Jala Deepam Part 1 Ch17 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 17 புறக் கண்களும் புலக் கண்களும்
Jala Deepam Part 1 Ch17 | Jala Deepam | TamilNovel.in
முட்டு முட்டான முட்புதர்கள் சில எட்டக்கலிந்து கிடக்க, மட்டமட்ட மரங்கள் நாலைந்து இடம் விட்டு விட்டு அரை வளையமாகக் காவல் வீரர்போல் காத்து நிற்க, எட்டாத விண்ணில் அப்பொழுதே எழுந்த கிருஷ்ண பட்ச வான்மதியும் தனது மந்தக் கிரணங்களை லேசாக வீசத் தொடங்க, காலை அரைவாசி நீட்டிய வண்ணம் கற்பாறையொன்றின் மீது இரவு மோகினி போலும் இராக்கால வனதேவதை போலும் அமர்ந்து தனக்கு விபரீதக் கட்டளையிட்ட பானுதேவிக்கு உடனடியாகப் பதில் சொல்லத் திராணியில்லாததால், இதயசந்திரன் இமை கொட்டாமல் அவளைப் பல விநாடிகள் பார்த்துக் கொண்டு மௌனமாகவே இருந்தான். நள்ளிரவுக்குப் பிறகு தன்னைத் தனியாக அழைத்து வந்த அந்தக் கன்னியின் கொள்ளையழகு தன்னைக் கள்வெறி கொள்ளச் செய்யும் அளவுக்கு அந்தப்பயங்கர இரவிலும் விகசித்துக் கிடந்ததைக் கண்ட இதயசந்திரன், என்ன செய்வது என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கவே செய்தான். ஸ்நானம் செய்ததன் விளைவாகத் தன் அறைக்கு வந்தபோது நன்றாக விரிந்து பரந்து நுனியில் மட்டும் முடிச்சிடப்பட்டிருந்த அவள் கருங்குழல் அப்பொழுது நன்றாக எடுத்து முடிக்கப்பட்டிருந்ததால் தலையின் முன்பகுதியிலிருந்த முக்காடு சரிந்து அந்த முடிச்சில் தொக்கியிருந்ததும், அது தொக்கி மறைக்க முயன்றும் முடியாததன் விளைவாகக் குழல் முடிப்பில் சுற்றிக் கிடந்த வண்ணம் மலர்ச்சரம் நீண்டு வெளியே தெரிந்ததும், புரவியை அவள் மலைச்சரிவில் காற்றினும் கடிய வேகத்தில் விட்டு வந்ததால் முடிப்பி லிருந்து விலகிவிட்ட குழல் கூறுகள் இரண்டு பக்கக் கன்னங்களின் மேல் பரந்து கிடந்ததும், மேலாடை லேசாக.
விலகியிருந்ததால் மதியின் மந்த வெளிச்சத்தைப் பார்த்து நகையாடுவதுபோல் அதிக வெண்மையுடன் தெரிந்த சங்குக் கழுத்து தலைகுனிந்திருந்ததால் சிற்பி செதுக்கிய சலவைக் கற்துண்டம்போல் காட்சியளித்ததும், தலை சற்றே குனிந்ததைக் கண்டும் வணங்க இஷ்டப்படாத அவள் மார்பகம் இறுமாப்புடன் நிமிர்ந்திருந்ததும். நிற்கும் நிலையில் அடியோடு மறைந்துவிடும் சிற்றிடை மட்டும் அவள் உட்கார்ந்த பின் அதுவரை தாங்கிய சுமையிலிருந்து ஆசுவாசம் செய்து கொள்ள சற்று மடிந்து விரிந்ததும், புரவிச் சவாரியின் போது விரிந்த அவள் கால்கள் உட்கார்ந்த நிலையில் நன்றாகச் சேர்க்கப்பட்ட பின்பு சேலையின் அப்பகுதி நீண்ட மலைப்பிரிவுக்கிடையில் ஓடும் நீரருவிகளைப் போல சுருண்டு சுருங்கியும் அவள் தொடைகளைத் தழுவிச் சென்றதும் பார்க்கப் பார்க்க உன்மத்தத்தை விளைவித்ததால் சற்றுப் பெருமூச்சும் விட்ட இதயசந்திரன் கண்களை அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேறிடத்துக்குத் திருப்பினான்.
மலையின் மற்றைய பகுதிகள் சிலவிடங்களில் அடர்ந்த புதர்களையும், சிலவிடங்களில் ஏதும் விளையாத கன்னங் கரேலென்ற பாறைகளையும் இன்னும் சில இடங்களில் தலை மட்டத்துக்கு மேல் வளர்ந்த அடர்த்தியான மரங்களையும் உடையனவாயிருந்ததால், பயங்கரமும் அழகும் கலந்து கிடந்ததைப் பார்த்த இதயசந்திரன் மனத்தில் அந்த மலைக்கும் பானுதேவிக்கும் எத்தனை ஒற்றுமையிருக்கிறதென்ற எண்ணமும் மேலோங்கி நின்றது. அவள் உட்கார்ந்திருந்த கற்பாறைக்குச் சற்று எட்ட இருந்த மரங்கள் கூட அவளைக் கண்டு அச்சப்படுவன போலிருந்ததைக் கண்ட இதயசந்திரன், வான்மதியின் கதிர்கள் சில புதர்களின் மீது தவழ்ந்தாலும் அவள் காலடிக்குச் சற்று முன்பாகவே நின்று விட்டதைப் பார்த்ததால் சந்திரனும் இவளை அணுக அஞ்சுகிறான் போலிருக்கிறது என்று நினைத்தான். சந்திரன் கதிர்வீச்சை நோக்கிக் காலை நீட்டி உட்கார்ந்திருந்த. அந்தச் சமயத்தில், அவள் தோரணையில் மன்னர் குல தோரணை இருந்ததையும், அவள் பார்வையில் வேண்டுகோளுக்குப் பதில் கட்டளையே களை விட்டதையும் கண்ட அந்த வாலிப வீரன், அவள் எதைக் கேட்டாலும் யாரும் மறுக்க முடியாதென்பதையும் உணர்ந்து கொண்டான். அவளை முதல் நாள் சந்தித்தபோதே சுயநிலையிழந்த தன் மனம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சுதந்திரத்தை அடியோடு இழந்து விட்டதையும், அவள் ஒவ்வோர் அசைவையும் பார்த்துப் பார்த்து வேதனையையும் விருப்பத்தையும் ஒருங்கே அடைந்து தவிப்பதையும் எண்ணிய அவன் அன்றைய அவள் கட்டளை மிகுந்த அத்துமீறிவிட்டதை உணர்ந்ததால், உடனடியாக அதற்கு இசையவில்லையே என்ற வருத்தத்தால் பெருமூச்சே விட்டான்.
அந்தப் பெருமூச்சையும், உடனடியாக அவள் பதில் சொல்ல முடியாமல் தவித்ததையும், தன்னை அளவுக்கு மீறி ஆராய்ந்து ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியின் விளைவாகப் பெருத்த சங்கடத்துக்குள்ளாகித் திகைப்பதை யும் கண்ட ஷாஹுவின் மருமகள், இருவருக்குமிடையே நிலவிய மௌனத்தைத் தானே கலைத்து, “என்ன யோசிக்கிறீர்கள் வீரரே! ஸாத் ஸித்தியிடம் செல்ல அச்சப்படுகிறீர்களா?” என்று வினவினாள் குரலில் சிறிது ஏளனம் ஒலிக்க.
இதயசந்திரன் அந்த ஏளன ஒலியைக் கவனித்ததும் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அதுவரை அவள் அழகில் சிக்கி அலைந்த மனத்தைச் சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை உற்று நோக்கி, “ஆம் தேவி! அச்சப்படு கிறேன்” என்று திடமான குரலில் கூறினான் ஷாஹுவின் மருமகளை நோக்கி.
அச்சப்படுகிறீர்களா என்று வீரனான அவனைப் பார்த்துக் கேட்டால் எந்த வீரனும் இருக்கும் பலவீனத்தில் தனக்கு அச்சமில்லையென்று சொல்லுவான். அந்தப் பலவீனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பானுதேவிக்கு அவன் பதில் பேரதிர்ச்சியை அளித்ததால், “தங்களை வீரரென்று அழைத்தேன்” என்று சுட்டிக் காட்டினாள் சற்றே கடுகடுத்த குரலில்.
அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து அவளுக்கு வெகு அருகில் வந்து, அவள் அழகுப் பாதங்கள் ஊன்றியிருந்த இடத்திற்கு அருகாமையில் தன் பாதங்களையும் வைத்துத் தலைகுனிந்து அவளை நோக்கி இதய சந்திரன், ”ஆம் அழைத்தீர்கள் தேவி! அதற்கென்ன?” என்று வினவினான். தன் குரலிலும் கடுமையைக் காட்டி.
“அழைத்தது மட்டுமல்ல…’ என்று மெல்ல இழுத்தாள் பானுதேவி.
“வேறென்ன தேவி?”
‘அப்படி நினைக்கவும் செய்தேன்.”
“அந்த நினைப்பை இப்பொழுது மாற்றிக்கொண்டு விட்டீர்களா?”
”நான் மாற்றிக் கொள்ளவில்லை.”
”வேறு யார் மாற்றியது?”
”நீங்கள் தான்.”
“நானா!”
“ஆம்” என்று பதில் சொன்னாள் பானுதேவி.
“எப்பொழுது வீரனல்லவென்று ஒப்புக் கொண்டேன் உங்களிடம்?” என்று சீறினான் இதயசந்திரன்.
இதற்கு உடனடியாகப் பதில் சொல்லாத பானுதேவி தன் தலையைச் சற்று உயர்த்தித் தன் அழகிய விழிகளை அவன் விழிகளுடன் கலந்தாள். அவள் பவள இதழ்கள் மெல்ல அசைந்தன. “அச்சப்படுவதாக நீங்கள் தானே சொன்னீர்கள்?’ என்ற சொற்கள் மெல்ல உதிர்ந்தன பானு தேவியின் உதடுகளிலிருந்து.
அவள் விழிகளுடன் கலந்த விழிகளை அப்புறப்படுத்த முடியவில்லை அவனால். அப்புறப்படுத்த முயன்றபோது அசைந்த அவள் செவ்வுதடுகள் மற்றொரு விலங்கை மாட்டின அவன் விழிகளுக்கு. அந்த மயக்கத்தில் நின்ற நிலையிலும் சிறிது நடுங்கினான் தமிழகத்தின் அந்த வாலிபன். அந்த நடுக்கத்தில் சிறிது அசையவும் செய்தான். அப்படி அசைந்தபோது அவன் பாதங்கள் அவள் மலர்க் கால்களில் பட்டுவிடவே பதறி, கீழே மண்டியிட்டு உட்கார்ந்து அவள் பாதங்களைக் கையால் எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, “மன்னிக்க வேண்டும் தேவி” என்று குழப்பத்துடன் சொற்களை உதிர்த்தான்.
அவன் கையின் ஸ்பரிசத்தால் அவள் மலர்ப் பாதங்கள் மெல்ல அசைந்தன. அவற்றின் ஊடே சென்ற உணர்ச்சி உடல் பூராவும் மின்னல் போல் பரவவே சற்று வியப்பே அடைந்தாள் அவள். அவன் காயப்பட்டுக் கடற்கரையில் விழுந்து கிடந்தபோது அவனை நன்றாகத் தொட்டுக் கட்டுப் போட்ட சமயத்தில் சிறிதும் கலங்காத தனது மனம் இன்று அவன் கை தனது காலில் பட்டவுடன் ஏனிப்படித்திக்கு முக்காடுகிறது என்று நினைத்துப் பிரமித்த அவள், “எதற்கும் வளர்ச்சியிருக்கிறது. காலமிருக்கிறது. சந்தர்ப்பமிருக்கிறது. சூழ்நிலையிருக்கிறது.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் காலடியில் உட்கார்ந்து இதயசந்திரன் மீண்டும் அவள் பாதங்களில் தனது வலது கரத்தை நன்றாகப் பதிய வைத்தான்.
பானுதேவி பெரும் சங்கடத்திற்குள்ளானாள். “இது சரியல்ல. எடுங்கள் கையை’ என்று மெல்ல கூறவும் செய்தாள்.
“அரசிகளின் பாதத்தை அடிமைகள் தொடுவது தவறாகுமா தேவி?” என்று வினவினான் இதயசந்திரன்.
“தாங்கள் என் அடிமையென்று யார் சொன்னது?” என்று வினவினாள் பானுதேவி குழப்பம் தெளியாத குரலில்.
‘அரசகுலத்தார் யாருக்குக் கட்டளையிடுவார்கள்? யாரைத் தூது அனுப்புவார்கள்?” என்று வினவினான் இதயசந்திரன் காலிலிருந்து கையை அகற்றாமலே.
பானுதேவி இஷ்டப்பட்டால் காலைச் சற்றுப் பின்னுக்கிழுத்து அவன் ஸ்பரிசத்திலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவள் காலை விடுவித்துக் கொள்ளாமல் பேச்சிலேயே இறங்கி, “நான் உங்களைக் கட்டளையா இட்டேன்? உதவி செய்ய முடியுமா என்று தானே கேட்டேன்?” என்றாள்.
”சொற்களில் என்ன இருக்கிறது தேவி?” என்ற இதயசந்திரன் குறு நகை கோட்டினான்.
“வேறு எதில் என்ன இருக்கிறது?’
“பார்வையிலிருக்கிறது.”
“உம்.”
“ஒலியிலிருக்கிறது.”
“உம்.”
“தோரணையிலிருக்கிறது.”
“கட்டளையும் சரி…கா”
“ஏன் நிறுத்தி விட்டீர்கள்? சொல்லுங்கள.”
“உம்… கோரிக்கையும் சரி.”
பானுதேவி மெல்ல நகைத்தாள். “வீரரே! நீர் கோழை?” என்றும் கூறினாள் நகைப்புக்கிடையே.
”நானா! கோழையா!” என்று சீற்றத்தைக் காட்டினான் இதயசந்திரன்.
“ஆம் வீரரே! ‘கா’ என்ற மெய்யெழுத்தில் அறுந்து விடும் சொல் ‘’கோ’’ வென்ற பொய்யெழுத்தில் துவங்க முடியுமா?” என்று வினவினாள் பானுதேவி அவனை நோக்கி நன்றாகக் குனிந்து.
இதயசந்திரன் அந்தச் சமயத்தில் உண்மையில் கோழையானான். அவள் குனிந்தபோது அவள் கழுத்திலிருந்து கிளம்பிய ஸ்நானப்பொடியின் நறுமணம் அவனை எந்த உலகத்துக்கோ கொண்டு சென்றது. அவள் உதடுகளைத் திறந்து பேசியதால் அவள் உணவுக்குப் பின்பு போட்டிருந்த சுபாரியின் சுகந்தம் அவனுக்கு உன்மத்தத்தை ஊட்டியது. அவன் உடலில் உணர்ச்சிகள் வேகமாக ஓடியதால் அவன் வலக்கை அவள் பாதத்தில் மிக அழுந்தப் பதிந்தது. “தேவி…” என்ற சொல் நடுக்கத்துடன் உதிர்ந்தது அவன் உதடுகளிலிருந்து.
“என்ன வாலிபரே!” என்றாள் தேவி. இம்முறை அவள் வீரரே என்றழைக்காமல் வாலிபரே என்றழைத்தது விசித்திரமாகவும் அன்பு ஊடுருவிய வேதனையாகவும் அலைபாய்ந்து சென்றது அவன் உடலில்.
“வீரனுக்கும் அச்சமுண்டு கோழைத்தனமும் உண்டு என்று இப்பொழுது புரிகிறதா?” என்று தட்டுத் தடுமாறி மென்று விழுங்கிக் கூறினான் அந்த வாலிபன்.
அவள் மேலும் குனிந்து காலில் பதிந்திருந்த கையை மெள்ள எடுத்தாள் தன் கையினால். “நீங்கள் மட்டும்…” என்ற ஒரு சொல்லைத் திணறிய மூச்சில் வெளியிடவும் செய்தாள்.
“நான் மட்டும் என்ன தேவி?” என்று மெல்லக் கேட்டான் வாலிபன்.
“கோழையல்ல…”
“வேறு யார்…”
“நானும் கோழைதான். எனக்கும் அச்சமாகத் தானிருக்கிறது.”
”அதில் தவறில்லை தேவி.’’
”ஆம், ஆம்.”
”நெறியுள்ளவர்களுக்கு அச்சம் சில விஷயங்களில் அவசியம்.”
“ஆம் ஆம்’ உணர்ச்சிக் குரலில் மெல்ல உதிர்ந்தன அந்த ஆம் ஆம் அவனிடமிருந்து.
”எந்தக் கடமையும் நெறிக்குப் பிறகுதான் தேவி.” இதயசந்திரன் வேதாந்தமாகச் சொன்னான் வார்த்தையை ஆனால் அந்த வேதாந்தத்தில் உண்மையைக் காணோம் உண்மையைப் பொய்யாகவும் காட்டும் சூழ்நிலை அது. அதற்கு மாயை என்பது வேதாந்தப் பெயர்.
நெறியைப்பற்றி அவன் பேசினான் நெறியைப்பற்றி அவளும் ஒப்புக் கொண்டாள். ஆனால் நெறியை அறுக்கும் அந்த நிலையில் மாயையின் அற்புத வலையில், உணர்ச்சியின் விபரீதக் கொந்தளிப்பில், அர்த்தமுள்ள வார்த்தைகளும் அர்த்தமற்று ஒலிக்கும் மானிட அறிவின் அதிர்ச்சியில் எதுவும் நிலைகுலையத்தானே செய்யும்? அந்த நேரத்தில் சொல்லுக்குப் புறம்பான் எண்ணமும் செயலுமே மேலோங்கியதால் அவன் கைவிரல்கள் அவள் பாத விரல்களில் புகுந்தன. அவள் பாதவிரல்கள் உண்மையாக அவன் விரல்களை நெருங்கி நொறுக்கினவா? இருக்காது இருக்காது அந்த மலர் விரல்களுக்கு ஏது அத்தனைக் கடினம்? இருக்கும் இருக்கும் அவன் உள்ளங்கைக்கு அடியிலிருந்த பாதத்தின் மேற்புறம் முழுவதும் கடினப்பட்டு விட , விரல்கள் ஏன் கடினமாகா? அவள் கால் விரல்கள் அவன் கைவிரல்களை நொறுக்கின. கைவிரல்கள் அப்படியே நொறுங்கி விட்டாலும் இன்பமாயிருக்கும் போலிருந்தது அவனுக்கு பெரும் திகைப்பினால் உறவாடிய அவர்கள் கண்கள் பிரிந்து விலகின. . வேறெங் கா பார்த்தன. பார்வைக்கெதிரே குத்தான. கற்கள் தெரிந்தன. புதர்கள் தெரிந்தன. மரங்கள் தெரிந்தன. வாசிஷ்டியின் பிரவாகமும் தெரிந்தது. இத்தனையும் தெரிந்தும் தெரியாமலே இருந்தன அந்த இரு ஜோடி கண்களுக்கும். அவன் கண்கள் விழித்திருந்தாலும் பார்வை உள்ளே திரும்பி விட்டதால் வேறு கடினப் பாறைகள் புஷ்ப வகைகள் இப்படிப் பலப்பல தெரிந்தன. அவள் கண்களுக்கு வீர முமொன்று தன்னை உற்று நோக்குவதும் தெரிந்தது. முரட்டுக் கை விரல்கள் கால் விரல்களை ஊடுருவுவதும் உள்ளே தெரிந்தது. வாசிஷ்டி நதியின் அலைகளைவிடப் பேரலைகள் கொந்தளித்தன அவள் உடலில் புறக் கண்கள் பார்வையிழந்ததால் புலக் கண்கள் வெற்றியடைவதை அவளும் உணர்ந்தாள். அவனும் உணர்ந்தான். புலக்கண்கள். வெற்றி கொண்டன. அச்ச நிலை நீங்கி, கோழை நிலை நீங்கி, துணிவு நிலை ஓங்கவே அவன் கை அவள் இடையில் பாய்ந்தது. இடை இறுகவில்லை. வளைந்தே கொடுத்தது. மனம் வளைய, உணர்ச்சிகள் வளைய, புலக் கண்களின் ஆட்சி பேயாட்சியாயிருந்தது. அந்த ஆட்சி வலையில் மெள்ள மெள்ள நுழைந்தார்கள் அந்த இரு வாலப்பருவத்தினரும். அந்த வேளை தித்திக்கும் பானகந்தான் இருவருக்கும். ஆனால் பானகத் துரும்பு என்று ஒரு பழமொழியும் தமிழகத்தில் உண்டு என்பதை உணர்த்தியது அவர்களை ஆட்கொண்ட அந்தப் பாழும்.