Jala Deepam Part 2 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –13 கடிதமும் கலக்கமும்
Jala Deepam Part 2 Ch13 | Jala Deepam | TamilNovel.in
கடிதத்தைப் பிடித்த கை பிடித்தபடியே நின்றது.. அதிலிருந்த விலாசத்தைப் பார்த்த கண்கள் பார்த்தபடியே நின்றன. அதுவரை எழுந்த உள்ளத்தில் உருண்டு கொண். டிருந்த உணர்ச்சிகள் அடியோடு உறைந்து விட்டன.. உதடுகள் பானுதேவியின் பெயரை உச்சரிக்கும் சக்தியை இழந்து வியப்பில் விரிந்தது லேசாக விரிந்தபடியே இருந்தன. கடிதம் போய்ச் சேர வேண்டிய மகாராஜா ஷாஹுவின் மருமகளுக்காக இருக்க முடியும் என்பதைக் கனவில் கூட அவன் நினைக்காததால் ஏற்பட்ட பிரமை பல வினாடிகள் வரை அவனை விடவே இல்லை. விட்ட போதும் அவன் நிதானத்தில் இல்லை. “எடுங்கள் நங்கூரத்தை” என்று திடீரென அவன் கூறியதைக் கண்ட. பர்னாண்டோ வாயைப் பிளந்தான். இப்ரஹீமின் கண்களும் வியப்பைக் கக்கின. தலைவன் ஒரு நிதானத்தில் இல்லையென்பதை இருவருமே உணர்ந்து கொண்டனர்.
நங்கூரம் எடுப்பதையோ விடுப்பதையோ விழியின் அசைவாலும் கையின் ஒரு சைகையாலும் சில சமயங்கள் தலையின் அசக்கலாலும் கம்பீரத்துடன் உணர்த்தும் கப்பல் தலைவன் அன்று திடீரென்று கூச்சலிட்டு உத்தரவிட்டதும் அந்த இரு மாலுமிகள் மட்டுமின்றி மற்றவர் களும் ஆச்சரியமடைந்தார்களென்றாலும் அதை யாருமே வாய்விட்டுச் சொல்லாமல் தடதடவென அலுவல்களில் இறங்கினார்கள். கப்பலின் பின் பகுதியிலிருந்த உருளை சுற்றப்பட்டு நங்கூரம் மேலே ஏற்றப்பட்டதும் பாய்கள் விரிந்தன. துடுப்புக்கள் துழாவின. ஏதோ மந்திரத்தால் மயக்கப்பட்டவை போல் அந்தந்த அலுவல்கள் சட்சட் டென்று தாமதமின்றி நடந்ததால் ஜல தீபம் துறைமுக. அலைகளைக் கிழித்துக்கொண்டு விஜயதுர்க்கத்திலிருந்து அரபிப் பெருங்கடலின் பரந்த நீரை நோக்கி நகர்ந்தது. அது நகர்ந்ததால் ஏற்பட்ட பெரிய அசைவால் சற்றுச் சுரணை அடைந்த இதயசந்திரன் கடிதத்தைத் தனது கச்சையில் பத்திரப்படுத்திக்கொண்டு கப்பல் தளத்தின் குறுக்கே நடந்து பீரங்கிகள் இருந்த நிலை, மாலுமிகள் அலுவல் புரியும் முறை இவற்றைக் கவனித்துவிட்டுக் கீழேயும் இறங்கிச் சென்று துடுப்புத் தள்ளுவோரையும் பார்த்தான். அங்கிருந்த ஹர்கோவிந்திடம் கூறினான், “ஹர்கோவிந்த்! அரைக்காதத்துக்கு மேல் துடுப்புத் துழாவ அவசியமிருக்காது. காற்று அனுகூலமாக இருக்கிறது. ஆகவே பாய்களே போதும் ஜலதீபம் ஓட” என்று.
இதை ஹர்கோவிந்தும் அறிந்தேயிருந்ததால் இதை எதற்காக இதயசந்திரன் தன்னிடம் கூறுகிறானென்பதை உணர்ந்து கொள்ள முடியாத காரணத்தால் முகத்தில் முதலில் வியப்புக் குறியைக் காட்டினான். பிறகு சிறிது சினத்துடன், “தலைவரே! நான் பதினைந்து ஆண்டுகளாக மாலுமித் தொழில் புரிகிறேன்” என்றும் தெரிவித்தான். “இல்லையென்று யார் சொன்னது?” இதயசந்திரன் கேள்வி உஷ்ணத்துடன் வந்தது.
“தாங்கள் தான்” என்றான் ஹர்கோவிந்தும் உஷ்ணத்துடன். “நானா?” என்று மீண்டும் வினவிய இதயசந்திரனின் குரலில் சீற்றம் குறையவில்லை ..
“ஆம் தலைவரே! தாங்கள் இடும் உத்தரவைப் புதிதாக வரும் மாலுமிகளுக்கு இடுவதுதான் வழக்கம்” என்றான் ஹர்கோவிந்தும் அடக்கத்துடனும் அதே சமயத்தில் கோபத்துடனும்.
இதயசந்திரன் அவனை வெறித்துப் பார்த்தான். பிறகு விடுவிடுவென்று படிகளில் ஏறி மேல் தளத்துக்குச் சென்று விட்டான். அவன் சென்றதை ஹர்கோவிந்த் மட்டுமல்ல;
மற்ற மாலுமிகளும் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள்! ஒருவினாடி துடுப்புத் துழாவுவதுகூட நின்றது. “உம். துழாவுங்கள் துடுப்பை” என்று மிரட்டிய ஹர்கோவிந்த் தானும் பலகையில் உட்கார்ந்து ஒரு துடுப்பைக் கைகளில் பற்றித் துழாவத் தொடங்கினான்.
அவனுக்குப் பக்கத்தில் எதிர்ப்புறத் துடுப்பைத் துழாவிக் கொண்டிருந்த மாலுமி கேட்டான். “ஹர்கோவிந்த்! தலைவர் பெரும் கோபத்திலிருக்கிறார் போலிருக்கிறது?” என்று.
“அப்படித்தான் தெரிகிறது” என்றான் ஹர்கோவிந்த்.
“காரணம்?”
“தெரியாது.”
“நான் சொல்லட்டுமா?”
“சொல்.”
”தளபதி வரவில்லை.”
“இப்பொழுது இவர் தான் தளபதி.”
“இருக்கலாம். ஆனால் ஓர் அழகிய தளபதியிடம் வேலை செய்யும் உற்சாகம் இந்தப் பதவியில் அவருக்கில்லை!”
“சரி சரி, வேலையைப் பாருங்கள்” என்று ஹர்கோவிந்த் மிரட்டிய பிறகுதான் அவர்கள் நகைப்பு அடங்கியது.
அவன் அன்று அடிக்கடி குறைகளைக் கண்டுபிடித்த போதும் அனாவசியமாக மிரட்டியபோதும் மாலுமிகள் அனுதாபப்பட்டார்களேயொழிய சிறிதும் பயப்படவு மில்லை, அவனிடம் கோபம் கொள்ளவுமில்லை. மாலுமிகளின் அனுதாபத்தை அன்றிரவு உணவு வேளையில் பர்னாண்டோவிடம் இப்ரஹீம் நன்றாக வர்ணிக்கத் தொடங்கி, “பர்னாண்டோ , ஸார்கேல் செய்தது மிகவும் தவறு” என்றான் ஆட்டிறைச்சியை லேசாகக் கடித்துக் கொண்டே.
அவனைவிடச் சிறிது நாசூக்காக ஒரு பீங்கான் தட்டில் மாமிசத் துண்டுகள் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து வாயில் வைத்துக்கொண்டு சுவைத்த பர்னாண்டோ, “ஸார்கேல் தவறு செய்தாரென்று சொல்லலாமா?” என்று கேட்டான் புன்முறுவலுடன்.
“தவறு யார் செய்தாலும் தவறுதானே பர்னாண்டோ?” என்றான். இப்ரஹீம்.
இப்ரஹீம் எதைக் குறிப்பிடுகிறானென்று பர்னாண்டோவுக்கு தெரிந்திருந்தும் அதை அவன் வாயால் முழுக்கக் கேட்கப் பிரியப்பட்டு, “என்ன தவறு செய்தார் ஸார்கேல்?” என்றான்.
“மொகலாய சக்ரவர்த்தி ஷா ஜஹானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா பர்னாண்டோ?”
“யார் கேள்விப்படாதிருக்க முடியும்?”
“மும்தாஜ் பிரிந்ததும் அவர் நிலை என்ன?”
“நரக வேதனை.”
“அந்த நிலைக்கு உ.ப தளபதியைக் கொண்டு வந்து விட்டார் ஸார்கேல்” என்று சொல்லி நகைத்தான் இப்ரஹீம்.
பர்னாண்டோ நகைக்கவில்லை. “இப்ரஹீம்! நீ ஒரு. முட்டாள்!”
“நானா? எப்படி?” “போய்விட்ட மும்தாஜுக்கும் மஞ்சுவுக்கும் எடை கட்டுகிறாயே? இருப்பவளைப் பிரிவது இறந்தவளைப் பிரிவதைவிட ஆயிரம் மடங்கு அதிக வேதனை. தெரியுமா உனக்கு?”
இதைக் கேட்ட இப்ரஹீம், ”அச்சா, பர்னாண்டோ அச்சா!” என்று இரைந்து நகைத்தான். பர்னாண்டோவும் அந்த நகைப்பில் கலந்துகொண்டான்.
இப்படிப் பல மாலுமிகளும் ஜல தீபத்தின் தளபதியைப் பற்றிப் பேசிக் கேலி செய்தாலும் கேலி செய்யாத ஒரு ஜீவனும் அந்தக் கப்பலில் இருந்தது கப்பலுக்கு வந்தது முதல் கடிதத்தைப் பெற்றது முதல் இதயசந்திரனின் பதட்டத்தையும் கோபத்தையும் தளபதியின் அறை வாயிற்படியிலிருந்தே பல வினாடிகள் கவனித்த கட்டழகி காதரைன் அவன் இதய உளைச்சலுக்குக் காரணத்தை நன்றாகப் புரிந்து கொண்டு இளநகை கோட்டினாள். அவன் பதட்டத்துக்குக் காரணம் தன்னுடன் அவன் தனிமையில் வர நேரிட்டதேயென்பதை அவள் நன்கு உணர்ந்தேயிருந்தாள். மஞ்சு வராதது பற்றி அவனுக்கு நேரிடையான ஏமாற்றமில்லா விட்டாலும், அவள் வந்திருந்தால் தனக்கும் அவனுக்கும் ஒரு திரையிருக்கும் யென்பதையும், அந்தத் திரையில்லாததால் ஏற்பட்ட அச்சமே அவன் பதட்டத்துக்குக் காரணம் என்பதையும் அவள் புரிந்து கொண்டதுடன், அவனுக்கு வந்த கடிதத்தைப் பற்றிய எண்ணங்களும் எழவே, பார்த்ததும் தமிழன் பிரமிப்படையும்படி என்ன விலாசம் அந்தக் கடிதத்தி லிருக்க முடியும்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் கடிதத்தின் விலாச மர்மத்தை அறிந்து கொள்ள உறுதியும் கொண்டாள்.
அந்த உறுதியுடன் இரவு விளக்குகள் கொளுத்தப்படும் வரையில் மஞ்சத்தில் கிடந்த காதரைன், விளக்கு வைத்ததும் முகம் கழுவி மெல்லிய கௌனை அணிந்து கொண்டாள். தலை சீவி, குழல்கள் தோள்களை முத்தமிடும் வண்ணம் அலங்கரித்துக் கொண்டாள். அவள் அலங்கரித்து முடித்துக் கொண்டதும் மாலுமியொருவனை அழைத்து, “நான் கப்பல் தலைவரைப் பார்க்கவேண்டும் வரச்சொல்” என்று உத்தரவும் இட்டாள்.
நீண்ட நேரம் காத்திருந்தும் அவன் வரவில்லை. உணவு வேளைக்கே உள்ளே நுழைந்தான் அவன். “எதற்கு அழைத் தீர்கள்?” என்று வினவவும் செய்தான் வெறுப்புடன்.
அவள் நீலக் கண்மணிகள் அவனை ஏறெடுத்து நோக்கின. “இப்பொழுது அழைக்கவில்லை. நீங்கள் செல்லலாம்” என்றாள் அவளும் குரலில் வெறுப்பைக் காட்டி.
அவள் பார்வையின் கவர்ச்சி, அவள் உதடுகள் அசைந்த அழகு முகத்தில் வெறுப்பு விரவிய சமயத்திலும் அவற்றுக் கிருந்த வசீகரம் இவை யாவும் அவன் வெறுப்பைச் சிறிது தணிக்கவே, “ஒரு கப்பலின் தலைவன் வேலையற்ற வனல்லன். பெண்ணொருத்தி அழைத்ததும் ஓடி வர முடியாது” என்று கூறினான் வெறுப்புத் தணிய, கோபம் முந்திய குரலில்.
“அந்த வேறு அலுவல்களைப் பாருங்கள் தளபதி. ஒரு கைதி அதுவும் விதவை. அவள் துயரத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம்.” குரலில் சிறிது துயரத்தைக் காட்டிக் கூறினாள் காதரைன்.
இதயசந்திரன் இதயம் அவள் நிலையைக் கண்டு இரங்கவே அவன் அவள் படுத்திருந்த பஞ்சணையை அணுகினான். “உங்களுக்கு நான் செய்யவேண்டியது ஏதாவதிருந்தால் சொல்லுங்கள் மிஸஸ் சௌன்” என்றும் கேட்டான்.
“வர வர மரியாதை அதிகமாகிறது. இறந்துவிட்டவர் பெயரையும் சொல்லி என்னை வதைக்கிறீர்கள்” என்ற காதரைன் கண்களில் நீர் திரண்டது.
பிரிட்டிஷ் குண்டுகளுக்கு அஞ்சாத இதயசந்திரனின் மனம் அவள் கண்களில் திரண்ட இரு துளிகளால் அடியோடு நெகிழ்ந்துவிடவே, அவளருகில் பஞ்சணையில் உட்கார்ந்து கண்ணீரைத் தனது கைகளால் துடைத்து, “மன்னியுங்கள் என்னை” என்றான்.
காதரைன் பேசாமல் சிலைபோல் கிடந்தாள் கட்டிலில். அவள் மௌனத்துக்குக் காரணம் துக்கம் என்று எண்ணிக் கொண்ட இதயசந்திரன், “போனது வராது, சற்றுச் சாந்தி செய்து கொள்ளுங்கள்” என்று ஆசுவாசப் படுத்தி அவள் நெற்றியில் கையை வைத்தான்.
”அப்படியே நெற்றியை அழுத்துங்கள்” என்று கூறினாள் காதரைன்.
இதயசந்திரனின் இதழ்களில் இள நகை அரும்பியது. “எனக்கு இது தான் வேலையா?” என்று வினவினான்.
“ஏன், கூடாதா?” என்று முணுமுணுத்தாள் அவள். அத்துடன், “சற்று குனியுங்கள்” என்றாள் அவனை நோக்கி.
“எதற்கு?”.
“ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.”
“இங்கு யாருமில்லை. சொல்லுங்கள்.”
“குனிந்தால்தான் சொல்லுவேன்.”
“பச்சைக் குழந்தை மாதிரிப் பேசுகிறாயே காதரைன்?” என்றான் இதயசந்திரன் அவளிஷ்டப்படி குனிந்து.
அவன் காதில் சொன்னாள் அவள், “காதரைன் என்று அழைக்காதீர்கள்” என்று.
“வேறு எப்படி அழைப்பது உங்களை?”
“உம். உம். உன்னை.”
“சரி உ.ன்னை?”
“கேட்டி அல்லது கேட்.”
“கூடாது கூடாது.”
“கூடும் கூடும்” என்று நகைத்தாள் அவள். நெற்றியி லிருந்த அவன் கையை அவளின் ஒரு கை நன்றாக அழுத்தியது.
“தவறு பெண்ணே, தவறு’ என்று கெஞ்சினான் இதயசந்திரன். அவன் உதடுகள் தான் தவறைச் சொன்னதே தவிர, கை பெரும் தவறுகளைச் செய்து கொண்டிருந்தன.
“இதுதான் சரி” என்று காதரைன் முணுமுணுத்தாள்.
“எது காதரைன்?”
“இந்த நிலைதான்…”
“பெரும் தவறு, காதரைன் பெரும் தவறு” என்று உரைத்த அவன் கை, அவள் கன்னத்தையும் கழுத்தையும் தடவியது.
“இல்லை. கேட் கேட்” என்று திருத்தினாள் அவள்.
அவள் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அவன் சங்கடத்தைக் கண்டு அவள் மெள்ள நகைத்தாள். “தவறல்ல, இயற்கை” என்று முணுமுணுத் தாள் அவள். கழுத்தில் விளையாடிய அவன் கையைத் தனது இன்னொரு கையால் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களில் திடீரென ஒரு விபரீத ஒளி பரவியது. அவளுடைய மற்றொரு கை அவன் இடுப்பை நோக்கி நகர்ந்தது. இடுப்பின் மீது வழவழத்துத் தவழ்ந்தது. அங்கிருந்த கடிதத்தை வெகு லாகவமாக எடுக்கவும் செய்தது.