Home Historical Novel Jala Deepam Part 1 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam part 1 Ch14 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch14 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 அன்பில் பயங்கரம்

Jala Deepam Part 1 Ch14 | Jala Deepam | TamilNovel.in

காதுக்கு வெகு அருகில் ஒலித்த கனோஜியின் குரலால் பரசுராம பட்டண அழகின் பிரமையிலிருந்து சற்றே விடுபட்ட இதயசந்திரன் சட்டெனத் திரும்பி மகாராஷ்டிரர் கடற்படைத் தலைவரை நோக்கி, ‘இத்தனை நேரம் எங்கிருந்தீர்கள்?” என்று வினவினான்.

கனோஜி ஆங்கரே தமக்குப் பின்னாலிருந்த காட்டின் முகப்பைத் தமது இடது கையால் சுட்டிக் காட்டி, “அங்கு தானிருந்தேன்” என்று தெரிவித்தார் புன்முறுவலுடன்.

”அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன் எரிச்சலுடன்.

கனோஜி ஆங்கரேயின் இதழ்களில் விஷமப் புன்முறுவல் படர்ந்தது. “இதயசந்திரா! வேடிக்கை பார்ப்பது உனக்கு மட்டும் பிரத்தியேக உரிமையாயிருக்க முடியாது” என்று சுட்டிக் காட்டினார் புன்முறுவலுக்கிடையே.

“வேடிக்கை பார்ப்பதற்குச் சமய சந்தர்ப்பம் உண்டு” என்று இதயசந்திரனும் கூறினான் இகழ்ச்சியுடன்.

“அதைத்தான் நானும் கூறுகிறேன்’’ என்ற ஆங்கரே சற்றுப் பலமாகவே நகைத்தார். மேலும் சொன்னார்: “தமிழா! நேற்றிரவே உனக்குக் கூறினேன் நம்மிருவரையும் யாரும் எந்த விநாடியிலும் வெட்டிப் போடலாம் என்று. இது ஸாத் ஸித்தியின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதி. ஆகையால் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று சொன்னேன் உனக்கு. அத்தனை எச்சரிக்கையையும் துடைத்துவிட்டுப் பிரும்மேந்திர ஸ்வாமியிடமிருந்து பிரிந்துவிட்டதும் சரி, நட்ட நடுப்பாதையில் நின்று விட்டதும் சரி, சமய சந்தர்ப்பங்களுக்குச் சரிப்படாதது.

புது இடத்துக்கு வருபவன் மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். அதுவும் ஸித்திகள் எல்லைக்குள் இருக்கும் போது எச்சரிக்கை மிக மிக அதிகமாயிருக்க வேண்டும்.”

இதயசந்திரன் சில விநாடிகள் மௌனம் சாதித்தான். பிறகு அவரையும் அவருக்குப் பின்னால் நின்றிருந்த அந்த அராபிய வெண்புரவியையும் நோக்கினான். மகாராஷ்டிர ஸார் கேலின் எச்சரிக்கையை எண்ணியதால் சற்று இகழ்ச்சியுடனேயே உரையாடலைத் தொடர்ந்த அந்த வாலிபன். ”அந்த எச்சரிக்கையின் விளைவாகத்தான் பட்டணம் கிட்டே வந்ததும் நீங்கள் ஸ்வாமியிடமிருந்து பிரிந்து மறைந்து, ஸித்தி சென்ற பின்பு இங்கு தலையைக் காட்டுகிறீர்களா?’ என்று வினவினான்.

மகாராஷ்டிர கடற்படைத் தளபதி அவனைத் தமது கூரிய கரிய கண்களால் ஊன்றிக் கவனித்தார். ”தமிழா! ஸாத் ஸித்தியின் முஷ்டியைத் தேக்கிவிட்டதால் நீ எல்லாரையும்விடப் பெரிய வீரனென்றும் பலசாலியென்றும் நினைக்கிறாயல்லவா?” என்று கேட்டார் சர்வசாதாரணமாக.

“நினைத்தால் அது தவறா?” என்றான் இதயசந்திரன்.

கனோஜி நகைத்துவிட்டு, ”எங்கே. இந்தக் கையைப் பிடித்து வளை பார்ப்போம்” என்று கூறித் தமது கையை நீட்டினார்.

இதயசந்திரன் அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மின்னல் வேகத்தில் அவரது மணிக்கட்டைத் தனது கையால் பிடித்து நாடி ஓடிக் கொண்டிருந்த இடத்தை அழுத்தித் திருகினான் தனது முழு பலத்துடன். அவன் வேகம், நாடி அழுத்தும் தந்திரம், எல்லாம் பயனற்று விட்டதால், பெரும் பிரமிப்பு அவனை ஆட்கொண்டது கனோஜி ஆங்கரேயின் கை இரும்பு உலக்கை போல் நீட்டியது நீட்டியபடி நின்று கொண்டிருந்தது. நாடி இருக்குமிடம்கூட அவன் விரல்களின் அழுத்தத்தில் தெரியவில்லை. நாடி இருந்த இடத்தில் நல்ல தடிப்பாயிருந்த மேல்சதை அழுந்த மறுத்தது. இத்தனைக் கும் கனோஜி ஆங்கரே அந்தக் கையை சர்வ சாதாரணமாகவே நீட்டிக் கொண்டிருந்ததையும், தசைகளைக் கெட்டிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காததையும் பார்த்த இதயசந்திரன், ‘ இந்தக் கை ஒருவேளை இயற்கையாகவே இப்படி இரும்பாக அமைந்திருக்கிறதா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அந்தக் கையை அழுத்த அழுத்த அவன் விரல்கள் வலி கண்டனவேயொழிய, ஆங்கரேயின் கை அடியோடு அசையாததைக் கண்ட இதயசந்திரன், அதைத் திருக எடுத்த தனது முயற்சியைக் கைவிட்டுப் அவரைப் பெரு வியப்புடன் நோக்கினான். “ஸாத்ஸித்தியின் கை இதைவிடத் தடிப்பாயிருந்தது. இருப்பினும் அதை நான் திருகிவிட்டேன்” என்று ஆங்கரேயை நோக்கிக் கூறவும் செய்தான்.

அவன் கூற்றில் கேள்வியொன்றும் அடங்கியிருந்ததைக் கண்ட ஆங்கரே. ”தமிழா! தடிப்பாயிருப்பதெல்லாம் சக்தியுள்ள தென்று அர்த்தமில்லை. புத்தி தடிப்பாயிருப்பதை விடக் கூர்மையாயிருப்பது நல்லது போரில் மிருக பலத்தை விட மனித அறிவு அதிக பலனைக் கொடுக்கிறது. இப்பொழுது இந்தக் கையைப் பார்” என்று மீண்டும் தமது கையை நீட்டினார்.

இதயசந்திரன் அந்தக் கரத்தைப் பற்றிப் பார்த்தான். முன்னைவிட அதில் கடினம் குறைந்திருந்தது. உரம் பழையபடியிருந்தும் இரும்புத் தன்மை சிறிது மாறியிருந்தது. சற்று முன் அசேதனமாயிருந்த அந்தக் கை உயிரைப் பெற்றுவிட்டதற்கறி குறியாக நாடி புஷ்டியாக அடித்தது. இப்படி நாடியையும் உடல் தசைகளையும், முகத்தைக்கூடச் சுளிக்காமல், எந்தப் பிரயத்தனத்தையும் காட்டாமல், எப்படி இஷ்டப்படி அடக்கி விடுவிக்க முடியும்’ என்று எண்ணிய இதயசந்திரன், ”நாடியை எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்” என்று வியப்புடன் வினவினான் ஆங்கரேயை நோக்கி.

“சுவாமியிடம் கொஞ்ச நாள் பயின்றால் இந்த முறை உனக்குத் தெரியும். இது ஒரு தனிப்பட்டயோகப் பயிற்சி” என்று விளக்கினார் ஆங்கரே.

“யோகப் பயிற்சி போர் வீரனுக்கு அவசியமா?” இதயசந்திரன் கேள்வியில் சந்தேகம் தொனித்தது.

”அனைவருக்கும் அவசியம் என்று சுவாமி கருதுகிறார். அவரவர் வாழ்க்கை முறைக்குத் தகுந்த பயிற்சிகள் இருக்கின்றன’ என்ற ஆங்கரே. . ”வா சுவாமிகள் இருப்பிடம் போவோம். பேசுவதை இரவில் பேசிக் கொள்வோம்” என்று முன்னே நடந்தார். இதயசந்திரனும் அவருடன் நடந்து கோட்டை வாசலுக்குள் நுழைந்தான்.
பரசுராமர் கிராமமாயிருந்து. பிரும்மேந்திர சுவாமியால் பட்டணமாக்கப்பட்ட அந்த மலைநகரத்தின் தெற்குக் கோட்டை வாசலில் தொடர்ந்த விசாலமான தெரு. நேராகப் பரசுராமன் கோயிலுக்குச் சென்றதால் கோட்டை வாசலிலிருந்தே பரசுராமன் கோயிலைப் பார்க்க முடிந்தது இதயசந்திரனால், கோயில் கோபுரத்தின் பெருவிளக்கின் வெளிச்சம் அந்தப் பாதையின் முக்கால் தூரத்துக்கு விழுந்திருந்ததால் ஏற்பட்ட அழகை, கோபுர வாயிலிலிருந்து சற்றுத் தள்ளித் தொடர்ச்சியாக இருபுறமும் இருந்த கடைகளின் வெளிச்சமும், அவற்றின் பின்னால் எழுந்து மகுடங்களுடன் விளங்கிய நாலைந்து பெரும் கட்டிடங்களின் விசாலமும் பன் மடங்கு அதிகப் படுத்தின. கோட்டை வாயிலை நோக்கி வந்தும் போய்க் கொண்டுமிருந்த மனிதர்கள் பல நாட்டவராயும் பல இனத்தவராயும் இருந்ததைக் கண்ட இதயசந்திரன், இவர்கள் அத்தனை பேருக்கும் இங்கு என்ன இருக்கிறது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அந்தப் பாதையில் மேலும் நடந்து கடைகளுக்கருகில் வந்ததும் அங்கு டச்சுக்காரர் சிலரும், பல இஸ்லாமியரும், ஹிந்து சாதுக்களும் ஏதோ சாமான்களை வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த இதயசந்திரனுக்கு அந்தப் பட்டணத்தின் போக்கு அடியோடு புரியவில்லையென்றாலும் பிரும்மேந்திர சுவாமியின் அபரிமித செல்வாக்கு மட்டும் நன்றாகப் புரிந்தது. இப்படி அந்த நகரத்தை அணு அணுவாக எடை போட்டுக் கொண்டு வந்த இதயசந்திரன் கடைகளுக்கருகாமையில் வந்ததும் கனோஜி ஆங்கரே அவனை நோக்கி, “இதயசந்திரா! இந்தக் கடைகளைத் தாண்டி வலதுபுறம் போனால் கோயிலின் அதோ அந்த மண்டபம் வரும்’ என்று உருண்டையாக பிரும்மாண்ட மாக எழுந்து முப்பெருங் கலசங்களுடன் பளிச்சிட்ட ஒரு மகுடத்தைக் காட்டி, ” அதுதான் பிரார்த்தனை மண்டபம். அங்குதான் சுவாமி இருக்கிறார். போய் அவரைச் சந்தி. நான் உன்னைப் பிறகு சந்திக்கிறேன்” என்று கூறினார்.

”ஏன் நீங்கள் வரவில்லையா சுவாமியிடம்?” என்று வினவினான் இதயசந்திரன்.

“இப்போது வரவில்லை” என்றார் கனோஜி.

“ஏன்?” “சுவாமிக்குச் சங்கடம் விளைவிக்கக் கூடாது கூடிய வரையில்.”

”நீங்கள் வருவதால் என்ன சங்கடம்?”

இதற்குக் கனோஜி உடனடியாகப் பதில் சொல்லாமல் சிறிது சிந்தித்துவிட்டு ஏதோ தலையை அசைத்துக் கொண்டு பிறகு சொன்னார். ”ஸாத் ஸித்தி இப்பொழுது சுவாமியிடம் இருக்கிறான்; நான் அவனைச் சந்திப்பது சுவாமிக்கு இடைஞ்சலாயிருக்கும்” என்று.

“இங்குதான் யாரும் ஆயுதம் உருவக் கூடாதே” என்றான் இதயசந்திரன்.

“ஆம்.”

“அப்படியிருக்க ஸாத் ஸித்தியை நீங்கள் சந்திப்பதால் என்ன கஷ்டம் சுவாமிக்கு?”

”சுவாமியின் நீதி பாதிக்கப்படும்.”

“நீதியா!”

“ஆம் தமிழா! ஸாத் ஸித்தியின் வீரனொருவனை நான் சுட்டுவிட்டேனல்லவா நேற்று?”

“சுட்டீர்கள்.”

“அதைப்பற்றிப் புகார் செய்ய வந்திருக்கிறான் ஸாத் ஸித்தி. சுவாமி உத்தரவுக்கு மாறாக நான் ஆயுத மெடுத்ததைப் பற்றிக் கூறுவான். அதற்குப் பரிகாரம் கேட்பான்.”

” என்ன பரிகாரம் கேட்பான்?”

“ஸித்தி கேட்கக்கூடியது ஒரே ஒரு பரிகாரந்தான். தன்னிடம் என்னை ஒப்படைக்கக் கேட்பான்.” “சுவாமி ஒப்புக்கொள்வாரா அதற்கு?”

”ஒப்புக்கொள்ளமாட்டார். தற்காப்புக்கு ஆயுதம் உபயோகப்படுத்துவது தர்மம். அதைச் சுவாமி எப்படித் தடுக்க முடியும்?”

“அப்படியானால் ஸித்தி ஏமாற்றமடைய மாட்டானா?”

“ஏமாற்றமடைய மாட்டான். சுவாமி என்னை ஒப்படைக்க மறுப்பாரென்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஸித்தி இந்த நிகழ்ச்சியை உபயோகப்படுத்திப் பெரும் நாடகமாடுவான். நீ சென்று வேடிக்கை பார். ஆனால் நான் முன்பு சொன்னது நினைவிருக் கட்டும். ஸித்தியிடம் மிகுந்த எச்சரிக்கையுடனிரு. அவன் உன்னால் வீழ்த்தப்பட்ட பின்பும் உன்னை அணைத்திருக்கிறான். ஆகவே ஏதோ பெரும் திட்டம் அவன் மனத்திலிருக்கிறது. இரவில் எங்கும் போகாதே. சுவாமியுடன் தங்கிவிடு” என்று கடைசியாகக் கூறிய கனோஜி ஆங்கரே கோயில் கோபுரத்தை அணுகி இதயசந்திரனுக்குக் காட்டியப் பாதைக்கு நேர் எதிர்புறத்தில் சென்றுவிட்டார்.

அந்த வெண்புரவி அவரைத் தொடர்ந்து சீராக நடை போட்டுச் சென்றது.

இதயசந்திரன் ஒரு விநாடி அப்புரவியைப் பார்த்துக் கொண்டு நின்றான். எத்தனை விசுவாசமுள்ள சேவகனுங்கூட அத்தனைப் பணிவுடன் எசமானைப் பின்பற்ற முடியாது என்ற நினைப்பில் திளைத்துப் பரவசப்பட்டுக் கொண்டே திரும்பி அந்தப் பெரும் மகுடங்கொண்ட பிரார்த்தனை மண்டபத்தை நோக்கிச் சென்றான். பிரார்த்தனை மண்டபத்தின் வழி மிகச் சுத்தமாக வைக்கப் பட்டிருந்ததன்றி அதை அணுகுவதற்குச் சற்றுத் தூரத்திற்கு முன்பே புரவிகளைக் கட்ட நீண்ட தளைத்தண்டு அமைக்கப்பட்டிருந்ததையும், அந்தத் தளைத்தண்டுகளில் சில புரவிகளும் கட்டப்பட்டிருப்பதையும் கண்டு, ‘இவை ஸாத்ஸித்தி, அவன் வீரர்கள் புரவிகளாயிருக்க வேண்டும்,’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு மேலும் பிரார்த்தனை மண்டப வாயிலுக்கு வந்தான். அங்கு வந்த பின்புதான் அவன் மனத்துக்கு நல்ல தெளிவு ஏற்பட்டது. பரசுராம பட்டணத்திற்கு தெற்கு வாயிலில் எல்லோருடனும் புரவி யிலிருந்து தான் மற்றவர்களுடன் இறங்கிய பிறகு தனது கையிலிருந்த கடிவாளத்தை சுவாமி பரிவாரத்தின் வீர னொருவன் வாங்கிக்கொண்டு புரவியை அழைத்துச் சென்றதும், பிறகு தான் மட்டும் தனித்து வாசிஷ்டி நதியையும், எதிரே தெரிந்த தீவையும் பார்த்துக்கொண்டு நின்று விட்டதும் தெளிவாக நினைவுக்கு வரவே, “அப்பா! இந்தப் பட்டணம் எத்தனை மயக்கிவிட்டது என்னை!” என்று வியப்புற்று பிரார்த்தனை மண்டப வாயிலில் ‘நுழையப் போனான். அவனை வாயிலிலிருந்த இரு சாதுக்கள் மறித்து, “அப்பா, உன் பாதுகைகளை எடுத்துவிடு. அதோ அந்த மலைச் சுனைக்குச் சென்று அதோ இருக்கும் கலசத்தில் நீர் எடுத்து கைகால்களைச் சுத்தம் செய்துவா” என்று உத்தரவிட்டனர். இதயசந்திரன் வாயிற்படி ஓரத்தில் ஸாத் ஸித்தியின் காலணிகள் இருப்பதையும், வாயிலிலிருந்து சற்றுத் தள்ளி அவன் வீரர்கள் பணிவுடன் நின்றிருப்பதையும் கவனித்துவிட்டு சாதுக்கள் சொற்படி அருகிலிருந்த சுனைக்குச் சென்றான். அதனருகில் பளபளவென்று தேய்த்து வைக்கப்பட்டிருந்த செம்புக் கலசங்களிலொன்றை எடுத்துக் கைகால் முகம் கழுவிவிட்டு வாயிலுக்கு வந்ததும் அவன் முகம் கைகால் துடைக்க சாதுக்கள் இரண்டு காவித்துண்டுகளை அளித்தனர். அவற்றால் முகம் கைகால்களைத் துடைத்துக் கொண்ட அவனிடம் ஒரு சாது பக்கத்தில் சந்தனம், விபூதி வைக்கப் பட்டிருந்த இரண்டு வெள்ளிக் கோப்பைகளை நீட்டி, “இதில் ஏதாவதொன்றைப் பூசிக்கொள்” என்றார். விபூதியைத் தரித்துக் கொண்ட இதயசந்திரன் மண்டப வாயிலுக்குள் நுழைந்தான். நுழைந்ததும் முதலில் வந்த நீண்ட தாழ்வாரத்திலிருந்து ஒரு சாது சிறு மணியொன்று லேசாக அடிக்க, அங்கிருந்த பெருங்கதவு இம்மியும் சத்தம் இல்லாமல் திறக்க இதயசந்திரன் உள்ளே சென்றான். கதவுகள் மீண்டும் மூடப்பட்டன. எதிரே விரிந்த காட்சி அவனைப் பிரமிக்க வைத்தது.

தஞ்சைப் பெரும் கோயிலின் பெருமண்டபத்தைவிட விசாலமாக இருந்தது அந்தப் பிரார்த்தனை மண்டபம். மேலே பிருமாண்டமாக வளைந்திருந்த கூரையில் தசாவதாரமும், கங்காவதாரமும், சிவ விஷ்ணு லீலைகளும் பலபல வர்ணங்களில் தீட்டப்பட்டிருந்தன. தூண்கள் எல்லாம் சுவர் ஓரங்களிலிருந்ததால் எந்த இடைஞ்சலு மின்றி, பெருங்கூட்டம் பிரார்த்தனை செய்ய அந்தக் கூடம் வசதியளித்தது.

சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடிந்து கூட்டம் அமைதியாகக் கலைந்தது. கடைசியில் கூடத்திலிருந்தது சுவாமியைத் தவிர ஸாத் ஸித்தியும் தானும்தானென்பதை உணர்ந்த இதயசந்திரன் அடுத்த கட்டத்துக்குத் தயாரா னான். சுவாமி மேடையிலிருந்து கொண்டு ஸாத் ஸித்தியை அருகில் வரும்படி அழைத்தார்.

ஸாத் ஸித்தி மிகுந்த நிதானத்துடனும் கம்பீரத்துடனும் அவரை அணுகினான். ”உன் வீரனை சொஸ்தப் படுத்தியிருக்கிறேன். நீ அவனை அழைத்துப் போகலாம்’ என்றார் சுவாமி.

”வேறு கோரிக்கையும் இருக்கிறது” என்றான் ஸாத் ஸித்தி.

“சொல் அப்பனே! என்னால் முடிந்தால் பூர்த்தி செய்கிறேன்” என்றார் சுவாமி அன்புடன்.

ஸாத் ஸித்தி மிகுந்த அடக்கத்துடன் தான் கோரிக்கை யைத் தெரிவித்தான். அவன் கோரிக்கை வாயிலிருந்து வெளிவரும் வரை அது தனக்கு எத்தனை அதிர்ச்சியைத் தரக் கூடும் என்று இதயசந்திரன் சொப்பனங்கூடக் காணவில்லை. ஸாத் ஸித்தியின் குரலில் அன்பு ஒழுகியது. அந்த அன்பு எத்தனை பயங்கரமாயிருக்க முடியும் என்பதைப் பிரார்த்தனை மண்டபத்தில் உணர்ந்து கொண்ட இதயசந்திரன் கல்லாய்ச் சமைந்து நின்றான்.

Previous articleJala Deepam Part 1 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here