பார்த்து, “சித்தரஞ்சனி! பாடு” என்றான் சதகர்ணி .
இம்முறை அவள் மிக மெதுவாக இசைத்தாள். ஹுங் காரமே மயக்கும் நாதமாகத் திகழ்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே அவளை அணைத்து நின்ற கௌதமிபுத்ரன். “சித்தரஞ்சனி! இதென்ன மேலும் போகாமல் கீழும் இறங்காமல் ஒலிக்கும் ராகம்?” என்று வினவினான்.
“பிற்காலத்தில் இந்த ராகம் என் பெயரைக் கொள்ளும். இதற்கு நிஷாதத்துக்கு மேலும் கிடையாது. ஷட்ஜத்துக்குக் கீழே கிடையாது. படாடோபமற்ற குலமகளைப் போல் நடுத்தரமான சுத்தமான வாழ்க்கை உடையது” என்று பதில் சொன்னாள் சித்தரஞ்சனி.
“உன்னை நான் உலகத்தின் உச்சியில் நிற்க வைப்பேன்” என்றான் கௌதமிபுத்ரன்.
“என்னுடைய சாம்ராஜ்யம் நீங்கள்தான். வேறு எந்த உச்சியும் எனக்குத் தேவையில்லை” என்றாள் சித்தரஞ்சனி.
அவன் அவளை அப்படியே தனது கைகளில் தூக்கிக் கொண்டு பஞ்சணையில் கிடத்தினான். வான் மதியின் பூரண நிலவு அவள் மீது விழுந்தது. ஸஹ்யாத்ரியின் காற்று அவள் சேலையை அப்படியும் இப்படியும் நீக்க முற்பட்டது. கௌதமிபுத்ரன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் மீது தனது உடலை கவிழ்த்தான். ”சித்தரஞ்சனி! இனி தடையில்லை” என்று மெதுவாகச் சொன்னான்.
“எதற்கு?” என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக கேட்டாள் சித்தரஞ்சனி.
விளக்கம் சொற்களில் வரவில்லை அவனிடமிருந்து. வந்த விதத்தில் அவள் உணர்ச்சிகள் வேகமாகச் சுழன்றன. இதயம் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தச் சொர்க்க சிருஷ்டிக்கு புருஷர்களின் முரட்டுத்தனம் மிக அவசியம் என்பதைச் சித்தரஞ்சனி புரிந்து கொண்டாள். சாதவாகனன் அவள் காதில், “நீதான் சொர்க்க பூமி சித்தரஞ்சனி” என்று சொன்னான்.
”அதை ஆளும் சக்கரவர்த்தி நீங்கள் தானே” என்று முணுமுணுத்தாள் அவள்.
சித்தரஞ்சனி முற்றும்