Jala Deepam Part 1 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 30 கீதமா, தீபமா?
Jala Deepam Part 1 Ch30 | Jala Deepam | TamilNovel.in
மகாராஷ்டிரக் கடற்படைத் தலைவர் மரக்கலத்தில் மல்லாந்து படுத்த நிலையில் தந்த விளக்கத்தால் மதிமயக்கம் கொண்டு விதியை நொந்து கொண்ட இதயசந்திரன், மறுநாள் தனது பிற்கால வாழ்க்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டானென்றால் அதற்கு நடந்து விட்ட நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, நிகழ்காலச் சூழ்நிலையும் காரணமாயிருந்தது. எந்த முகவெட்டு வீரனைத் தேடித் தான் வந்தானோ அவன் கனோஜியின் ஒற்றன் என்பதாலும் அவன் இருந்த இடம் ஸாத் ஸித்தியின் கோட்டையாதலாலும், கனோஜியின் உதவியின்றி அவனை அணுகுவதும் முடியாத காரியமென்று தமிழக வீரனுக்குச் சந்தேகமின்றிப் புரிந்தது. கனோஜியின் நேரடியான உதவியில்லாவிட்டாலும் அவருடைய கப்பல்களின் உதவியின்றி அந்தப் பகுதியில் சஞ்சரிப்பதோ, அவனைச் சந்திப்பதோ நடவாத வேலையென்பதை, எதையும் நிதானித்து முடிவுக்கு வரக்கூடிய அந்த வீரன் புரிந்து கொண்டான். இந்த எண்ணங்களோடு, ஜலதீபத்தைப் பற்றி அன்றிரவு அவன் புரிந்துகொண்ட பல விஷயங்களும் அந்த விஷயங்களின் காரணமாக ஏற்பட்ட புது எண்ணங்களும் மறுநாள் அவன் எடுத்துக் கொண்ட முடிவுக்குக் காரணமாயிருந்ததன்றி மறு நாள் சூழ்நிலையும் அதற்குப் பெரிதும் உதவியது.
அன்றிரவு மரக்கலத்தில் படுத்தவண்ணம் கனோஜி ஆங்கரே கூறிய செய்திகளைக் கேட்டு அடித்தளத்துக்குச் சென்றுவிட்ட இதயசந்திரன் பஞ்சணையில் படுத்த பின்பும் உறக்கம் வராமல் ஏதேதோ யோசித்தவண்ண மிருந்தான். காற்றின் விளைவாக எழுந்த அலைகளால் மரக்கலம் சிறிது ஆட்டங்கொடுத்தால் விளைந்த தாலாட்டுக்கூட அவனுக்குத் தூக்கத்தை அளிக்க மறுத்தது.பஞ்சணையில் கிடந்த அந்தச் சமயத்தில் அவன் பானு தேவியைப் பற்றியும் பரசுராமன் மலை மரக்கூட்டத்தைப் பற்றியும் அங்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றியும் நினைத்தான். பிறகு மஞ்சு தன்னுடன் நீரில் மூழ்கி நீந்தியதைப் பற்றியும், கரையிலே நனைந்த உடையுடன் அவள் தன் பக்கத்தில் மல்லாந்து கிடந்ததையும் நினைத்தான். நாலைந்து நாட்களுக்குள் இரு அழகிகள் தன் இதயத்தில் புகுந்து தன்னை வேதனைப்படுத்துவதையும் நினைத்தான். நினைத்து இருவரில் யார் சிறந்த அழகி, யாரிடம் தன் மனம் பிடிபட்டிருக்கிறது என்று நிர்ணயிக்கப் பார்த்தான். நிர்ணயம் ஏற்படாததாலும், மனம் பல எண்ணங்களில், சிக்கி அலைக்கழிக்கப்பட்டதாலும் படுக்கையிலிருந்து எழுந்திருந்து தலையணைக்கருகிலிருந்த ஒரு படுக்கைச் சீலையை எடுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொண்டு மீண்டும் தளத்துக்கு வந்து பலகையொன்றில் சாய்ந்துகொண்டு நின்றான்.
சுற்றிலும் அரபிக் கருங்கடல் இருளில் அதிகமாகக் கருத்திருந்ததால் வான நட்சத்திரங்கள் கூட அதில் பிரதி பலிக்க முடியவில்லை. மேலே இருந்த கரிய வானம் கீழிருந்த கருங்கடலுக்கு நிறத்தில் தான் சளைக்கவில்லை யென்பதை நிரூபித்ததால், விண்மீன்கள் சிறிதும் பெரிது மாகப் பலதரப்பட்ட வைரங்களைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தன. பந்தங்கள் அணைக்கப்பட்டு விட்டதாலும் கப்பலின் முகப்பில் கட்டப்பட்டிருந்த கண்ணாடி விளக்கு மட்டும் புகையை விட்டுக் கொண்டு மங்கலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்ததாலும் ஓரளவு மங்கலான ஆனால் பயங்கரமான சூழ்நிலை கப்பல் தளத்திலும் இருந்தது. கடல் வெட்டிவிட்ட உலகத்திலிருந்து பிரிந்து விட்ட நகரும் தீவைபோலத் துடுப்புக்களின் துழாவலால் முன்னேறிக் கொண்டிருந்த ஜலதீபம் எதையும் விழுங்கும் துணிவுள்ள சுறாவைப்போல நகர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையின் பயங்கரத்தை வரவேற்றான் இதய சந்திரன். வீரன் இதயத்துக்குப் பயங்கரமளிக்கும்
இன்பத்தை வேறு எதுவும் அளிக்க முடியாது அல்லவா? ஆகலே அக்கப்பலில் சாய்ந்து நின்ற இதயசந்திரன் மெள்ளத் தளத்தைச் சுற்றி நடக்கவும் முற்பட்டான்.
கப்பல் பயணம் அவனுக்கு அடியோடு புதிதுமல்ல. சென்னையை அடிக்கடி அணுகும் பிரிட்டிஷ் கப்பல்களில் அவன் ஏறியிருக்கிறான், ஒவ்வொரு சமயம் புதுவையின் பிரெஞ்சுக் கப்பல்களிலும் சிறிது தூரம் பயணம் செய்திருக்கிறான். டச்சுக் கப்பல், போர்த்துகீசியக் கப்பல், பிரிட்டிஷ் கப்பல், பிரெஞ்சுக் கப்பல் இவற்றில் பெரிதும் சிறிதுமாகப் பல கப்பல்களைப் பார்த்திருக்கிறானென்றாலும் இப்படியொரு போர்க்கப்பலில் அவன் இராக் காலப் பயணம் செய்ததில்லையாகையால் அது புது அனுபவமாகவே இருந்தது அவனுக்கு. தவிர அக்கப்பலும் வெளிநாட்டார் கப்பலைப் போல் பார்வைக்கிருந்தாலும் வேறுபாடுகளும் பல இருப்பதைக் கவனித்தான். ஜல தீபம் வெளிநாட்டு கப்பல்களிலும் பாரதக் கப்பல்களிலும் உள்ள குணங்களின் ஓர் இணைப்பு என்று ஊகித்தான். அவன் ஊகம் சரியென்பதை மஞ்சுவே உணர்த்தினாள்.
தளத்தில் அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் யாரோ நடக்கும் ஒலி கேட்கவே சட்டென்று திரும்பிய இதயசந்திரன் பின்னால் நாலடி தள்ளி வந்து கொண்டிருந்த மஞ்சுவைப் பார்த்து, “எதற்காக என்னை தொடருகிறாய்?” என்று வினவினான் சீற்றத்துடன்.
மஞ்சு சிரித்துக்கொண்டு சொன்னாள், “என் காதலர் தனித்துத் திரிய நான் விடமுடியுமா?” என்று.
இதயசந்திரன் அசந்துபோய் நின்றான். ‘இவளுக்கு வெட்கம் சிறிதுமில்லையா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். பிறகு வெளிப்படையாகக் கோபத்துடன் அவளை நோக்கி, ”என்னை கேலி செய்கிறாயா? அல்லது என்னுடன் விளையாட நினைக்கிறாயா?” என்று வினவினான்.
“காதலரைக் கேலி செய்யாமல் யாரைக் கேலி செய்ய முடியும்? அவருடன் விளையாடாமல் யாருடன் விளையாட முடியும்?” என்று வினவிய மஞ்சு அவனைத் தைரியத் துடன் ஏறெடுத்து நோக்கி நகைத்தாள்.
”பெண்ணே…” என்று சங்கடத்துடன் துவங்கினான் இதயசந்திரன்.
“சொல்லுங்கள்.” குழைந்தது அவள் குரல். குழைவில் கேலியுமிருந்தது.
“நான் ஆண்மகன்…” என்று இழுத்தான்.
”ஓ” இதைச் சொன்ன அவள் ஒலியிலிருந்தது ஏளனமா கோபமா என்பது புரியவில்லை அவனுக்கு.
‘நீயோ ஒரு பெண்….’’
‘’அப்படியா!”
”நானிருக்குமிடத்திற்கு நீ தனித்து வருவது. அதுவும் இரவில் வருவது சரியாகாது.”
”அது இப்பொழுதுதான் புரிந்தது போலிருக்கிறது உங்களுக்கு?”
“இல்லை. ஆதியிலிருந்தே புரிந்திருந்தது.”
இதைக் கேட்ட அவள் சிறிதும் அச்சமின்றி அவனை நோக்கினாள். கப்பல் முகப்பு விளக்கு அவள் முகத்தில் நன்றாக விழுந்திருந்ததால் அவள் கடல் மோகினிபோல் விளங்கினாள். இந்த இரவில் அவள் அழகிய இதழ்கள் அசைந்தன. அசைந்து கேட்டன. “உங்களைப் பாறைக் கருகில் சந்தித்தேனல்லவா?” என்று.
“ஆம்” என்றான் இதயசந்திரன்.
“நீங்கள் இருக்குமிடத்துக்குத் தனித்துத்தானே வந்தேன்?” என்று கேட்டாள் அவள்.
“ஆம்.’’
“பிறகு உங்களைப் படகில் அழைத்துக் கொண்டு தனித்துத்தானே வந்தேன்?”
”ஆம்.”
”பிறகு தரையில் உங்களுடன் தனித்துத்தானே படுத்துக் கிடந்தேன்?”
“ஆம்.”
“அப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் ஆட்சேபிக்க. வில்லை?” என்று மஞ்சு வினவினாள்.
இதயசந்திரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் விழித்தான். கடைசியில், “மஞ்சு! அந்த நிலை வேறு. நான் ஸாத் ஸித்தியிடமிருந்து தப்ப நினைத்த நிலை அது. இந்த நிலை வேறு’ என்று விளக்கினான்.
”தனிமையில் விபரீதங்களை விளைவிப்பது அவ்வப் பொழுதுள்ள நிலை அல்ல வீரரே!” என்று சுட்டிக் காட்டினாள் மஞ்சு.
”வேறு எது மஞ்சு?” என்று வினவினான் இதய சந்திரன்.
”உறுதியற்ற மனம்; அடிப்படைக் குணம்” என்று கூறிய மஞ்சு, “சரி சரி! – அது கிடக்கட்டும்! எதற்காக நள்ளிரவில் இங்கு வந்து நிற்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“கப்பலைப் பார்க்க வந்தேன்!” என்றான் இதய சந்திரன் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.
“பார்த்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?”
“இது வெள்ளைக்காரக் கப்பல் மாதிரி இருக்கிறது. ஆனால் வேறுபாடும் இருக்கிறது’’
இதைக் கேட்ட மஞ்சுவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “நல்லது நல்லது” என்று கூறவும் செய்தாள். அத்துடன் மேலும் சொன்னாள். “இந்தக் கப்பல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டதென்பதை தந்தை கூறக் கேட்டீர்களல்லவா? டச்சுக்காரர் அவர்கள் கப்பல்களைப் போல் இதைக் கட்டவில்லை. டச்சு, பிரிட்டிஷ். போர்ச்சுக்கல் கப்பல்களின் கதம்பமாக இதை நிர்மாணித் தார் தந்தை. இது குராப்புமல்ல, காலிவாத்துமல்ல, ஷிபார் வகையைச் சேர்ந்தது” என்று விளக்கினாள்.
இதயசந்திரன் விழித்தான். “குராப் என்றால் பெரிய கப்பலா?”
மஞ்சுவின் முகம் பெரிதும் மலர்ந்தது. கப்பல்களைப் பற்றி விவரிக்கும்போது பெரு ஒளி விரிந்தது. “அடடே, உங்களுக்குக் கப்பல்களைப்பற்றி அதிகம் தெரியாதென்பதை மறந்துவிட்டேன். கேளுங்கள் வீரரே! இன்று மகாராஷ்டிரத்தின் கடற்படை ஈடு இணையற்றது அவற்றில் நான்கு வகைப் போர்க் கப்பல்கள் முக்கிய மானவை. குராப், காலிவாத், ஷிபார். பால் என்ற கப்பல்களைக் கொண்டுதான் தந்தை அரபிக் கடலை ஆண்டு வருகிறார். இவற்றில் குராப் பெரிய போர்க் கப்பல். ஆங்கிலேயர் கணக்குப்படி இருநூறு டன்னிலிருந்து நானூறு டன்வரை எடையுள்ளது. மூன்று பாய் மரங்கள் உடையது. நூற்று ஐம்பதிலிருந்து இருநூறு துடுப்புக்களை உடையது. குராப் மிகுந்த அகலமுடையது. பார்ப்பதற்குப் பட்டையாயிருக்கும், இருபுற மூக்குகள் வாளைப் போல் கூர்மையாயிருக்கும். தளத்தில் பக்கத் துளைகள் மூலம் குண்டுகளை வீசக்கூடிய இருபெரும் பீரங்கிகளையும், ஒன்பதிலிருந்து பன்னிரண்டு நடுத்தரப் பீரங்கிகளையும் உடையது. இவை தவிர கீழ்த்தளத்தின் இருபுறத்திலும் துளைகள் மூலம் எட்டு எட்டாகப் பதினாறு பீரங்கிகள் வரிசையாயிருக்கும். குராப்பில் சாதாரண துடுப்புத் துழாவுவோரைத் தவிர இருநூறு மாலுமிகள் இருப்பார்கள்” என்றாள்.
அவள் கப்பல்களைப் பற்றியே மேலும் பேசினாள். “குராப்புகள் மிகப் பெரிய போர்க்கப்பல்கள். காலிவாத் சிறிய போர்கப்பல். சுமார் எழுபது டன் எடையுள்ளது. மூங்கில்களாலான இரண்டே பாய்மரங்களை உடையது. பெரிய பாய்மரம் முக்கோண வடிவத்திலிருக்கும். ஆறு அல்லது எட்டு நடுத்தரப் பீரங்கிகளையும், இரண்டு சிறிய பீரங்கிகளையும் உடையது. ஆனால் எல்லாக் கப்பல்களையும் விட காலிவாத் மிக வேகமுள்ளது. போருக்கு மிக முக்கியமானது. ஷிபாரும், பாலும், குராப்பைப்போல் அத்தனை பெரியவையுமல்ல. காலிவாத்தைப் போல் சிறியவையுமல்ல. நடுத்தரம். போரில் காலிவாத்தின் வேகத்தில் பாதியையும், குராப்பின் சக்தியில் பாதியையும் பெற்றது. இந்த ஜலதீபம் ஷிபார் வகையைச் சேர்ந்தது. சுமார் நூற்று ஐம்பதுடன் உள்ளது. நூறு துடுப்புக் களையும் இரு பெரும் பீரங்கிகளையும், ஆறு சிறு பீரங்கிகளையும் உடையது. தவிர டச்சுக் கப்பல்களைப் போல் சுமாரான அகலமும் உடையது. போருக்கு மிக தகுதியானது. துங்கபத்ரையில் கார்த்திகையில் விடப்படும் தீபங்களைப் போல் தவழ்ந்தோடும் தன்மை பெற்றது. அதனால் தந்தை இதை ஜலதீபம் என்று அழைத்தார். எனக்குத் தந்தார்.”
இந்தக் கடைசிச் சொற்களை உச்சரித்தபோது அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
“உனக்கு எதற்காகக் கப்பல் மஞ்சு!” என்றான் இதய சந்திரன்.
“மாலுமிக்குக் கப்பலைத் தவிர வேறு எதில் ஆசையிருக்க முடியும்?” என்று அவள் பதில் கூறினாள்.
அப்பொழுதும் அவள் சராயும் சட்டையும் போட்டிருந்தாள். மேலே ஒரு பட்டுச் சவுக்கம் அவள் மார்பை மூட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. தலைக்குழல் கட்டப்படாததால் மயிர் காற்றில் அலைந்து கொண் டிருந்தது.
அவன் கண்கள் அவள் உடலை ஆசையுடன் ஊடுருவ முயன்றன. அதைக் கண்டதாலோ என்னவோ அவள் சிரித்துவிட்டு, ”என்னைப் பார்ப்பதிருக்கட்டும். என் கப்பலைப் பாருங்கள்” என்று கூறி முன் நடந்தாள். இதயசந்திரன் அவளைப் பின்பற்றிச் சென்றான். தளத்தின் அரைவாசியிருட்டு, சுற்றிலுமிருந்த அலை ஓசை. காற்றின் விர்ரென்ற நாதம், அவளும் தானும் தனித்திருந்த நிலை எல்லாம் அவன் மனத்தில் விபரீத உணர்ச்சிகளைக் கிளறிக் கொண்டிருந்தன. இருப்பினும் மெள்ள மனத்தை அடக்கிக் கொண்டு அவளுடன் சென்றான். அவள் தளத்திலிருந்த இருபெரும் பீரங்கிகளைக் காட்டினாள். பிறகு கீழே மரப்படிகளில் இறங்கிச் சென்று கப்பல் அடித்தளத்தில் பக்கத் துளைகள் மூலம் வெளி உலகை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஆறு சிறு பீரங்கி களைக் காட்டினாள். பிறகு நூறு துடுப்புக்கள் துழாவப் படுவதையும் காட்டினாள். அவள் அடித்தளத்தை அணுகியதும் அங்கிருந்த நூறு மாலுமிகளும் துடுப்புக் களைத் துழாவிக்கொண்டே, ”மஞ்சு மஞ்சு! உட்கார்” என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். சிலரை அவள் தலையில் தட்டினாள். சிலரை முதுகில் தட்டினாள்.
அவர்களிலொருவன். “மஞ்சு! பாட்டுப் பாடு!” என்றான். ”இப்பொழுது முடியாது” என்றாள் மஞ்சு.
“முடியும் முடியும்” என்று குரல்கள் எழுந்தன மாலுமி களிடமிருந்து.
“சரி, சரி கூச்சலை அடக்குங்கள்” என்ற மஞ்சு அங்கு இருந்த படியில் உட்கார்ந்துகொண்டாள்.
அடுத்த விநாடி அவள் குரல் வீணையின் நாதம் போல் எழுந்தது. மெல்ல மெல்ல அறையைச் சூழ்ந்தது சாம்பிராணிப் புகைபோல். அதில் சுகந்தமுமிருந்தது. சுகமும் இருந்தது. எங்கும் சூழ்ந்த அந்த இன்பகீதம் துடுப்புக்கள் வெளி நீட்டிய துளைகள் மூலம் உள் நுழைந்த கடற்காற்றுடன் இழைந்தது. இரைந்தது, தணிந்தது. குறைந்தது. விர்ரென்று சுற்றியது. பாடப் பாட அவள் குரல் அதிக இனிமை பெற்றது. அவள் முகம் அதிக சோபை பெற்றது. அவள் உடல் கீதத்தில் அசைந்தது. மாலுமிகளும் அசைந்தனர். இதயசந்திரனும் அசைந்தான். அவன் உடல் அசைந்தது. இதயமும் அசைந்தது. அந்த இன்பகீதத்தில் கீதம் முடிந்தது, அவள் சட்டென்று எழுந்திருந்து படிகளில் வெகுவேகமாகச் சென்று விட்டாள். இதயசந்திரனால் வேகமாகப் போக முடிய வில்லை. இன்பகீதம் அவனைப் பெரிதும் ஆட்டி விட்டிருந்தது. மெல்லவே படிகளில் ஏறித் தளத்துக்கு வந்த அவன் அவளைத் தேடினான். அவள் எங்கும் காணவில்லை. இருள் சூழ்ந்த தளத்தில் நடந்து சென்றான். கால் ஓரிடத்தில் இடறவே குனிந்து நோக்கினான். அவள் மரப்பலகையில் மல்லாந்து படுத்து வானத்தை நோக்கிக் கொண்டிருந்தாள். இதயசந்திரன் ஒரு விநாடி அவளை நோக்கினான். பிறகு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
படுத்த நிலையில் சற்று முன்பு கீழ்த்தளத்தில் இசைத்த இன்பகீதத்தைப் போலவே அவள் இருந்தாள். அவளைத் தாங்கிய ஜல தீபத்தைப் போலும் இருந்தாள் எந்தத் துணிவினாலோ அல்லது பெரும் மயக்கத்தாலோ முதன் முறையாக இதயசந்திரன் நிதானத்தை இழந்தான். அவன் வலது கை அவள் உடலுக்குக் குறுக்கே விழுந்தது. அவள் இன்பகீதமா ஜலதீபமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான், அவன் உடலும் தாழ்ந்தது.