Jala Deepam Part 2 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –16 பூட்டு கதவை
Jala Deepam Part 2 Ch16 | Jala Deepam | TamilNovel.in
பருவத்தின் கூச்சலென்று பஞ்சணையில் தன் கை களில் சிக்கிக் கிடந்த பைங்கிளி முணுமுணுத்ததும் சுரணையை அறவேயிழந்து காம இச்சையின் வேகத்தில் நிலைகுலைய முற்பட்ட இதயசந்திரனை காதரைனின் கொச்சை மொழிகள் மீண்டும் மீண்டும் அதள பாதாளத் தில் இறக்கிக் கொண்டிருந்தன. “பார் இதயசந்திரா! என்னை வதைக்க இதுதான் சமயமா? இச்சையின் வேகத் தில்கூட அச்சத்தை உதறவில்லையே நீ?” அவள் காதில் முணுமுணுத்துக் கொண்டு, தன் கழுத்தில் புதைந்த அவன் உதடுகள் மேலும் கழுத்தில் புரளும்படி கழுத்தைத் திருப்பவும் செய்தாள் இருமுறை.
இதயசந்திரனின் கொள்கைக் கோட்டைகள் உடைந்து கொண்டிருந்தன. அவளைச் சுற்றி தவழ்ந்த கைகள் அவளை நெருக்கின. அவள் காமத் தீ அவனைத் தகித்து விடும் போலிருந்தது. அந்தத் தீயை அணையவிடாதிருக்க அவள் புரண்டும், நெகிழ்ந்தும் ஏதோ பேசியும், அனாவசியமாக ஊம் கொட்டியும் அந்த அக்கினிக்கு அவிஸைச் சொரிந்து கொண்டிருந்தாள். அக்னி வளர்ந்தது. அதில் அடியோடு தீய்ந்து போகும் சமயத்தில் அறைக் கதவு மீண்டும் தடதடவெனத் தட்டப்பட்டது. “காப்டன்! ‘காப்டன்!” என்ற பர்னாண்டோவின் கூச்சலும், “ஸாஹிப்! ஸாஹிப்!” என்ற இப்ரஹிமின் இரைச்சலும் பலமாகக் கேட்டன. இருவர் கூச்சலைக் கேட்டதும் சற்றுச் சுரணையடைந்த இதயசந்திரன் ஏதோ பதில் சொல்ல வாய் திறந்தான். காதரைனின் காம வெறிக் கண்கள் அறைக் கதவை உஷ்ணத்துடன் நோக்கின. பிறகு அவனைத் தழுவிய கையொன்று அவன் உடலிலிருந்து பிரிந்து அவன் வாயைப் பொத்தின. “இதயசந்திரா!
பேசாதே! கதவையும் திறவாதே?” என்று அவன் காதில் முணுமுணுத்து அந்தக் காதில் உதடுகளைப் புதைத்து மேலும் ஏதோ கூறினாள்.
எழுத்த்தகாத சொற்களைக் கூறினாள் காதரைன். அவை அவனை மீண்டும் மயக்கத்தில் ஆழ்த்தின. அவற்றைச் சொல்லிவிட்டு அவனைத் தன் நீலக் கண்களால் உற்று நோக்கி “என்ன இப்படிப் பேசுகிறேனே என்று பார்க்கிறாயா! நாகரிகம் கடந்த நிலை இது. சொர்க்கத்தை அடைய முயலுகிறோம் தமிழா! அதில் சமுதாயப் பண்பாடுகள் அர்த்தமற்றவை. வா, அவர்கள் கூச்சல் கிடக்கட்டும்” என்று கூறினாள். அமுதம் திரண்ட உதடு களைச் சிறிது அசைக்கவும் செய்தாள், லேசாகச் சிரிக்கவும் செய்தாள். இந்தக் கணைகளிலிருந்து தப்பமுடியாமல் தத்தளித்த தளபதியை மூன்றாவது குரலொன்றும் வெளியிலிருந்து அழைத்தது. “தளபதி! ஸார்கேலின் பெயரால் அழைக்கிறேன். உடனடியாகக் கதவைத் திறவுங்கள்” என்ற ஹர்கோவிந்தின் குரல் பலமாகக் கேட்டது. கதவு மிகக் கடுமையாகத் தட்டவும் பட்டது.
ஸார்கேலின் பெயரால் அழைப்பு வந்ததும் காதரைனை உதறிப் பஞ்சணையில் தள்ளிவிட்டு எழுந்து தரையில் காலூன்றி நின்ற இதயசந்திரன் தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு கழன்று கிடந்த அங்கியை மீண்டும் அணிந்து கொண்டு கதவைத் திறந்தான். கதவு திறந்ததும் தடதடவென உள்ளே நுழைந்த அந்த மூன்று மாலுமிகளும் காதரைனை ஒருமுறை வெறுப்புடன் நோக்கினர். பிறகு தளபதியை நோக்கினர் ஒரு வினாடி. கடைசியாக ஹர்கோவிந்த் கேட்டான், “தங்கள் அறைக்குப் போகலாமா?” என்று.
இதயசந்திரன் மன நிலை விவரிக்க இயலாததா யிருந்தது. வேண்டுமென்றே கதவு இடித்துத் தன்னைக் கிளப்பிய அவர்கள் மீது சீற்றமிருந்ததா? அல்லது சமயத்தில் தப்பினோமே, இன்னும் சில வினாடிகளில் தன் நன்னடத்தை பறந்திருக்குமே என்ற நினைப்பால் உள்ளே ஆசுவாசமும் அவர்களிடம் நன்றியுமிருந்ததா? காரணம் எதுவாயிருந்தாலும் பெரும் புயலிலிருந்து தப்பினோமே என்பதால் சாந்தியிருந்ததா? எதையுமே நிர்ணயிக்க. முடியவில்லை அவனால். இருப்பினும் கோபத்தை மட்டும் காட்டிக் கேட்டான் தமிழன், “இது யார் அறை?” என்று.
“தளபதியின் அறைதான்” என்றான் ஹர்கோவிந்த் மேலுக்குப் பணிவும் உண்மையில் துணிவும் நிரம்பிய குரலில்.
“நான் யார்?’ என்று மீண்டும் வினவினான் இதயசந்திரன்.
“இக் கப்பலின் தளபதி” என்ற ஹர்கோவிந்தின் குரலில் திடமேயிருந்தது.
“அப்படியானால் இங்கு என்ன தடை?”
“மூன்றாவது நபர் முன்னிலையில் பேசக்கூடிய விஷயமல்ல அது” என்றான் பர்னாண்டோ உரையாடலில் குறுக்கிட்டு.
இதயசந்திரன் கண்கள் உஷ்ணத்துடன் உறைந்தன. அந்த வெள்ளையனின் முகத்தில், “மூன்றாவது நபர் யார் இங்கு?” என்று சீற்றத்துடன் உதிர்த்தன சொற்களை.
“தவறு தலைவரே! ஐந்தாவது நபர் என்று சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் மூன்று பேர். நீங்கள் நான்காவது, கைதி ஐந்தாவது” என்றான் பர்னாண்டோ.
“காதரைனைக் கைதி என்று சொல்ல யார் அனுமதித்தது உன்னை?” என்றான் இதயசந்திரன்.
“போரில் பிடித்தோம். இவளுக்குப் பிரிட்டிஷாரிடம் முப்பதாயிரம் ரூபாய் ஈடு கேட்கப் போகிறோம். வேறென்ன பதவி இவளுக்கு?” என்று கேட்டான் ஹர்கோவிந்த்.
‘இவள்’ என்ற சொல்லைக் ஹர்கோவிந்த் உச்சரித்தது பேரதிர்ச்சியைத் தந்தது தமிழனுக்கு. அதன் விளைவாக, “ஹர்கோவிந்த்!” என்ற சொல் மிகச் சீற்றத்துடன் வெளி வந்தது அவன் உதடுகளிலிருந்து.
தலைவன் கண்ணசைவுக்கே அதுவரை பயப்பட்டு வந்த ஹர்கோவிந்த் சிறிதும் அச்சமற்ற கண்களால் தலைவனை ஏறெடுத்து நோக்கினான். “தலைவரே!’ என்ற பதிலும் சாதாரணமாக, திடமாக உதிர்ந்தது அவன் வாயிலிருந்தும்.
“இவள் பதவியை நிர்ணயம் செய்ய வேண்டியது நான்” என்று கடுமையுடன் துவங்கிய தளபதியை இடைமறித்த ஹர்கோவிந்த், “இல்லை” என்றான் திடமாக.
“வேறு யார் நிர்ணயம் செய்யவேண்டியது?” என்று கேட்டான் தமிழன்.
“ஸார்கேல். அவர் ஏற்கெனவே நிர்ணயம் செய்தாகி விட்டது” என்றான் ஹர்கோவிந்த்.
“அதை நான் மாற்ற இஷ்டப்பட்டால்?”
“நாங்கள் எதிர்ப்போம்.”
“கலகம் செய்வீர்களா?”
“கலகம் செய்யமாட்டோம். எங்கள் உரிமையை நிலைநாட்டுவோம்.”
“என்ன உரிமை அது?”
“உங்கள் கேள்வி விசித்திரமாயிருக்கிறது தளபதி! எதிரி கப்பல் பிடிபடும்போது, அதிலுள்ள பொருள்களின் மதிப்பில் மாலுமிகளுக்கும் பங்கு கொடுக்கிறார் ஸார்கேல். பிடிபடும் கைதிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் ஒரு பங்கு மாலுமிகளுக்கு உண்டு. ஆகவே, அந்தக் கைதி வீணாகாமல், யாரையும் கைக்குள் போட்டுக்கொண்டு தப்ப முயலாமல் போகவேண்டிய இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மாலுமிகளின் கடமை.” இதை ஹர்கோவிந்த் மளமளவெனச் சொன்னான். பர்னாண்டோ, இப்ரஹீம் இருவர் முகங்களிலும் ஹர்கோவிந்தை ஆதரிக்கும் பக்குவம் நடமாடியதை இதயசந்திரன் கண்கள் கண்டன.
மாலுமிகளின் எதிர்ப்பு இதயசந்திரன் இதயத்தைக் கடினமாக்கவே, “தலைவனுக்கு எதிராக நடக்கும் மாலுமிகளுக்கு என்ன தண்டனை?” என்று வினவினான்.
“மரண தண்டனை?” என்றான் ஹர்கோவிந்த். “சிறை செய்யலாமல்லவா?” “செய்யலாம்.” “உங்களைச் சிறை செய்கிறேன்” என்று கூறிய இதய சந்திரன், “யாரங்கே?’ என்று இரைந்து கூவினான்.
அவன் கூவலைக் கேட்டு ஓடி வந்த இரண்டு மாலுமி களை நோக்கி, “இவர்களை கைது செய்து கீழ்த்தள அறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டான். உத்தரவிடப்பட்ட மாலுமிகள் இருவரும் விழித்தார்கள். ஆனால் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. நிலைமை தன்னை மீறிப் போய்விட்டதை இதயசந்திரன் அறிந்தான். காதரைனையும் ஹர்கோவிந்தையும் மாறிமாறிப் பார்த்தான். பிறகு வெகுவேகமாக அந்த அறையிலிருந்து வெளியே சென்றான். அவன் வெளியே சென்றதும் காதரைனை நோக்கிய ஹர்கோவிந்த், “காதரைன்! உயிருடன் நீ பம்பாய் போய்ச் சேர இஷ்டமிருந்தால் இனி தளபதியை அணுகாதே’ என்று எச்சரித்தான்.
காதரைன் அவனை நோக்கி நகைத்தாள் இரைந்து. “ஹர்கோவிந்த்! நீ ஒரு முட்டாள். அலைகளுக்கு அணை போடப் பார்க்கிறாய்” என்று கூறி மீண்டுமொருமுறை நகைத்தாள். ஹர்கோவிந்த் அவளை முறைத்துப் பார்த்து.
பூட்டு கதவை விட்டு அறையிலிருந்து மற்ற இருவருடன் வெளியே வந்தான், வந்தவன் பர்னாண்டோவை விளித்து, “இந்தக் கதவைப் பூட்டிவிடு, சாவியை என்னிடம் கொடு” என்று கூறிவிட்டுச் சென்றான் இப்ரஹீம் பின்தொடர.
ஆனால் இந்த உத்தரவையோ அது நிறைவேற்றப் பட்டதையோ கவனிக்காமல் தனது அறை சென்றுவிட்ட இதயசந்திரன், பஞ்சணையில் நீண்ட நேரம் உட்கார்ந்து யோசிக்கலானான். ஹர்கோவிந்த் சொன்னதில் உண்மை கள் பல இருப்பது அவனுக்குத் திடமாகத் தெரிந்தன. கடற்போரில் பிடிபடும் கைதிகளைப் பாதுகாத்துக் கொண்டுபோய் பணஈடு கேட்பது தான் கொள்ளைக்காரர் சம்பிரதாயம். அந்தப் பண ஈட்டில் ஒரு பகுதி, அந்தக் கைதிகளைப் பிடித்த கப்பல் மாலுமிகளுக்கும் உண்டு என்பதும் உண்மையே. அந்தச் சம்பிரதாயத்தின் காரணமாக, சென்ற இரண்டரை ஆண்டுகளில் தனக்கும் செல்வம் திரண்டிருப்பதை இதயசந்திரன் உணர்ந்திருந்ததால் கைதியைப் பற்றி ஹர்கோவிந்த் கூறியதில் தவறேதுமில்லையென்பதும் தெளிவாகத் தெரிந்தது அவனுக்கு. தன் அழைப்புக்கு ஓடி வந்த இரு மாலுமிகள் ஹர்கோவிந்த், பர்னாண்டோ, இப்ரஹீம் இவர்களைக் கைது செய்யாததும் விசித்திரமாயில்லை அவனுக்கு. ஆனால் ஒன்று மட்டும் விசித்திரமாயிருந்தது. சட்டம் எதுவாயிருந்தா லும் வழக்கம் எதுவாயிருந்தாலும், தனது உத்தரவுகளை மறு கேள்வியோ ஆட்சேபணையோ, சமாதானமோ இன்றிக் கேட்டுவந்த ஹர்கோவிந்த் தன்னை எதிர்க்க. முற்பட்டது பெரும் விசித்திரமாயிருந்தது இதய சந்திரனுக்கு.
பல கடற்போர்களில் வெற்றியை ஜலதீபத்துக்கு வாங்கிக் கொடுத்ததாலும், பலமுறை ஹர்கோவிந்த் உயிரைத் தானே காப்பாற்றியதாலும், தனது அடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஹர்கோவிந்த், அன்று கேவலம் இந்த ஒரு கைதிக்காக அதுவும் முப்பதினாயிரம் ரூபாய்க்காக தன்னை எப்படி எதிர்க்கத் துணிவு கொண்டான் என்பதை நினைத்து நினைத்து விடை காணாமல் தவித்தான். இந்தக் கைதியையும் முப்பதினாயிரம் ரூபாயையும் விட வேறு சீரிய காரணம் ஏதோ இருக்க வேண்டும். ஹர்கோவிந்தின் நடத்தைக்கு என்று முடிவில் தீர்மானித்தானானாலும் அந்தக் காரணம் என்ன என்பது மட்டும் புரியவில்லை அவனுக்கு. அது புரியாததால் தளபதி ஆடைகளையும், ஆயுதங்களையும், களைந்துவிட்டுப் படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டும் சிந்தனைக் குதிரையை ஓடவிட்டுக் கொண்டும் அன்றிரவைக் கழித்தான்.
மறுநாள் பொழுது விடிந்து அறையைவிட்டு வெளியே வந்தபோது கப்பல் தளத்தில் வழக்கப்படி அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. மாலுமிகள் அவனைக் கண்டதும் வழக்கப்படி தலைதாழ்த்தி வணங்கினார்கள். பர்னாண்டோவும், இப்ரஹீமும்கூட முந்திய நாளிரவில் ஏதோ சம்பவம் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் மட்டுமென்ன, காதரைனும் சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டாள். அறையைவிட்டு வெளியே வந்ததும் தளத்தின் ஓரத்திற்குச் சென்று அலைகளைக் கவனித்தாள். பிறகு இப்ரஹீமை அழைத்து, குளிக்க வெந்நீர் கொண்டுவரக் கட்டளையிட்டாள். பழைய படியே அனைவரிடமும் பல பணிவிடைகளை வாங்கிக் கொண்டாள். இதயசந்திரனிடமும் சர்வசகஜமாக நடந்து கொண்டாள். பர்னாண்டோ, இப்ரஹீம் இவர்கள் எதிரில், “தளபதி! இரவு நன்றாகத் தூங்கினீர்களா?” என்று விசாரிக்கவும் செய்தாள்.
இதயசந்திரன் முகத்தில் வியப்புக் குறி விரிந்தது. அவள் சகஜபாவம் அவனை அசரவைத்தது. “உம்…. தூங்கினேன்” என்றான் இதயசந்திரன் தடுமாற்றத்துடன்.
“அதை இவர்கள் எதிர்க்கவில்லையா?” என்று வினவி பர்னாண்டோவையும் இப்ரஹீமையும் சுட்டிக் காட்டி நகைக்கவும் செய்தாள்.
பூட்டு கதவை “எதைக் கேட்கிறாய்?” “நீங்கள் தூங்குவதை இவர்கள் எதிர்க்கவில்லையா என்று கேட்டேன்” என்று கூறிவிட்டு மிக ஒய்யாரமாக நடந்து சென்றாள் அறை நோக்கி.
தனது சுதந்திரம் பறி போய்விட்டதைக் காதரைன் குறிக்கிறாளென்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். ஆனால் ஏதும் செய்யும் நிலையில் இல்லாத தால் கலக்கமடைந்த உள்ளத்துடன் பொழுதைக் கழித்தான்.
அன்று மாலை நேரம் மிக மயக்கம் தருவதாயிருந்தது. பட்சி ஜாலங்கள் அருகே பறந்து சென்றதால் கரையோரத்தில் கலம் செல்வது புரிந்தது இதயசந்திரனுக்கு. அப்பட்சிகளின் அழகு அவனது மனத்தைக் கொள்ளை கொண்டதால் கப்பலின் தீபமுகத்தில் சாய்ந்தவண்ணம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த இதயசந்திரனை நாடி வெள்ளைப் பறவையொன்றும் வந்தது. அதன் கையொன்று அவன் கையுடன் பிணைந்தது. அண்ணாந்திருந்த தலை குனிந்தது. வெள்ளை உடையுடன் இருந்த காதரைனின் மோகன உருவம் அப்படியே அவன் மனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. “இடையை ஒரு கையால் வளைத்து அணைத்துக் கொள்ளுங்கள்” என்றாள் காதரைன் அவனிடம். “எல்லோர் எதிரிலுமா?” என்று அவன் வினவினான். “ஆம்.” “எதற்கு?” “உங்கள் மாலுமிகளுக்குப் பாடம் கற்பிக்க.”
அவள் சொற்படி அவள் இடையை இடது கையால் அணைத்தான் இதயசந்திரன்.
அந்த இருவர் இணைந்து நின்ற காட்சியை பர்னாண்டோ இப்ரஹீம் இருவரும் பார்த்தாலும் அதை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஹர்கோவிந்தும் கவலைப்படவில்லை.
இதையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்த காதரைன் கூறினாள், “உங்கள் எதிரிகள் அடங்கிவிட்டார்கள்” என்று.
ஹர்கோவிந்த், பர்னாண்டோ, இப்ரஹீம் இவர்கள் போக்கை இதயசந்திரனும் கவனித்தாலும் அதைப்பற்றிப் பதிலேதும் சொல்லவில்லை.
“இன்றிரவு வருகிறீர்களா?” என்று கேட்டாள் காதரைன்.
அவன் பதிலேதும் சொல்லாவிட்டாலும் அவன் வருவானென்று அவள் உணர்ந்திருந்தாள். ஆகவே, சிறிது நேரம் கழித்து அவனிடமிருந்து பிரிந்து சென்றாள்..
இரவும் முதிர்ந்து, உணவை முடித்துக் கொண்ட இதயசந்திரன் ஹர்கோவிந்தை வரவழைத்து, “ஹர் கோவிந்த், நான் படுக்கப் போகிறேன். என் கதவை வெளியில் பூட்டி விடு” என்று உத்தரவிட்டான்.
ஹர்கோவிந்த் நிதானமாகப் பதில் கூறினான்: “தேவையில்லை தலைவரே” என்று.
”ஏன்?” என்று வினவினான் தளபதி.
“அவள் அறைக் கதவைப் பூட்டிவிட்டேன். சாவி என்னிடமிருக்கிறது” என்று கூறிய ஹர்கோவிந்த் தளபதியைத் வணங்கினான். தலைதாழ்த்தி