Ilaya Rani Ch6 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இளையராணி – சாண்டில்யன்
அத்தியாயம் – 6 சந்திரகிரித் தடாகம்
Ilaya Rani Ch6 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
அமரன் கனவிலிருந்து விழித்துக் கொண்டான். இத்தனை நேரம் மேவார் தலைநகரிலிருந்து தன் தாயாரிருக்குமிடத்துக்கும் அம்பர் நாட்டுக்கும், பிறகு குதிரைமீது தன்னருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு மாகத் தாவித் தாவிச் சென்று கொண்டிருந்த அவன் மனம் மெள்ள இருந்த இடத்தில் நிலைக்கவே அவன் சிறிது தலையைத் தூக்கிப் பார்த்து, “ஆம் ராஜகுமாரி! அதோ தெரிகிறது சந்திரகிரித் தடாகந்தான். அதற்குச் சிறிது தூரத்தில்தான் சத்திரம் இருக்கிறது. அதில் சிறிது நேரம் நாம் தங்கலாம்” என்றான். குதிரையும் மெள்ள மெள்ள பிரும்மாண்டமான சந்திரகிரித் தடாகத்தை அடைந்தது.
ஹாராவளிப் பிராந்தியத்திலிருந்த மிக அழகிய தடாகங்களில் சந்திரகிரித் தடாகமும் ஒன்று. மலை களுக்கிடையில் தங்கியிருந்த அதன் பளிங்கு போன்ற ஜலம் சந்திர வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. தடாகத்தின் ஓரமாக வளர்ந்திருந்த புஷ்பச் செடிகள் காற்றில் ஆடி முத்து முத்தாய் மலர்களை ஜலத்தில் உதிர்த்து விட்டிருந்தன; சந்திரகிரித் தடாகத்தின் கரைகளில் அமரன் இறங்கி ரஜனியையும் குதிரையை விட்டு இறக்கினான்.
“எத்தனை நாழியிருக்கும் ரகு!” என்று அமரன் கேட்டான்.
ரகு குதிரையிலிருந்து இறங்கி ஆகாயத்தைப் பார்த்தான. “பன்னிரண்டு நாழிகைக்கு மேல் இருக்கும் ராஜகுமார்!” என்றான்.
“சத்திரம் திறந்திருக்குமா?”
சொல்ல முடியாது ராஜகுமார், திறக்காவிட்டால் தங்கள் பெயரைச் சொன்னால் திறந்து விடுகிறார்கள்.”
“நாம் இங்கிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது ரகு. இன்னும் நாம் மேவார் எல்லையிலேயே இருக்கிறோம். ஜஸ்வந்தசிம்மன் அரண்மனைக்குப் போனவுடன் இளைய ஈரணி நம்மைப் பிடிக்க ஆட்களை அனப்பாதிருப்பாளென்று நினைக்கிறாயா, இத்தனை நேரம் அவர்கள் ஏன் நம்மைத் தொடர்ந்து வரவில்லை என்று ஆச்சரியமாயிருக்கிறது” என்றான் அமரன்.
ரஜனியும் அதைப்பற்றித்தான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். ரகு குதிரைகளைச் செடியில் பிடித்துக் கட்டினான். “ராஜகுமாரி! சிறிது நேரம் இதோ இந்தச் செடிக்கருகில் உட்காருங்கள். சத்திரம் திறந்திருக்கிறதா என்று ரகுவைப் பார்த்து வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு ரகுவை சத்திரத்துக்கு அனுப்பினான் அமரசிம்மன்.
ரஜனி படுக்கவில்லை. தரையை முந்தானையால் தட்டிவிட்டு ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டாள். நடு ஜாமத்தில் யாருமற்ற அத்வானத்தில் வாழ்க்கை அலையால் திடீரென்று மோதப்பட்ட அந்த இருவரும் என்ன பேச முடியும்! மௌனமாயிருப்பதென்றால் எவ்வளவு நேரந்தான் மெளனமாயிருப்பது? இதற்கெல்லாம் பரிகாரம் செய்ய இயற்கை எத்தனை விசித்திரங்களைச் சிருஷ்டித்து இருக்கிறது! அதோ இருந்தரற் போலிருந்து ரஜனி சிரிக்கும் அந்த அர்த்தமற்ற சிரிப்பு. “என்ன ராஜகுமாரி?” என்று அமரன் கேட்டதும் “என் விதியை நினைத்துச் சிரித்தேன்” என்று விதியின்மேல் பாரத்தைப் போட்டு, புருஷனைப் பேச்சுக்கிழுக்கும் அந்த பெண்மையின் சாகசம், “எப்படிப் பிறந்தாலும் ‘பெண்ணாக மாத்திரம் பிறக்கக் கூடாது ராஜ்குமார்” என்று பெண்மையின் சக்தியை உணர்ந்தும் உணராதது போல் அதை இழித்துச் சொல்லி, யுவதிகள் செய்யும் பாசாங்கு-அப்பா! இயற்கை இவர்களுக்கு என்ன சக்திகளைக் கொடுத்திருக்கிறது! என்ன மிருதுவான, ஆனால் பலமான சக்திகள்!
அரசன் பிள்ளையானால் என்ன அமரனும் சாதாரண மனிதன்தானே! ரஜனியின் பேச்சுக்கள் அவன் மனதை இளக்கிவிட்டன. அவன் கைகள் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவளை ஸ்ப்ரிசித்தன. “ராஜகுமாரி! நீங்கள் பெண் ஜென்மம் எடுத்ததை நொந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதோ இந்த உடலில் உயிர் இருக்குமளவும் உங்களுக்கு துன்பம் இழைக்க யாராலும் முடியாது” என்றான்.
“அதை அறியாமலா இருக்கிறேன் ராஜ்குமார். நான் இளைய ராணியின் கைதியாயிராமல் இங்கிருப்பதே அதற்கு அத்தாட்சியாயிற்றே” என்றாள் ரஜனி.
அமரன் பதில் சொல்லவில்லை . ரஜனி வீண்புகழ்ச்சி செய்வதற்காகப் பேசக்கூடியவள் அல்ல என்பதை உணர்ந்திருந்தான். ஆனால் தன் முன்னிலையிலேயே ஒரு பெண் புகழும்போது வீரனாயிருப்பவன் என்ன பதில் சொல்ல முடியும்?
அவன் மௌனத்தைக் கண்ட ரஜனி, “என்ன ராஜ்குமார்! என்மேல் கோபமா, பேசமாட்டேனென்கிறீர்களே” என்றாள். பெண்களே இப்படித்தான். பேச ஆரம்பிக்கும் வரையில் வெட்கம். பேச ஆரம்பித்துவிட்டாலோ வாயை மூட சாதாரண ஆண்மகனால் முடியாது. வெட்கம் என்ற ஒரு வாய்ப்பூட்டை மாத்திரம் இயற்கை அவர்களுக்கு சிருஷ்டித்திராவிட்டால் இரவும் பகலும் பெண்களின் கூச்சலாலேயே உலகம் இடிந்து போயிருக்கும்.
‘’கோபமென்ன எனக்கு. நான் என்ன கோபக்காரனா?” என்றான் அமரன்.
‘”அதில் சந்தேகம் வேறு இருக்கிறதா உங்களுக்கு? அப்பா! நீங்கள் இளைய ராணி முன் போட்ட கூச்சலைப் பார்த்தபோது நானே பயந்து உள்ளே ஓடிவிட இருந்தேனே” என்றாள் ரஜனி.
நல்லவேவள! ஓடாதிருந்தீர்களே ராஜகுமாரி! என்று சொல்லிச் சிரித்தான் அமரன்.
“என்ன ராஜ்குமார்! வர வர மரியாதை ரொம்ப ஜாஸ்தியாகப் போய்க்கொண்டிருக்கிறதே” என்று ரஜனி சொன்னாள்.
“இல்லை ராஜகுமாரி! நீ சொல்கிற மாதிரிதான் என் தாயாரும் சொல்கிறாள்” என்று அமரன் பதில் சொன்ன போது நீங்கள் என்பது ‘நீ’ என்று மாறியது ரஜனிக்குப் பெரிதும் திருப்தியளித்தது.
“உங்கள் தாயார் என்ன சொல்வார்கள்?” என்று கேட்டாள்.
“நீ முன்கோபிடா. இந்தக் கோபம் இருக்கிற வரையில் உருப்பட மாட்டாய் என்பாள். தவிர…”
“தவிர, என்ன சொல்லுங்களேன்… கேட்போம்”
“வேறென்ன இருக்கிறது? என் கோபத்தைத் தணிக்கக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பாள். முரட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்பது அவள் எண்ணம்” என்று ஏதோ அதை விளையாட்டாகச் சொல்வதுபோல் சொன்னான். ஆனால் தாயார் சொன்னதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை அவன் அறியாமலா இருந்தான்? வழிநெடுக யோசித்தது அதை பற்றித்தானே. இளைய ராணி அம்பர் வீரர்களைக் கூப்பிட்ட சமயத்தில் சாதாரண சமயமாயிருந்தால் பல வீரர்களை வெட்டிச் சாய்த்திருப்பான் அமரன். ‘இந்தப் பெண்ணைப் பார்த்ததும் இவளுக்கு அபாயம் நேரிடப் போகிறதேயென்றல்லவா துணிச்ச லாகச் சண்டையில் இறங்கவில்லை. என் கோபத்துக்கு இவள் பெரிய அணையாக வந்து சேர்ந்தாளே என்று நினைத்தான். ஓர் உண்மையையும் தெரிந்து கொண்டான். “கோபத்தில் கண்மண் தெரியாமல் சண்டையில் இறங்கியிருந்தால் பலாபலன் எப்படியிருக்குமோ? பக்திக்கு நிதானம் கொடுத்துக் கோபம் கண்களை மறைக்காமல் செய்தது இவள் நினைப்பல்லவா” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தாயார் சொன்னதில் பெரிய தத்துவம் இருக்கிறது. அனர்த்தத்தை விளைவிக்கும் ஆண்மையின் முரட்டுத்தனம், கோபம் இவற்றுக்கு அணை போட்டுத் தடுப்பது பெண்மை. அதுதான் சாந்தத்துக்கு அஸ்திவாரம்! வாழ்க்கைக்குப் பெண்மையின் உதவி இன்றியமையாதது. இந்த உண்மைகள் மிகவும் தெளிவாக அமரன் மனதில் எழுந்து நின்றன. அந்த ஆதரவையும், சாந்தத் தையும் தேடிச் செல்வது போல் அவன் வலது கரம் ரஜனியின் அழகிய உடலை நாடி மெல்ல நகர்ந்தது.
நினைப்புதான் உடலுக்கு உணர்ச்சியைக் கொடுக்கிறது. மற்ற சமயங்களில் தேகம் வெறும் மரக்கட்டை தான். இத்தனை நாழி ராஜகுமாரியின் தேகம் தன்மேல் நெருங்கிப் படும்படியாக அணைத்துப் பிடித்துக் குதிரையில் ஏறி வந்ததில் அமரனை இவ்வளவு இன்ப உணர்ச்சிகள் ஊடுருவித் தாக்கவில்லை. அந்தச் சமயம் களிலெல்லாம் நினைப்பு எங்கெங்கோ மாறி மாறிப் பறந்து கொண்டிருந்தது. பெண்ணிடம் பாசம் ஏற்பட்ட தால் தன் சுபாவத்தில் ஏற்பட்ட மாறுதல், தாயாரின் புத்திமதிகள், எதிரிகள் தொடருவார்களே என்று ஆராய்ச்சி. இந்தத் துறைகளில் மனது அலைத்து கொண்டிருந்தது. இப்பொழுதே அவள் பெண் நாம் ‘ஆண்’ என்ற நோக்கம் மேலெழுந்து புருஷனின் புலன்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரே மார்க்கத்தில் திருப்பிவிட்டிருந்ததால், அமரன் தன்னைச் சுவர்க்க திலிருப்பதாக நினைத்துக் கொண்டான். சற்று நேரம் துக்கு முன்பு தைரியமாக ரஜனியைத் தொட்டுத் தூக்கிக் கீழே இறக்கிய அவனுடைய கை, பயந்து நடுங்கி மெள்ள மெள்ள நகர்ந்து அவள் கையைத் தொட்டது. ரஜனி வெட்கத்தால் ஒதுங்குகிற தோரணையில் தான் ஒருக்களித்துக் கொண்டாள். ஆனால், அவள் தேகக் தின் ஒரு பகுதி அப்புறம் நகர்ந்தாலும் மற்றொரு பகுதி அமரனுக்கு வெகு அருகில் திரும்பியது. வெகு அபாயமான கட்டத்துக்கு காதல் தன்னை இழுத்துச் செல்வதை அறிந்த அமரனின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது. ரஜனியின் குனிந்த தலையிலுள்ள புஷ்பத்திலிருந்து வாசனையைக் கவர்ந்து வந்த தென்றல் அவன் முகத்தில் மெல்லெனத் தாக்கியது. அவன் வேட்கைக்குத் தானும் உதவ இஷ்டப்பட்டது போல் சந்திரன் மேகத்திரைக்குள் மிதந்து சென்றான். வெளிச்சம் சிறிது மங்கியது. அமரன் மனத்திற்குள்ளே எழுந்து கொண்டிருந்த தாகம் வேகமாகப் பொங்க ஆரம்பித்தது. ரஜனியும் தேகத்தை ஏனோ சிறிது நெளித்துக் கொண்டாள். புதுத்தம்பதிகளின் லீலைகளை மறைந்திருந்து பார்த்துச் சிரிக்கும் சின்னப் பெண்களைப் போல சந்திரகிரி தடாகத்தின் சின்னஞ்சிறு அலைகள் பாறையின் மீது களுக் களுக்’கென்று மோதிப் பரிகசித்தன.