Ilaya Rani Ch9 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இளையராணி – சாண்டில்யன்
அத்தியாயம் – 9 கிழவனைக் காணவில்லை
Ilaya Rani Ch9 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இளைய ராணி அந்தக் கிழவனைக் கண்டு பிரமித்தான். ஒலியைக் கொண்டே வாளெறியக்கூடிய அவன் திறனைக் கண்டு பிரமித்தாள். ஆகவே காவலுக்கு அவனை அழைத்து வந்த சேனாதிபதியின் திறமையைப் பெரிதும் பாராட்டினாள். “உமக்கும் புத்தியிருக்கிறது சேனாதிபதி” என்று கூறவும் செய்தாள்.
“அது எத்தன்மையதென்று போகப் போக அதிகமாகப் புரியும்” என்று அடக்கத்துடன் பதில் சொன்னான் சேனாதிபதி. அந்த அடக்கத்தில் பொருள் அதிகமாகப் புதைந்து கிடப்பதைப் புரிந்துகொண்ட இளைய ராணி, காவலர் இருவரை விளித்து அந்தக் கிழவனுக்கு ரஜனியின் அறையைக் காட்டிக் காவல் புரியத் திட்டப் படுத்தும்படி உத்தரவிட்டாள். காவலர் சென்றபின் சேனாதிபதியைக் கேட்டாள், “உபசேனாதிபதியிட மிருந்து வேறென்ன செய்தி வந்தது?” என்று.
“அரசர் ராகிப் பண்டிகைக்குத் திரும்பி விடுவதாக உபசேனாதிபதி எழுதியிருக்கிறார்” என்றான் சேனாதிபதி.
போர் நிலை சரியாகிவிட்டதா அரசர் அதற்குள் திரும்ப?” என்று வினவினாள் ராணி ஏளனத்துடன்.
“நாமாகப் போருக்குச் செல்லவில்லை, மொகலாயச் சக்கரவர்த்திக்காகச் சென்றோம். அரசரை அங்கு வைத்திருப்பதும் அனுப்புவதும் சக்கரவர்த்தி இஷ்டம்” என்று சேனாதிபதி கூறினான்.
“உமக்கும் அரசருக்கும் சொந்தமாக இஷ்டம் எதுவும் கிடையாதா?”
“இல்லை.”
“சக்கரவர்த்தி சொல்கிறபடி ஆடுவீர்கள்?”
“வெளியில் போனால் சக்கரவர்த்தி, இங்கிருந்தால் ராணியார்,”
சேனாதிபதியின் ஏளனம் புரியாதிருக்கவில்லை கமலா தேவிக்கு. இருப்பினும் அதைப்பற்றி மேற் கொண்டு ஏதும் பேசாமல் பேச்சை மாற்றி, “ராகிப் பண்டிகைக்கு அரசர் வருவதானால் அதற்குள் பல காரியங்களை முடிக்க வேண்டும் சேனாதிபதி” என்றாள்.
சேனாதிபதி மீண்டும் விஷமத்தைக் காட்டத் தொடங்கி, “அரசரால் தங்களுக்கு எப்போதும் எந்தத் தடங்கலுமில்லையே தேவி” என்றான்.
“இதுவரையிருந்ததில்லை, இனிமேல் இருக்கும்” என்றாள் ராணி.
‘ஏன்?
“அவருக்கு ஒரு தலைமகன் இருக்கிறான், அதுவும் வயது வந்தவன். பெரிய வீரனுங்கூட. அவனை மக்கள் மதிக்கிறார்கள்.”
“அதனால்?”
“அரசரையும் மீறிக் காரியங்கள் நடக்கும். அரசர் அதற்குக் குறுக்கே நிற்க முடியாது, அமரன் பேச்சுத் தான் மக்களிடை எடுபடும்.”
“அதற்கு என்ன செய்ய வேண்டும் ராணி?” என்று ‘வினவிய சேனாதிபதியின் சொற்களில் சற்று அதைரியம் துளிர்த்தது – ராணி ஏதோ விபரீத திட்டத்துக்கு அடிகோலுகிறாள் என்ற நினைப்பினால்.
“அரசர் வருவதற்குள் ரஜனிக்கும் ஜஸ்வந்தசிம்மனுக்கு திருமணம் முடியவேண்டும்” என்ற ராணி சிறிது நிறுத்தினாள்,
“அவ்வளவுதானா?” என்று கேட்டான் சேனாதிபதி.
“இல்லை சேனாதிபதி, அமரனும் அழிக்கப்பட வேண்டும். அவனிருக்கும்வரை என் மகனுக்கு அம்பர் நம் கிடைக்கமாட்டாள். அரசும் கிடைக்காது” என்றாள் இளையராணி.
சேனாதிபதி அவளைப் பயத்துடன் பார்த்தான். பெரிய ஆபத்தான திட்டம் தேவி” என்று மென்று விழுங்கினான்.
ஆம் சேனாதிபதி, ஆபத்தான திட்டந்தான். ஆபத்தில்லாமல் வெற்றியில்லை” என்று கூறினாள் ராணி. அத்துடன் வேறொன்றும் சொன்னாள்: “நாளை இங்கு வாரும், நானும் ரஜனியும் இருக்கையில் அமரன் பிடிபட்டதாகக் கூறும்” என்று தெரிவித்தாள் ராணி.
“அதனால் என்ன பயன்?” என்று சேனாதிபதி கேட்டான்.
“அமரனைக் கொல்வதாகப் பயமுறுத்துவோம்.”
“பயமுறுத்தினால்…?”
“அவனைக் காக்க எதுவும் செய்வாள் ரஜனியென்று நினைக்கிறேன்.”
ஒப்புக்கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சேனாதிபதி.
மேலும் சொன்னாள் ராணி: ” அப்படி அவள் என் மகனைத் திருமணம் செய்துகொண்டால் அம்பர் அரசன் நமது பக்கம் பலமாகச் சாய்வான். மேவாரின் பலத்தைப் பிறகு நாம் ஒரு கை பார்க்கலாம். அது மட்டுமல்ல சேனாதிபதி, அமரன் விஷயத்தைச் சொல்லி அரசரை மிரட்டி ஜஸ்வந்தசிம்மனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டலாம்.”
இளைய ராணியின் திட்டத்தைக் கேட்டுப் பிரமிக்க வில்லை சேனாதிபதி. அரசைக் கைப்பற்ற அவள் வகுத்துள்ள சதித் திட்டம் அவளுக்குள்ள மனப்பாங்குக்குச் சரியானது என்றே தீர்மானித்துக் கொண்டான். இருப்பினும் இவள் மக்களைப்பற்றிக் கவலைப்பட வில்லையே, சிசோதய வீரர்கள் இருக்கும் நினைப்பே இவளுக்கில்லையே. வீரர்களை மீறி, மக்களை மீறி. மன்னனும் ஏதும் செய்ய முடியாதே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாலும் அதை வெளியிட்டுப் பேசாமல் விடைபெற்றுக் கொண்டான் ராணியிடமிருந்து.
அவன் சென்றபிறகு ராணி தனது மகனை அழைத்தாள். “ஜஸ்வந்தசிம்மா! ரஜனியின் அறைக்குப் போய் அவளை சமாதானப்படுத்து” என்றாள்.
ஜஸ்வந்தசிம்மனின் கண்களில் பயம் துளிர்த்தது. “எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும்?” என்று வினவினான்.
“அதையும் நான்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?” என்றாள்.
“எனக்கு வேறு யாரம்மா சொல்லிக் கொடுப்பார்கள்?” என்று குழைந்தான் ஜஸ்வந்தசிம்மன்.
ராணியின் கண்களில் கோபம் துளிர்த்தது. “டேய் முட்டாள்” என்றழைத்தாள்.
“ஏனம்மா?”
“நீ ஏன் எனக்குப் பிறந்தாய்?”
“எனக்கெப்படியம்மா தெரியும்?”
“உண்மை, என் விதி எப்படியென்று உனக்கெப்படித் தெரியும்?” என்று சலித்துக்கொண்ட ராணி “சரி சரி; நீ போய் ரஜனி என்ன செய்கிறாளென்று பார்த்து வா” என்றாள்.
ஐஸ்வந்தசிம்மன் மறு பேச்சுப் பேசாமல் சென்றான் மாளிகை மாடியில் ரஜனியிருந்த அறையை நோக்கி. அறைக்குள் பத்தடி தூரத்தில் இருக்கும்போது “யாரது?” என்று குளறலான பயங்கரக் குரல் கேட்டது.
ஜஸ்வந்தசிம்மனுக்கு அந்தக் குரலைக் கேட்டே குலை நடுக்கமெடுத்தது. குரல் கொடுத்த உருவத்தைக் சித்ததும் பயம் அதிகமாயிற்று. குரலைவிட அங்கிருந்த கிழவன் உருவம் மிகப் பயங்கரமாக இருந்தது, தலையிலிருந்து தொங்கிய நரை மயிர்களால் மிருகம் போலிருந்த கிழவனின் பஞ்சடைந்த கண்கள் எழுந்தன, ஜஸ்வந்தசிம்மனை நோக்கி. பிறகு தாழ்ந்தன. கிழவன் வாயிலில் ஒதுங்கி உட்கார்ந்தான்.
தன்னைக் கண்டு கிழவன் பயந்துவிட்டதாக நினைத்து ஜஸ்வந்தசிம்மன் மெள்ள அணுகினான் அறையை. அறை வாயிற்படியில் காலெடுத்து வைத்ததும், ‘ஐயோ ஐயோ’ என்று அலறினான் ஜஸ்வந்த சிம்மன். அவன் கழுத்து கிழவனின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்தது.
அவன் சத்தத்தைக் கேட்ட காவலர் ஓடி வந்தனர். மெள்ளக் கிழவன் பிடியிலிருந்து அவனை விடுவித்தனர். “டேய் கிழவா! இவர் ஜஸ்வந்தசிம்மர்” என்று கூறினான் ஒரு காவலன்.
கிழவன் கண்கள் மீது கையை வைத்துப் பார்த்தான். பிறகு தலை வணங்கினான்.
“இவரை ஏன் கழுத்தை நெரித்தாய்?” என்று சீறினான் இன்னொரு காவலன்.
“யாரையும் விடவேண்டாமென்று சொன்னார்கள்” என்று குளறினான் கிழவன்.
“இவர் அதற்கு விலக்கு” என்றான் மற்றொரு காவலன்.
சரி” என்றான் கிழவன். பிறகு ஜஸ்வந்தசிம்மன் உள்ளே போக வழிவிட்டு விலகி நின்றான்.
ஆனால் ஜஸ்வந்தசிம்மன் உள்ளே செல்ல வில்லை: கழுத்தைத் தடவிக்கொண்டு கோபத்துடன் சென்றான் தாயிடம். “முதலில் அந்தக் கிழவனை வேலையிலிருந்து அகற்று” என்றும் சீறினான்.
“ஏனடா?” என்று வினவினாள் இளையராணி.
நடந்ததைச் சொன்ன ஜஸ்வந்தசிம்மன், அவன் இருக்கும்வரை நான் ரஜனியின் அறையை நாடமாட்டேன்” என்று திட்டமாகக் கூறினான்.
“அத்தகைய வீரன் நமக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம்” என்றான் இளைய ராணி.
“அதிர்ஷ்டமானால் வைத்துக்கொள். என்னைப் போகச் சொல்லாதே அவனிருக்குமிடத்துக்கு” என்று கூறிவிட்டு, “அதிர்ஷ்டமாம் அதிர்ஷ்டம். யாருக்கு அதிர்ஷ்டம்?” என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றான் ஜஸ்வந்தசிம்மன்.
இளைய ராணியும் சிந்தித்தாள் அந்த அசட்டுப் பிள்ளையைப்பற்றி, “இந்த முட்டாளைப் பெற்றதை விட அந்த அமரனை நான் பெற்றிருக்கக் கூடாதா?” என்றும் நொந்து கொண்டாள், “நல்ல வேளை கிழவன் டைத்தான். இல்லையேல் அந்த அமரனிடமிருந்து ரஜனியையும் இந்த அரண்மனையையும் காக்க முடியாது” என்று தன்னுள் கூறிக் கொண்டாள்.
அதே சமயத்தில் வேறொரு நாடகம் ரஜனியின் அறையில் நடந்து கொண்டிருந்தது. நடுநிசியில் சத்தம் போடாமல் கிழவன் ரஜனியின் அறைக்குள் நுழைந்தான். அவள் மஞ்சத்தண்டை சிறிது நின்று அவளைக் கவனித்தான். பிறகு அவள் அழகிய கன்னங்களைத் தடவவும் செய்தான்.