Jala Deepam Part 1 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 29 உறுதி
Jala Deepam Part 1 Ch29 | Jala Deepam | TamilNovel.in
மாலை முற்றிய நேரம் அது. மரக்கலத்தின் தளத்தில் பந்தங்களும் விளக்குகளும் சுடர்விடத் தொடங்கிய வேளை அது. பந்தங்களும் விளக்குகளும் மட்டுமல்ல; இதய சந்திரன் இதயத்தில் ஆசைச் சுடர் கிளம்பிய சமயமும் அதுதான். மஞ்சுவென்று அழைத்ததும் இவள் சிறு குழந்தைபோல் அப்பாவை அழைத்ததால் காற்றிலாடிய களவிளக்குகளைப் போலவே அவன் இதய ஆசைச் சுடரும் படபடத்ததென்றாலும், அவள் அழைத்த முறையிலும் முகத்தில் படரவிட்ட விஷம ரேகையாலும் அவன் ஆசை தீபம் அதிகப்படவே செய்தது. அவள் கனோஜியை அழைத்த முறையிலிருந்தே முன்னமே அவள் குறிப்பிட்ட வளர்ப்புத் தந்தை அவராகத்தானிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்ட இதயசந்திரன் இவ்விருவர் பேச்சையும் கேலியையும் நினைத்து நினைத்துப் பெருவியப்புக் கொண்டான். கனோஜி ஆங்கரே பெண்ணையும் தன்னையும் இணைத்துப் பேசிக் கேலி செய்வதும் அதற்கு அவள் மறுமொழி கூறுவதும் அவனுக்குப் பெரு விசித்திரமாயிருந்தது. ‘காதல் விஷயத்தைத் தந்தை மகளிடம் விவாதிப்பதே விபரீதம். அப்படி விவாதித்தா லும் பெண் பதில் சொல்லாமல் வெட்கப்பட்டு ஓட வேண்டியது அவசியம். அப்படி ஏதும் செய்யாமல் அவருக்குச் சரியாகப் பெண்ணும் பேசி என்னை எள்ளி நகையாடுவது நன்றாயிருக்கிறதா?’ – என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். விடை அன்று கிடைக்கா விட்டாலும் மறு நாள் புரிந்து கொண்டான். சில வேளைகளில் வீரனென்றார்கள். சில வேளைகளில் காதலனென் றார்கள். சில வேளைகளில் தமிழகத்திலிருந்து ஆள் பிடிக்க வந்தவனென்றார்கள். இத்தனையும் சொல்லிச் சிரித்தும் விளையாடினார்கள். அவர்கள் தன்னை அனுபவம் ஏதுமற்ற குழந்தை போல் நடத்துவதைப் புரிந்து கொண்டான் தமிழன். இப்படி அவர்களிருவரும் சிரித்து விளையாடியும் மற்ற மாலுமிகள் மட்டும் தன்னை மிகுந்த மரியாதையுடன் நடத்துவதைக் கண்டு ‘இதுவும் அவர்கள் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தீர்மானித் தான். அதனால் பிரமிப்பும் கொண்டான். ஜலதீபத்தின் அதிபதிகள் நடப்பதைக் கண்டு ‘இதுவும் அவர்கள் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தீர்மானித் தான். அதனால் பிரமிப்பும் கொண்டான். ஜலதீபத்தின் அதிபதிகள் நடப்பதைக் கனோஜி கொண்டு மற்ற மாலுமிகள் முறை தவறாத கெடுபிடி ஆங்கரேயிடமும் மஞ்சுளாவிடமும் இருப்பதை உணர்ந்தான்.
அன்றிரவு அவனுக்குத் தளத்திலேயே உணவு பரிமாறப் பட்டது. கனோஜியும் மஞ்சுவுங்கூட அவனுடன் தளத்திலேயே உணவருந்தினார்கள். கடற்காற்று பலமாக இருந்ததாலும் அது தெற்கு நோக்கி அடித்ததாலும் பாய்மரங்கள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அதிலிருந்து கப்பல் போக வேண்டிய இடம் வடக்கிலிருக்கிறது என்று புரிந்து கொண்ட இதயசந்திரன் உண்வருந்திக் கொண்டே கேட்டான்: ‘நாம் எதற்காக வடக்கு நோக்கிப் போகிறோம்?”
ஒரு சப்பாத்தியை முழுவதும் எடுத்து, பிட்டு மாதிரிச் சமைக்கப்பட்டிருந்த பயத்தம் பருப்பில் நன்றாக அழுத்தி பிடி பருப்பு அதில் அடையும்படியாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்ட கனோஜி ஆங்கரே அத்துடன் புஸ் புஸ்ஸென்று வாய் மூலம் காற்றை விட்டு, ”வடக்கில் தான் இருக்கிறது இக்கப்பல் தலைவியின் கோட்டை’ என்று கூறினார். சப்பாத்தியையும் பருப்பையும் குதப்பிக் கொண்டு பேசியதால் இரண்டு மூன்று பருப்புகள் இதயசந்திரன் மீது தெரிக்கவே அவன் அவற்றைத் தட்டிவிட்டு ”சாப்பிட்டுவிட்டுப் பதில் கூறுங்கள்” என்றான் அலுப்புடன்.
”சாப்பிட்ட பிறகு கேள்விகளை வீசு” என்று அவர் கூறினார்.
இதிலிருந்தே கனோஜி ஆங்கரே அதிக நாகரிகமற்றவர், மூர்க்க சுபாவமுள்ளவர் என்று தீர்மானித்துக் கொண்டான் இதயசந்திரன். அதுமட்டுமல்ல, இரவு முடிவதற்குள், உலகத்தில் எதையும் மதியாதவர். எதையும் எதிர்நோக்கும் வல்லமையுள்ளவர் என்பதையும் புரிந்து கொண்டான். உணவு அருந்தி மீசையிலிருந்த உணவுகளை ஜலம் விட்டு நன்றாகக் கழுவி உணவருந்திய இடத்தைச் சுத்தி செய்யும்படி மாலுமியொருவனுக்குக் கட்டளையிட்டுவிட்டுச் சற்று அப்பால் சென்று மல்லாந்து படுத்துக் கொண்டார் ஸார்கேல்.
பாய் பஞ்சணையின்றி வெறும் மரத்தரையில் மல்லாந்து விட்ட அவரைக் கண்ட இதயசந்திரன், “கீழே ஏதும் போட்டுக் கொள்ள வில்லையா?” என்று வினவினான் அவருடைய அசுர சரீரத்துக்கருகில் சென்று நின்று கொண்டு.
”தந்தைக்கு மரந்தான் பிடிக்கும்” என்று கூறினாள் அவன் பக்கத்தில் வந்து நின்று கொண்ட மஞ்சு.
“விசித்திரமாயிருக்கிறது! கீழே அறையில்லையா. பஞ்சணையில்லையா?” என்று வினவினான் இதய சந்திரன்.
“இரண்டுமிருக்கின்றன. ஆனால் நான் பச்சைக் குழந்தையுமல்ல: பகுத்தறிவைப் பறக்கவிட்ட காதலனுமல்ல” என்று மல்லாந்திருந்த முறையில் ஆகாயத்தைப் பார்த்தபடியே கூறினார். மகாராஷ்டிரக் கடற்படைத் தலைவர். மேலும் சொன்னார்: “தமிழா! இந்தக் கப்பலை நானே நிர்மாணித்தேன் டச்சுக்காரர்களைக் கொண்டு. இதன் மரத்தைவிடப் பஞ்சணை எனக்கு அதிக சுகத்தை அளிக்காது. இதோ என் உடலை வருடிச் செல் லும் உப்புக் கடற்காற்றைவிடப் பன்னீர் தெளித்த அரண் மனை விசிறுக் காற்று எனக்கு இன்பத்தை அளிக்காது.
இந்த உப்புக் காற்று எனது மூச்சு, உப்பு நீர் எனது உடலுக்குத் தெவிட்டாத இன்பம். முடியுமானால் கடல் அலைகளிலேயே படுப்பேன். முடியாததால் அதன்மீது படுத்திருக்கும் மரக்கலத்தின் தளத்தில் படுத்திருக்கிறேன். நீயும் மாலுமியாகப் போவதால் இதன் சுகத்தைச் சீக்கிரம் உணருவாய்!” இதைச் சொன்ன ஆங்கரே புஸ்ஸென்று பாம்பு சீறுவது போல் பெருமூச்சொன்றைத் தனது நாசித் துவாரங்களிலிருந்து வெளியிட்டார்.
அந்தச் சொற்களைச் சொன்னபோது அவருக்கிருந்த உணர்ச்சியையும் உணர்ச்சி கிளப்பிய ஆவேசத்தையும் கவனித்த இதயசந்திரன் இந்திய சரித்திரத்தின் பெரும் பாத்திரமொன்றின் முன்னிலையில் தான் நிற்பதைப் புரிந்து கொண்டான். அதனால் பெருமிதமும் கொண்டான். ஆனால் தான் மாலுமியாகப் போவதாக அவர் சொன்னது அவனுக்குப் பெருவியப்பை அளிக்கவே அவன் கேட்டான். ”நான் மாலுமியாகப் போவதாக யார் சொன்னது?” என்று.
“நான் தான் சொல்லுகிறேன்” என்றார் கனோஜி.
“அதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டாமா?” என்று வினவினான் இதயசந்திரன்.
“ஒப்புக் கொள்ளாமல் வேறு வழியில்லை” என்று சுட்டிக் காட்டிப் புன்முறுவல் கொண்டார் கனோஜி.
அதை ஆமோதிப்பவள் போல் அவன் பக்கத்தில் நின்ற மஞ்சுவும் தலையை ஆட்டினாள்.
”என்ன நீயும் தலையாட்டுகிறாய்?” என்று சீறினான் அவளை நோக்கி இதயசந்திரன்.
“தந்தை சொன்னது உண்மை” என்றாள் மஞ்சு.
“நான் மாலுமியாகாதிருக்க முடியாதா?”
“முடியாது.’’
“என்னிஷ்டமென்று எதுவும் கிடையாதா?”
“உண்டு.”
”அப்படியர்னால்…’ என்று ஏதோ சொல்லப் போன வனைக் கனோஜி இடைமறித்து, “உனக்கு உணவு வேண்டாமா?” என்று வினவினார்.
”வேண்டும். அதற்காக…’ என்று கேட்டான் இதய சந்திரன்.
“தமிழா! கப்பலில் யாருக்கும் வேலை செய்யாமல் உணவு கிடையாது. இங்கு வேலை செய்தால்தான் சாப்பாடு. தலைக்கு இவ்வளவு சாப்பாடு என்று கணக்கும் உண்டு. இங்கு சாதாரண மாலுமியும் இந்தக் கப்பல் தலைவியும் நானும் எல்லோருமே ஒன்று தான். நிலத்தின் விதிகள் வேறு, நீரின் விதிகள் வேறு. தரையில் தண்டச் சோறு உண்டு. இங்கு கிடையாது” என்று திட்டவட்டமாக அறிவித்த கனோஜி மேலும் கூறினார். “தமிழா! நீ சுவர்ண துர்க்கம் வந்ததும் ஏதாவது ஒரு கப்பலில் மாலுமியாக அமர்த்தப்படுவாய். உனக்குக் கப்பல் செலுத்தும் பயிற்சியும் கப்பல் போர்ப் பயிற்சியும் அளிக்கப்படும். உன் திறமை உனக்கு உயர் பதவிகளை அளிக்கும். இதை நான் உனக்கு ஏன் செய்கிறேன் தெரியுமா? பிரும்மேந்திர ஸ்வாமிக்காகச் செய்கிறேன். அவர் உன்னை அழைத்துச் செல்ல எனக்குக் கட்டளையிட்டார். அக்கட்டளையை நிறைவேற்றவே உன்னை இங்கு அழைத்து வந்தேன்” என்று.
இதயசந்திரன் இதயத்தில் கோபம், வியப்பு இரண்டும் கலந்து தாண்டவமாடின. தனது இஷ்ட விரோதமாகக் கனோஜி தன்னை மாலுமியாக்க முயன்றது அவன் கோபத்தைக் கிளறியது. அவர் தன்னை அக்கப்பலுக்கு அழைத்து வந்ததாகக் கூறியது வியப்பை அளித்தது. ‘அகஸ்மாத்தாக மஞ்சு என்னை விடுவித்திருக்க இவர் அதற்கு எப்படிப் பொறுப்பாயிருக்க முடியும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் அவன்.
அவன் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட ஆங்கரே கேட்டார். ”மஞ்சு தப்ப வைத்தாளென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா தமிழா?” என்று.
இதயசந்திரனுக்கு அவர் கேள்வி தூக்கிவாரிப் போட்டது. ”ஆம்’ என்றான் அவன் பதிலுக்கு.
“மஞ்சுவை அனுப்பியது நான்” என்று சர்வசாதாரண மாகச் சொன்னார் தளபதி.
“நீங்களா! உங்கள் பாடே திண்டாட்டமாயிருந்ததே!” என்று சுட்டிக்காட்டினான் இதயசந்திரன்.
“தவறு தமிழா! தவறு. பானுதேவியின் சூழ்ச்சியிலோ அவள் ஆயுதமான உன் ஏற்பாட்டிலோ என்னைச் சிக்க வைக்க முடியுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனம். தாராபாயின் கட்சியைச் சேர்ந்த என்னைத் தீர்த்துக் கட்ட பானுதேவி எந்த ஏற்பாட்டுக்கும் துணிவாளென்பதை என்னால் எதிர்பார்க்க முடியாதென்றால் நான் வேறு எதைச் சாதிக்க முடியும்? எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? ஸித்திகளின் நடவடிக்கைகளை முன்கூட்டி ஊகிக்க முடியுமா? ஷாஹுவின் ஏற்பாடுகளைத்தான் ஊகிக்க முடியுமா? இரண்டும் முடியாவிட்டால் நான் கொங்கணிப் பகுதியில் நடமாட முடியுமா? பானுதேவி யைப் பற்றி நான் நிரம்பக் கேட்டிருக்கிறேன். அவள் துணிவைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. அவள் அறிவு. செயல்முறை இரண்டும் எத்தனை தூரம் எட்டுமென்பதும் எனக்குத் தெரியும். என்ன இருந்தாலும் பெண் புத்தி தமிழா….” என்று மேலும் ஏதோ சொல்லப்போன கனோஜியை. ”அப்பா” என்ற கடுமையான சொல் தடுத்தது.
அந்தச் சொல்லை விடுத்த மஞ்சுவை நோக்கிய கனோஜி. “நீ வேறு மஞ்சு. நீ பெண்ணே அல்ல…” என்று கூறிப் பெரிதாக நகைத்தார்.
”அப்பா!” இம்முறை சொல் மிகக் கடுமையாக வெளிவந்தது.
”தளபதி! பண்பாடு தவறிப் பேசுகிறீர்கள்” என்று இதயசந்திரனும் ஆட்சேபித்தான்.
கனோஜியின் கண்களில் விஷமம் பெரிதும் துளிர்த்தது. ” அவளுக்கு நீ பரிய ஆரம்பித்துவிட்டாயோ?” என்று கூறி விஷமப் புன்முறுவல் கூட்டினார்.
”அதில் தவறில்லை.” இதயசந்திரனின் குரலில் கண்டிப்பு இருந்தது.
”பார்த்தாயா மஞ்சு! காதலன் சீறுகிறான்” என்ற கனோஜி ஆங்கரேயின் கண்களை: உஷ்ணம் கக்கும் மஞ்சுவின் கண்கள் சந்தித்தன.
கனோஜி பட்டென்று அடங்கிவிட்டுச் சர்வசாதாரண மாகப் பேசத் தொடங்கி, “தமிழா! பானுதேவி என்னைப் பிடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாளென்று எனக்குத் தெரியும். அதற்கு உன்னை உபயோகப்படுத்துவாளென்பதும் எனக்குத் தெரியும். பல்லிளிக்கும் ஆண்மகனை எந்தப் பாவையும் வளைக்க முடியுமென்பதும் நான் அறியாததல்ல ஆகவே எல்லோர் முன்னிலையிலும் நான் ஸாத் ஸித்தி மாளிகையின் பின்புறப் பாதை வழியாக அன்று நள்ளிரவில் செல்லப் போவதாகக் கூறினேன். அங்கு நீயும் ஸாத் ஸித்தியின் வீரர்களும் காத்திருப்பீர்க ளென்பது எனக்குத் தெரியும். ஆகவே வேறு மார்க்கத்தில் கரடு முரடான வழியில் என் வெண் புரவியுடன் வந்து படகேறி அக்கரை சென்றேன் ஆனால் நான் செல்லு முன்பு உன் புரவி தனியாக ஓடிக் கொண்டிருந்ததையும், நீ தனியாக மீண்டும் ஸாத் ஸித்தி மாளிகைப் பக்கம் சென்றதையும் கண்டேன். ஆகவே நீ என்னைக் காட்டிக் கொடுக்க மறுத்து விட்டதைப் புரிந்து கொண்டேன். எப்படியும் நீயும் கரடு முரடான வழியில் நதிக்கரைக்கு வருவாயென்று தெரியும் உன்னைக் காத்து ஜல தீபத்துக்கு அழைத்துவர மஞ்சுவுக்குக் கட்டளையிட்டேன். உனக்கு ஜல தீபத்தைப் பற்றித் தெரியாதென்பது அவளுக்குத் தெரியாது. ஆகவே உன்னுடன் பாறை மறைவுக்கு வந்ததும் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். பிறகு நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்” என்று விளக்கினார்.
“ஸாத் ஸித்தி கோட்டைக்கு எப்படி வந்தாய் மஞ்சு?” என்று வினவினான் இதயசந்திரன்.
”முக்காடிட்டு உடல் பூராவும் மறைத்து அராபியப் பெண்கள் உடையில் வந்தாள், அதில் ஆபத்தும் இருந்தது. இந்தப் பகுதியில் மஞ்சுவின் பெயர் பிரசித்தம். அவளைப் பிடிக்க ஸாத் நீண்ட நாட்களாக முயன்று வருகிறான். ஆனால் மஞ்சுவின் தந்திரம் ஆயிரம் ஸித்திகளையும் ஏமாற்றும். இந்தக் கடல் வழிகளில் அவள் அறியாத வழி கிடையாது. அலை நுட்பங்களில் அவள் அறியாத நுட்பம் கிடையாது. அவளைப் போல் பீரங்கிகளை இயக்கவோ, வாளை வீசவோ, கைத்துப்பாக்கியால் சுடவோ திறமை யுள்ளவர் மிகச் சிலர். அரபிக் கடலின் மிகச் சிறந்த மாலுமிகளில் அவள் ஒருத்தி. அவள் உன்னைத் தப்புவிக்க ஒப்புக் கொண்டது உன் பாக்கியம்” என்றார் கனோஜி.
இதயசந்திரன் அந்தப் பெண்ணின் திறமையைக் கனோஜி சொல்லக் கேட்டுப் பிரமித்து நின்றான். இப்படியொரு பெண் இருக்க முடியும் என்று சொப்பனத்தில் கூட அவன் நினைக்கவில்லை எத்தனைத் துணிவிருந்தால் அவள் அஞ்சன்வேல் கோட்டைக்குள் வந்திருப்பாள். எத்தனை திறமையிருந்தால் தன்னைக் காப்பாற்றியிருப்பாள் என்று எண்ணிப் பிரமையின் எல்லையை அடைந்தான். அரபு உடையில் மறைந்து அவள் அஞ்சன்வேல் கோட்டையில் நுழைந்து. நீர் கொடுக்கும் முகத்தான் தன்னை அணுகி முகமலர் காட்டியது. ஸாத் ஸித்தி உத்தரவு பெற்றுத் தன்னைக் கைத்துப்பாக்கியாலடித்து மலைப்பாறையில் தள்ளியது. பிறகு அங்கிருந்து காப்பாற்றியது எல்லாமே அவனுக்கு எல்லையில்லாப் பிரமையளித்தாலும் அவனுக்கு இரண்டு சந்தேகங்கள் இருந்தன. அவற்றை வாய்விட்டுக் கேட்க முற்பட்டு, “தளபதி! ஸாத் ஸித்தியின் உத்தரவை இவள் எப்படிப் பெற முடிந்தது? அந்த முகவெட்டுக் காவலன் யார்?” என்று வினவினான்.
இரண்டுக்கும் பதில் கூறினார் கனோஜி. ”மஞ்சுவுக்கு யார் கையெழுத்தும் போடத் தெரியும். நீ கூறும் காவலர் தலைவன் அஞ்சன் வேல் கோட்டையில் என் உளவாளி. பெரும் வீரன். தாராபாயின் வலது கரம் போன்றவன்.”
அத்துடன் வேறொரு விளக்கமும் தந்தார். ”அவன் உதவியில்லாவிட்டால் நீ அஞ்சன்வேல் கோட்டையிலிருந்து தப்பியிருக்க முடியாது” என்று கூறினார் கனோஜி. அதைக் கேட்டதும் அதிக அதிர்ச்சியடைந்த இதயசந்திரன், ‘அட விதியே எப்படியெல்லாம் என்னை ஆட்டிப்படைக்கிறாய்?’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். எவனைக் கொல்லவும், எவனிடமிருந்து அரசு வாரிசை மீட்க அல்லது அழிக்கத் தஞ்சையில் உத்தரவு பெற்று வந்தானோ, அவனுக்குத் தான் கடமைப்படும் நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்ததால் சொல்ல வொண்ணாத துக்கம் அவன் இதயத்தை அடைத்துக் கொண்டது. அந்தத் துக்கம் அடுத்த நாள் பறந்தது. தன் வாழ்க்கை முறை. தனது பிற்கால நடவடிக்கை எப்படி யிருக்க வேண்டுமென்பதைத் தீர்மானித்து விட்டான் தமிழகத்தின் வீரன். அந்த உறுதி அவனுக்குப் புது பலத்தை புது எண்ணங்களைத் தந்தது.