Jala Deepam Part 1 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 32 பெண் எனும் கோட்டை
Jala Deepam Part 1 Ch32 | Jala Deepam | TamilNovel.in
அவன் மனம் தீட்டிய மடலில் கேள்விகள் இருந்தன. சந்தேகங்கள் இருந்தன. சாந்தி அம்சங்களும் சிற்சில இருந்தன. அத்தனையிலும் ஒருவித மகிழ்ச்சி மட்டும் பூச்சரத்தின் நார்போல ஊடுருவி நின்றது. உணர்ச்சி ஆணி எழுதியது: ‘மஞ்சு! நான் உன்னிடம் அடிமையாகி விட்டது புரிகிறதல்லவா உனக்கு? மகாராஷ்டிர மன்னன் மருமகளிடம் ஏற்பட்ட பிணைப்பை விட நூறு மடங்கு அதிகப் பிணைப்பு உன்னிடம் ஏற்பட்டு விட்டது என்று நான் சொல்வதை நீ நம்புகிறாயா இல்லையா? உனக்கும் என்மேல் அத்தகைய பிணைப்பு இருக்கிறதா இல்லையா? இல்லாவிட்டால் அத்தனை நேரம் மல்லாந்து கிடந்த உன் உடல் மேல் சாய அனுமதித்தாயே அது ஏன்? சுவர்ண துர்க்கத்தின் காவல் தேவதை ஆமையென்றாயே, ஆமை எங்காவது தேவதையாக முடியுமா? அப்படித் தேவதை யென்றே வைத்துக் கொண்டாலும், அது என்ன பாடம் கற்றுக் கொடுக்க முடியும்? நீ இருவரைக் கொன்றுவிட்டா யாமே, அப்படியானால் நீ கொலைகாரியா? ஒருவரை விட்டுவிட்டாயாமே? அவன் என்ன, உன் காதலனா? யாரவன்? எங்கேயிருக்கிறான்? சொல். அவனை நான் கொன்றுவிடுகிறேன். அனாவசியமாகக் கேட்டுவிட்டேன் மஞ்சு. மன்னித்துவிடு. நம் இருவரையும் பிறவிப் பெருங்கடல் பிணைத்துவிட்டது. உன்னைத் தொட்டுக் கிடந்த தால் உன் உடல் வேதனைப்படுகிறது மஞ்சு. அந்த வேதனையிலும் என் மகிழ்ச்சியிருக்கிறது. நீ என்னைக் காப்பாற்றியதற்குக் காரணம் உன் வளர்ப்புத் தந்தையின் கட்டளையாயிருக்கலாம். ஆனால் இன்றிரவின் நிகழ்ச்சி களுக்கு ஒருகாலும் அது காரணமாயிருக்காது. மஞ்சு! நீ என்ன நன்றாகப் பாடுகிறாய். பாட்டு மகாராஷ்டிரத்தி லிருந்தாலும் தமிழனான என்னைக்கூட ஊஞ்சலாட்டிவிட்டதே. மஞ்சு மஞ்சு…? உன்னைச் சாதாரண மாலுமிகள் என்ன அன்பாகப் பெயர் சொல்லி அழைக் கிறார்கள். உனக்காக உயிரை விட்டு விடுவார்கள் போலிருக்கிறது. என்ன அற்புத மங்கை நீ! எப்படி இத்தனைப் பேரையும் மயக்கி வைத்திருக்கிறாய்? சொல் மஞ்சு. அத்தனைக்கும் விளக்கம் சொல். எனக்கிருப்பது ஓர் உயிர் தான். ஆயிரம் உயிர்களிருந்தாலும் உன் காலடியில் கொட்டுவேன். இது உனக்குத் தெரியுமா தெரியாதா? உன் அடிமை இதயசந்திரன்.’ இங்கும் ஆணி நின்றிருக்காது. பின்னாலிருந்த கனோஜி ஆங்கரே பயங்கரமாக நகைத்திராவிட்டால்.
இதயசந்திரன் அவரை நோக்கித் திரும்பி, ”என்ன நகைக்கிறீர்கள்?” என்று சீறினான்.
மீண்டும் அந்தப் பயங்கரச் சிரிப்பை உதிரவிட்டார் ஆங்கரே. சிரித்தபோது உரமான பற்களும் நட்சத்திரங் களைப்போல மின்னியதைப் பார்த்தான் இதயசந்திரன். அவர் மீசையும் சிரிப்பில் துள்ளிக் குதித்தது. கண்கள் விஷமச் சிரிப்பை உதிர்த்தன.
இந்த இரண்டாம் முறைச் சிரிப்பு இதயசந்திரன் கோபத்தை அதிகமாகக் கிளறவே அவன் சொன்னான். “நான் கேட்டேன் ஒரு கேள்வி?” என்று.
“ஆம். கேட்டாய் ஓர் அசட்டுக் கேள்வி வாய் திறந்து”
என்ற ஆங்கரே. அவனை ஏதோ வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.
“வாயால் கேட்டேனா?” சீறினான் தமிழன்.
“ஆம் தமிழா!” சிறிதும் லட்சியமின்றி வந்தது ஆங்கரேயின் பதில்.
“வேறு எப்படிக் கேட்பார்கள்?”
“நீ இப்பொழுது கேட்பதுபோல் கேட்கலாம்.”
“எப்படிக் கேட்டேன்?”
‘மனத்தால் கேட்கலாம்.”
“யாரைக் கேட்டேன்? என்ன கேட்டேன் மனத்தால்?”
தூக்கி வாரிப் போடுவதுபோல் பதில் கூறினார் மகாராஷ்டிரக் கடற்படைத் தலைவர்: “மஞ்சுவைத்தான். வேறு யாரை கேட்பாய்? என்ன கேட்டு விடுவாய் பைத்தியக்காரக் கேள்விகளைத் தவிர? காதல் என்ற பெயரால் ஏதாவது உளறல் கேள்விகளாயிருக்கும்” என்று. இதைச் சொன்ன அவர் அவனைக் கூர்ந்து நோக்கினார். “தமிழா! உனக்கு இன்னும் அனுபவம் போதாது” என்று கூறினார் புன்னகையுடன்.
அவர் போக்குப் பெரும் வியப்பாயிருந்தது தமிழனுக்கு. தன் மனத்தை அக்கு அக்காக அவர் அலசி விட்டது மித மிஞ்சிய ஆச்சரியத்தை அளித்தது அவனுக்கு. அதெல்லாம் அர்த்தமற்ற பைத்தியக்காரக் கேள்விகளென்று கூறியதன் காரணம் புரியவில்லை அந்த வீரனுக்கு. மஞ்சுவிடம் தான் நெருங்கியிருந்ததை வேறு எந்தத் தகப்பன் பார்த்திருந்தாலும் தன்னை வெட்டிக் கடலில் போட்டிருப்பான் என்பதை அவன் உணர்ந் திருந்தான். அப்படியிருக்க மஞ்சுவைப் பற்றியும் காதலைப் பற்றியும் அவர் சர்வ சாதாரணமாகப் பேசியது அவனுக்கு எரிச்சலையும் வியப்பையும் கலந்தே. அளித்தது. இப்படி உணர்ச்சிகள் குழம்பிய நிலையில் கேட்டான், “காதல் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வில்லையா?” என்று.
”காமத்திற்கு அதுவும் ஒரு பெயர்” என்றார் ஆங்கரே.
“உள்ளங்கள் மட்டும் ஒன்றுபட முடியாதா?” என்று கூறினான் இதயசந்திரன்.
“முடியுமா?” என்று பதிலுக்கு வினவினார் ஆங்கரே.
“முடியும்.”
“அப்படியானால் ஒன்று சொல்கிறேன், ‘செய்கிறாயா?”
“செய்கிறேன்.’’
”கண்டிப்பாய்?”
”கண்டிப்பாய்.”
”அப்படியானால் ஒரு கிழவியைக் காட்டுகிறேன். அவளைக் காதலித்துப்பார்” என்ற ஆங்கரே கடகடவென சிரித்தார். “கேட்கும்போதே முகத்தைச் சுளிக்கிறாயே, கசக்கிறதா தமிழா? கிழவிக்கு உள்ளமில்லையா? உங்களிருவர் உள்ளமும் ஒன்றுபடட்டுமே! இதெல்லாம் பிதற்றல் தமிழா. காதல் வெறும் பிரமை. வாலிபனுக்கு வேண்டியது நல்ல உடற்கட்டுள்ள பருவப்பெண். நல்ல சக்தி உள்ளவரை அனுபவிக்க வேண்டியது, பிறகு மறக்க வேண்டியது. மனிதனுக்கு வேண்டிய பல தேவைகளில் பெண்ணும் ஒன்று. துணிவுள்ளவன் அனுபவிக்கிறான். இல்லாதவன் கேள்வி கேட்கிறான். துன்பப்படுகிறான், சில வேளைகளில் பிராணனையும் விடுகிறான்” என்று கூறினார்.
இதயசந்திரன் திக்பிரமை பிடித்து நின்றான். அவர் வேதாந்தம் அவன் ஒப்புக்கொள்ள முடியாததாயிருந்தது. பதில் சொல்ல முடியாததாயும் இருந்தது. “உங்கள் அனுபவம் அப்படித்தான் போலிருக்கிறது” என்றான் கடைசியில் வெறுப்புடன்.
“ஆம் தமிழா! மூன்று மனைவிகளை அடைந்திருக் கிறேன். பல பெண்களை அனுபவித்திருக்கிறேன். மனித வாழ்வில் ஆனந்தம் கடல் அலை போன்றது. கடலில் நீந்துவது எப்படித் தெரியுமா தமிழா ! அலை எழும்போது அதில் நாம் மூழ்கி முன்னேறிவிட வேண்டும். மூழ்கத் தவறுபவன் அலையை வெற்றி கொள்வதில்லை. அலை அவனை இழுத்துச் சென்றுவிடும். கிடைக்கும்போது ஆனந்தத்தை அனுபவிக்காதவன் சந்தர்ப்பத்தை இழக்கிறான்” என்றார் கனோஜி.
“நீங்களும் உங்கள் மகளும் இருவருமே உவமை காட்டுவதில் கெட்டிக்காரர்கள்” என்றான் இதயசந்திரன்.
“மஞ்சு என்ன உவமை சொன்னாள்?’
“கோட்டையைப் பற்றிச் சொன்னாள்.”
“என்ன சொன்னாள்?”
“சுவர்ண துர்க்கத் தேவதை கடல் ஆமையாம்.”
“அதிலிருந்து மாலுமிகள் பாடம் கற்றுக் கொள்கிறார்களாம்.’’
“பலே! பலே! மகளே! பலே பலே!” என்று கூறிய கனோஜி ஆங்கரேயின் கண்கள் பெருமிதத்தால் பளபளத் தன. ”எனக்கு உன்னால் பதில் கூற முடியவில்லை. அவள் கூறிவிட்டாள்.”
”என்ன கூறிவிட்டாள்.”
கனோஜியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. பெருமிதமும் அதில் கலந்து கிடந்தது. “இங்கிருக்கிற ஆண் மாலுமிகளைவிட மஞ்சுவைப் போன்ற பெண் மாலுமிகள் கிடைத்தால் இந்த அரபிக் கடலில் யாரையும் நுழைய விட மாட்டேன். என்ன சூடிகை! என்ன சூடிகை! அச்சா! அச்சா!” என்று மகாராஷ்டிரமும் இந்துஸ்தானியும் கலந்த குரலில் கூவினார். பிறகு இதயசந்திரனைப் பார்த்துச் சொன்னார்.
”தமிழா! இளமையில் நான் பெரு முரடன், பதினாறு வயதிலேயே மாலுமியானேன். வாலிபம் எட்டிய சில வருஷங்களுக்குள் சுவர்ண துர்க்கத்தின் தலைவனானேன். அப்பொழுதிருந்த ஜன்ஜீரா ஸித்தி காஸம் யாகூத்கானை இரு முறையும் முன்னேறித் தாக்கினேன். அவர்களிடம் சிறைப்பட்டேன். சாமர்த்தியத்தால் தப்பி சுவர்ண துர்க்கத் தீவுக்கும் தாய் நிலத்துக்கும் இடையிலிருந்த கடற் கால்வாயில் ஒரு மைல் நீளம் நீந்திக் கோட்டைக்குத் திரும்பினேன். அப்பொழுதுதான் பிரும்மேந்திர ஸ்வாமி வழி காட்டினார். சுவர்ண துர்க்கத்தின் கோட்டை மதிள் மேலிருக்கும் கடல் ஆமையைப் பார் என்று கூறினார். காரணத்தை உணர்ந்தேன். அடுத்தமுறை படையெடுப்பு வந்தபோது நான் முன்னேறித் தாக்கவில்லை. கடலாமை போல் தலையை இழுத்துக் கொண்டேன். சுவர்ண துர்க்க மெனும் ஓட்டுக்குள் பத்திரமாயிருந்தேன். காஸம்கான் முற்றுகையை நீக்கி ஓடிவிட்டார். நான் பாடம் கற்றேன். நான் மட்டும் கற்கவில்லை. என் பெண் மஞ்சுவும் கற்றிருக்கிறாள். அவள் உனக்குச் சொன்னதென்ன தெரியுமா தமிழா? பெண்கள் அந்த ஆமைபோல், இஷ்டமில்லாதவன் வந்தால் உள்ளுக்குள் உணர்ச்சிகளை இழுத்துக்கொண்டு தங்களைக் காத்துக்கொள்ளும் திறன் அவர்களுக்கு உண்டு என்று சொல்லியிருக்கிறாள். அத்துடன் உன் வீரத்தையும் தன் மனத்தையும் சோதிக்க முயன்றிருக்கிறாள்.”
இந்த இடத்தில் சற்று நிறுத்திய கனோஜி ஆங்கரேயைச் சங்கடம் ததும்பிய விழிகளுடன் ஏறெடுத்து நோக்கிய இதயசந்திரன், ”இரண்டு பேரை அவள் கொன்று விட்டதாகக் கூறினீர்களே. எங்கே? எப்பொழுது?” என்று வினவினான்.
“ஒரு மாலுமி அவளைப் பிடித்து சுவர்ண துர்க்கத்தில் முத்தமிட்டான். இடையிலிருந்த குத்துவாளை எடுத்து நடுத் தெருவில் அவனைக் குத்திவிட்டுச் சென்றாள். இரண்டாவது மாலுமி குத்தப்பட்ட இடம் உன் காலடியில். அங்குதான் அவன் இதய ரத்தம் பீறிட விழுந்தான்” என்றார் ஆங்கரே.
”இன்னொருவனைக் கொல்லவில்லையென்றீர்களே. அவன் யார்?” என்று கேட்டான் இதயசந்திரன், குரலில் கோபம் தொனிக்க.
“இவன் தான்’ என்று தம்மை மார்பில் தட்டிக் காட்டிய கனோஜி. ”தகப்பன் ஒருவனைத்தான் அவள் அதற்கு அனுமதித்து உயிருடன் விட்டு வைத்திருக்கிறாள்” என்று கூறினார்.
இதயசந்திரன் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். “அது சரி; என்னை முத்தமிடச் சொன்னாளே அது ஏன்?” என்றும் கேட்டான்.
கனோஜி தயக்கமின்றிப் பதில் கூறினார். ”அந்தக் குழந்தையின் மனத்தில் கலக்கம் நுழைந்துவிட்டது தமிழா! உன்னை விரும்புகிறாளா அல்லவா என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் சொன்னபடி நீ செய்திருந்தால் ஒன்று அவள் வாழ்க்கைத் துணைவனாக மாறியிருப்பாய் அல்லது நீ நின்றிருக்கும் இதே இடத்தில் பிணமாகக் கிடந்திருப்பாய்” என்று கூறினார் கனோஜி.
“அப்படியானால்…?”
“அவள் சுவர்ண துர்க்கம் போன்றவள்.’’
”உம்?”
“இஷ்டமிருந்தால் அவள் உயிர் உணர்ச்சிகள் உன்னிடம் தலை நீட்டும். இல்லையேல், கடல் ஆமையின் முதுகு ஓட்டைவிடக் கடுமையான உறைக்குள் உணர்ச்சிகளை உள்ளிழுத்து மூடிவிடுவாள். அந்த ஆமை ஓட்டை உடைக்க முயன்றால் உயிர் தான் போகும். ஓடு உடையாது.”
இதயசந்திரன் பிரமித்து நின்றான். “அப்படியானால் அவள் மனம்…” என்ற இதயசந்திரன் பேச்சை இடை மறித்த ஆங்கரே, “எப்படி என்பது சுவர்ண துர்க்கத்தில் தெரியும். அந்தப் பெண்ணும் சுவர்ண துர்க்கம் போன்றவள் அத்துமீறி நுழைய முயலாதே. ஆபத்திருக்கிறது.” என்று எச்சரித்துவிட்டு ஆங்கரே தளத்தில் தட தட வென நடந்து சென்றார்.